உருவ வழிபாட்டில் கல்லை ஏன் வணங்க வேண்டும்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:51 | Best Blogger Tips
ஒரு முறை சுவாமி விவேகானந்தர் 'ஆல்வார்' சமஸ்தானத்து அரசரைச் சந்தித்தார். "சுவாமி, எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. மண்ணையும், மரத்தையும், கல்லையும், கட்டையையும் ஏன் வணங்க வேண்டும்?" என்று ஏளனக் குரலில் கேட்டார் அரசர். இந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல், சுவரில் தொங்கிய ஒரு படத்தை எடுத்து வரும்படி திவானிடம் சொன்னார் விவேகானந்தர்.

படத்தைக் கொண்டு வந்த திவானிடம், "இது யாருடைய படம்?" என்றார். "அரசரின் படம்" என்றார் திவான்.  அவரிடம், "இந்தப் படத்தின் மேல் எச்சில் துப்புங்கள்" என்றார் சுவாமி. அரசரும், திவானும் அதிர்ந்தனர்!
"இது அரசரின் படம்தானே, அரசர் அல்லவே! எலும்பும், சதையும், ரத்தமும் இல்லாத வெறும் காகிதப் படத்தின் மீது ஏன் காறி உமிழத் தயங்குகிறீர்கள்? இந்தப் படத்தில், அரசரை நீங்கள் தரிசிக்கிறீர்கள். ஆனால், இந்தப் படமே அரசர் இல்லை என்பதை அறிவீர்கள்.
மக்களும் அப்படித்தான். மண்ணிலும் கல்லிலும் வெவ்வேறு வடிவங்களில் அவர்கள் கடவுளைக் கண்டு வழிபடுகின்றனர்!" என்று விளக்கினார் சுவாமி விவேகானந்தர்.