தமிழன் இந்து அல்லவா?.......

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:06 | Best Blogger Tips


தமிழன் இந்துதான்
சமூக வலைத்தளங்களில் "தமிழன் இந்து அல்ல" என்று பரப்பப்படும் வதந்திகளுக்கு தீர்வு காணும் வகையில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கான பதிலையும் தொகுத்துள்ளேன்.

1. திருக்குறளில் இந்து தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. அதனால் திருக்குறள் காலத்திற்கு பின் தான் இந்து மதம் தமிழகத்திற்கு வந்தது.

பதில் :
திருக்குறளே ஆதிபகவனை வழிபட்டு ஆரம்பிக்கும் நூலாகும். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இந்த அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களும் இறைவனை போற்றிப்பாடும். திருக்குறளின் காலத்தில் தமிழகத்தில் ஹிந்து சமயம் தவிர இன்னொரு சமயம் இருந்தது என்றால் அது சமணம் மட்டும்தான். ஆனால் சமணம் இறை வழிபாட்டை பற்றியது அல்ல. அது தன்னிலை உணர்தல் என்ற நிலையை அடிப்படையாக கொண்டது. இறைவழிபாடு என்ற ஒன்று அதில் இல்லை. எனவே வள்ளுவர் குறிக்கும் இறைவன் இந்து மதம்தான்.
மலர்மிசை ஏகினான் - மலர் மீது அமர்ந்தவன் இறைவன் என்பதும்
அறவாழி அந்தணர் - அறவழி நடக்கின்ற அந்தணர் என்பதும்
பற்றுக பற்றற்றான் தாளினை - எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனடி என்பதும்

மேலும் இந்து சமயக்கொள்கைகளான துறவு , அருளுடைமை, அவாவறுத்தல், முறை செய்து காட்கும் மன்னவனை இறைவனாக பார்க்கும் இறைமாட்சி, விதியை கதியாய் உணர்த்தும் ஊழியல் , ஒழுக்கமுடைமை, கூடாநட்பு, வேண்டியதை வேண்டியபடி கிடைக்க செய்ய வேண்டிய தவம் எனும் அதிகாரம், பிறப்பெனும் பேதைமை நீங்க செய்யும் மெய்யுணர்தல் அதிகாரம்.

இந்து மத நம்பிக்கையான மறு பிறப்பு தத்துவம் , ஏழு பிறப்பு உண்டென்பதை பகரும் எழுபிறப்பும் தீயவை தீண்டா என்ற குறள், குடிப்பெருமை நிகர்த்த செய்யும் மானம் என்ற அதிகாரம்,

எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பலை நீக்கி உழைப்பை உயர்த்த செய்யும்
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
(ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்)

இந்திரனை ஆசையை ஒழித்தவனாக புகழும்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

(ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.)

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
(செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.)

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
(தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?)

மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு
(தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்)

அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி
குறுக தறித்த குறள் ;
என்று திருக்குறளை வாழ்த்திய ஒளவைதான்,
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
திருநீறில்லா நெற்றி பாழ்

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்.  என்றாள்.

அவ்வாறென்றால் என்ன அர்த்தம். திருக்குறளும் பக்தி இலக்கியங்களோடு ஒப்புமை செய்யப்படுகிறது. எனவே திருக்குறள் இந்து மதம் சார்ந்த நூல்தான்.

இவ்வாறு திருக்குறள் சார்ந்த எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அந்த காலத்திற்கு தேவையான தமிழ் மக்களின் வாழ்வியல் நடைமுறையை நமது சமயத்தை ஆங்காங்கே மேற்க்கோடிட்டு உலகப்பொது மறையாக தந்தார் வள்ளுவர் என்றால் அது ஏற்புடையதுதானே !

2. திருக்குறள் தவிர வேறு எந்த நூல்கள் இந்து சமய தெய்வங்களை புகழ்ந்து பாடியுள்ளன .

இவ்வளவுதானா என்றில்லாமல் தமிழன் இந்து மதம் சார்ந்தவன்தான் என்பதற்கு நிறைய ஆதாரம் காண்பிக்க முடியும் என்றாலும் உதாரணமாக மட்டும் சில சங்க இலக்கிய பாடல்கள்

நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....
சாவந்தாங்கிய, சாந்துபுலர் திணிதோள்,
ஆர்வ நன்மொழி ஆயும்...
(சிறுபாணாற்றுப்படை, 95-99)

பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த சிவப் பெருமானுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்..

பரிபாடல்

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.

ராமன் திருவடி பெருமையைப் பாடும் சிலப்பதிகாரம்
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ;
(சிலப்பதிகாரம் -ஆய்ச்சியர் குரவை - ராமன் திருவடி பெருமையை கேளாத செவியை செவியாகவே மதிக்கவில்லை இளங்கோவடிகள் )

அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
சிலப்பதிகாரம் - புறஞ்சேரியிறுத்த காதை மூலம் ராமனை பாடுகிறது. (ராமனை பிரிந்து அயோத்தி நகர் வாடியதை போலும் என்று )

முருகன் வழிபாடு பற்றி அகநானூறு குறிப்பிடும்போது,
‘‘சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து’’
(அகம்., பா.எ., 59)

இப்படி எந்த தமிழ் நூலை இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் நமது சமய இறைவனை பாடாமல் இருக்காது. இவை தவிர்த்து தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட எண்ணற்ற பக்தி இலக்கியங்கள் தமிழில் உள்ளன. தமிழுக்கு இந்துமதமும் இந்துமதத்திற்கு தமிழும் ஆற்றிய பங்கு நகமும் சதையும் போல. பிரிக்க முடியாதது.

3. தொல்காப்பியம் கூறும் தமிழர் ஐந்திணை தெய்வங்கள் சிறுதெய்வ வழிபாடு அது இந்து மதம் சாராதது :

பதில் : இந்திரன் , திருமால், காளி, வருணன்,முருகன் இவர்கள்தான் ஐந்திணை தெய்வங்கள். இவர்கள் ஹிந்து மத தெய்வங்கள் இல்லாமல் யார் ? மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் வழிபடுகிறார்களா ?  நம் தெய்வங்களை சிறு தெய்வங்கள் பெரு தெய்வங்கள் என்று சொல்வதே தவறு. இது திரிபுவாதம். சம்ஸ்கிருத வேதங்கள் நம் இறைவனை பாடினால் அவர்கள் நம் தெய்வங்கள் இல்லாமல் போய்விடுவார்களா? நமது  திருக்குறள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதால் அது  ஆங்கிலேயர்கள் நூலாகிவிடுமா ?

மேலும்தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல். பக்தி இலக்கியம் அல்ல. ஆனால் அவரது குருவாக விளங்கியவர் அகத்தியர். அகத்தியரின் அகத்தியம்தான் தமிழின் முதல் இலக்கண நூல். அகத்தியத்தை ஒட்டியே தொல்காப்பியர் தமிழ் இலக்கண நூலை வடிவமைத்தார். தொல்காப்பியரின் மற்ற நூல்கள் கிடைக்கபெறவில்லை. ஆனால் அகத்தியரின் சிவபக்தியும்  அவர் நமது ஹிந்து மதத்திற்கு ஆற்றிய தொண்டும்  நாம் அனைவரும் அறிந்ததே.

4. சமணர்கள் காலத்திற்கு பின்தான் இந்துமதம் தமிழகத்தில் பரவியது
பதில் : அடிப்படை ஆதரமில்லாதது. மேலே உள்ள விவரங்களை திரும்ப படித்தல் தெளிவு பிறக்க செய்யும். சமண சமயத்தை நமது தமிழ் மன்னர்கள் தழுவிய போது சில சிவாலயங்கள் மூடப்பட்டன. இடித்து சமண புத்த விகார்களாக கட்டப்பட்டன. பின்னர் வந்த சமயகுரவர்கள் காலத்தில், தமிழ் மன்னர்களுக்கு ஞானம் புகட்டப்பெற்று மீண்டும் மூடப்பட்ட சிவாலயங்களும், விகார்களாக மாற்றப்பட்ட இன்ன பிற ஆலயங்களும் மீண்டும் நமது தர்ம கோவில்களாகவே புத்துயிர் பெற்றன. (உதாரணம் : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் )

5. நரகாசூரன், சூரபத்மன், ராவணன் அசுரர்கள்  என்போர் தமிழர்கள் , ராமன் ஆரியன்
பதில் : ராவணனும் பிராமணன்தான். இந்தியாவில் ஐந்து கோவில்கள் ராவணனுக்கு உண்டு.  அதில் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை. அவன் தமிழகத்தில் வழிபடப்படவும் இல்லை. இராவணன் தமிழன் என்றால் அவனை பின்பற்றி அனைவரும் சிவ வழிபாடு செய்யும் சைவர்களாக மாற தயாரா ? அசுரர்கள் அனைவரும் தமிழர்கள் என்றால்  சூரபதுமன் யார் ? அவன் ஏன் தமிழ் கடவுள் முருகனால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் ? நரகாசுரன் உள்பட அனைத்து அசுரர்களையும் நாம் அறிந்தது எல்லாம் இந்து மத புராணங்களில்தான். வேறு ஆதாரம்  இல்லை. தனக்கு வசதிப்படும் ஒரு சிலவற்றைமட்டும் எடுத்துக்கொண்டு தமிழனை குழப்பும் வீணர்கள்வீண் முயற்சி அதை யாரும் நம்பப்போவதில்லை. அசுரர்களை  தமிழர்களாகவும் தேவர்களை ஆரியர்களாகவும் கற்பனை செய்து மக்களை  குழப்புவது திராவிட  வியாதி. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றத்தை கண்டிக்கும் தமிழ் மரபு நம்முடையது. தவறு செய்யும் அசுரர்களை சும்மா விடுமா ?

6. ஹிந்து என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களில் இல்லை.
பதில் : தமிழ்நாடு என்ற வார்த்தைகூட 100 ஆண்டுகளுக்கு முன் இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. ஒன்றிணைந்த பின் அது தமிழகமாகியது. பல மாநிலங்கள் கூட்டினையும் முன் இந்தியா பாரதம் என்றே அழைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு என்ற வார்த்தைகூட அந்த  காலத்தில் அவ்வாறு அழைக்கப்படவில்லை. அது ஏறுதழுவுதல் என்று அழைக்கப்பட்டது. அது போல ஷண்மதங்கள் ஹிந்து மதமாக ஒன்றிணைவதற்கு முன் சைவம், வைணவம், ஷாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம் என்று ஆறு பெயரில் இருந்தது. ஹிந்து மதம் என்று நாம் அழைக்கத்துவங்கும் முன்பும் இந்துமதம்  சிறப்பொடு தொழப்பட்டுதான்  வந்தது. பெயர்  புதியதனாலும் தெய்வங்கள் இருந்தது உண்மைதானே !  2000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்படாத சொல்லை இப்போது பயன்படுத்துவது தவறு என்று சொல்வதானால், அதே காலக்கட்டத்தில்   ஏசு, அல்லா போன்ற தெய்வங்களும்  இல்லையே . அதனால் வழிபடல் ஆகாது என்று சொல்ல முடியுமா ?

மேலும் சமீப காலமாக ஆங்கிலேயர்கள்தான் நமது சமயத்திற்கு ஹிந்து என்று பெயரிட்டதாக திட்டமிட்டே பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல. அதற்கான ஆதாரம் பின்வருமாறு:

7. தமிழ் மன்னர்கள் தம் பெருமைக்காக கட்டியவைதான் இந்து கோவில்கள்.
பதில்: தமிழ் மன்னர்கள் தங்கள் பெருமைக்காக கட்டுவதாக இருந்தால் தமது  அரண்மனையைத்தான் சிறப்பாக கட்டி இருப்பார்கள். அவர்கள் கட்டிய எண்ணிலடங்காத ஆலயங்கள் அவர்களின் பக்தி சிறப்பையே உணர்த்துகிறது. சோழனின் தஞ்சை பெரிய கோவில், பல்லவனின் மல்லை, பாண்டியனின் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், காஞ்சி, தில்லை என்று எந்த கோவிலை எடுத்தாலும் அதில் அவன் கட்டிட கலையும் , பக்தியும் மட்டுமே நமக்கு தெரிய வருகிறது. குறிப்பாக உத்திரகோசமங்கை சிவாலயம் "மண் முந்தியதோ மங்கை முந்தியதோ " என்ற முதுமொழி உடைய பழைய கோவில் என்றால் தமிழன் சிவபக்தி எவ்வளவு பழையது என்று பாருங்கள்.

மற்ற மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் தெய்வங்கள் இன்னதென்று கண்டுபிடிக்காத காலத்திலேயே தமிழர்கள் விண்ணில் உலவும் கிரகங்களை கண்டுபிடித்து கோவிலில் வைத்து வழிபட தொடங்கியவர்கள் தமிழர்கள் என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்.

8. ஹிந்து மதத்தில் ஜாதி கொடுமைகள் அதிகம். எனவேதான் அதிகமான மதமாற்றம்இங்கு நிகழ்கிறது.

பதில்: இந்து மக்களை இப்படி  சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து பேசுவதே தவறு. அரசியல் லாபத்துக்காக மக்களை பிரித்தாள்வது கயமைத்தனம்.  இந்து மதத்தை விட்டு ஓடி ஒழியாமல்,   ராமானுஜர் வழியில், ஆதிசங்கரர் வழியில் ஜாதிய அடக்கு முறைகள் கண்டிக்கப்பட ஒழிக்கப்பட வேண்டும், நிறுத்தப்படவேண்டும் என்பதில் இங்கு யாருக்கும் மாற்றுக்கருத்தே இல்லை. இஸ்லாம் போன்ற 1500 வருட மதத்தில்  லெப்பை, ராவுத்தர், பட்டாணி, உள்ளிட்ட பல்வேறு ஜாதி பிரிவுகளும் ஷியா, சன்னி , சூபி  பிரிவுகளும் எப்படி  வந்தது.  கிறிஸ்தவத்தில் மேரி மாதா வழிபாட்டு ஆலயங்கள், சி ஸ் இ, பெந்தேகோஸ்தே, செவென்த் டே,  ஆர்சி உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள் பிரிவுகள் எப்படி வந்தது. எனவே உட்பிரிவுகள் என்பது காலமாற்றத்தின் அடிப்படையில் நடந்துவிட்டது.அது தவிர்க்கப்பட்டு நாம் அனைவரும் தூய்மையான ஹிந்து தர்மம் பின்பற்றும் தமிழராக இந்தியராக  வாழ்வதும் இணைவதும்  அவசியம்.

9. தமிழருக்கு என்று ஒரு தேசியம் தமிழ் தேசியம் அவசியம்.
பதில்: அவசியமில்லாதது. என்றைக்கு தமிழகம் தேசிய நீரோட்டத்தில் பயணித்து , தேசியக்கட்சிகளுக்கு தமிழகத்தில் இருந்து தலைவர்கள் வருகிறார்களோ அன்றுதான் தமிழகத்தின் நெடுநாள் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். இந்தியாவிற்கு தேவை உணர்வார்ந்த தமிழனின் தேசிய தலைமை. பசும்பொன் தேவரைப்போல, காமராஜரை போல. மாநிலக்கட்சிகள் தங்கள் அரசியல் தேவைக்காக தமிழக மக்களை தூண்டிவிட்டு இந்திய நீரோட்டத்தில் பயணிக்க விடாமல் சிந்தனை மழுங்க செய்து  அவர்கள் நடத்தும் நாடகம்தான் தமிழ் தேசியம், திராவிடம் என்பதெல்லாம்.

10.தமிழன் இந்துவாகத்தான் இருந்திருக்க வேண்டுமா ?

பதில்: ஆம். நம் வீட்டு பெண்களால் வீட்டு வாசல்களில் வரையப்படும் கோலங்களில் இருந்து, வானளாவ நிற்கும் கோவில்கள், அழகு நிறைந்த சிற்பங்கள், கட்டிடக்கலை, கருநாடக இசை, ராமாயண, வள்ளி திருமண நாடகங்கள்,

11 தமிழ் மாதங்களுக்குமான பொங்கல் விழாக்கள், தீபாவளி, ஊர் பொங்கல், தெரு பொங்கல், தேர் திருவிழா என்று நமது பண்பாடு அனைத்தையும் தமிழன் இந்து மதம் சாராதவனாக இருந்திருந்தால் யார் பின்பற்றுவார்கள் ? தமிழன் இந்துமதம் சாராதவனாக இருந்தாஇதெல்லாம் செய்தான்? சிந்திப்பீர்.

முடிவாக,
இந்தியா முழுமைக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது என்றால் அது ஹிந்து சமயம் மட்டும்தான். எனவே தமிழன் இந்துவாக இருந்துவிட்டால், ஒரே மதம் என்ற அடிப்படையில் மாநில எல்லைகளை கடந்து ஜாதிகளை அழிக்கும் விழிப்புணர்வுற்று அவன் இந்திய நீரோட்டத்தில் இந்தியனாக பயணிப்பான். இது நடந்து விடக்கூடாது.  இப்படி நடந்தால் நம் அரசியல் வண்டி ஓடாது என்று புரிந்து கொண்ட சில அந்நிய சக்திகள்தான் தமிழன் இந்து இல்லை என்று பரப்புகிறது. ஹிந்து கலாச்சாரத்தையும் தமிழினத்தையும் பிரிப்பதென்பது கனவிலும் கூட நடக்காத ஒன்று. அந்த தமிழ்விரோத சக்திகள் தங்கள் மனதை தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ள  வேண்டுமானால் தமிழனுக்கு மதம் இல்லை, தமிழன் மதம் சாராதவன் என்று சொல்லி ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் தமிழன் இந்து மதம் சார்ந்தவன்தான் என்பது மறுக்க முடியாதது. வெற்று வார்த்தைகளால் மறைக்க முடியாதது. தமிழன் என்றாலே இந்துதான்.  தமிழன் இந்துதான்.
நூல்-புஸ்தஸ்ம்ருதி : இந்து என்ற வார்த்தை கிமு நாலாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நூலில் உள்ளது

ஹிந்து என்ற வார்த்தை ஆங்கிலேயர் சூட்டியதல்ல .
ஹிந்து என்ற சொல் யாரால் கொடுக்கப்பட்டது?
ஸ்ரீகுருஜி மாதவ_சதாசிவகோல்வால்கர் :-
’ஹிந்து’ என்ற சொல் சமீபகாலத்தில் தோன்றிய சொல் என்பதோ, அது  அந்நியர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பெயர் என்பதோ சரியல்ல...
உலகிலேயே மிகப்பழமையான நூலான ரிக்வேதத்தில் வரும் ’ ஸப்தஸிந்து’ என்ற பெயர், நமக்கும் நம் நாட்டிற்கும் அடைமொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காண்கிறோம். மேலும், சம்ஸ்கிருத மொழியில் உள்ள ‘ஸ’ என்ற எழுத்து, புராதன மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் ‘ஹ’ என்று மாறி வருவது நாம் அறிந்ததே. எனவே அந்தச்சொல், ‘ஹப்தஹிந்து’ என்று மாறி, பிறகு  ஹிந்து என்ற சொல்லாக வழங்கி வருகிறது. ‘ஹிந்து’ என்ற சொல் நம் முன்னோர் இட்ட பெயர். பிற்காலத்தில் அந்நியர்களும் இதே பெயராலேயே நம்மை அழைத்தார்கள்...
பிருகஸ்பதி ஆகமத்தின்படி, ஹிமாலயம் என்பதிலிருந்து ‘ஹி’ என்ற எழுத்தையும் இந்து_ஸரோவர் (குமரிக்கடல்) என்பதிலிருந்து (இ)ந்து என்ற எழுத்துக்களையும் எடுத்துக்கொண்டு ‘ஹிந்து’ என்ற பெயரைத் தோற்றுவித்திருக்கிறார்கள். இவ்வாறு தேசம் முழுவதையும் குறிக்கும் சொல்லாகிறது ‘ஹிந்து’...
ஹிமாலயம் ஸமாரப்ய யாவதிந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷ்யதே (பிருகஸ்பதி ஆகமம்)
(இமயமலை முதல் இந்து ஸரோவரம் (குமரிக்கடல்) வரை பரந்துள்ளதும், இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதுமான நிலப்பரப்பு ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது)
நெருக்கடிகள் மலிந்த ஆயிரம் ஆண்டு காலத்தில் ஹிந்து என்ற சொல்தான் நம்மைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிருதிவிராஜ் காலத்திலிருந்து நம் நாட்டுக் கவிஞர்கள், சரித்திர ஆசிரியர்கள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் நிபுணர்கள் அனைவரும், நம்மையும் நமது தர்மத்தையும் ‘ஹிந்து’ என்ற பெயரால்தான் குறிப்பிட்டு வருகின்றனர்....
சுதந்திரப்போராட்ட வீரர்களான குரு கோவிந்த சிம்மன், வித்யாரண்யர், சிவாஜி போன்றோரின் கனவு ‘ஹிந்துஸ்வராஜ்ய’த்தை நிறுவுவதே. ‘ஹிந்து’ என்ற சொல் அப்படிப்பட்ட வீரர்களின் லட்சிய வாழ்க்கை, தீரச் செயல்கள் அனைத்தையும் நம் நினைவிற்குக் கொண்டு வருகிறது. இவ்வாறு ‘ஹிந்து’ என்ற சொல், நம் மக்களின் ஒருமைப்பாட்டையும்_உயர்வையும்_சிறப்பையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. நம்சமுதாயத்தைக் குறிப்பது ‘ஹிந்து’ என்ற சொல்லே.
நூல் : 

நன்றி : ஸ்ரீகுருஜிசிந்தனைக்களஞ்சியம், பாகம் 11, பக்.129-130 !!!