*குரு என்பவர் யார் ...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:47 | Best Blogger Tips

முன்னொரு காலத்தில் உலகப் புகழ் வாய்ந்த ஞானம் பெற்ற குரு ஒருவர் இருந்தார்...

அவர் இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது, அவரின் சீடர்கள் அந்தக் குருவிடம் ஒரு கேள்வி எழுப்பினார்கள்.

எங்களுக்கெல்லாம் நீங்கள் குருவாக இருக்கிறீர்கள். உங்களுக்கு யார் குரு? என்று கேட்டனர்.

அந்த குரு சிரித்துவிட்டார் எனக்கு ஆன்மீகத்தில் எண்ணற்ற குருமார்கள் இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மூன்று பேரை கட்டாயம் சொல்ல வேண்டும்.

என் முதல் குரு ஒரு நாய்..

ஒருமுறை நான் ஆன்மீகத்தை தேடி, எல்லாவற்றையும் துறந்து அலைந்து கொண்டிருந்த சமயம். அது ஒரு காடு. அப்போது எனக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது அருகிலேயே ஒரு சிறிய நீரோடை இருந்தது. 

சரி நீர் குடிக்கலாம் என அதன் அருகே சென்றேன்..

அப்போது அங்கே ஒரு நாய், நீரோடைக்கு போவதும் திரும்புவதுமாக இருந்தது. 

உற்று கவனித்தேன் அது மிகவும் களைப்பாக இருந்தது அதற்கும் நிறைய தாகம் போலிருக்கிறது. 

ஆனால் நீரோடைக்கு போனதும் அங்கே நீரில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்து பயந்துபோய் திரும்பி வந்துவிட்டது. 

ஆனால் தாகம் துரத்தியது. திரும்பவும் நீரோடைக்கு செல்கிறது . இப்படி போவதும் வருவதும், போவதும் வருவதுமாக இருந்தது.

நாய் களைத்துப் போய் விட்டது. இருந்தும் தாகம் மேலிடவே அந்த நாய் சரேலென தண்ணீருக்குள் பாய்ந்தது. பயம் தெளிந்தது தாகத்தைத் தீர்த்துக் கொண்டது. 

அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். நம் தாகத்தை தணிக்க விடாமல் செய்வது பயம் மட்டுமே ஆனால் தாகம் மேலிடும் போது நமக்குள் உருவாகும் தைரியமானது பயத்தை உடைத்து விடுகிறது என அறிந்து கொண்டேன் அதனால் அந்த நாய்தான் என் முதல் குரு.

சீடர்கள் வியந்தனர்..

அப்போது இரண்டாவது குரு யார் என அந்த ஞானியை கேட்டனர்..


அவர் சொன்னார் எனது இரண்டாவது குரு ஒரு திருடன்..

என்ன திருடன் குருவாக முடியுமா? என்றனர்..

அவர் புன்னகையுடன் பதில் சொல்லத் தொடங்கினார்.

அந்தக் காட்டில் பசி மிகுதியால் நான் மிகவும் களைப்புற்று சோர்ந்து கிடந்தேன் அப்போது ஒருவர் வந்து என்னை கைத்தாங்கலாக தூக்கி அருகிலிருந்த தன் குடிசைக்கு அழைத்துச் சென்றார்.

‘ சாமி நீங்க யார் ‘என்று என்னை கேட்டார். 

அதைத்தான் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன் என பதில் சொன்னேன். 

அவருக்கு அது புரியவில்லை. 

சற்று தயக்கமாக ‘நீங்கள் யார்’ என்று கேட்டேன். 

‘நான் ஒரு திருடன்’என பதில் சொன்னார். 

உங்களுக்கு தயக்கம் இல்லை என்றால் உங்களுக்கு விருப்பம் இருக்கும் வரை இங்கேயே தங்கலாம் என்று கூறினார். 

நானும் வேறுவழியின்றி ஒத்துக் கொண்டேன்.

அன்று இரவு அவர் தன் தொழிலுக்கு கிளம்பினார் மறுநாள் காலையில் வந்தார். என்னப்பா தொழில் எப்படி? ஏதாச்சும் கிடைச்சதா? என்றேன்..

 இன்னைக்கு கிடைக்கல சாமி நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும் என்றார். 

மறுநாளும் தொழிலுக்குச் சென்றார் திரும்பி வந்ததும் மீண்டும் அதே கேள்வியை கேட்டேன் இன்னைக்கு இல்ல சாமி நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும் என்று பதில் சொன்னார்.

இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் எனது அதே கேள்வியும், அவரது அதே பதிலும் தொடர்ந்தது. 

அன்றுதான் ஒன்றைத் தெரிந்து கொண்டேன். சாதாரண பொருளை தேடக்கூடிய (திருடக்கூடிய) திருடனுக்கே இவ்வளவு பொறுமையும் நம்பிக்கையும் தேவைப்படுகிறது என்றால்.... 

மிகப்பெரிய செல்வமாகிய ஞானத்தை தேடக்கூடிய எனக்கு எவ்வளவு நம்பிக்கையும் பொறுமையும் தேவை என்பதை தெரிந்து கொண்டேன். 

அதனால் அந்த திருடன் தான் எனது இரண்டாவது குரு...

சீடர்களுக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது...

(உங்களுக்கும் தானே)

அப்போ அந்த மூன்றாவது குரு யார்? என்று கேட்டனர்.

அந்த ஞானி சொன்னார் நான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பிறகு ,ஒரு ஊரில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். 

அப்போது அவ்வீட்டிலிருந்த 5 வயது குழந்தையொன்று வீட்டிலிருந்த விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தது. 

அந்த குழந்தையிடம் என் புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்காக..

பாப்பா இந்த விளக்கில் வெளிச்சம் இருக்கிறதே அது எங்கிருந்து வந்தது எனத் தெரியுமா என கேட்டேன். 

அந்த குழந்தை சட்டென விளக்கை ஊதி அணைத்து விட்டு,

'தாத்தா ! இப்போ இந்த வெளிச்சம் எங்கே போச்சோ,

அங்கிருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது' என பதில் சொன்னது.

ஆஹா!!.... 

ஞானம் எனக்கு மட்டும் சொந்தம் என கர்வம் கொண்டிருந்தேன்.

அதை தகர்த்த அந்த குழந்தைதான் என் மூன்றாவது குரு என்றார்.

எனவே குரு என்பவர் ஒரு நபர் அல்ல குரு என்பது ஒரு தன்மை இருளை அகற்றும் மின்னல் கீற்று..

அஞ்ஞானம் போக்கும் அறிவு...!

குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறைகள் எல்லாம் செய்ய முடியாது..!

அப்படி வரையறுப்பது சரியான ஆன்மீக நெறி முறையும் அல்ல.

மகாபாரதத்தில் கிருஷ்ணன் கீதா உபதேசத்தை..

ஒழுக்கத்தில் சிறந்த பீஷ்மனுக்கு கூறவில்லை.

வித்தையில் சிறந்த துரோணருக்கு கூறவில்லை.

பக்தியில் சிறந்த விதுரனுக்கு கூறவில்லை .

பின் யாருக்குத்தான் கூறினான் ?

தன்னையே சரணாகதி அடைந்த அர்ஜுனனுக்குத் தான் கூறினார்.

இருப்பதிலேயே நண்பனிடம் சரணாகதி அடைவது தான் இயலாத காரியம். 

ஏனென்றால் நண்பனின் அத்தனை சேட்டைகளும் தான் நமக்குத்தான் தெரியுமே! 

அதனால் நண்பனிடம் மட்டும் சரணாகதி அடைவது என்பது இயலாத காரியம்.

(கிருஷ்ணனைப் போன்ற நண்பன் மட்டும் நமக்கு உபதேசித்திருந்தால் என்ன சொல்லியிருப்போம். உன் அட்வைஸ நிருத்துறயா? உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா?என்றிருப்போம்)

ஆனால் கிருஷ்ணனின் அனைத்து சேட்டைகளையும் அறிந்த பின்பும் (சிசுபாலன் கண்ணனின் சேட்டைகளை பக்கம் பக்கமாக பட்டியலிட்ட பின்பும்) அர்ஜுனன் சரணாகதி அடைந்தான்.

அர்ஜீனன் முழுவதும் ஏற்கும் தன்மையில் இருந்ததனால் கிருஷ்ணனுக்கு வேறு வழியே இல்லை அர்ஜுனனை சீடனாக ஏற்றுக்கொண்டான். கீதை அருளப்பட்டது.

இவ்வளவு ஏன்? ஞானத்திற்கெல்லாம் தலைவனாக இருக்க கூடிய சிவபெருமான் கூட தன் மகனாக இருந்தாலும், மண்டியிட்டு வாய் மூடி தலை குனிந்து தன்னை சீடன் என்ற நிலைக்கு இறக்கிக் கொண்ட பின்புதான் முருகனிடம் உபதேசம் பெறமுடிந்தது.

சம்மட்டி ஓசையை கேட்டு ஞானமடைந்தவரைப் பற்றியும், உடைந்த குடத்தின் ஓசையிலே ஞானமடைந்த பெண் புத்தத்துறவியைப் பற்றிய கதையையும் படித்துள்ளோம் தானே.

ஆகவே இங்கு *ஆன்மீகத்தில் முக்கியமானது குருவின் தகுதி அல்ல சீடனின் தகுதிதான் மிகவும் முக்கியமானது...!*

எவ்வளவு மழை பெய்தாலும் திறந்த பாத்திரத்தைத்தான் மழையால் நிரப்ப முடியும். 

மூடிய பாத்திரத்தை வானமே கிழித்துக்கொண்டு பெய்தாலும் நிரப்ப முடியாது .

தெரியுமா உங்களுக்கு? 

உண்மையிலேயே கிரேக்க ஞானி டயோஜனிஸிக்கு ஒரு நாய்தானே குரு.

நியூட்டனுக்கு ஆப்பிள் தானே குரு.

ஆர்க்கிமிடிஸிக்கு தான் குளித்த தண்ணீர்தானே குரு.

உலகின் பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டைக்கு நட்சத்திரங்களை பற்றி விளக்கிய குரு சோப்பு நுரைதானே.

அதனால்தான் நதிமூலம் பார்ப்போரின் தாகம் தீர்வதில்லை..

ரிஷிமூலம் பார்ப்போர் ஞானம் அடைவதில்லை..

தவித்தவன் தண்ணீரை தேடி பயணிப்பது போல, தாகம் கொண்டவனின் தொண்டையை நனைக்க தண்ணீரும் பயணப்படுகிறது. 

*தன்னை தகுதி படுத்திக் கொண்டவன் தன் பாதையிலேயே தன் குருவைக் காண்பான.



நன்றி இணையம்