
✨ இன்றைய சிந்தனை: அவமானம் தாங்கப் பழகு…
வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்து கொள்ள, தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது.
.jpg)
வெற்றி என்றதும், பிறரால் அவமானப்படுத்தப்படுவது என்பதும் வரும். இது மிகப்பெரிய பாடங்களை நமக்குச் சொல்லிக் கொடுத்துவிடும். அடுத்தவரின் உண்மையான முகம், நாம் அவமானப்படும்போது தெரியும்.

யார் நண்பர்,
யார் நண்பர் அல்லாதவர்,
யார் நல்லவர்,
யார் கெட்டவர்,
அவருடைய உண்மையான முகம் எது?
என்ற விஷயங்களெல்லாம் மிகத் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தல்களுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை மிக வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.

நம்மை அவமானப்படுத்தச் செயல்படும் பலர், இவற்றை மிக ரகசியமாகவே செய்கிறார்கள். வேறு யாரையாவது முன்னிறுத்தி, பின்னால் நின்று இயக்குகிறார்கள்.
இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வைக் கண்டு பொறாமைப்படத் தொடங்குகிறார்கள். அநேகமாக, அவர்கள் பொறாமை மிகுதியால் அவமானப்படுத்துகிறார்கள்.
எப்போதும் வாழ்க்கையில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள்தான் எதிரிகள். எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை.
"என்கூட பம்பாயில் பிளாட்பாரத்துல வியாபாரம் பண்ணிட்டு, இன்னிக்கு ஒரு கடைக்கு முதலாளியாயிட்டா விட்டுருவோமா? உதைப்போம்."
"உன்னைப் போய் முதலாளின்னு கூப்பிடுறாங்களே, எனக்கு வயிறு எரியுது" என்று சண்டை போட்ட மனிதர்களை நான் அறிவேன்.

கடைக்கு முதலாளி ஆனவனுடைய உழைப்பும், கம்பீரமான காத்திருத்தலும், பிளாட்பாரத்தில் விவரம் கெட்டத்தனமாய் அலைகிறவனுக்குப் புரியவில்லை.
நன்றாக வளர்ந்த பிறகும், ஒரு வம்பு சண்டைக்காரனுடன் மல்லுக்கு நிற்க வேண்டியது இருக்கிறது. அதை வேடிக்கை பார்க்கும் நாலு பேருக்குப் பதில் சொல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.
இம்மாதிரியான மனிதர்களை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இந்த அவமானத்திற்குப் பயந்துவிடக் கூடாது.
என்ன செய்ய வேண்டும்?
கோபப்பட வேண்டும்; நிதானமாகக் கோபப்பட வேண்டும்.
பாரதி, "ரௌத்திரம் பழகு" என்று சொல்கிறார். ரௌத்திரம் என்ற வடசொல்லுக்கு வெஞ்சினம் என்று பொருள் கொள்ளலாம். வெறும் சினம் அல்ல; மிகக் கடுமையான சினம்.

காரியமாற்றும் சினம். பதிலுக்கு என்ன செய்வது என்று திட்டமிட்டு, அவமானம் செய்தலை எதிர்க்கும் சினம்.
அவமானம் நண்பர்களால் ஏற்பட்டாலும், உறவுகளால் ஏற்பட்டாலும், அந்நியர்களால் ஏற்பட்டாலும், நெல்முனையளவும் கவலை கொள்ளாதீர்கள்.
எதனால் இது?
எங்கு தவறு?
வேண்டுமென்றே செய்யப்படுகிறதா?
அல்லது, விவரமில்லாத விஷயமா?
என்பதை யோசித்து, மிக வேகமாக ஒரு முடிவு எடுங்கள்.
எதிர்க்க முடியாத சூழலில், எதிர்ப்பைக் காட்ட முடியாத நிலையில்கூட உங்களுக்குக் கடும் அவமானம் ஏற்படும். அப்போது, அவமானத்தை நன்கு அனுபவியுங்கள்.
அவமானப்படுத்துதலைப் புரிந்து கொண்டு, அதற்கு அழாது, கண்ணீர் விட்டுக் கதறாது, உள்ளே இறுக்கிக் கொள்ளுங்கள்.
மகாகவி பாரதியின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.
"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா;
மோதி மிதித்துவிடு பாப்பா."

அவருக்கு எதிரே வெற்றி பெற்று, சிரித்து, சிலாகித்து நில்லுங்கள். அவர் தானாகக் குன்றிப் போவார்.
அவருக்கு முன் ஜெயித்து, "நலமா?" என்று விசாரியுங்கள். அவர் மனம் உடனே செத்துப் போகும்.
பழி வாங்குதலில் மிகச் சிறந்த விஷயம், நீங்கள் திரும்பத் திரும்ப வெற்றி காண்பதே.
வாழ்வில் வெற்றி வேண்டுமெனில், அவமானப்படுங்கள். அவமானத்திற்கு அஞ்சாதீர்கள். அவமானம் ஒரு உரம்; கடுமையான உரம், காரமான உரம்.
"அதனாலென்ன... உரம்தானே?"
தனிமனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போருக்கும் பொறுப்பாளிகள் — நமது சொந்த வாழ்க்கையின் ஆளுமைத்தன்மை, தேசியவாதக் கொள்கைகள், சுயநலம், கடவுள்கள், கருத்துச் சேகரிப்புகள், இலட்சியங்கள் காரணமாக. இவை அனைத்தும் நம்மைப் பிரிக்கின்றன.
நாம் மாறாவிட்டால், தனிமனிதர்களான நீங்களும் நானும் மாறாவிட்டால், இந்த உலகம் மாறாது. இதுதான் உண்மை — நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்.
அனைவரது வாழ்விலும் காயங்கள் இருக்கும். அந்தக் காயத்துடனும் சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. காயங்களுடன் சிரிக்க, ஒரு சிலரால்தான் முடிகின்றது.
அப்படிச் சிரிக்கப் பழகிக் கொண்டால், எந்தக் காயமும் அவ்வளவு பெரிதல்ல.
நாம் கடந்து சென்ற அனைத்தும் வாழ்க்கைக்கான பாதைகள் அல்ல.
கடந்து வந்ததில் கற்றுக் கொண்ட பாடங்கள்தான் வாழ்க்கைக்கான பாதைகள்.
ஒருவர் உங்களுடன் பேச நேரம் இல்லை என்றால், நம்பாதீர்கள். அவர்களின் முன்னுரிமைப் பட்டியலில் நீங்கள் இல்லை என்பதே அர்த்தம்.
நன்றி: கே.எஸ். ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்