ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:04 | Best Blogger Tips


ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை பகவான் ரமண மஹர்ஷிகள் அருளிய

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை 

அருணாசல வரற்கு ஏற்ற அக்ஷரமணமாலை சாற்றக்
கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே.

அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!

அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணாசலா! - 001

அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று அபின்னமாய் இருப்போம் அருணாசலா

அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய் அமர்வித்தது என்கொல் அருணாசலா

ஆருக்கா எனை ஆண்டனை அகற்றிடில் அகிலம் பழித்திடும் அருணாசலா

இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய் இனியார் விடுவார் அருணாசலா

ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனது அருள் அருணாசலா

உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா

ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
உன் அழகைக் காட்டு அருணாசலா

எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில் இதுவோ ஆண்மை அருணாசலா

ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா - 010

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இலையோ அருணாசலா

ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார் உன் சூதேயிது அருணாசலா

ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய் உனை யார் அறிவார் அருணாசலா

ஔவை போல் எனக்குன் அருளைத் தந்து எனை
ஆளுவது உன் கடன் அருணாசலா

கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக் காணுவது எவர் பார் அருணாசலா

காந்தம் இரும்புபோல் கவர்ந்து எனை விடாமல் கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா

கிரி உரு ஆகிய கிருபைக் கடலே கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா

கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என் கீழ்மையைப் பாழ் செய் அருணாசலா

குற்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்
குரு உருவாய் ஒளிர் அருணாசலா

கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள் கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாசலா - 020

கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை அஞ்சல் என்றே அருள் அருணாசலா

கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக் கேடு செய்யாது அருள் அருணாசலா

கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை வெறி கொள அருள் அருணாசலா

கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக் கொண்டு எஙன் வாழ்வேன் அருணாசலா

கோபம் இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக்
குறை என்செய்தேன் அருணாசலா

கௌதமர் போற்றும் கருணை மாமலையே கடைக்கணித்து ஆள்வாய் அருணாசலா!

சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்) மன சலசம் அலர்த்தியிடு அருணாசலா

சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான் சாந்தமாய்ப் போவன் அருணாசலா

சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத வாயைத்திற அருண்மதி அருணாசலா

சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள் சீரை அளித்து அருள் அருணாசலா - 030

சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச் சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா

சூது செய்து என்னைச் சோதியாது இனி உன் ஜோதி உருக்காட்டு அருணாசலா

செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு உருப்படு வித்தை காட்டு அருணாசலா

சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர் ஆற்று அழிவேன் அருணாசலா

சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால் உய்வகை ஏது உரை அருணாசலா

சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று சும்மா இருந்தாய் அருணாசலா

சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில் சொல் வேறு என் கதி அருணாசலா

சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே சலியாது இருந்தாய் அருணாசலா

ஞமலியில் கேடா நான் என் உறுதியால் நாடி நின் உறுவேன் அருணாசலா

ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற ஞானம் தெரித்தருள் அருணாசலா - 040

ஞிமிறுபோல் நீயும் மலர்ந்திலை என்றே நேர் நின்றனை என் அருணாசலா

தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய் தத்துவம் இது என் அருணாசலா

தானே தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய் அருணாசலா

திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண் தெரியும் என்றனை என் அருணாசலா

தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான் திரும்ப உற்றேன் அருள் அருணாசலா

துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன் ஒப்பிட வாய் ஏன் அருணாசலா

தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம் தோயவே அருள் என் அருணாசலா

தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச் சேர ஒழித்தாய் அருணாசலா

தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத் தியக்கம் தீர்த்து அருள் அருணாசலா

தைரியமோடும் உன் மெய் அகம் நாட யான் தட்டழிந்தேன் அருள் அருணாசலா - 050

தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான் நட்டமாவேன் அருள் அருணாசலா

தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும் சந்தோடம் ஒன்றிட அருள் அருணாசலா!

நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள் நகையிட்டுப் பார் நீ அருணாசலா

நாணிலை நாடிட நானாய் ஒன்றி நீ தாணுவா நின்றனை அருணாசலா

நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன் நின் அருள்
மழை பொழி அருணாசலா

நீ நான் அறப்புலி நிதம் களிமயமா நின்றிடும் நிலை அருள் அருணாசலா

நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட எண்ண அலை இறும் என்று அருணாசலா

நூலறிவு அறியாப் பேதையன் என்தன் மால் அறிவு அறுத்து அருள் அருணாசலா

நெக்கு நெக்கு உருகி யான் புக்கிட உனைப்புகல் நக்கனா நின்றனை அருணாசலா

நேசம் இல் எனக்கு உன் ஆசையைக் காட்டி நீ மோசம் செயாது அருள் அருணாசலா! - 060

நைந்து அழி கனியால் நலன் இலை பதத்தில் நாடி உட்கொள் நலம் அருணாசலா

நொந்திடாது உன்தனைத் தந்து எனைக் கொண்டிலை அந்தகன் நீ எனக்கு அருணாசலா

நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம் ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா

பற்றி மால்விடம் தலையுற்று இறுமுனம் அருள் பற்றிட அருள்புரி அருணாசலா

பார்த்தருள் மால் அறப் பார்த்திலை எனின் அருள் பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாசலா

பித்துவிட்டு உனை நேர் பித்தன் ஆக்கினை அருள் பித்தம் தெளி மருந்து அருணாசலா

பீதி இல் உனைச் சார் பீதியில் எனைச்சேர், பீதி உன் தனக்கு ஏன் அருணாசலா

புல்லறிவு ஏது உரை நல்லறிவு ஏது உரை புல்லிடவே அருள் அருணாசலா

பூமண மா மனம் பூரண மணம் கொளப் பூரண மணம் அருள் அருணாசலா

பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன் பெருமை யார் அறிவார் அருணாசலா - 070

பேய்த்தனம் விட விடாப்பேயாப் பிடித்து எனைப் பேயன் ஆக்கினை என் அருணாசலா

பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல் பற்றுக் கோடாய்க் கா அருணாசாலா

பொடியான் மயக்கி என் போதத்தைப் பறித்து உன் போதத்தைக் காட்டினை அருணாசலா

போக்கும் வரவும் இல் பொது வெளியினில் அருட் போராட்டம் காட்டு அருணாசலா

பௌதிகம் ஆம் உடல் பற்று அற்று நாளும் உன் பவிசு கண்டுற அருள் அருணாசலா

மலைமருந்து இட நீ மலைத்திடவோ அருள் மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா

மானங்கொண்டு உறுபவர் மானத்தை அழித்து அபிமான மில்லாது ஒளிர் அருணாசலா

மிஞ்சிடில் கெஞ்சிடும் கொஞ்ச அறிவன்யான் வஞ்சியாது அருள் எனை அருணாசலா

மீகாமன் இல‍்லாமன் மாகாற்று அலை கலம் ஆகாமல் காத்தருள் அருணாசலா

முடி அடி காணா முடி விடுத்து அனைநேர் முடிவிடக் கடனிலை அருணாசலா - 080

மூக்கிலன் முன்காட்டும் முகுரம் ஆகாது எனைத் தூக்கி அணைந்து அருள் அருணாசலா

மெய்யகத்தின் மன மென்மலர் அணையில் நாம் மெய் கலந்திட அருள் அருணாசலா!

மேன்மேல் தாழ்ந்திடும் மெல்லியர்க் சேர்ந்து நீ மேன்மை உற்றனை என் அருணாசலா

மை மயல் நீத்து அருள் மையினால் உனது உண்மை வசம் ஆக்கினை அருணாசலா

மொட்டை அடித்தெனை வெட்ட வெளியில் நீ நட்டம் ஆடினை என் அருணாசலா

மோகம் தவிர்த்து உன் மோகமா வைத்து என் மோகம் தீராய் என் அருணாசலா

மெளனியாய்க் கல்போல் மலராது இருந்தால் மௌனம் இது ஆமோ அருணாசலா

யவன் என் வாயில் மண்ணினை அட்டி என் பிழைப்பு ஒழித்தது அருணாசலா

யாரும் அறியாது என் மதியினை மருட்டி எவர் கொளை கொண்டது அருணாசலா

ரமணன் என்று உரைத்தேன் ரோசம் கொளாது எனை ரமித்திடச் செயவா அருணாசலா - 090

ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில் ரமித்திடுவோம் வா அருணாசலா

லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனைப்
பட்சித்தாய் பிராணனோடு அருணாசலா

லாபம் நீ இகபர லாபம் இல் எனை உற்று லாபம் என் உற்றனை அருணாசலா

வரும்படி சொலிலை வந்துஎன் படி அள வருந்திடு உன் தலைவிதி அருணாசலா

வாவென்று அகம் புக்கு உ ன் வாழ்வு அருள் அன்றே என் வாழ்வு இழந்தேன் அருள் அருணாசலா

விட்டிடில் கட்டமாம் விட்டிடாது உனை உயிர் விட்டிட அருள்புரி அருணாசலா

வீடு விட்டு ஈர்த்து உள வீடு புக்குப் பைய உன் வீடு காட்டினை அருள் அருணாசலா

வெளிவிட்டேன் உன்செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா

வேதாந்தத்தே வேறு அற விளங்கும் வேதப் பொருள் அருள் அருணாசலா

வைதலை வாழ்த்தா வைத்து அருட்குடியா வைத்து எனை விடாது அருள் அருணாசலா - 100

அம்புவில் ஆலிபோல் அன்பு உரு உனில் எனை அன்பாக் கரைத்து அருள் அருணாசலா

அருணை என்று எண்ண யான் அருள் கண்ணி பட்டேன் உன் அருள்வலை தப்புமோ அருணாசலா

சிந்தித்து அருள்படச் சிலந்திபோல் கட்டிச் சிறையிட்டு உண்டணை அருணாசலா

அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு அன்பன் ஆயிட அருள் அருணாசலா

என்போலும் தீனரை இன்புறக் காத்து நீ எந்நாளும் வாழ்ந்து அருள் அருணாசலா

என்புருகு அன்பர்தம் இன் சொற்கொள் செவியும் என் புன் மொழி கொள அருள் அருணாசலா

பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப் பொறுத்து அருள் இஷ்டம் பின் அருணாசலா

மாலையளித்து அருணாசல ரமண என் மாலை அணிந்து அருள் அருணாசலா - 108

அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலம் வாழி அன்பர்களும் வாழி
அக்ஷர மணமாலை வாழி.
 
Via தமிழறிவு பிளாக்