முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர் பத்மஸ்ரீ கே.பி.சுந்தராம்பாள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:31 | Best Blogger Tips
முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர் பத்மஸ்ரீ கே.பி.சுந்தராம்பாள் -----------------------------------------------------------------------------------------

இருபதாம் நூற்றாண்டின் 100 முக்கிய தமிழர்களில் ஒருவராகக் கருதப்படும் இவருக்கு இந்த மாதத்தின் நினைவாஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்.

கே.பி.எஸ். என்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர்.

இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார் கோவை, கொடுமுடியில் 1908 அக்டோபர் 11 அன்று பாலாம்பாளின் புதல்வியாக சுந்தராம்பாள் பிறந்தார். கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். ஏழ்மை குடும்பம். கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.

சிறுமி சுந்தராம்பாளை பெரியவர்கள் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்ததுடன் பூஜை நடைபெறும் நேரங்களில் கோயிலில் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் கோயிலில் பாட, படிப்படியாக கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இவ்வாறு சுந்தரம்பாள் ஒரு பாடுகிற பெண் என்று கொடுமுடிப் பகுதியில் பலருக்குத் தெரிந்தது.

கொடுமுடி சுந்தராம்பாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர். கரூர் இவரது தாயாரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர். சுந்தராம்பாள் கொடுமுடியில்தான் பிறந்தார், வளர்ந்தார். கொடுமுடிக்கும் கரூருக்கும் அதிகத் தூரமில்லை. இருப்பினும் கொடுமுடி ரயிலடியிலேயே சுந்தராம்பாளின் வீடு இருந்ததால் ரயிலில்தான் கரூருக்குப் பயணம் செய்வது வழக்கம்.

ஒருமுறை சுந்தரம்பாள் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சக பயணிகளாக அந்த ரயிலில் வந்த கொடுமுடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுந்தராம்பாளைப் பார்த்ததும் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் பாடத் தொடங்கியதும் அந்தக் குடும்பத்தினருடன் சேர்ந்து, அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் ஆர்வமாகக் கேட்டு மகிழ்ந்தனர்.

இந்த ரயில் பெட்டியில் வேலு நாயர் என்பவரும் இருந்தார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், கும்பகோணத்தில் நாடகக் கம்பெனி நடத்திவந்தார். தான் இயக்குகிற நாடகங்களில் குழந்தை வேடங்களில் நடிப்பதற்குப் பொருத்தமான, திறன் வாய்ந்த சிறுவர் சிறுமியரைத் தேடிக் கொண்டிருந்த வேலு நாயருக்கு சுந்தராம்பாளின் பாடும் திறனைத் தெரிந்து கொண்டவுடன், இவரே பொருத்தமாக இருப்பார் என்பதை உணர்ந்தார்.

தனது தாய்மாமா மலைக்கொழுந்துவுடன் ரயிலில் சென்று கொண்டிருந்த சுந்தராம்பாளையும் அவரது மாமாவையும் அணுகி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று, அவர்களை நேராக கும்பகோணம் அழைத்துச் சென்றார் வேலு நாயர்.

நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண்வேடத்தில் நடித்தார். ‘பசிக்குதே! வயிறு பசிக்குதே’ பாடலை அருமையாகப் பாடி ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.

1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.

ரசிகர்களின் பலத்த ஆதரவை குறுகிய காலத்திலேயே பெற்றார் சுந்தராம்பாள். பாட்டு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என்று இரண்டிலும் ஒன்றைவிட ஒன்று சிறப்பு என்று பார்த்தோரும், கேட்டோரும் பரவசப்படும் அளவுக்கு திறன்களை முழுமையாக வெளிப்படுத்தினார். காலப்போக்கில் கே.பி.சுந்தராம்பாளுக்காகவே நாடகம் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதியது.

மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது.

அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.

1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் – கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். கே.பி.எஸ் பாடல் இசைத்தட்டுகள் எங்கும் ஒலிக்கத் தொடங்கின.

1933−ல் டிசம்பர் 2-ல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். பெரும்பாலும் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.

காங்கிரஸ் பிரசாரங்களில் கேபிஎஸ் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். அப்படத்தில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935-ல் இப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் இப்போது இல்லை.

அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.

தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. ‘பொறுமை யென்னும் நகையணிந்து’ , ‘கன்னித் தமிழ்நாட்டிலே – வெண்ணிலவே’ போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30. 1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.

மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை] (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.

1980 செப்டம்பர் 19-ல் கேபிஎஸ் மறைந்தார். கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.

நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர்.

சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார். 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். ‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அன்றைய காலகட்டத்தில் (1953) 30 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த ‘அவ்வையார்’ படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியவர் கே.பி.சுந்தராம்பாள். ‘அவ்வையார்’ ஒரு அற்புத காவியமாக அமைந்தது. கே.பி.எஸ்ஸின் பாடல்களும் நடிப்பும் ரசிகர் இதயங்களைத் தொட்டன. கறுப்பு_ வெள்ளையில் தயாரான மிகச்சிறந்த படங்களில் அவ்வையாருக்கு நிச்சய இடம் உண்டு. கலைஞர் கருணாநிதி தயாரித்த ‘பூம்புகார்’ (1964) படத்தில் கவுந்தியடிகளாகவும், ஏ.பி.நாகராஜன் தயாரித்த ‘திருவிளையாடல்’ (1965) படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் கே.பி.எஸ். நடித்தார்.
திருவிளையாடலின் மாபெரும் வெற்றிக்கு கே.பி.எஸ். பாடிய பாடல்கள் பெரிய பலமாக இருந்தன. மகாகவி காளிதாஸ் (1966), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), சின்னப்ப தேவரின் துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973), திருமலைத்தெய்வம் (1973) ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார்.
டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர். ராமண்ணா தயாரித்த ‘சக்திலீலை’ படத்தில் நடித்தார். கே.பி.எஸ்ஸின் கடைசி படம் இதுதான்.

1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மருந்து சாப்பிட மறுத்து வந்தார். அவர் மயக்க நிலையில் இருந்தபோது மருந்து செலுத்தப்பட்டது.

செப்டம்பர் 19அன்று அவர் உடல்நிலை மிக மோசம் அடைந்தது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சுந்தராம்பாளைக் காப்பாற்ற முடியவில்லை. வளர்ப்புமகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி.கனகசபாபதி ஆகியோர் அருகே இருந்தனர்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.
“கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை நடந்த இறுதி ஊர் வலத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
“சிதை”க்கு சுந்தராம்பாளின் தம்பி கே.பி.கனகசபாபதி தீ மூட்டினார்.

குரல்வளத்தாலும், பாடும் திறத்தாலும் நடிப்புத்திறனாலும் ஒரு கலைஞரான கே.பி.சுந்தராம்பாள் சிறுவயதில் பட்ட துன்பங்கள் நிறைய. திருமண வாழ்வில் எதிர்கொண்ட ஏமாற்றங்களும் அதிகம். ஆனாலும் கே.பி.எஸ். கலையின் மேல் கொண்டிருந்த பிடிப்புகளும் அதற்கான சமூக உந்துதல்களும் பெரும் காரணிகளாக முன் நின்றிருக்கின்றன. எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும், ஒரு பெண்ணாக மணவாழ்வில் அவர் எதிர்கொண்ட புறக்கணிப்புகளும் உதாசீனங்களும் நிகழ்கலைகளில் ஈடுபடும் பெண் கலைஞர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தையே சுட்டி நிற்கின்றன. இது கே.பி.எஸ். காலம் தொட்டு இன்று வரை தொடரும்அவலம்தான்.

கே.பி. சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் மட்டுமே அவருடைய அக உலகையும், பெண்மனத்தின் நெகிழ்ச்சியையும் புலப்படுத்தும் ஆதாரமாக உள்ளன. தமிழிசை இயக்கம் தீவிரமாக இருந்த ஒரு காலகட்டத்தில் பாரம்பரிய இசை குறித்தும் கர்நாடக இசை குறித்தும் அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகள் கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை. இசையில் பிராமணிய மதிப்பீடுகளின் மேலாண்மைக்கும், வட நாட்டு மெல்லிசையை அப்படியே எடுத்தாளும் வர்த்தக சினிமாவின் போக்குக்கும் எதிராக அவர் இயக்கம் கொண்டு அதனாலேயே புறக்கணிக்கப்பட நேர்ந்தது கூடுதலான சமூகப் பரிமாணங்கள் கொண்டது.

சுந்தராம்பாள் நாடக மேடைகளிலும் சினிமாப் படங்களிலும் தனியாகவும் பாடிய 200க்கு மேற்பட்ட பாடல்கள் இசைத் தட்டுகளாக வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடலையும் “தனித்திருந்து வாழும் தவமணியே” என்ற பாடலையும் காலத்தால் அழியாவண்ணம் அற்புதமாகப் பாடியுள்ளார், கே.பி.எஸ்.
தேசியவாதியான கே.பி.எஸ். பண்டித நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபோது “பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே” என்ற பாடலையும், கஸ்தூரிபாய் கால மானபோது “உன்னை மறந்திடப்போமா” என்ற பாடலையும், காந்தி மறைந்தபோது “உத்தமராம் காந்தியை” என்ற பாடலையும் தனி இசைத்தட்டாக உள்ளம் உருகப் பாடினார்.

மகாத்மா காந்தியை சுந்தராம்பாள் இரண்டு முறை சந்தித்து இருக்கிறார். 1937ல் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டில் உணவருந்தினார். மகாத்மாவுக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பறிமாறினார் கே.பி.எஸ். “எனக்குச் சாப்பாடு மட்டும்தானா? தட்டு கிடையாதா?” என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்க, விருந்து முடிந்ததும் தங்கத்தட்டை காந்தியிடம் வழங்கினார் கே.பி.எஸ். காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்துவிட்டார்.
1958ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்_சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கி கவுரவித்தது. தருமபுரம் ஆதினம் “ஏழிசை வல்லபி” என்ற பட்டத்தையும், தமிழிசைச் சங்கம் “இசைப் பேரறிஞர்” பட்டத்தையும் வழங்கின.

அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு அதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் இல்லாத ரூ. 1 லட்சம் தந்தார்.


பக்கம் பார்த்துப் பேசு!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:53 | Best Blogger Tips
பக்கம் பார்த்துப் பேசு!

நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை காதுகள்..!

• நாம் ஒருவரைப் பாராட்டிப் பேசினால் கண்டுகொள்ளாத காதுகள், ஒருவரைத் தவறாகப் பேசும்போதுமட்டும் முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றன.

• பேருந்திலோ, தொடர்வண்டியிலோ நாம்
செல்லும்போது நம் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ நம் தனிப்பட்ட இன்ப துன்பங்களையோ, அலுவலகம் சார்ந்த
செய்தி களையோ நாம் பேசிக் கொண்டு வருவோம். நம் அருகே பயணிக்கும் ஒருவர் நமக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவராக

இருந்தாலும் தம் காதுகளைக் கூர் தீட்டிக் கொண்டு கேட்பார்.சிலநேரங்களில் நம்மோடு கலந்து நமக்கு சில ஆலோசனைகள் கூட சொல்வார். இது உணவகத்தில் உணவு பரிமாறிய பணியாள் நாம் உண்பதையே உற்றுநோக்கிக் கொண்டிருப்பதுபோலவே இருக்கும்.

• அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வதில் சிலருக்கு இருக்கும் ஆர்வம் இன்று பலருக்கு அவர்களின் வாழ்வில் கூட இருப்பதில்லை.

• இன்றும் பார்க்கிறோம் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வதில் நாமோ, நம்மைச்சுற்றி இருப்பவர்களோ எவ்வளவு ஆர்வம் கொள்கிறோம்..!

• பசி, தண்ணீர் தாகம்போல "ஒட்டுக் கேட்டல்“ என்னும் பண்பு சிலருக்கு கூடப்பிறந்த பழக்கமாகவே இருக்கிறது.

• சங்ககாலத்தில் இப்படி காதுகொடுத்துக் கேட்பதை அம்பல், என்றும் அலர் என்றும் பெயரிட்டு அழைத்தனர். அதனால் தான் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..

'பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அது தானும் பேசாதே' என்று..

நினைவுக்கு வந்த திரையிசைப்பாடல் ஒன்று..

“அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்"

• அதனால் தமிழ் உறவுகளே.. நம்மைச்சுற்றி நிறைய காதுகள் இருக்கின்றன என்பதை அறிந்து பக்கம் பார்த்துப் பேசுவோம், இன்னொருவர் பேசுவதை அவர் அறியாது கேட்டல், அதை இன்னொருவரிடம் சொல்லுதல் அநாகரீகம் என்பதை உணர்வோம்.

மனிதர்கள் வெறும் காதுகளில் ஒட்டுக்கேட்ட காலம் கடந்து...

இன்று...

• தொலைபேசிகள், அலைபேசிகள், இணையங்கள் வழியே ஒட்டுக் கேட்கும் காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம்
என்பதையும் நினைவில் கொள்வோம்.

- Guna Thamizh ..

இணையத்தில் சுலபமாக 'தமிழில்' தட்டச்சு செய்ய:

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:07 | Best Blogger Tips
இணையத்தில் சுலபமாக 'தமிழில்' தட்டச்சு செய்ய:

கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் கணினியில் நம்மால்
தட்டச்சு செய்ய முடிந்த ஒரே மொழி ‘ஆங்கிலம்’
மட்டுமே..

ஆனால், இன்றைய நவீன உலகில்
ஒரு கணினியை பயன்படுத்தி நம்மால் எதுவும் செய்ய
இயலும் (கணினி சம்பந்தமாக)..

அதே சமயத்தில் நம் தாய்மொழியான தமிழ் மொழியில்
தட்டச்சு செய்வதும் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும்
சுலபமாகும்..

நிற்க..!

தாங்கள் நினைப்பதுபோல் எல்லோரும்
வழக்கமாகக் கூறுவதை நான் கூறப்போவதில்லை..

வழக்கமாகத் தமிழில் தட்டச்சு செய்திட நாம்
நாடுவது,,

1) தமிழ் எழுத்துரு (font) மென்பொருள் நிறுவப்பட்ட
ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட
விசைப்பலகை (Keyboard) யாகத்தான் இருக்கும்..
(எ-கா) Tamil99
அல்லது

2) ஏதேனும் ஒரு ஆங்கில
தட்டச்சை மொழி பெயர்த்து தரும் இணையதளமாக
இருக்கும்..
(எ-கா)
www.tamilcube.com

அல்லது

3) தமிழ் எழுத்துருக்களைத் தரும்
மென்பொருட்கள்
(எ-கா) அழகி


ஆனால் இப்போது கூறப்படும்
வழியானது மிகவும் சுலபமான ஒன்றாகும்..

அதாவது 'கூகுளைப்பற்றி' அறியாதோர் எவரும் இலர்
என்றே சொல்லலாம்..

அந்தளவுக்கு இது இணையப்பயனரிடையே வெகு
பிரபலமானதாகும்..

அவ்வாறான கூகுள் நிறுவனம் நிறைய
மென்பொருட்களை இணையப்பயனாளர்களுக்கு
வழங்கி வருகிறது..
அதில் ஒன்றுதான்
இங்கே குறிப்பிடப்படும் Google Input Tool For
Windows “இலவச தமிழ் தட்டச்சு கருவி”யாகும்..

இதனைத் தரவிறக்குமுன்,
இதிலுள்ள
நன்மைகளைப்பற்றி அறிந்து கொள்வோம்..


1) இதனை ஒருமுறை தரவிறக்கி கணினியில்
பதிந்துகொண்டால் போதுமானது..
பின் எப்போதும்
இதனை இயக்க இணைய இணைப்பு அவசியப்படாது..

2) மேலும் இது கைப்பேசி-யில் குறுந்தகவல்
அனுப்பவது போல் நாம் ‘தங்லீஷ்’-ல் தட்டச்சு செய்தால்
தமிழில் தெரியும்..
(எ-கா) Amma = அம்மா

3) இதில் எழுத்துப்பிழை என்பது அறவே வராது..
நாம் தவறாக தட்டச்சு செய்தாலும் அதை சரியான
வார்த்தையாக மாற்றிகொள்வதே இதன்
தனிச்சிறப்பாகும்..

4) மேலும், இந்த மென்பொருளின் அளவு 1 MB –க்கும்
குறைவாகும்..

5) இதனை நாம் மற்ற எந்த எழுத்து மென்பொருட்களிலும்
உபயோகிக்கலாம்.
(எ-கா) MS Word, Notepad etc.,
இந்த இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்ய
கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்..

http://www.google.com/inputtools/windows/index.html


பின் திரையில் தெரியும்
வழிமுறைகளை பின்பற்றவும்..

கணினியில் பதிந்தபின் இதனை உபயோகிக்க:

1) Taskbar-ன் ஏதேனும் ஒரு இடத்தில் 'க்ளிக்'
செய்து Toolbar-->Language bar
தேர்வு செய்யவும்..

2) பின்பு, ALT+SHIFT கீயை ஒரு சேர அழுத்தினால்
ஆங்கிலம் மற்றும் தமிழில்
மாறி மாறி தட்டச்சு செய்யலாம்..



இவ்வளவு நேரம் இதை மிகப்பொறுமையாக
படித்ததற்கு என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்...


via நவமணிராஜா

எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:05 | Best Blogger Tips
எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள்...

வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.

தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும் நிற்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும்.

அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

மகாளய அமாவாசை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:04 | Best Blogger Tips
புரட்டாசி பௌர்ணமிக்குப்பின் பிரதமையிலிருந்து அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் புண்ணிய காலம்.

மகாளய பட்சத்தில் வரும் அமாவாசை தினம் சிரார்த்த காரியத்திற்கு மிகவும் உகந்த நாள்!

மகாளய பட்சத்தில் வரும்

பரணிக்கு மகாபரணி என்று பெயர்
திரயோதசி திதிக்கு கஜசாயை என்றும்.
அஷ்டமி திதிக்கு மத்தியாஷ்டமி என்றும் பெயர்.

இந்த மூன்று புண்ணிய காலங்களில் செய்யும் சிரார்த்த காரியங்கள் கயையில் செய்யும் சிரார்த்தத்திற்கு இணையானது.

மேலும் அமாவாசை துதீய பாதம், பரணி துவாதசி, அஷ்டமி ஆகிய நாட்களில் திதி, நட்சத்திரம், வாரம் ஆகியவற்றால் ஏற்பட்ட தோஷங் களைக் கவனிக்கத் தேவையில்லை.

காருணிகர்கள் எனப்படுகின்ற
பெற்றோர்
சிறிய தகப்பனார்,
பெரிய தகப்பனார்,
தமையனார்,
தம்பி,
அத்தை,
அம்மான்,
பெரிய தாயார்,
சிறிய தாயாரின்
சகோதரர்கள்,
அவர்களின் பிள்ளைகள்,
மனைவி,
மாமனார்,
அக்காள் கணவன்,
மருமகள்,
மைத்துனர்,
குரு,
எஜமான்,
நண்பர் மற்றும் நமக்குப் பிரியமான சகல ஜீவராசிகளுக்கும் மகாளய பட்சத்தில் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

மேலும் முறையாக குருவிடம் தீட்சை பெறாமல் சுயமாக சந்நியாசம் பெற்றுக் கொண்டு காலமானவர்களுக்கு துவாதசியில்தான் சிரார்த்தம் செய்ய வேண்டும்;

காலம் வராமல் காலனைச் சென்றடைந்த வர்களுக்கு (துர்மரணம் அடைந்தவர்களுக்கு) சதுர்த்தசி திதியில்தான் சிரார்த்தம் செய்ய வேண்டும்;

மேலும் இந்த சிரார்த்த காரியம் செய்யும் பொழுது விஸ்வேஸ்வரனையும் விஷ்ணு வையும் காலபைரவரையும் ஆராதனை செய்தல் மிகவும் உத்தமம்.

மேலும் காலபைரவரின் அஷ்டோத்திரம் கூறுவதால் சகல நன்மைகளும் அடைந்து நல்வாழ்வு கிட்டும்.

வஸ்திரம்,
அன்னம்,
உத்திராட்சம்,
துளசி மாலை,
பஞ்ச பாத்திரம்,
உத்திரணி,
கிண்டி,
பசு,
பூமி,
குடை,
பாதரட்சை போன்றவற்றை தானம் செய்தால் நன்மை உண்டாகும்.

இவற்றைச் செய்ய இயலாதவர்கள் வில்வத்தை கையில் ஏந்தி தியானம் செய்து ஆற்றில் விடுவதும் உத்தமாகும்.

உத்திரவாகினியாக ஓடும் நதிகளில் சிரார்த்தம் செய்வது சிறப்பானது.

மேற்கே துவங்கி கிழக்கு முகமாக வந்து கடலில் சங்கம மாகும் நதிகள், இடையில் சில இடங்களில் வடக்கு முகமாகத் திரும்பி ஓடும். அதுவே உத்திரவாகினியாகும்.

கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மணஞ்சேரி என்கிற கிராமத் தையொட்டி, காவிரி நதி உத்திரவாகினியாக ஓடுகிறது.

காஞ்சி மகா பெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கேதான் சிரார்த்தம் செய்தார். ஆகவே இந்த ஸ்தலம் கஜேந்திர மோட்ச ஸ்தலம் எனப்படுகிறது. இங்கே தர்ப்பணம் செய்வதும் சிறப்பானது.

பாட்டி தாத்தா சொன்ன கதைகள்: லட்சுமி கடாட்சம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:01 | Best Blogger Tips
பாட்டி தாத்தா சொன்ன கதைகள்:

லட்சுமி கடாட்சம்!

முன்னொரு காலத்தில் மாமுனிவர் ஒருவர் காட்டில் தவம்செய்து வந்தார். சிறு வயதிலிருந்தே தவக்கோலம் பூண்டு இறைவனை தொழுது வந்ததால், அந்த காட்டில் வசித்த கொடிய மிருகங்கள் கூட அவரிடம் குழந்தைகளை போல நடந்து கொண்டன.

ஒரு நாள் அவர் முன் அழகிய பெண் ஒருத்தி தோன்றினாள். அவளது பேரழகு பிரமிக்க வைத்தது. இருப்பினும் மனம் சலனப்படாமல் அந்த அழகியை பார்த்து, “அம்மா நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்றார்.

“நான் தான் மகாலட்சுமி; என்னுடைய விதி பயனால் சில நாட்கள் உங்களுடன் வசிக்க வந்துள்ளேன். நீங்கள் என்னை உதறி தள்ளினாலும் உங்களை விட்டு நான் போகமாட்டேன். பிரம்மன் கட்டளைப்படி நான் உங்களுடன் இருந்தாக வேண்டும்,'' என்றாள்.

மகாலட்சுமி போகமாட்டாள் என்பதை அறிந்த முனிவர் அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.

“அம்மா நீங்கள் வரும் பொழுது என்னிடம் சொல்லி கொண்டு வந்தது போல போகும் போது சொல்லி கொண்டே போக வேண்டும்,'' என்றார்.

லட்சுமியும் சம்மதித்தாள். அன்றிலிருந்து தன் மீது லட்சுமியின் அருள் பூரணமாக இருப்பதை அறிந்தார். அதை சோதித்து பார்க்க விரும்பினார் முனிவர். எனவே, காட்டை விட்டு பொற்குன்றம் என்ற மாநகரை அடைந்தார். அந்த அரண்மனையின் அரசரும் மந்திரிகளும் அமர்ந்திருந்தனர்.

வேகமாக சென்ற முனிவர் தனது இடது காலை துõக்கி மன்னனது கிரீடத்தை ஒரு உதை விட்டார். மறுநிமிடம், “அடி! உதை அவனை பிடி!'' என்றபடியே ஆயிரம் சேவகர்கள் முனிவரை சூழ்ந்து கொண்டனர்.

உடனே அரசன், “முனிவரை ஒன்றும் செய்யாதீர்கள். அவர் திரிகாலமும் உணர்ந்த ஞானி. என் கிரீடத்தை பாருங்கள்,'' என்றான்.

கிரீடத்தில் விஷநாகம் ஒன்று படமெடுத்து கொண்டிருந்தது. உடனே எல்லாரும் மகாபுருஷரை திட்டிவிட்டோமே என்று நினைத்து வருந்தினர். அதற்குள் விஷநாகம் ஓடி மறைந்தது. உண்மையில் அது விஷ நாகமல்ல; லட்சுமிதான் நாக உருவெடுத்து முனிவரை காப்பாற்றினாள்.

அன்றிலிருந்து அரசன் மாமுனிவருக்கு மந்திரி பதவி கொடுத்து சர்வ அதிகாரமும் கொடுத்தான். முனிவருக்கு லட்சுமி கடாட்சம் இருந்ததால் அவர் செய்ததெல்லாம் பலித்தது. முனிவரும் நாட்டை நல்ல முறையில் ஆண்டார்.

இரண்டு வருடங்கள் ஓடின. மீண்டும் ஒரு நாள் தன்னுடன் லட்சுமி இருக்கிறாளா என்பதை அறிய விரும்பினார் முனிவர். அன்றிரவு அரசனும், அரசியும் துõங்கிக் கொண்டிருந்த பள்ளியறைக்கு சென்றார். இருவரையும் துõக்கிக் கொண்டு வெளியே வந்தார்.

கண் விழித்த மன்னன் அந்த கிழவனின் தலையை வெட்டினால் என்ன என்று நினைத்து ஆத்திரம் கொண்டார். அதற்குள் பள்ளியறை கட்டிடம் இடிந்து விழுந்தது. அதை பார்த்த அரசனுக்கு மாமுனிவர் மேல் அளவிடாத பாசம் வந்தது.

“முனிவரே! நீர் இல்லாவிட்டால் நாங்கள் இருவரும் இறந்திருப்போம்!'' என்றான்.

இந்த விஷயத்தை அறிந்த நாட்டு மக்கள், முனிவரை தெய்வமாகவே பாவித்தனர்.

ஒரு நாள் அரசன் தன்னுடைய முக்கிய பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றான். ஒரு மானை துரத்தி கொண்டு ஓடினார் மன்னன். அவன் பின்னாலே சென்றார் முனிவர்.

மான் தப்பிவிட்டது. களைத்து போன மன்னனும், முனிவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். முனிவரது மடியில் சற்று நேரம் இளைப்பாற விரும்பினார் மன்னர். முனிவரும் சம்மதித்தார்.

அப்பொழுது மேலே பார்த்தார் முனிவர். அந்த மரத்தின் கிளை மேல் கருடன் ஒன்று பெரிய நாகத்தை துõக்கி வந்து தின்பதற்காக உட்கார்ந்திருந்தது. அந்த மரத்தின் கிளை அரசனுடைய மூக்குக்கு நேராக இருந்தது.

மாமுனிவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து கருடனை விரட்டினால் மன்னனது துõக்கம் கெட்டுவிடும். நாகத்தினால் அரசனுக்கு தீங்கில்லை என நினைத்து விட்டுவிட்டார். கருடன் பாம்பை கொத்தியது. பாம்பு தன் விஷத்தை கக்கவே அது மன்னனின் கழுத்தில் வந்து விழுந்தது.

கால சர்பத்தின் விஷம் என்ன பண்ணுமோ என பயந்த முனிவர், தன் கத்தியால் அதை வழிக்க நினைத்தார். அப்பொழுது லட்சுமி, “நான் தங்கøள் விட்டு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது; செல்கிறேன்,'' என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.

கத்தியை எடுத்து அரசரின் கழுத்தில் வைத்தார் முனிவர். உடனே கண் விழித்தான் அரசன், “இப்படிப்பட்ட பாதக செயலை நீங்கள் செய்வீர்கள் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை,'' என்று கோபப்பட்டான்.

முனிவரோ, “மன்னா நான் உன்னை கொல்லவேண்டுமென்றால் எப்பொழுதோ கொன்றிருக்கலாம். சற்று தலையை துõக்கிப் பாருங்கள். கருடன் வாயிலிருக்கும் பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் உங்கள் கழுத்தில் விழுந்துவிட்டது. அதை எடுக்கவே இப்படி செய்தேன். இனி நான் உங்களுடன் இருக்கமாட்டேன். லட்சுமி கடாட்சம் என்னை விட்டு போய்விட்டது,'' என்றார்.

மன்னன் மிகவும் மன்னிப்பு கேட்டான். தாங்கள் என்னை விட்டு செல்லக்கூடாது என கூறினான்.

நடந்தவைகளை எல்லாம் கூறிய முனிவர், “எனக்கு என்ன இருக்கிறது. நான் ஒரு முனிவர். லட்சுமி என்னுடன் இருந்தவரையில் எனக்கு ஆபத்து இல்லை. இனி நான் தங்களுடன் இருப்பதில் பயனில்லை. விடை கொடுங்கள் நான் காட்டிற்கு செல்கிறேன்,'' என்றார்.

மன்னன் எவ்வளவோ கெஞ்சியும் முனிவர் அவருடன் இருக்க சம்மதிக்கவில்லை. தன்னை விட்டு லட்சுமி போன பிறகு மன்னனுடன் இருப்பது தனக்கு மிகுந்த ஆபத்தை தரும் என்பதை உணர்ந்து அரசனிடம் விடைபெற்று காட்டிற்கு சென்றார் முனிவர்.