உங்க குழந்தைகளுக்கு எப்படி சேமிக்க கற்றுத் தருவது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:48 | Best Blogger Tips
மேட்டருக்குள் நுழையும் முன்பு, தயவு செய்து பேனாவை எடுங்கள். கீழே உள்ள நான்கு கேள்விகளுக்கு உங்கள் மனதில் தோன்றிய பதிலை 'டிக்' செய்யுங்கள்.
கேள்வி 1. உங்கள் 10 வயது மகள், பிறந்தநாளுக்கு அத்தை கொடுத்த 100 ரூபாயைத் தொலைத்துவிட்டாள்.  நீங்கள் என்ன செய்வீர்கள்?
A. காசு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவேன்.    
B. என் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் கொடுத்து குழந்தையை சமாதானப் படுத்துவேன்.    
C. என் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் தந்துவிட்டு, அதற்குப் பதிலாக இன்னின்ன வேலை (ஹோம் வொர்க், வீட்டு வேலை) செய்யவேண்டும் என்று கண்டிஷன் போடுவேன்.    
கேள்வி 2. உங்கள் 15 வயது மகன், ரொம்ப நாளாக பணம் சேமித்து வருகிறான். இப்போது 2,000 ரூபாய் போட்டு ஒரு மொபைல் போன் வாங்க ஆசைப்படுகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்?
A. அவனுடைய காசுதானே என்று நினைத்து, அவன் வாங்க விரும்புவதை வாங்க அனுமதிப்பேன்.      
B என்னுடைய பழைய மொபைல் போனை அவனுக்குத் தருவேன்.  
C. சேமிப்பை எப்போதும் தொடவே கூடாது என்று சொல்வேன்.      
கேள்வி 3.  உங்கள் 16 வயது மகனுக்கு டிரெஸ் வாங்கவேண்டும். 'இந்தா பணம், உனக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு வா' என்று சொல்லி அனுப்புகிறீர்கள். அவன் அவனுக்குப் பிடித்த, ஆனால்
கொஞ்சமும் நன்றாக இல்லாத துணிமணியை வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்?
A. அந்த உடைகளைப் போட்டுக்கொள்ள அனுமதிப்பேன். ஆனால், பணத்தை எப்படி கவனமாகப் பயன்படுத்தவேண்டும், எப்படி தரமான பொருளில்தான் போடவேண்டும் என்ற அறிவுரையுடன்.  
B. 'உன்னை நம்பி பணத்தைத் தரவேகூடாது' என்று சொல்லி புலம்புவேன்.
C. அவனுடன் கடைக்குச் சென்று துணிகளை மாற்றிக் கொண்டு வருவேன்.
கேள்வி 4. உங்கள் 7 வயது மகளுடன் கடைக்குச் செல்கிறீர்கள். அவள் பார்க்கும் பொருளை எல்லாம் வாங்கச் சொல்லி அழுது அடம் பிடித்து 'சீன்' போடுகிறாள்.
A. அவசர அவசரமாக அவள் கேட்டவற்றை வாங்கித் தந்து இடத்தைக் காலி செய்வேன்.  
B. 'ஒண்ணே ஒண்ணுதான் வாங்கித் தருவேன். இந்தக் காசுக்குள்தான் வாங்கித் தருவேன்' என்று சொல்லி வாங்கித் தருவேன்.  

C. எவ்வளவு வேண்டுமானாலும் அழட்டும் என்று சட்டை செய்யாமல் ஷாப்பிங்கை முடிப்பேன்.
நீங்கள் டிக் செய்த விடைகளுக்கு எத்தனை மார்க் (0, 1 அல்லது 2) என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி போடவும்.
கேள்வி 1: a.1 b.0 c.2 கேள்வி 2:a.2 b.0 c.1 கேள்வி 3:a.2 b.0 c.1 கேள்வி 4: a. 0 b. 1 c. 2
நீங்கள் எத்தனை மார்க் எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்தாச்சா? இனி உங்கள் மார்க் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
0-3 மார்க்: இப்படியே போய்க்கொண்டிருந்தீர்களானால் உங்கள் குழந்தைகள் கல்யாணம் ஆனபின்னால்கூட ஆத்திர அவசரத் துக்கு அப்பாதான் காசு தரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
4-5 மார்க்: ஓகேதான், இன்னும் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.
6-க்கும் மேலே: சரியான பாதையில் போகிறீர்கள். உங்கள் குழந்தைகளை காசு விஷயத்தில் சூப்பர் ஸ்மார்ட் ஆக்கிவிடுவீர்கள்.
கேள்வி 2-க்கான ஒரு சிறு விளக்கம். சேமித்து வைத்து விரும்பிய பொருள் வாங்கினால் தங்கள் சேமிப்பில் வாங்கியது இது என்று பெருமிதம் அடைவார்கள். மேலும், சேமிக்க உற்சாகம் வரும். பணத்தின், உழைப்பின் அருமையும் புரியும்.
நம் கஷ்டம் எல்லாம் நம்மோடு போகட்டும்; நம் குழந்தைகள் வாழ்க்கையாவது நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்காத பெற்றோர்களே இப்போது இல்லை. நமக்குக் கிடைக்காத வாய்ப்புகள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு முக்கியமாகச் செய்யவேண்டியது ஒன்று உண்டு. அது, குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுத் தருவது.
'எல்லாரும் காலங்காலமாகச் சொல்றது தானே? இதுல என்ன புதுசா இருக்கு? சொல்றது எல்லாருக்கும் ஈஸி, புள்ளைங்க கிட்ட சொல்லிப் பாருங்க அப்பத்தான் தெரியும் எவ்ளோ கஷ்டம்னு' என்று அலுத்துக்கொள்கிறீர்களா? அப்ப, இந்தக் கட்டுரை கண்டிப்பாக உங்களுக்காகத்தான்.
பிள்ளைகளுக்கு சேமிப்புப் பழக்கம் வருவதற்கு பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, அவர்களே விரும்பிச் செய்கிற மாதிரி சேமிக்கும் பழக்கத்தை அவர்களிடம் எப்படி கொண்டுவருவது? எனக்குத் தெரிந்த வழிகளைச் சொல்கிறேன். பின்பற்றிப் பாருங்கள், நிச்சயம் மாற்றம் தெரியும்.

உண்டியலை வாங்கித் தாங்க!
குழந்தைக்கு ஆறு வயதானவுடன் ஓர் உண்டியலை வாங்கிக் கொடுங்கள். சேமிக்கவேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி, உண்டியலில் காசு போட பழக்குங்கள். தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று எப்போது யார் காசு தந்தாலும் முதலில் ஒரு பகுதியை உண்டியலில் போடப் பழக்குங்கள். எப்போதும்
Savings first, Spending next தான்! கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் ஒரு பகுதியைச் சேமிக்கவேண்டும்; மீதியை செலவு செய்ய வேண்டும். இது சின்ன வயதிலேயே மனதில் பதிந்துவிட்டால் ஈஸி! எப்படி சின்ன வயதிலேயே பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், அபாகஸ் க்ளாஸ் அனுப்புகிறோமோ அப்படியே சேமிக்கும் பழக்கத்தையும் ஆரம்பித்துவிடவேண்டும். சின்ன வயதில் ஆரம்பித்துவிட்டால் அது தன்னிச்சை செயல்போல ஆகிவிடும். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். தொட்டில் பழக்கம்... பழமொழி தெரியும்தானே!
வங்கிக் கணக்கை ஆரம்பியுங்க!
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கு ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்துவிடுங்கள். இப்போது குழந்தைகளுக்கான சேவிங்க்ஸ் அக்கவுன்ட் எல்லா வங்கிகளிலும் கிடைக்கிறது. பெற்றோரை கார்டியனாகக்கொண்டு மைனர் குழந்தைகளுக்கு அக்கவுன்ட் ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு செக்புக் வசதி, பாஸ்புக், 10 வயதுக்கு மேல் என்றால் ஏ.டி.எம். கார்டு வசதி என்று பெரியவர்களைப்போல் அவர்களுக்கும் ஒரு 'செட்' கிடைக்கும். விளையாட்டாக உண்டியலில் சேர்த்தது போக, பேங்கிலேயே அக்கவுன்ட் இருப்பது குழந்தைகளை சேமிப்பு விஷயத்தில் சீரியஸ் ஆக்கும். தங்கள் பெயரில் பேங்கில் இருந்து அடிக்கடி லெட்டர் வீட்டுக்கு வருவது, பேங்குக்குப் போய் பணம் கட்டுவது இதெல்லாம் அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும். மேலும், சேமிக்கத் தூண்டும்.

வங்கிக்கு அழைச்சுகிட்டுப் போங்க!
ஆறாம் வகுப்பு தாண்டிய குழந்தைகள் எனில், நீங்கள் வங்கிக்குப் போகும்போது அவர்களையும் முடிந்தவரை கூடவே அழைத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை குலதெய்வம் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுபோய் சாமி கும்பிடப் போகிற மாதிரி, மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுகிற மாதிரி, வங்கிக்கும் அழைத்துச் செல்லுங்கள். நம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா? நம் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா? வங்கியில் எங்கே பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, செக் போடுவது... இப்படி எல்லா விஷயத்தையும் சொல்லித் தந்து, அவர்களைவிட்டே செய்யச் சொல்லுங்கள். தவறு செய்வார்கள், பரவாயில்லை. அடித்தல் திருத்தல் இருக்கும், தப்பே இல்லை. தவறு செய்யாமல் யாரும் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அதனால், பொறுமையாகச் சொல்லிக் கொடுங்கள். டெபாசிட், வித்டிராவல், செக், அக்கவுன்ட், ஃபிக்ஸட் டெபாசிட், வட்டி போன்ற வார்த்தைகள் எல்லாம் பழகட்டும். எப்படி புகார் செய்வது என்று உங்களை கவனித்து தெரிந்து கொள்வார்கள்.
இதெல்லாம் தெரிந்துகொண்டால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். அனாவசிய பயம் குறையும். நம் பணத்தை வங்கியிடம் தருகிறோம். அவர்கள் சேவை திருப்தியாக இருந்தால்தான் தொடருவோம். இதில்  பயப்படவேண்டிய அவசியம் என்ன என்று தைரியம் வரும். குழந்தையாக வெகுளியாக இருந்தவர்கள் உலக நடப்புகள் எல்லாம் தெரிந்தவர்கள் ஆகிவிடுவார்கள்.  

நிதி நிலைமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
வீட்டு நிதி நிலைமையைப் பத்தி அவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். 'நீ சின்னப் பையன், உனக்கு ஒண்ணும் தெரியாது, பெரியவங்க பேசும்போது குறுக்கே வராதே' என்று சொல்லாதீர்கள். வருமானம் எப்படி எல்லாம் வருகிறது, மாதச் செலவுகள் என்ன? எதிர்காலச் செலவுகள் என்னென்ன என்று அவர்களுடன் விவாதியுங்கள். எதிர்பாராத திடீர் செலவுகளும் நிறையவரும்; சமாளித்தாக வேண்டும் என்பதைப் புரியவையுங்கள்.  
அவர்களை சமமாக மதித்துப் பேசுகிறீர்கள் என்றாலே ரொம்ப பெருமையாக உணர்வார்கள். பொறுப்பு உணர்வு அதிகரித்துவிடும். தங்களையும் குடும்பத்தில் முக்கியமான டீம் மெம்பராக நினைத்து தன்னால் முடிந்த பங்குக்கு உதவி செய்வார்கள். அப்படி என்றால்? ஃபேன், லைட்டை நிறுத்தாமல் அறையைவிட்டு வெளியே போவது குறையும். வீண்செலவு செய்வது குறையும். நம்மையும் வீண்செலவு செய்யவிடமாட்டார்கள். சில சமயம் நம் மனம் அலைபாய்ந்து சில பொருட்களை வாங்க முயலும்போது தடுப்பார்கள். நமக்கே 'தகப்பன் சாமியாக' மாறி நம் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். நல்ல 'டீம் வொர்க்' குடும்பத்தில் அமையும். சந்தோஷம் பெருகும்.  
முடிவாக, நான் சொல்ல விரும்புவதெல்லாம், இந்தக் காலத்து குழந்தைகளை கம்மியாக எடைபோடாதீர்கள்!  அவர்கள் படுஸ்மார்ட். நாம் கோடு போட்டால் ரோடே போடுவார் கள். அவர்களிடம் பொறுப்பு தந்து பாருங்கள்; தாங்களும் கற்றுக்கொண்டு புதுப்புது விஷயங் களைத் தேடிப் படித்து நமக்கும் சொல்லித் தருவார்கள்.  
நீங்கள் சிறுகச் சிறுக சேமித்து 20 லட்சம் ரூபாயைச் சேர்த்து உங்கள் குழந்தை கையில் கொடுப்பதைவிட நல்லது, அவர்களை சின்ன வயதில் இருந்தே காசு விஷயத்தில் உஷாராக இருக்க பழக்குவது. சேர்த்து வைத்த சொத்து அழிந்துபோகும். ஆனால், கல்வி அழியாது. சேமிக்க பழக்குங்கள். பணம் பற்றிய அறிவை அவர்களிடம் ஏற்படுத்தினால், அவர்களைப் பற்றி ஆயுசு முழுக்க கவலைப்பட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது!