தாய்மைக்கால பராமரிப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:45 | Best Blogger Tips


தாய்மை அடைந்த பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான எளிய தீர்வுகளை, அறிவியல் வளர்ச்சியடையாத அந்த கால கட்டத்தில் சித்தர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கின்றனர்.

"
பிலமாக முதல்மாதங் கெர்ப்பமாகிற்
பெண்வயிறு நொந்திட்டால் மருந்து கேளு
சிலைநுதலே சந்தனமு மிலாமிச் சோடு
சேர்த்து நீ சமன் பாலில் கரைத்துக் கொள்ள
விலகாமல் ஆரோகங்கள் வயிறு நொந்தால்
வெள்ளோத்திரம் நெய்தல் கிழங்கு மஞ்சிட்டி
துளையாதே நீயரைத்து பாலில் கொள்ள
சுகமாகு மூன்றாந் திங்கள் கேளே"

-
அகத்தியர் -

தாய்மை அடைந்த முதல் மாதத்தில் வயிறு வலித்தால், சந்தனம் மற்றும் இலாமிச்சை வேரைச் சமனளவு சேர்த்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும். வலி நீங்காது இருப்பின், வெள்ளி லோத்திரம், நெய்தல் கிழங்கு, மஞ்சிட்டி, இவற்றை சேர்த்தரைத்து பாலில் கொடுக்க குணமாகும்.

மூன்றாம் மாதத்தில் வயிறு வலித்தால் சீரகம், தாமரை வளையம், கச்சேலம், சந்தனம் இவற்றை பாலில் அரைத்துக் கொடுக்க குணமாகும்.

நான்காம் மாதத்தில் வயிறு வலித்தால் நெருஞ்சி வேருடன் வாழைக்கட்டை, தாமரை, நெய்தல்வேர், சந்தனம் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.

ஐந்தாம் மாதத்தில் தோன்றும் சூலை வலிக்கு சந்தனம், நெய்தல்வேர் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.

ஆறாம் மாதத்தில் ஏற்படும் வயிறு வலிக்கு காட்டிலுள்ள விளாங்காயின் சாற்றையும், நெய்தல் வேரையும், இடித்து சக்கரை, பால் கலந்து கொடுக்க குணமாகும்.

எட்டாம் மாதத்தில் வரும் வலிக்கு காரையிலை, சந்தனம், வெட்டிவேர், திப்பிலி ஆகிய மூலிகைகளை அரைத்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.

இவை மட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தை அழகாகவும், நீடித்த ஆயுளுடனும், திடகாத்திரமாகவும் பிறக்க பல்வேறு வழிமுறைகளை சித்தர்கள் அருளிச் சென்றுள்ளனர்.

அடுத்த பதிவில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் முறையினையும், குழந்தை பிறக்கும் தேதியை கணிப்பதையும் காணலாம்.