*கண்ணால் காண முடியாத கடவுள்.....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 9:23 | Best Blogger Tips



*கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத் துணை இருப்பாரு....*

நாமதேவருடைய குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் சைதன்யனும் ஒருவன். 

மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிகவும் புத்திசாலியாக இருந்த சைதன்யனை குருவுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

ஆகவே, தனக்குக் தெரிந்த அனைத்தையும் நாமதேவன் சைதன்யனுகுக் கற்றுக் கொடுத்தார். குருகுலத்தில் பல ஆண்டுகள் பயின்ற சைதன்யனுக்கு வயது பதினெட்டு ஆயிற்று. 

ஒரு நாள் நாமதேவர் அவனை அழைத்து,

 "மகனே நீ கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொண்டுவிட்டாய். இத்துடன் குருகுலவாசம் உனக்கு போதும். நீ இனி உன் பெற்றோரிடம் சென்று அவர்களுக்குத் தொண்டு செய்வாய். கடவுள் எப்போதும் உனக்குத் துணை இருப்பார்," என்று வாழ்த்தினார். 

தனது குருவை தரையில் விழுந்து வணங்கிய சைதன்யன் அவரிடம் பணிவாக, "குருவே எனக்கு எவ்வளவோ பாடங்கள் கற்றுக் கொடுத்தீர்கள். 

ஆனால், 

எந்தக் கடவுளைப் பற்றி இப்பொழுது குறிப்பிட்டீர்களோ அவரை மட்டும் எனக்குக் காட்டவில்லையே! 

கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத் துணை இருப்பார்?" என்று வினவினான். 

"சைதன்யா உன்னுடைய சந்தேகத்திற்கு பிறகு ஒரு நாள் விடை அளிக்கிறேன். நீ இப்போது வடக்கு திசையில் உள்ள காட்டின் வழியே சுசந்த நகர் எனும் நகரத்தைத் தாண்டி பவானிபுரத்திற்கு சென்று அங்குள்ள என் சகோதரனை சந்தித்து அவனுடைய சேமலாபங்களை விசாரித்துக் கொண்டு வா?" என்றார். 

"அப்படியே செய்கிறேன் குருவே", என்று பதிலளித்தான் சைதன்யன். குருவின் மனைவி கொடுத்த உணவுப் பொட்டலங்களுடன், மறுநாள் காலையில் கிளம்பினான் சைதன்யன். 



நண்பகல் நேரம் காட்டு வழியில் பாதியைக் கடந்து விட்டான். அப்போது அவனுக்கு மிகவும் தாகம் உண்டாயிற்று. இந்தக் காட்டில் குடிக்கத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று தேடிய அவன் கண்களில் ஒரு வயதான பார்வையற்ற மனிதன் தென்பட்டான். அவன் செடியிலுள்ள இலைகளைக் கைகளால் தடவிப் பார்த்துப் பின் அதை முகர்ந்து பார்த்து சில இலைகளை மட்டும் பையினுள் போட்டுக்கொண்டான். 

"ஐயா, தாங்கள் எதைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டான். 

"நான் இந்தக் காட்டில் வசிப்பவன். நான் மூலிகைகளை சேகரித்து பிறருக்கு வழங்குகிறேன். குருடன் என்பதால், முகர்ந்து பார்த்து மூலிகைகளைக் கண்டுபிடிக்கிறேன்," என்றான். 

"இப்போது நீங்கள் பறித்துக் கொண்டிருப்பது என்ன மூலிகை?" என்றான். 

"இது பாம்புக் கடிக்கான மூலிகை. இந்த மூலிகையின் சாறை பாம்பு கடித்தவன் வாயில் விட்டால், விஷம் இறங்கிவிடும். நீ காட்டு வழியில் சுற்றுகிறாயே... இந்த மூலிகையை கொஞ்சம் வைத்துக்கொள்," என்று சில இலைகளைக் கொடுத்தான். 

அவற்றை பத்திரமாக வைத்துக்கொண்ட சைதன்யன், "ஐயா, குடிக்க தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டான். 

"அருகில் ஒரு கிணறு உள்ளது!" என்று கிணறு இருக்கும் இடத்தைக் காட்டினான். 

அந்தக் கிணற்றை அடைந்து தாகம் தீரத் தண்ணீர் குடித்தபின், 

ஒரு மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டுவிட்டு அப்படியே உறங்கிவிட்டான் சைதன்யன். அவன் மீது ஏதோ இடித்துவிட்டு ஓடுவது தெரிந்து திடீரெனக் கண் விழித்த சைதன்யன் கண்களில் வேகமாக ஓடும் ஒரு முயல் தென்பட்டது. 

திடீரென மரத்தில் ஏதோ சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தால் ஒரு பெரிய கிளை ஒடிந்து கீழே விழ இருந்தது. உடனே நகர்ந்து விட தற்செயலாக உயிர் தப்பினான் சைதன்யன். 

அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்த சைதன்யன் இருட்டும் நேரத்தில் சுசாந்த நகரை அடைந்தான். அங்கு பசியால் வாடிய ஒரு பிச்சைக்கார குடும்பத்திற்கு எஞ்சிய உணவுகளை கொடுத்துவிட்டு அன்று இரவு ஒரு சத்திரத்தில் தங்கினான். 

நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சைதன்யன் தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனிதனின் வாயில் நுரைதள்ள முனகிக் கொண்டிருபதைப் பார்த்தான். 

கொஞ்ச தூரத்தில் ஒரு விஷப்பாம்பு ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தான். அந்த மனிதனின் அபாய நிலையை உணர்ந்த சைதன்யன் உடனே தன்னிடமிருந்த விஷக்கடி மூலிகைகளை எடுத்து சாறு பிழிந்து அந்த மனிதனின் வாயில் விட்டான். சற்று நேரத்திற்க்கெல்லாம் அவன் சாதாரண நிலையை அடைந்தான். 

அந்த நபர் யாருமல்ல! குடிமக்களின் குறைகளை அறிய மாறுவேடம் பூண்டு இரவில் திரிந்த அந்த நாட்டு மந்திரி. 

சைதன்யனுக்குத் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த மந்திரி, "நீ என் உயிரைக் காப்பாற்றினாய். அதற்க்கு செய் நன்றியாக உனக்கு மன்னரிடம் வேலை வங்கித் தருகிறேன்," என்றார். 

"மிகவும் நன்றி ஐயா. ஆனால், நான் முக்கிய அலுவலகமாக பவானிபுரம் சென்று கொண்டிருக்கிறேன். சில தினங்கள் கழித்து உங்களை சந்திக்கிறேன்," என்று கூறி மந்திரியிடமிருந்து விடைப் பெற்றுக்கொண்டான். 

மறுநாள் காலை பவானிபுரத்தை அடைந்து குருவின் சகோதரரை சந்தித்து சேமலாபங்களை விசாரித்து அறிந்து, பிறகு தன் குருவிடம் திரும்பினான் தான் சென்று வந்த விவரங்களையும், அவரது சகோதரனைப் பற்றியும் விளக்கிக் கூறினான். 

"மகனே, நினைவிருக்கிறதா? கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகக்திற்கு நான் ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்து விட்டது. கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா?" என்றார். 

"நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்? 

பார்க்கவில்லையே!" என்றான் ஆச்சரியத்துடன் சைதன்யன். 

"மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறார். ஆனால், ஒரே உருவத்தில் அவர் உனக்குத் தோன்றவில்லை," என்றார். 

"எந்த குருட்டு முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான மூலிகை தந்தாரோ, அவர் கடவுள். காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்ப்படும் என்று எண்ணி, யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும் கடவுள் தான். உன்னுடைய உயிரைக்காப்பற்றிய முயலும் கடவுள் தான். 

எந்த மந்திரியை பாம்புக் கடியிலிருந்து நீ பிழைக்க வைத்தாயோ, அவருக்கு நீ கடவுள். இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்?" என்றார். 

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து உணர்ந்ததும் சைதன்யனுக்கு ஞானோதயம் உண்டாயிற்று. தனக்கு ஞானோதயம் உண்டு பண்ணிய குருவை விழுந்து வணங்கி விட்டு, அவரிடமிருந்து விடை பெற்றான். 

இதற்குப் பிறகு சைதன்யன் தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு சுசாந்த நகரை அடைந்து மந்திரியை சந்தித்தான். 

மந்திரியின் உதவியால் அவனுக்கு அரசாங்கத்தில் நல்ல வேலையும் கிடைத்தது.🙏🙏🙏🙏 ஹனுமன் ஆர் கே சாமி🙏🙏


நன்றி இணையம்

உங்களின் நேரம் மட்டுமே.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:20 | Best Blogger Tips

மரணத் தருவாயில் 

மாமன்னர் ஹர்ஷ வர்த்தனர் 

தனது தளபதிகளை அழைத்து தனது

இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்..

🔔என்னுடைய பூத உடலை
 தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !

🔔🔔நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!

🔔🔔🔔என் கைகளை 
வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!

👮தளபதிகளில் ஒருவர் 
ஹர்ஷரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.

📢அதற்கு ஹர்ஷரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!

🔔தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக !

🔔🔔நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!

🔔🔔🔔எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!

நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய 

"நேரம் மட்டுமே:"
உங்கள் 

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!

நன்றி இணையம்


நூறாவது குரங்கு விளைவு

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:55 | Best Blogger Tips

'Hundredth Monkey effect ' 

'நூறாவது குரங்கு விளைவு' ...

உயிரியல் அறிஞர் டாக்டர். லையால் வாட்சன்   தனது ஆராய்ச்சிக்காக ஜப்பான் கோஷிமா (Kōjima) என்ற தீகளில்  வாழும் குரங்குகளை வைத்து ஆய்வுசெய்யத் தொடங்கினர்.

அத்தீவில் குரங்குகள் சாப்பிடுவதற்கு, சக்கர வள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப் போட்டார். 

மண்ணில் விழுந்த அந்தக் கிழங்குகளில் ஒன்றை எடுத்த, குட்டிக்குரங்கு ஒன்று, மண்ணைத் தட்டிவிட்டுச் சாப்பிடாமல், அருகிலிருந்த கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட்டது. 

அதைப் பார்த்த மற்ற குரங்குகளும், கீழே விழுந்த கிழங்குகளை எடுத்து, கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட்டன

இது ஒன்றும் அதிசயம் இல்லை தான் ..

இது நடந்து சில ஆண்டுகள் சென்று, அந்த தீவில் குரங்குகளுக்குச் சக்கரவள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப் போட்டாலே, அவை, அவற்றை கழுவித்தான் சாப்பிட்டன. 

அந்த தீவில் சரியாக நூறாவது குரங்கு சாப்பிட்டவுடன் ஆய்வாளர்கள் மற்றொரு அதிசயத்தையும் பார்த்தனர்

இந்த பழக்கத்தைக் கற்றுக் கொண்ட பின் இந்த செய்தி உடனடியாக மற்ற தீவுகளில் உள்ள குரங்குகளுக்கும் எப்படியோ 'டெலிபதிக்' காக எட்டி விடுகிறது...

கோஷிமா தீவுக்குத் தொலைவிலுள்ள மற்ற தீவுகளில் இருந்த குரங்குகளுக்கும், சக்கர வள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப்போட்டபோது அவையும், அந்த கிழங்குகளை அருகிலிருந்த கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட ஆரம்பித்தன. 

கோஷிமா தீவிலுள்ள குரங்குகள் மட்டும் சாப்பிட்டால் பரவாயில்லை, 

ஆனால் கடல் தாண்டியுள்ள மற்ற தீவுகளில் இருந்த குரங்குகளும் ஒரே மாதிரி சாப்பிட்டது, ஆய்வாளர்களுக்கு வியப்பூட்டின. 

மிக மிக அதிக தூரத்தில் உள்ள, கடலால் பிரிக்கப்பட்ட தீவுகளில் உள்ள குரங்குகளும் இந்த 'கழுவி சாப்பிடும்' பழக்கத்தை ஆரம்பிக்கின்றன...

அந்த தீவில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை (100 ) அடையப்பட்டதும் இந்த பழக்கம் மற்ற தீவுகளுக்கும் பரவுகிறது.. 

இது எப்படி சாத்தியம் என்று இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்படவில்லை...

அவர்கள் அது பற்றி ஆய்வை மேற்கொண்ட போது, “நூறாவது குரங்கின் விளைவு (Hundredth monkey effect)” என்ற ஒரு முடிவுக்கு வந்தனர். 

இது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த லையாலும் பத்து  ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தி விட்டார்

டெலிபதிக்கு ஒரு முக்கிய உதாரணமாக விளங்கும் இந்த நிகழ்ச்சி உலகத்தில் நாகரீகங் கள் இந்த முறையில் பரவி இருக்கலாமோ என்று நினைப்பதற்கும் வழிவகுக்கிறது

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அதை இங்கிலிபீசுல படிச்சுக்கங்க 

"Hundredth Monkey Phenomenon means that when only a limited number of people know of a new way, it may remain the conscious property of these people. 

But there is a point at which if only one more person tunes-in to a new awareness, a field is strengthened so that this awareness is picked up by almost everyone!"

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், சில நபர்கள், சில பண்புகளை உறுதியுடன் வெளிப்படுத்தும் போது, அது ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டிய வுடன், ஒரு மனதிற்கும், அடுத்த மனதிற்கும் இடையே தொடர்பு ஏற்பட ஆரம்பிக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். 

அதாவது அவர்களின் பண்புகள், உடன் இருப்பவர்களில் உள்ளார்ந்த தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. 

அவர்களின் பண்புகள் மற்றவர்களின், ஆழ்நிலை யில் நல்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். 

இதைத்தான், மொத்தமாக, குழுவாகத் நல்தாக்கத்தை உருவாக்குதல் (Mass Consciousness, group Consciouness) என்று சொல்கின்றனர். 

நூறாவது குரங்கின் விளைவையும், தற்போது உலகில் கொரோனா தொற்றுக்கிருமி பரவல் உருவாக்கியுள்ள ஒருவித பய உணர்வையும் தொடர்புபடுத்தி, உளவியல் மருத்துவர் ஜே.விக்னேஷ் ஷங்கர் அவர்கள், சில அறிவுரை களை யூடியூப் வழியாக எடுத்துரைத்துள்ளார். 

ஜப்பானில் 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில், புக்குஷிமா (Fukushima Dai-ichi) அணுமின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 

அங்கிருந்த நான்கு அணு உலைகளும், ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. 

அவற்றிலிருந்து பயங்கரமான கதிர்வீச்சுகள் வெளிவந்தன. 

இன்று வரை, அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகின்றது.

 அந்த சுனாமி நிகழ்வு குறித்து ஜப்பான் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருந்தனர். 

ஆனால் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஊடகங்கள் இதை மிகைப்படுத்தி செய்திகளை வெளியிட்டன. 

இந்தச் செய்தியை அந்த மக்கள் ஆழமாக உள்வாங்கியதால், அவர்கள் பயம் சார்ந்த உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தினர். 

இதன் விளைவாக, நிறைய நோய்களால் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டனர். 

எனவே, ஆய்வாளர்கள் ஜப்பானில் நடந்த அணுக் கதிர்வீச்சுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, மிக விரிவாகவே ஆய்வுகளை மேற்கொண்டனர். 

ஜப்பான் நிகழ்வை அமெரிக்க தொலைக்காட்சி களும் மற்ற ஊடகங்களும் மிக அதிகமாகவே வெளியிட்டதால், பயம் சார்ந்த உணர்வுகள் அதிகமாக உருவாகியுள்ளன.

 அதனால் அவர்களுக்கு உடல் சார்ந்த பிரச்சனை களும் அதிகமாக வந்துள்ளன என்று, ஆய்வாளர் கள் கண்டுபிடித்தனர். 

இவ்வாறு விளக்கும், உளவியல் மருத்துவர் ஜே.விக்னேஷ் ஷங்கர் , பயம் சார்ந்த உணர்வுகளை நாம் அதிகமாக வெளிப்படுத்தும் போது, ஆயிரத்துக்கும் அதிகமான எதிர்மறை யான வேதிப்பொருள்கள் நம் உடலில் சுரக்க ஆரம்பிக்கின்றன. 

அவை நம் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்

இந்த கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காலத்தில், பெரும்பாலான நாளிதழ்கள், சமுதாய ஊடகங்கள், தொலைக் காட்சிகள், உடன் இருப்பவர்களின் பகிர்வுகள் போன்ற அனைத்துமே, பெரும்பாலும் பயம் சார்ந்த உணர்வுகளையே வெளிப்படுத்து கின்றன. 

இந்த உணர்வை நாம் எல்லாருமே வெளிப் படுத்தத் தொடங்கினால், அது ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

அதனால், இப்போதுள்ள சூழலில், நூறாவது குரங்கின் விளைவு என்ற கொள்கையை, நாம் பின்பற்றினால், நாம் விரும்பும் மாற்றத்தை கொணரலாம். 

விழிப்புணர்வுடன் இருந்து, பயம் சார்ந்த உணர்வு களை அதிகமாக வெளிப்படுத்தாமல் இருந்தாலே, இந்நோயிலிருந்து தப்பிக்கலாம். 

அதேநேரம் ஊடகங்களில் வரும் எல்லா செய்திகளையும் நாம் நிராகரிக்க வேண்டும் என்பதும் கிடையாது என்று, விக்னேஷ் அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

இந்த அசாதாரண சூழலிலும், பலர் அச்சத்தை அகற்றி நற்பணிகளை ஆற்றி வருகின்றனர். 

அமெரிக்க ஐக்கிய நாட்டின் புரூக்ளின் நகரிலு ள்ள மாரியோ சலேர்னோ என்ற செல்வந்தர்,  தனக்குச் சொந்தமான 200 வீடுகளில் குடியிருப் பவர்கள் எல்லாரும், இந்த ஏப்ரல் மாத வாடகைப் பணத்தை செலுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். 

அவர்களில் பெரும்பாலானோர், வேலைகளை இழந்த இளைஞர்கள்.

 இந்த நற்செயலுக்கு அவரிடம் காரணம் கேட்ட போது, அவர்கள் எல்லாரும் மன அமைதியோடு வாழ வேண்டுமென்று விரும்புகிறேன், 

அவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும், 

எனக்குப் பணத்தைப் பற்றிக் கவலை இல்லை. அதைப் பற்றி நினைப்பதற்கு இதுவல்ல நேரம். 

மனித வாழ்வின் மதிப்பிற்குமுன் இது ஒன்றுமே இல்லை. மனித வாழ்வை மதிக்கிறேன் என்று, அவர் கூறியுள்ளார்.

இப்போது உலகெங்கும் நிலவும் இந்த அசாதாரண சூழலை மாற்றியமைக்கக்கூடிய தன்மை நம் எல்லாருக்குள்ளும் இருக்கின்றது. 

நம் மனத்தளவில் எந்தவொரு சூழலை எதிர்த்தாலும், அது விடாப்பிடியாக நம்மில் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும் என்று உளவியல் மருத்துவர்கள் சொல்கின்றனர். 

எனவே, இந்த தொற்றுக்கிருமி சூழலை முதலில் நாம் மனத்தளவில் ஏற்போம்.



பரந்த இந்தப் பூமியில், நம் நாட்டில், நம் சமுதாயத்தில், நம் குடும்பங்களில் எல்லாரும், உடல்நலத்தோடும் மன அமைதியோடும் உள்ளனர் என்ற நேர்மறை உணர்வலைகளை அனுப்புவோம். 

அப்போது நேர்மறை அதிர்வலைகளை அவை வெளிப்படுத்தும். 

நம்மை இந்நிலையில் வைத்திருக்கும் கடவுளிடமும் நன்றியுணர்வோடு இருப்போம். 

நல்லதையே நினைத்து, நல்லதையே செய்வோம். நல்லதையே பேசுவோம். அப்போது இறந்தாலும் நாம் வாழலாம். 

இந்த தத்துவத்தை "நூறாவதுகுரங்கின் விளைவு" (Hundredth Monkey Effect) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes) என்பவர் எழுதி பிரபலமாக்கி னார்.

இதே கருத்தை வாழ்க்கை அலை (Lifetide)என்ற புத்தகத்தில் லயால் வாட்சன் (LyallWatson) உதாரணங்களுடன் கூறுகிறார்


நன்றி இணையம்

*குரு என்பவர் யார் ...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:47 | Best Blogger Tips

முன்னொரு காலத்தில் உலகப் புகழ் வாய்ந்த ஞானம் பெற்ற குரு ஒருவர் இருந்தார்...

அவர் இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது, அவரின் சீடர்கள் அந்தக் குருவிடம் ஒரு கேள்வி எழுப்பினார்கள்.

எங்களுக்கெல்லாம் நீங்கள் குருவாக இருக்கிறீர்கள். உங்களுக்கு யார் குரு? என்று கேட்டனர்.

அந்த குரு சிரித்துவிட்டார் எனக்கு ஆன்மீகத்தில் எண்ணற்ற குருமார்கள் இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மூன்று பேரை கட்டாயம் சொல்ல வேண்டும்.

என் முதல் குரு ஒரு நாய்..

ஒருமுறை நான் ஆன்மீகத்தை தேடி, எல்லாவற்றையும் துறந்து அலைந்து கொண்டிருந்த சமயம். அது ஒரு காடு. அப்போது எனக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது அருகிலேயே ஒரு சிறிய நீரோடை இருந்தது. 

சரி நீர் குடிக்கலாம் என அதன் அருகே சென்றேன்..

அப்போது அங்கே ஒரு நாய், நீரோடைக்கு போவதும் திரும்புவதுமாக இருந்தது. 

உற்று கவனித்தேன் அது மிகவும் களைப்பாக இருந்தது அதற்கும் நிறைய தாகம் போலிருக்கிறது. 

ஆனால் நீரோடைக்கு போனதும் அங்கே நீரில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்து பயந்துபோய் திரும்பி வந்துவிட்டது. 

ஆனால் தாகம் துரத்தியது. திரும்பவும் நீரோடைக்கு செல்கிறது . இப்படி போவதும் வருவதும், போவதும் வருவதுமாக இருந்தது.

நாய் களைத்துப் போய் விட்டது. இருந்தும் தாகம் மேலிடவே அந்த நாய் சரேலென தண்ணீருக்குள் பாய்ந்தது. பயம் தெளிந்தது தாகத்தைத் தீர்த்துக் கொண்டது. 

அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். நம் தாகத்தை தணிக்க விடாமல் செய்வது பயம் மட்டுமே ஆனால் தாகம் மேலிடும் போது நமக்குள் உருவாகும் தைரியமானது பயத்தை உடைத்து விடுகிறது என அறிந்து கொண்டேன் அதனால் அந்த நாய்தான் என் முதல் குரு.

சீடர்கள் வியந்தனர்..

அப்போது இரண்டாவது குரு யார் என அந்த ஞானியை கேட்டனர்..


அவர் சொன்னார் எனது இரண்டாவது குரு ஒரு திருடன்..

என்ன திருடன் குருவாக முடியுமா? என்றனர்..

அவர் புன்னகையுடன் பதில் சொல்லத் தொடங்கினார்.

அந்தக் காட்டில் பசி மிகுதியால் நான் மிகவும் களைப்புற்று சோர்ந்து கிடந்தேன் அப்போது ஒருவர் வந்து என்னை கைத்தாங்கலாக தூக்கி அருகிலிருந்த தன் குடிசைக்கு அழைத்துச் சென்றார்.

‘ சாமி நீங்க யார் ‘என்று என்னை கேட்டார். 

அதைத்தான் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன் என பதில் சொன்னேன். 

அவருக்கு அது புரியவில்லை. 

சற்று தயக்கமாக ‘நீங்கள் யார்’ என்று கேட்டேன். 

‘நான் ஒரு திருடன்’என பதில் சொன்னார். 

உங்களுக்கு தயக்கம் இல்லை என்றால் உங்களுக்கு விருப்பம் இருக்கும் வரை இங்கேயே தங்கலாம் என்று கூறினார். 

நானும் வேறுவழியின்றி ஒத்துக் கொண்டேன்.

அன்று இரவு அவர் தன் தொழிலுக்கு கிளம்பினார் மறுநாள் காலையில் வந்தார். என்னப்பா தொழில் எப்படி? ஏதாச்சும் கிடைச்சதா? என்றேன்..

 இன்னைக்கு கிடைக்கல சாமி நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும் என்றார். 

மறுநாளும் தொழிலுக்குச் சென்றார் திரும்பி வந்ததும் மீண்டும் அதே கேள்வியை கேட்டேன் இன்னைக்கு இல்ல சாமி நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும் என்று பதில் சொன்னார்.

இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் எனது அதே கேள்வியும், அவரது அதே பதிலும் தொடர்ந்தது. 

அன்றுதான் ஒன்றைத் தெரிந்து கொண்டேன். சாதாரண பொருளை தேடக்கூடிய (திருடக்கூடிய) திருடனுக்கே இவ்வளவு பொறுமையும் நம்பிக்கையும் தேவைப்படுகிறது என்றால்.... 

மிகப்பெரிய செல்வமாகிய ஞானத்தை தேடக்கூடிய எனக்கு எவ்வளவு நம்பிக்கையும் பொறுமையும் தேவை என்பதை தெரிந்து கொண்டேன். 

அதனால் அந்த திருடன் தான் எனது இரண்டாவது குரு...

சீடர்களுக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது...

(உங்களுக்கும் தானே)

அப்போ அந்த மூன்றாவது குரு யார்? என்று கேட்டனர்.

அந்த ஞானி சொன்னார் நான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பிறகு ,ஒரு ஊரில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். 

அப்போது அவ்வீட்டிலிருந்த 5 வயது குழந்தையொன்று வீட்டிலிருந்த விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தது. 

அந்த குழந்தையிடம் என் புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்காக..

பாப்பா இந்த விளக்கில் வெளிச்சம் இருக்கிறதே அது எங்கிருந்து வந்தது எனத் தெரியுமா என கேட்டேன். 

அந்த குழந்தை சட்டென விளக்கை ஊதி அணைத்து விட்டு,

'தாத்தா ! இப்போ இந்த வெளிச்சம் எங்கே போச்சோ,

அங்கிருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது' என பதில் சொன்னது.

ஆஹா!!.... 

ஞானம் எனக்கு மட்டும் சொந்தம் என கர்வம் கொண்டிருந்தேன்.

அதை தகர்த்த அந்த குழந்தைதான் என் மூன்றாவது குரு என்றார்.

எனவே குரு என்பவர் ஒரு நபர் அல்ல குரு என்பது ஒரு தன்மை இருளை அகற்றும் மின்னல் கீற்று..

அஞ்ஞானம் போக்கும் அறிவு...!

குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறைகள் எல்லாம் செய்ய முடியாது..!

அப்படி வரையறுப்பது சரியான ஆன்மீக நெறி முறையும் அல்ல.

மகாபாரதத்தில் கிருஷ்ணன் கீதா உபதேசத்தை..

ஒழுக்கத்தில் சிறந்த பீஷ்மனுக்கு கூறவில்லை.

வித்தையில் சிறந்த துரோணருக்கு கூறவில்லை.

பக்தியில் சிறந்த விதுரனுக்கு கூறவில்லை .

பின் யாருக்குத்தான் கூறினான் ?

தன்னையே சரணாகதி அடைந்த அர்ஜுனனுக்குத் தான் கூறினார்.

இருப்பதிலேயே நண்பனிடம் சரணாகதி அடைவது தான் இயலாத காரியம். 

ஏனென்றால் நண்பனின் அத்தனை சேட்டைகளும் தான் நமக்குத்தான் தெரியுமே! 

அதனால் நண்பனிடம் மட்டும் சரணாகதி அடைவது என்பது இயலாத காரியம்.

(கிருஷ்ணனைப் போன்ற நண்பன் மட்டும் நமக்கு உபதேசித்திருந்தால் என்ன சொல்லியிருப்போம். உன் அட்வைஸ நிருத்துறயா? உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா?என்றிருப்போம்)

ஆனால் கிருஷ்ணனின் அனைத்து சேட்டைகளையும் அறிந்த பின்பும் (சிசுபாலன் கண்ணனின் சேட்டைகளை பக்கம் பக்கமாக பட்டியலிட்ட பின்பும்) அர்ஜுனன் சரணாகதி அடைந்தான்.

அர்ஜீனன் முழுவதும் ஏற்கும் தன்மையில் இருந்ததனால் கிருஷ்ணனுக்கு வேறு வழியே இல்லை அர்ஜுனனை சீடனாக ஏற்றுக்கொண்டான். கீதை அருளப்பட்டது.

இவ்வளவு ஏன்? ஞானத்திற்கெல்லாம் தலைவனாக இருக்க கூடிய சிவபெருமான் கூட தன் மகனாக இருந்தாலும், மண்டியிட்டு வாய் மூடி தலை குனிந்து தன்னை சீடன் என்ற நிலைக்கு இறக்கிக் கொண்ட பின்புதான் முருகனிடம் உபதேசம் பெறமுடிந்தது.

சம்மட்டி ஓசையை கேட்டு ஞானமடைந்தவரைப் பற்றியும், உடைந்த குடத்தின் ஓசையிலே ஞானமடைந்த பெண் புத்தத்துறவியைப் பற்றிய கதையையும் படித்துள்ளோம் தானே.

ஆகவே இங்கு *ஆன்மீகத்தில் முக்கியமானது குருவின் தகுதி அல்ல சீடனின் தகுதிதான் மிகவும் முக்கியமானது...!*

எவ்வளவு மழை பெய்தாலும் திறந்த பாத்திரத்தைத்தான் மழையால் நிரப்ப முடியும். 

மூடிய பாத்திரத்தை வானமே கிழித்துக்கொண்டு பெய்தாலும் நிரப்ப முடியாது .

தெரியுமா உங்களுக்கு? 

உண்மையிலேயே கிரேக்க ஞானி டயோஜனிஸிக்கு ஒரு நாய்தானே குரு.

நியூட்டனுக்கு ஆப்பிள் தானே குரு.

ஆர்க்கிமிடிஸிக்கு தான் குளித்த தண்ணீர்தானே குரு.

உலகின் பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டைக்கு நட்சத்திரங்களை பற்றி விளக்கிய குரு சோப்பு நுரைதானே.

அதனால்தான் நதிமூலம் பார்ப்போரின் தாகம் தீர்வதில்லை..

ரிஷிமூலம் பார்ப்போர் ஞானம் அடைவதில்லை..

தவித்தவன் தண்ணீரை தேடி பயணிப்பது போல, தாகம் கொண்டவனின் தொண்டையை நனைக்க தண்ணீரும் பயணப்படுகிறது. 

*தன்னை தகுதி படுத்திக் கொண்டவன் தன் பாதையிலேயே தன் குருவைக் காண்பான.



நன்றி இணையம்

கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது ....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:42 | Best Blogger Tips



ஒரு #கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா?

* பூ உற்பத்தி செய்பவர்
* மாலையாக கட்டுபவர் 
* அதனை விற்பனை செய்பவர்
*கோவிலில் சுவாமிக்கு நிவேத்யம் செய்ய அரிசி பருப்பு கனிவகை,காய் வகை கொடுக்கும் விவசாயப்பெருமக்கள் மற்றும் வியாபாரிகள்.
* அர்ச்சகர்
* அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்
* கோயில் காவலாளிகள்,
* தேங்காய் உற்பத்திசெய்பவர், 
* தேங்காய் விற்பனைசெய்பவர்.
*  ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்
* அதனை விற்பனை செய்பவர்கள்
(மொத்தமாகவும் சில்றையாகவும்,)
* கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள், 
* அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்,
* சந்தனம்,குங்குமம், ,ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள்

* வாழைமரம் வளர்ப்பவர்கள்
* அவற்றைவிற்பனைசெய்பவர்கள்,
* கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,
* இதில் மாற்றுமதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்,

* கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்
* கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்

* மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்)
* தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள்.

* கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம் 
முகாமையாளர் வரை
* ஓதுவார்கள்,
* நாதஸ்வர,தவில் கலைஞர்கள்
* ஒலி, ஒளி அமைப்பாளர்கள்
* சிற்ப கலைஞர்கள்
* ஓவியர்கள்
* கட்டட கலைஞர்கள்
* ஆசாரிமார்கள்
* விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள்,

இப்படி கோயில்களால் ஏராளமான மக்களுக்கு ஜீவனோபாயம் கிடைக்கிறது.

என்பதால்தான் அன்றைய
மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை 
உருவாக்கினார்கள்..!!!



நன்றி இணையம்

தமிழன் இந்து அல்லவா?.......

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:06 | Best Blogger Tips


தமிழன் இந்துதான்
சமூக வலைத்தளங்களில் "தமிழன் இந்து அல்ல" என்று பரப்பப்படும் வதந்திகளுக்கு தீர்வு காணும் வகையில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கான பதிலையும் தொகுத்துள்ளேன்.

1. திருக்குறளில் இந்து தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. அதனால் திருக்குறள் காலத்திற்கு பின் தான் இந்து மதம் தமிழகத்திற்கு வந்தது.

பதில் :
திருக்குறளே ஆதிபகவனை வழிபட்டு ஆரம்பிக்கும் நூலாகும். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இந்த அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களும் இறைவனை போற்றிப்பாடும். திருக்குறளின் காலத்தில் தமிழகத்தில் ஹிந்து சமயம் தவிர இன்னொரு சமயம் இருந்தது என்றால் அது சமணம் மட்டும்தான். ஆனால் சமணம் இறை வழிபாட்டை பற்றியது அல்ல. அது தன்னிலை உணர்தல் என்ற நிலையை அடிப்படையாக கொண்டது. இறைவழிபாடு என்ற ஒன்று அதில் இல்லை. எனவே வள்ளுவர் குறிக்கும் இறைவன் இந்து மதம்தான்.
மலர்மிசை ஏகினான் - மலர் மீது அமர்ந்தவன் இறைவன் என்பதும்
அறவாழி அந்தணர் - அறவழி நடக்கின்ற அந்தணர் என்பதும்
பற்றுக பற்றற்றான் தாளினை - எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனடி என்பதும்

மேலும் இந்து சமயக்கொள்கைகளான துறவு , அருளுடைமை, அவாவறுத்தல், முறை செய்து காட்கும் மன்னவனை இறைவனாக பார்க்கும் இறைமாட்சி, விதியை கதியாய் உணர்த்தும் ஊழியல் , ஒழுக்கமுடைமை, கூடாநட்பு, வேண்டியதை வேண்டியபடி கிடைக்க செய்ய வேண்டிய தவம் எனும் அதிகாரம், பிறப்பெனும் பேதைமை நீங்க செய்யும் மெய்யுணர்தல் அதிகாரம்.

இந்து மத நம்பிக்கையான மறு பிறப்பு தத்துவம் , ஏழு பிறப்பு உண்டென்பதை பகரும் எழுபிறப்பும் தீயவை தீண்டா என்ற குறள், குடிப்பெருமை நிகர்த்த செய்யும் மானம் என்ற அதிகாரம்,

எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பலை நீக்கி உழைப்பை உயர்த்த செய்யும்
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
(ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்)

இந்திரனை ஆசையை ஒழித்தவனாக புகழும்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

(ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.)

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
(செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.)

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
(தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?)

மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு
(தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்)

அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி
குறுக தறித்த குறள் ;
என்று திருக்குறளை வாழ்த்திய ஒளவைதான்,
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
திருநீறில்லா நெற்றி பாழ்

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்.  என்றாள்.

அவ்வாறென்றால் என்ன அர்த்தம். திருக்குறளும் பக்தி இலக்கியங்களோடு ஒப்புமை செய்யப்படுகிறது. எனவே திருக்குறள் இந்து மதம் சார்ந்த நூல்தான்.

இவ்வாறு திருக்குறள் சார்ந்த எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அந்த காலத்திற்கு தேவையான தமிழ் மக்களின் வாழ்வியல் நடைமுறையை நமது சமயத்தை ஆங்காங்கே மேற்க்கோடிட்டு உலகப்பொது மறையாக தந்தார் வள்ளுவர் என்றால் அது ஏற்புடையதுதானே !

2. திருக்குறள் தவிர வேறு எந்த நூல்கள் இந்து சமய தெய்வங்களை புகழ்ந்து பாடியுள்ளன .

இவ்வளவுதானா என்றில்லாமல் தமிழன் இந்து மதம் சார்ந்தவன்தான் என்பதற்கு நிறைய ஆதாரம் காண்பிக்க முடியும் என்றாலும் உதாரணமாக மட்டும் சில சங்க இலக்கிய பாடல்கள்

நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....
சாவந்தாங்கிய, சாந்துபுலர் திணிதோள்,
ஆர்வ நன்மொழி ஆயும்...
(சிறுபாணாற்றுப்படை, 95-99)

பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த சிவப் பெருமானுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்..

பரிபாடல்

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.

ராமன் திருவடி பெருமையைப் பாடும் சிலப்பதிகாரம்
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ;
(சிலப்பதிகாரம் -ஆய்ச்சியர் குரவை - ராமன் திருவடி பெருமையை கேளாத செவியை செவியாகவே மதிக்கவில்லை இளங்கோவடிகள் )

அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
சிலப்பதிகாரம் - புறஞ்சேரியிறுத்த காதை மூலம் ராமனை பாடுகிறது. (ராமனை பிரிந்து அயோத்தி நகர் வாடியதை போலும் என்று )

முருகன் வழிபாடு பற்றி அகநானூறு குறிப்பிடும்போது,
‘‘சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து’’
(அகம்., பா.எ., 59)

இப்படி எந்த தமிழ் நூலை இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் நமது சமய இறைவனை பாடாமல் இருக்காது. இவை தவிர்த்து தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட எண்ணற்ற பக்தி இலக்கியங்கள் தமிழில் உள்ளன. தமிழுக்கு இந்துமதமும் இந்துமதத்திற்கு தமிழும் ஆற்றிய பங்கு நகமும் சதையும் போல. பிரிக்க முடியாதது.

3. தொல்காப்பியம் கூறும் தமிழர் ஐந்திணை தெய்வங்கள் சிறுதெய்வ வழிபாடு அது இந்து மதம் சாராதது :

பதில் : இந்திரன் , திருமால், காளி, வருணன்,முருகன் இவர்கள்தான் ஐந்திணை தெய்வங்கள். இவர்கள் ஹிந்து மத தெய்வங்கள் இல்லாமல் யார் ? மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் வழிபடுகிறார்களா ?  நம் தெய்வங்களை சிறு தெய்வங்கள் பெரு தெய்வங்கள் என்று சொல்வதே தவறு. இது திரிபுவாதம். சம்ஸ்கிருத வேதங்கள் நம் இறைவனை பாடினால் அவர்கள் நம் தெய்வங்கள் இல்லாமல் போய்விடுவார்களா? நமது  திருக்குறள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதால் அது  ஆங்கிலேயர்கள் நூலாகிவிடுமா ?

மேலும்தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல். பக்தி இலக்கியம் அல்ல. ஆனால் அவரது குருவாக விளங்கியவர் அகத்தியர். அகத்தியரின் அகத்தியம்தான் தமிழின் முதல் இலக்கண நூல். அகத்தியத்தை ஒட்டியே தொல்காப்பியர் தமிழ் இலக்கண நூலை வடிவமைத்தார். தொல்காப்பியரின் மற்ற நூல்கள் கிடைக்கபெறவில்லை. ஆனால் அகத்தியரின் சிவபக்தியும்  அவர் நமது ஹிந்து மதத்திற்கு ஆற்றிய தொண்டும்  நாம் அனைவரும் அறிந்ததே.

4. சமணர்கள் காலத்திற்கு பின்தான் இந்துமதம் தமிழகத்தில் பரவியது
பதில் : அடிப்படை ஆதரமில்லாதது. மேலே உள்ள விவரங்களை திரும்ப படித்தல் தெளிவு பிறக்க செய்யும். சமண சமயத்தை நமது தமிழ் மன்னர்கள் தழுவிய போது சில சிவாலயங்கள் மூடப்பட்டன. இடித்து சமண புத்த விகார்களாக கட்டப்பட்டன. பின்னர் வந்த சமயகுரவர்கள் காலத்தில், தமிழ் மன்னர்களுக்கு ஞானம் புகட்டப்பெற்று மீண்டும் மூடப்பட்ட சிவாலயங்களும், விகார்களாக மாற்றப்பட்ட இன்ன பிற ஆலயங்களும் மீண்டும் நமது தர்ம கோவில்களாகவே புத்துயிர் பெற்றன. (உதாரணம் : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் )

5. நரகாசூரன், சூரபத்மன், ராவணன் அசுரர்கள்  என்போர் தமிழர்கள் , ராமன் ஆரியன்
பதில் : ராவணனும் பிராமணன்தான். இந்தியாவில் ஐந்து கோவில்கள் ராவணனுக்கு உண்டு.  அதில் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை. அவன் தமிழகத்தில் வழிபடப்படவும் இல்லை. இராவணன் தமிழன் என்றால் அவனை பின்பற்றி அனைவரும் சிவ வழிபாடு செய்யும் சைவர்களாக மாற தயாரா ? அசுரர்கள் அனைவரும் தமிழர்கள் என்றால்  சூரபதுமன் யார் ? அவன் ஏன் தமிழ் கடவுள் முருகனால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் ? நரகாசுரன் உள்பட அனைத்து அசுரர்களையும் நாம் அறிந்தது எல்லாம் இந்து மத புராணங்களில்தான். வேறு ஆதாரம்  இல்லை. தனக்கு வசதிப்படும் ஒரு சிலவற்றைமட்டும் எடுத்துக்கொண்டு தமிழனை குழப்பும் வீணர்கள்வீண் முயற்சி அதை யாரும் நம்பப்போவதில்லை. அசுரர்களை  தமிழர்களாகவும் தேவர்களை ஆரியர்களாகவும் கற்பனை செய்து மக்களை  குழப்புவது திராவிட  வியாதி. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றத்தை கண்டிக்கும் தமிழ் மரபு நம்முடையது. தவறு செய்யும் அசுரர்களை சும்மா விடுமா ?

6. ஹிந்து என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களில் இல்லை.
பதில் : தமிழ்நாடு என்ற வார்த்தைகூட 100 ஆண்டுகளுக்கு முன் இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. ஒன்றிணைந்த பின் அது தமிழகமாகியது. பல மாநிலங்கள் கூட்டினையும் முன் இந்தியா பாரதம் என்றே அழைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு என்ற வார்த்தைகூட அந்த  காலத்தில் அவ்வாறு அழைக்கப்படவில்லை. அது ஏறுதழுவுதல் என்று அழைக்கப்பட்டது. அது போல ஷண்மதங்கள் ஹிந்து மதமாக ஒன்றிணைவதற்கு முன் சைவம், வைணவம், ஷாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம் என்று ஆறு பெயரில் இருந்தது. ஹிந்து மதம் என்று நாம் அழைக்கத்துவங்கும் முன்பும் இந்துமதம்  சிறப்பொடு தொழப்பட்டுதான்  வந்தது. பெயர்  புதியதனாலும் தெய்வங்கள் இருந்தது உண்மைதானே !  2000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்படாத சொல்லை இப்போது பயன்படுத்துவது தவறு என்று சொல்வதானால், அதே காலக்கட்டத்தில்   ஏசு, அல்லா போன்ற தெய்வங்களும்  இல்லையே . அதனால் வழிபடல் ஆகாது என்று சொல்ல முடியுமா ?

மேலும் சமீப காலமாக ஆங்கிலேயர்கள்தான் நமது சமயத்திற்கு ஹிந்து என்று பெயரிட்டதாக திட்டமிட்டே பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல. அதற்கான ஆதாரம் பின்வருமாறு:

7. தமிழ் மன்னர்கள் தம் பெருமைக்காக கட்டியவைதான் இந்து கோவில்கள்.
பதில்: தமிழ் மன்னர்கள் தங்கள் பெருமைக்காக கட்டுவதாக இருந்தால் தமது  அரண்மனையைத்தான் சிறப்பாக கட்டி இருப்பார்கள். அவர்கள் கட்டிய எண்ணிலடங்காத ஆலயங்கள் அவர்களின் பக்தி சிறப்பையே உணர்த்துகிறது. சோழனின் தஞ்சை பெரிய கோவில், பல்லவனின் மல்லை, பாண்டியனின் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், காஞ்சி, தில்லை என்று எந்த கோவிலை எடுத்தாலும் அதில் அவன் கட்டிட கலையும் , பக்தியும் மட்டுமே நமக்கு தெரிய வருகிறது. குறிப்பாக உத்திரகோசமங்கை சிவாலயம் "மண் முந்தியதோ மங்கை முந்தியதோ " என்ற முதுமொழி உடைய பழைய கோவில் என்றால் தமிழன் சிவபக்தி எவ்வளவு பழையது என்று பாருங்கள்.

மற்ற மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் தெய்வங்கள் இன்னதென்று கண்டுபிடிக்காத காலத்திலேயே தமிழர்கள் விண்ணில் உலவும் கிரகங்களை கண்டுபிடித்து கோவிலில் வைத்து வழிபட தொடங்கியவர்கள் தமிழர்கள் என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்.

8. ஹிந்து மதத்தில் ஜாதி கொடுமைகள் அதிகம். எனவேதான் அதிகமான மதமாற்றம்இங்கு நிகழ்கிறது.

பதில்: இந்து மக்களை இப்படி  சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து பேசுவதே தவறு. அரசியல் லாபத்துக்காக மக்களை பிரித்தாள்வது கயமைத்தனம்.  இந்து மதத்தை விட்டு ஓடி ஒழியாமல்,   ராமானுஜர் வழியில், ஆதிசங்கரர் வழியில் ஜாதிய அடக்கு முறைகள் கண்டிக்கப்பட ஒழிக்கப்பட வேண்டும், நிறுத்தப்படவேண்டும் என்பதில் இங்கு யாருக்கும் மாற்றுக்கருத்தே இல்லை. இஸ்லாம் போன்ற 1500 வருட மதத்தில்  லெப்பை, ராவுத்தர், பட்டாணி, உள்ளிட்ட பல்வேறு ஜாதி பிரிவுகளும் ஷியா, சன்னி , சூபி  பிரிவுகளும் எப்படி  வந்தது.  கிறிஸ்தவத்தில் மேரி மாதா வழிபாட்டு ஆலயங்கள், சி ஸ் இ, பெந்தேகோஸ்தே, செவென்த் டே,  ஆர்சி உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள் பிரிவுகள் எப்படி வந்தது. எனவே உட்பிரிவுகள் என்பது காலமாற்றத்தின் அடிப்படையில் நடந்துவிட்டது.அது தவிர்க்கப்பட்டு நாம் அனைவரும் தூய்மையான ஹிந்து தர்மம் பின்பற்றும் தமிழராக இந்தியராக  வாழ்வதும் இணைவதும்  அவசியம்.

9. தமிழருக்கு என்று ஒரு தேசியம் தமிழ் தேசியம் அவசியம்.
பதில்: அவசியமில்லாதது. என்றைக்கு தமிழகம் தேசிய நீரோட்டத்தில் பயணித்து , தேசியக்கட்சிகளுக்கு தமிழகத்தில் இருந்து தலைவர்கள் வருகிறார்களோ அன்றுதான் தமிழகத்தின் நெடுநாள் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். இந்தியாவிற்கு தேவை உணர்வார்ந்த தமிழனின் தேசிய தலைமை. பசும்பொன் தேவரைப்போல, காமராஜரை போல. மாநிலக்கட்சிகள் தங்கள் அரசியல் தேவைக்காக தமிழக மக்களை தூண்டிவிட்டு இந்திய நீரோட்டத்தில் பயணிக்க விடாமல் சிந்தனை மழுங்க செய்து  அவர்கள் நடத்தும் நாடகம்தான் தமிழ் தேசியம், திராவிடம் என்பதெல்லாம்.

10.தமிழன் இந்துவாகத்தான் இருந்திருக்க வேண்டுமா ?

பதில்: ஆம். நம் வீட்டு பெண்களால் வீட்டு வாசல்களில் வரையப்படும் கோலங்களில் இருந்து, வானளாவ நிற்கும் கோவில்கள், அழகு நிறைந்த சிற்பங்கள், கட்டிடக்கலை, கருநாடக இசை, ராமாயண, வள்ளி திருமண நாடகங்கள்,

11 தமிழ் மாதங்களுக்குமான பொங்கல் விழாக்கள், தீபாவளி, ஊர் பொங்கல், தெரு பொங்கல், தேர் திருவிழா என்று நமது பண்பாடு அனைத்தையும் தமிழன் இந்து மதம் சாராதவனாக இருந்திருந்தால் யார் பின்பற்றுவார்கள் ? தமிழன் இந்துமதம் சாராதவனாக இருந்தாஇதெல்லாம் செய்தான்? சிந்திப்பீர்.

முடிவாக,
இந்தியா முழுமைக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது என்றால் அது ஹிந்து சமயம் மட்டும்தான். எனவே தமிழன் இந்துவாக இருந்துவிட்டால், ஒரே மதம் என்ற அடிப்படையில் மாநில எல்லைகளை கடந்து ஜாதிகளை அழிக்கும் விழிப்புணர்வுற்று அவன் இந்திய நீரோட்டத்தில் இந்தியனாக பயணிப்பான். இது நடந்து விடக்கூடாது.  இப்படி நடந்தால் நம் அரசியல் வண்டி ஓடாது என்று புரிந்து கொண்ட சில அந்நிய சக்திகள்தான் தமிழன் இந்து இல்லை என்று பரப்புகிறது. ஹிந்து கலாச்சாரத்தையும் தமிழினத்தையும் பிரிப்பதென்பது கனவிலும் கூட நடக்காத ஒன்று. அந்த தமிழ்விரோத சக்திகள் தங்கள் மனதை தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ள  வேண்டுமானால் தமிழனுக்கு மதம் இல்லை, தமிழன் மதம் சாராதவன் என்று சொல்லி ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் தமிழன் இந்து மதம் சார்ந்தவன்தான் என்பது மறுக்க முடியாதது. வெற்று வார்த்தைகளால் மறைக்க முடியாதது. தமிழன் என்றாலே இந்துதான்.  தமிழன் இந்துதான்.
நூல்-புஸ்தஸ்ம்ருதி : இந்து என்ற வார்த்தை கிமு நாலாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நூலில் உள்ளது

ஹிந்து என்ற வார்த்தை ஆங்கிலேயர் சூட்டியதல்ல .
ஹிந்து என்ற சொல் யாரால் கொடுக்கப்பட்டது?
ஸ்ரீகுருஜி மாதவ_சதாசிவகோல்வால்கர் :-
’ஹிந்து’ என்ற சொல் சமீபகாலத்தில் தோன்றிய சொல் என்பதோ, அது  அந்நியர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பெயர் என்பதோ சரியல்ல...
உலகிலேயே மிகப்பழமையான நூலான ரிக்வேதத்தில் வரும் ’ ஸப்தஸிந்து’ என்ற பெயர், நமக்கும் நம் நாட்டிற்கும் அடைமொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காண்கிறோம். மேலும், சம்ஸ்கிருத மொழியில் உள்ள ‘ஸ’ என்ற எழுத்து, புராதன மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் ‘ஹ’ என்று மாறி வருவது நாம் அறிந்ததே. எனவே அந்தச்சொல், ‘ஹப்தஹிந்து’ என்று மாறி, பிறகு  ஹிந்து என்ற சொல்லாக வழங்கி வருகிறது. ‘ஹிந்து’ என்ற சொல் நம் முன்னோர் இட்ட பெயர். பிற்காலத்தில் அந்நியர்களும் இதே பெயராலேயே நம்மை அழைத்தார்கள்...
பிருகஸ்பதி ஆகமத்தின்படி, ஹிமாலயம் என்பதிலிருந்து ‘ஹி’ என்ற எழுத்தையும் இந்து_ஸரோவர் (குமரிக்கடல்) என்பதிலிருந்து (இ)ந்து என்ற எழுத்துக்களையும் எடுத்துக்கொண்டு ‘ஹிந்து’ என்ற பெயரைத் தோற்றுவித்திருக்கிறார்கள். இவ்வாறு தேசம் முழுவதையும் குறிக்கும் சொல்லாகிறது ‘ஹிந்து’...
ஹிமாலயம் ஸமாரப்ய யாவதிந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷ்யதே (பிருகஸ்பதி ஆகமம்)
(இமயமலை முதல் இந்து ஸரோவரம் (குமரிக்கடல்) வரை பரந்துள்ளதும், இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதுமான நிலப்பரப்பு ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது)
நெருக்கடிகள் மலிந்த ஆயிரம் ஆண்டு காலத்தில் ஹிந்து என்ற சொல்தான் நம்மைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிருதிவிராஜ் காலத்திலிருந்து நம் நாட்டுக் கவிஞர்கள், சரித்திர ஆசிரியர்கள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் நிபுணர்கள் அனைவரும், நம்மையும் நமது தர்மத்தையும் ‘ஹிந்து’ என்ற பெயரால்தான் குறிப்பிட்டு வருகின்றனர்....
சுதந்திரப்போராட்ட வீரர்களான குரு கோவிந்த சிம்மன், வித்யாரண்யர், சிவாஜி போன்றோரின் கனவு ‘ஹிந்துஸ்வராஜ்ய’த்தை நிறுவுவதே. ‘ஹிந்து’ என்ற சொல் அப்படிப்பட்ட வீரர்களின் லட்சிய வாழ்க்கை, தீரச் செயல்கள் அனைத்தையும் நம் நினைவிற்குக் கொண்டு வருகிறது. இவ்வாறு ‘ஹிந்து’ என்ற சொல், நம் மக்களின் ஒருமைப்பாட்டையும்_உயர்வையும்_சிறப்பையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. நம்சமுதாயத்தைக் குறிப்பது ‘ஹிந்து’ என்ற சொல்லே.
நூல் : 

நன்றி : ஸ்ரீகுருஜிசிந்தனைக்களஞ்சியம், பாகம் 11, பக்.129-130 !!!