ஆன்லைனில் பஸ் டிக்கெட்டுகள்…

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:14 | Best Blogger Tips
   

ரெயில்களுக்கு இணையாக குளிர்சாதன வசதி, படுக்கை வசதி  
போன்றவற்றுடன் ஆம்னி (தனியார்) பஸ்கள் இயங்குகின்றன. ரெயில்களில் டிக்கெட் எடுக்க கடும் போட்டி நிலவுவதால், அதிக வசதிகள் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆம்னி பஸ்கள் பைபாஸ் சாலைகளில் பயணம் செய்வதால் குறிப்பிட்ட நேரத்தில் ஊர்களுக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை பயணிகளில் காணப்படுகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் சொகுசு பயணத்திற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 
இந்த ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க ஒவ்வொரு பஸ் கம்பெனியாக ஏறி இறங்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ரெயில் டிக்கெட்டுகள் எடுக்க ஆன்லைன் வசதி இருப்பது போல ஆம்னி பஸ் டிக்கெட்டுகளையும் இணைய தளம் மூலம் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி எடுக்கலாம். இதற்காக ரெட் பஸ் (www.redbus.in), மேக் மை டிரிப் (www.makemytrip.com), டிக்கெட்கூஸ் (www.ticketgoose.com) போன்ற இணைய தளங்கள் உள்ளன. இது தவிர முன்னணி ஆம்னி பஸ் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர்களிலும் இணைய தளங்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை அளிக்கின்றன. தமிழக அரசு விரைவு போக்குவரத்து சார்பிலும் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கான இணைய முகவரி www.tnstc.in/TNSTCOnline/
ஆன்லைனில் பஸ் டிக்கெட்டுகள் வாங்குவது மிக எளிதானது. இத்தகைய பொது இணைய தளங்களில் நாம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்ல தேதியை குறிப்பிட்டு தேடினால், அந்த தேதியில் உள்ள அனைத்து ஆம்னி பஸ்களும் புறப்படும் நேரம், டிக்கெட் விலை, பஸ் வகை, பஸ் ஏறும் இடங்கள், காலி இருக்கைகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். நாம் விரும்பும் பஸ்சினை தேர்வு செய்தால் அந்த பஸ்ஸின் இருக்கை அமைப்பு உள்ள பக்கம் தோன்றுகிறது. அதில் நமக்கு விருப்பமான
இருக்கையை தேர்வு செய்யலாம்.
பிறகு, பயண விவரங்கள் அளித்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, அல்லது நெட்
பாங்கிங் மூலம் செலுத்தலாம். இவ்வாறு வீட்டில் இருந்தபடியே அனைத்து பஸ்களிலும் அனைத்து ஊர்களுக்கும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம்.
சில சமயங்களில், பணம் நமது கார்டிலோ, பேங்க் அக்கவுண்டிலோ கழிக்கப்பட்டு, டிக்கெட் வழங்கப்படாமல் நடப்பதும் உண்டு. அத்தகைய நேரங்களில், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இருந்து 7 முதல் 10 நாட்களுக்குள் பணம் மீண்டும் உங்கள் கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும்.
மேலும் சில பஸ் நிறுவனங்கள் காகிதத்தை மிச்சப்படுத்தும் வகையில் மொபைல் டிக்கெட் என்ற புதிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி நாம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் போது அது தொடர்பான விவரங்கள் நமது மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த குறுந்தகவலை டிக்கெட் ஆக பயன்படுத்திக்கொள்ளலாம். பஸ்சில் பயணம் செய்யும் போது இந்த குறுந்தகவலை காட்டினால் போதும். இந்த வசதி மூலம் டிக்கெட் பிரிண்ட் எடுக்க காகிதம் செலவு செய்வதை தடுக்க முடியும். இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற வசதியாகும்.