ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:40 | Best Blogger Tips
Image result for ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில்"Image result for ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில்"

நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் 
(கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம் செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் 
.........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்.........................

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது?
எப்படி செல்ல வேண்டும்?

அங்கு சென்றால் கிடைக்கும்
பலன் என்ன! ...............


கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.

சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும்.

இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6-11, மாலை4- இரவு 8.
போன்: 94438 85316, 04369 222 392


கோயில்: நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்

அம்மன்: சுந்தரநாயகி

தல வரலாறு: இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன் மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித்தலமானது.

சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம்.

இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்தில் நல்லாடை.

திறக்கும் நேரம்: காலை 8- மதியம்12, மாலை 5- இரவு 8.30.
போன்: 94866 31196, 04364 285 341

கோயில்: கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர்
அம்மன்: துங்கபால ஸ்தனாம்பிகை

தல வரலாறு: தேவர்கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் "காஞ்சன நகரம்' எனப்பட்டது. அதுவே "கஞ்சாநகரம்'(பொன்நகரம்) என்றாகிவிட்டது.

சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும்.

இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை10- 11, மாலை4-5
போன்: 94874 43351, 04364 282 853.

கோயில்: காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் கோயில்

தல வரலாறு: வைசம்பாயனர் ரிஷியிடம், ஜன்மேஜய மகாராஜா, மகாபாரதக் கதை கேட்டார். கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பற்றிக் கேட்ட போது, மன்னருக்கும் அந்த தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ரிஷியின் வழிகாட்டுதல்படி காஞ்சிபுரத்தில் தவம் செய்து தரிசனம் பெற்றார். அவரே பாண்டவதூதப்பெருமாளாக கோயில் கொண்டிருக்கிறார்.

சிறப்பு: ரோகிணிதேவி, இத்தல பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி நட்சத்திரத்தினர் புதன், சனிக்கிழமை, அஷ்டமிதிதி, 8ம் தேதிகளில் வழிபடுவது சிறப்பு.

இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,. ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரிலுள்ள சாலை.

திறக்கும்நேரம்: காலை 7- 11, மாலை 4- இரவு 7.30.
போன்: 044- 2723 1899.


கோயில்: எண்கண் ஆதிநாராயணப் பெருமாள் கோயில்

தல வரலாறு: பெருமாளை நோக்கி தவமிருந்த பிருகுமுனிவர், சிங்க வேட்டைக்கு வந்த சோழனின் ஆரவாரத்தால் தவம் கலைந்து எழுந்தார். கோபத்தில் அவனை சிங்கமுகத்தோடு பிறக்க சாபமிட்டார். விருத்தகாவிரி என்னும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் பெருமாளை வணங்கி மீண்டும் மனிதமுகத்தைப் பெற்றான்.

சிறப்பு: மிருகசீரிட நட்சத்திரத்தினர், மிருகசீரிட நாளில் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் பிரச்னை நீங்கி சந்தோஷம் கூடும்.

இருப்பிடம்: தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் 50கி.மீ., தூரத்தில் முகூந்தனூர். அங்கிருந்து 1கி.மீ., தூரத்தில் எண்கண்.

திறக்கும்நேரம்: மாலை5- இரவு 7.
போன்: 94433 51528, 04366- 269 965.


கோயில்: அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர்கோயில்

அம்மன்: சுந்தரநாயகி அம்மன்

தலவரலாறு: அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள், திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் அடைந்து சிவனருள் பெற்றனர். அபயம் அளித்தவர் என்பதால், சிவனுக்கு "அபயவரதீஸ்வரர்' என பெயர் வந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ரைவத மகரிஷி, பைரவ மகரிஷி ஆகியோர் அருவநிலையில் இக்கோயில் சிவனை வழிபடுவதாக ஐதீகம்.

சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும். அதீவீரராம பாண்டியர் திருப்பணி செய்ததால், இத்தலம் "அதிவீரராமன்பட்டினம்' என வழங்கியது. தற்போது அதிராம்பட்டினமாகி விட்டது.

இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 70கி.மீ., அங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அதிராம்பட்டினம்.

திறக்கும்நேரம்: காலை 6.30- 12, மாலை4- இரவு 8.30.
போன்: 99440 82313, 94435 86451.

கோயில்: வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தலவரலாறு: பிரம்மாவைப் பிரிந்த சரஸ்வதி பூலோகம் வந்தாள். அவளை சிருங்கேரியில் கண்டு சமாதானப்படுத்தினார். இருவரும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அதிதீஸ்வரர் கோயிலில் தங்கிய கலைவாணியைப் பாடும்படி சிவபார்வதி வேண்ட, அவளும் இனிமையாகப் பாடினாள். அதனால் இத்தலம் வாணியம்பாடி என்றானது.

சிறப்பு: கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, வாணியம்பாடியில் புனர்பூச நட்சத்திர நாளில் விரதமிருந்து தேவர்களுக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றாள். மேற்கு நோக்கிய இத்தலத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தினர் வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும்.

இருப்பிடம்: வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி. அங்கிருந்து 3கி.மீ., தூரத்தில் கோயில்.

திறக்கும் நேரம்: காலை 6.30- 10.30, மாலை 5- இரவு 7.
போன்: 99941 07395, 04174 226 652

கோயில்: விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: அபிவிருத்தி நாயகி

தல வரலாறு: காலில் ஏற்பட்ட வாதநோயைப் போக்கும் விதத்தில் சனி, திருத்தல யாத்திரை புறப்பட்டார். விளங்குளத்தில் இருக்கும் அட்சயபுரீஸ்வரரை வழிபட்டபோது நோய் குணமானது. அன்று, பூசம் நட்சத்திரமாக இருந்தது. பித்ருக்களின் அம்சமான காகங்களின் குருவான "பித்ரசாய்' சித்தர் இங்கு தினமும் வழிபடுகிறார்.

சிறப்பு: இங்கு மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவியருடன் சனீஸ்வரர் மணக்கோலத்தில் வீற்றிருக் கிறார். பூச நட்சத்திரத்தினர் பூசம் மற்றும் திரிதியை நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து எட்டுமுறை சுற்றி வர நோய் நீங்கும். திருமணயோகம் கைகூடும்.

இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30கி.மீ., தூரத்தில் விளநகர் விலக்கு. அங்கிருந்து தெற்கே 2கி.மீ, தூரத்தில் கோயில்.

திறக்கும்நேரம்: மாலை4- இரவு7.
போன்: 97507 84944, 96266 85051.


கோயில்: திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
அம்மன்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
தல வரலாறு: துர்வாசரின் சாபத்தால் நண்டு பிறப்பெடுத்த கந்தர்வன், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். கற்கடகத்திற்கு (நண்டுக்கு) அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி "கற்கடேஸ்வரர்' என பெயர் பெற்றார். பிரகஸ்பதியின் வழிகாட்டுதலின்படி, இந்திரன் இங்குள்ள சிவனை1008 மலர்களால் வழிபட்டு ஆணவம் நீங்கப்பெற்றான். இந்திரன் திருந்திய தலம் என்பதால் "திருந்துதேவன்குடி' என்ற பெயர் வந்தது. "நண்டுக்கோயில்' என்றால் தான் தெரியும்.

சிறப்பு:ஆயில்யம், தேய்பிறை அஷ்டமிநாளில் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட நன்மை பெருகும்.

இருப்பிடம்: கும்பகோணம்- சூரியனார்கோயில் சாலையில் 11கி.மீ., தூரத்தில் திருவிசநல்லூர்.
அங்கிருந்து திருந்துதேவன்குடி 2கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை9- மதியம் 1.30, மாலை 4- இரவு7.
போன்: 99940 15871, 0435- 200 0240

கோயில்: ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயில்

அம்மன்: மாணிக்கவல்லி, மரகதவல்லி

தல வரலாறு: மக நட்சத்திரத்தில் அவதரித்த பரத்வாஜர் தவமேடை அமைத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்ட தலம் ஒடுக்கம் தவசிமேடை. கோயிலுக்கு வரும் அடியவர்களின் பாதம் தன்மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜரே இங்கு பீடமாக இருக்கிறார்.

சிறப்பு: மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாதசிவராத்திரி நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வு வளம் பெறும். இங்கு மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவராத்திரியை ஒட்டி 30 நாட்கள் காலை நேரத்தில் மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பு.

இருப்பிடம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து 2கி.மீ. தூரத்தில் கோயில்.

திறக்கும் நேரம்: காலை6- மாலை6.
போன்: 95782 11659, 93624 05382.

கோயில்: திருவரங்குளம் ஹரிதீர்த்தேஸ்வரர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தல வரலாறு: புத்திரப் பேறு வாய்க்காத சோழ மன்னன் கல்மாஷ பாதன் அகத்தியரின் உதவியை நாடினான். அவரின் வழிகாட்டுதலால், திருவரங்குளம் சிவனை வணங்கப் புறப்பட்டான். அந்தக் கோயில் புதைந்து போனது அறிந்து பூமியைத் தோண்டினான். லிங்கத்தில் கடப்பாறை பட்டு ரத்தம் பீறிட்டது. தோஷம் நேரும் என வருந்தி உயிர் விடத் துணிந்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து குறை தீர்த்தார். இந்த நிகழ்வு பூரம் நட்சத்திரத்தில் நடந்தது.

சிறப்பு: பூர நட்சத்திர லோகத்தில் சிவ,நாக, ஞானபிரம்ம, இந்திர, ஸ்ரீ, ஸ்கந்த, குரு தீர்த்தங்கள் உள்ளன. திருவரங்குளத்திலும் இவை ஏழும் உள்ளன. பூர நட்சத்திரத்தினர் தங்கள் பிறந்தநாளில் இங்கு வழிபட்டால் வாழ்வில் மேன்மை பெறுவர்.

இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் 7 கி.மீ.

திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை5- இரவு7.30
போன்: 98651 56430, 99652 11768


கோயில்: இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்

அம்மன்: மங்களாம்பிகை

தல வரலாறு: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மாங்கல்ய மகரிஷி. இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியவர்களின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியவர். யாரும் அறியாமல் சூட்சும வடிவில் பூலோகத்தில் சிவனை வணங்கி தன் சக்தியை அதிகரித்துக் கொண்டார். சிவன் இவருக்கு அருள்புரிந்த தலமே இடையாற்று மங்கலம்.

சிறப்பு: மணவாழ்வுக்காக காத்திருப்பவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணம் நிச்சயித்தபின், மாங்கல்ய மகரிஷிக்கு வெற்றிலைபாக்குடன் கல்யாண பத்திரிகை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். உத்திர நட்சத்திரத்தினர் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.

இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22கி.மீ., தூரத்தில் லால்குடி. அங்கிருந்து இடையாற்று மங்கலம் 5 கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை 8- மதியம்12, மாலை6- இரவு 8.
போன்: 98439 51363, 0431- 254 4070.

கோயில்: கோமல் கிருபா கூபாரேஸ்வரர் கோயில்

அம்மன்: அன்னபூரணி

தல வரலாறு: சிவனின் கண்களைப் பார்வதி கைகளால் பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. அப்போது, சிவனும் தன் கையில் இருந்த ஹஸ்தாவர்ண ஜோதியில் மறைந்தார். சிவனைத் தேடி, அம்பாள் பசுவடிவில் பூலோகம் புறப்பட்டாள். அஸ்த நட்சத்திரத்தன்று சிவனை ஜோதிவடிவில் தரிசித்து ஐக்கியமானாள். பக்தர்கள் மீது கருணை(கிருபை) கொண்டவர் என்பதால் "கிருபா கூபாரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

சிறப்பு: அஸ்த நட்சத்திரத்தினர் திங்கள், புதன்கிழமையில் வழிபடுவது நல்லது. அன்னபூரணி அம்பிகை பசுவாக இங்கு வந்ததால் பசு,கன்று தானம் அளிப்பது சிறப்பு.

இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குப் பிரியும் இடத்தில் இருந்து 8கி.மீ., தூரத்தில் கோமல்.

திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை 5.30- இரவு 7.30.
போன்: 95002 84866


கோயில்: குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள்

தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி

தல வரலாறு: தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கசனை, அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி திருமணம் செய்ய விரும்பினாள். கசனை அசுரலோகத்திலேயே கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தாள். மகனைக் காணாத பிரகஸ்பதி விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். விஷ்ணு சக்கரத்தாழ்வார் மூலம் கசனை மீட்டார். இதையடுத்து சக்கரத்தாழ்வாரும், தேவ குருவும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். அதுவே குருவித்துறை தலம்.

சிறப்பு: பிரகஸ்பதிக்கு அருள்புரிய விஷ்ணு, சித்திர ரதத்தில், சித்திரை நட்சத்திரத்தன்று எழுந்தருளினார். எனவே, இக்கோயில் சித்திரைக்குரியதானது. வியாழன், பவுர்ணமி, சித்திரை நட்சத்திர நாட்களில் தரிசிப்பது சிறப்பு.

இருப்பிடம்: மதுரையிலிருந்து 23 கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 3- 6.
போன்: 94439 61948, 97902 95795.


கோயில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்

அம்மன்: பூங்குழலி

தல வரலாறு: படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது. . நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு "தாத்திரீஸ்வரர்' என்று பெயர். "தாத்திரீ' என்றால் "நெல்லி.

சிறப்பு: சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும்.

இருப்பிடம்: சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை8- 10, மாலை 5-7
போன்: 93643 48700, 9382684485.


கோயில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்
தல வரலாறு: பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது.

சிறப்பு: விசாகம் என்றால் "மேலான ஜோதி'. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.

இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில்.

திறக்கும்நேரம்: காலை6- மதியம் 1, மாலை 5, இரவு 8.30.

போன்: 04633- 237 131, 237 343.


கோயில்: திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: உலகநாயகி

தல வரலாறு: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதை அறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர்.

சிறப்பு: பூமியில் புதைந்துபோன சிவலிங்கம், சோழமன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோயில் அனுஷத்திற்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும்.

இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை 4- இரவு 8.
போன்: 04364- 320 520


கோயில்: பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்

தாயார்: பெருந்தேவி

தல வரலாறு: ராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105வது வயதில் சோழமன்னன் ஒருவன் ராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். அவர் பசுபதிகோயில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்கலம் புகுந்தார். அவரின் துன்பம் போக்கும் விதத்தில், பெருமாள் இங்கு மோட்சம் அளித்தார்.

சிறப்பு: பெரியநம்பியின் திருநட்சத்திர வைபவம் சிறப்பாக நடக்கும். கேட்டை நட்சத்திரத்தினர் வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாயன்று வரும் கேட்டையில் வழிபடுவது சிறப்பு.

இருப்பிடம்: தஞ்சாவூர்- கும்பகோணம் வழியில் 13கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை7- 9, மாலை 5.30- 7.30.
போன்: 97903 42581, 94436 50920


கோயில்: மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்

அம்மன்: புஷ்பகுஜாம்பாள்

தல வரலாறு: சிவன் ஆனந்ததாண்டவம் ஆடியபோது மிருதங்கம் வாசித்தவர் சிங்கி என்ற நந்திதேவர். இசையில் ஆழ்ந்து கண்ணை மூடியபடி தாளம் போட்டதால், நடனத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால், மப்பேடு வந்து சிவபூஜை செய்து இறைவனின் நடனத்தைக் கண்டு களித்தார். மெய்ப்பேடு என்பதே மப்பேடு ஆகிவிட்டது. சிங்கி வழிபட்ட சிவன் என்பதால் சிங்கீஸ்வரர் எனப்பட்டார்.

சிறப்பு: மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷத்தன்று இங்கு வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நவவியாகரண கல் மீது ஏறி, நந்தியையும், மூலவரையும் ஒரே சமயத்தில் தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும்.

இருப்பிடம்: சென்னை கோயம்பேடு- தக்கோலம் வழியில் 45 கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை6- 10, மாலை 5.30-இரவு 7.30.
போன்: 94447 70579, 94432 25093


கோயில்: கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: மங்களாம்பிகை

தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய கடுவெளிச்சித்தர் அருள்பெற்ற தலம் கடுவெளி. "கடுவெளி' என்றால் "ஆகாசவெளி'. சோழமன்னன் ஒருவன் இங்கு கோயில் கட்டினான். ஆகாயத்திற்கு அதிபதியாக ஆகாசபுரீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார்.
சிறப்பு: இத்தலம் பூராடம் நட்சத்திரத்திற்குரியது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் பூராடத்தன்று இங்கு வழிபடுவதாக ஐதீகம். அன்று சிவனுக்கு புனுகு சாத்தி வழிபட திருமண, தொழில்தடை நீங்கும்.

இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு 13 கி.மீ., அங்கிருந்து கல்லணை வழியில் 4 கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை9-10, மாலை 5-6, பூராடத்தன்று: காலை 8- மதியம்1.

போன்: 94434 47826, 96267 65472


கோயில்: கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: மீனாட்சியம்மன்

தல வரலாறு: படைப்புத் தொழிலைச் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவன் என்று பிரம்மா கருதினார். இந்த மமதையை அடக்க, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒருதலையைக் கொய்தார் சிவன். தனது பாவம் தீர பிரம்மா, பூலோகத்தில் சிவனை வழிபட்ட தலம் கீழப்பூங்குடி. பழைய கோயில் அழிந்து போனதால் புதிய கோயில் கட்டப்பட்டது.

சிறப்பு: இங்குள்ள மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம். இதில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரரையும், மீனாட்சியையும் உத்திராடத்தன்று வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கும்.

இருப்பிடம்: மதுரையிலிருந்து 45கி.மீ., சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் 
ஒக்கூர் 12கி.மீ., அங்கிருந்து கீழப்பூங்குடி 3 கி.மீ.,

திறக்கும் நேரம்: காலை7- 11, மாலை 5- இரவு8
போன்: 99436 59071, 99466 59072


கோயில்: திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில்

தாயார்: அலர்மேலுமங்கைத் தாயார்

தலவரலாறு: புண்டரீக மகரிஷியின் பக்திக்கு இணங்கி பெருமாள் பிரசன்னமான தலம் திருப்பாற்கடல். சந்திரன் ஒரு சாபத்தால் இருளடைந்தான். அவன் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி வருந்தினாள். இங்கு வந்து வழிபட்டு கணவரின் சாபம் நீங்கப் பெற்றாள்.

சிறப்பு: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், மூன்றாம்பிறை ஆகிய நாட்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நினைத்தது நிறைவேறும்.

இருப்பிடம்: வேலூர்- சென்னை வழியில் 20கி.மீ., தூரத்தில் காவேரிப்பாக்கம். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில்.

திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 4.30- இரவு 7.30
போன்: 94868 77896,04177 254 929


கோயில்: கீழ்க்கொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: புஷ்பவல்லி

தல வரலாறு: கோரக்கசித்தர் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இரவில் விழித்தபோது, அவரருகில் ஒருத்தி படுத்திருந்தாள். முந்தானை சித்தர் மீது கிடந்தது. இதற்கு பரிகாரமாக தன் கைகளை வெட்டிக் கொண்டார். சிவனருளால் கைகள் வளர்ந்தன. கையை வெட்டியதால் "கோரக்கை' என்றும், குறுகிய கைகளால் வழிபட்டதால் "குறுக்கை' என்றும் ஊருக்குப் பெயர் வந்தது. தற்போது "கொருக்கை' எனப்படுகிறது.

சிறப்பு: அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மஞானபுரீஸ்வரர், பிரம்மாவுக்கு ஞானம் தந்ததால் இத்தலம் அவிட்டத்திற்கு உரியதானது. இந்த நட்சத்திரத்தினர் ஆவணி அவிட்டத்தன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் யோக வாழ்வு அமையும்.

இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை11- மதியம்1, மாலை5- மாலை 6
போன்: 98658 04862, 94436 78579


கோயில்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: கருந்தார் குழலி

தல வரலாறு: தவமிருந்த அக்னிதேவனுக்கு சந்திர சேகரராக சிவன் காட்சியளித்து அருள்புரிந்த தலம் திருப்புகலூர். "புகல்' என்றால் அடைக்கலம். அடைக்கலம் புகுந்தவர்களை ஆட்கொள் பவராக சுவாமி இங்கு வீற்றிருக்கிறார். வர்த்தமானேஸ்வரர், மனோன்மணி அம்பாளும் இங்கு வீற்றிருக்கின்றனர்.

சிறப்பு: திருநாவுக்கரசர் தன் 81ம் வயதில் சித்திரை சதய நாளில் இங்கு சிவனோடு இரண்டறக் கலந்தார். இதை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும். சதய நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் உண்டாகும்.

இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம்- நாகப்பட்டினம் வழியில் 10கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை 6- மதியம்12, மாலை 4- இரவு9
போன்: 04366 236 970


கோயில்: ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் கோயில்

அம்மன்: காமாட்சி

தல வரலாறு: இந்திரனும், அவனது ஐராவத யானையும் பூரட்டாதிநாளில் திருவானேஸ்வரரை பூஜித்து நற்பலன் பெற்றனர். கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோயில். இறைவன் இங்கிருந்தே காலச்சக்கரத்தைப் படைத்தார். கஜ கடாட்ச சக்தி விமானத்தின் கீழ் சுவாமி எழுந்தருளியிருக்கிறார்.

சிறப்பு: பூரட்டாதியன்று திருவானேஸ்வரரை வழிபட்டு ஏழு வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளித்தால் புத்திகூர்மை உண்டாகும். திருமணம், வேலைவாய்ப்பு தடையின்றி நடந்தேறும்.

இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு 20 கி.மீ., இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி 17கி.மீ., அங்கிருந்து அகரப்பேட்டை வழியில் 2கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை7-9, மாலை 5.30-இரவு 7
போன்: 94439 70397, 97150 37810


கோயில்: தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய லட்சுமி, அகத்தியரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் வழிபட்ட தலம் தீயத்தூர். அவள், தினமும் ஆயிரம் தாமரை மலர்களால், சிவனை வழிபட்டதால் "சகஸ்ரலட்சுமீஸ்வரர்' என்று பெயர் வந்தது. "சகஸ்ர' என்றால் "ஆயிரம்'.

சிறப்பு: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷி ஆகியோர் அரூபவடிவில் சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நாளில் வருவதாக ஐதீகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொங்கல் நைவேத்யம் செய்ய பணக்கஷ்டம் தீரும். செயல்பாடுகளில் தடை நீங்கும்.

இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோயில் 40கி.மீ., அங்கிருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் 21கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை6- மதியம் 12
போன்: 99652 11768, 04371-239 212


கோயில்: காருகுடி கைலாசநாதர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தல வரலாறு: சந்திரன் தன் மனைவியான ரேவதியுடன் சிவனருள் பெற்ற தலம் காருகுடி. "கார்' எனப்படும் ஏழுவகை மேகங்களும் சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு "காருகுடி' என்ற பெயர் உண்டானது. 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி கோயிலைக் கட்டினான்.

சிறப்பு: ரேவதி நட்சத்திர தேவதை அரூப வடிவத்தில் (உருவமின்றி) தினமும் சிவனை வழிபடுவதாக ஐதீகம். ரேவதி நட்சத்திரத்தினர் இங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நினைத்தது விரைவில் நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.

இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 40கி.மீ, இங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை 21கி.மீ., அங்கிருந்து காருகுடி 5கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை5- இரவு8
போன்: 97518 94339, 94423 58146

 நன்றி இணையம்