
நெஞ்சம் நெகிழ வைத்தது
சமீபத்தில் நான் பார்த்த ஒரு புகைப்படம் !
இதோ, இந்தப் படத்தின் இடது ஓரத்தில் நிற்கும் இந்த இளம்பெண், தன்னைத் தூக்கி வளர்த்த, தன் தலையை பாசத்துடன் வருடிக் கொடுத்த, அள்ளி எடுத்து அரவணைத்த, தன் அப்பாவின் கைகளைத்தான் நேருக்கு நேர் பார்க்கிறாள்.
ஆனால் அவரது கைகள் மட்டும்தான் இங்கே இருக்கின்றன. அவள் அப்பா எப்போதோ கடவுளிடத்தில் போய் சேர்ந்து விட்டார்.
அந்த இளம்பெண்ணின் மனநிலை இருக்கட்டும்; இதோ, அவள் அருகில் நிற்கும் இந்த இளம்பெண்ணின் தாய்...
அவர் மனநிலை எப்படி இருக்கும் ?
தனக்கு கை கொடுத்து வாழ்வளித்த, தன் கழுத்தில் மாலையிட்டு நேசித்த,
தன் கணவனின் கைகளைத்தான் நேருக்கு நேர் இங்கே பார்க்கிறாள் !
ஆனால் அந்த நேசமிகு கணவன் ?
அவர் இப்போது இல்லை.
என்ன ஆயிற்று அவருக்கு..?
அவர் பெயர் ஜோசப்.
கொச்சியை சேர்ந்தவர்.
ஒரு விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து விட்டார்.
2015 மே மாதம் நடந்தது இது !
அதே நேரத்தில் கொச்சி மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையில், வேறு ஒரு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆப்கான் ராணுவ கேப்டன் அப்துல் ரஹீம்.
தீவிரவாதிகளுடன் நடந்த போரில், ஒரு குண்டு வெடிப்பில் இரு கைகளையுமே இழந்து விட்டார். இவருக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும். அதற்காகத்தான் இந்தியாவுக்கு வந்து, இந்த மருத்துவமனையில் காத்திருக்கிறார் அப்துல் ரஹீம்.

ஒரு புறம் மூளைச்சாவு அடைந்த ஜோசப்...
மறுபுறம் கைகளை இழந்த அப்துல் ரஹீம் !
இந்த நேரத்தில்தான் மருத்துவர்களுக்கு அந்த யோசனை தோன்றியது.
விபத்தில் மூளைச்சாவு அடைந்து விட்ட ஜோசப்பின் கைகளை எடுத்து, அவற்றை அப்துல் ரஹீமுக்கு பொருத்தினால் என்ன ?
மருத்துவர்கள் சிந்தித்தார்கள். ஜோசப்பின் குடும்பத்தினருடன் கலந்து பேசினார்கள்.
ஜோசப்பின் மனைவியும் மகளும் யோசித்தார்கள் .
இயேசு சொன்ன வார்த்தைகள், அவர்கள் நினைவுக்கு வந்தன :
” உன் மீது நீ அன்பு கூர்வது போல, உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக. ”
“ஆமென்.”
இறந்து விட்ட ஜோசப்பின் கைகளை எடுத்து, அப்துல் ரஹீமுக்கு பொருத்தும் சிகிச்சை தொடங்கியது.
20 மருத்துவர்கள் கொண்ட குழு, ஏறத்தாழ 15 மணி நேர கடுமையான போராட்டத்திற்குப் பின், வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தார்கள்.
இந்த மருத்துவக் குழுவின் தலைமை மருத்துவர் பெயர் சுப்பிரமணிய ஐயர் .
கல்லறைக்குள் போய் விட்ட தன் கணவனின் கைகளைத்தான் பக்கத்தில் நின்று பார்த்து கண்ணீர் வடிக்கிறார் இந்த மனைவி.
அருகிலிருந்து தன் அப்பாவின் கைகளை பார்த்து அழுது கொண்டே சிரிக்கிறாள் இந்த அன்பு மகள் !
ஒரு அப்துல் ரஹீமுக்கு,
ஒரு ஜோசப்பின் கைகள்,
ஒரு சுப்பிரமணிய ஐயரால்
பொருத்தப்பட்டது.
இந்து தெய்வம்
இஸ்லாமிய தெய்வம்
கிறிஸ்தவ தெய்வம்...
எல்லாமும் இணைந்ததுதான்
“மனித நேயம்” என்ற மகத்தான தெய்வம் !
அதுவே நாம் கை கூப்பித் தொழ வேண்டிய
“கை கொடுத்த தெய்வம்."

.jpeg)