'என் தேக ஆரோக்கியம்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:24 | Best Blogger Tips
'வாழ்க்கைல வரம் எதுனா கிடைக்காதாங்கறதுதான் எல்லாரது எதிர்பார்ப்பும், பிரார்த்தனையும்! என்னைப் பொறுத்தவரைக்கும் வாழ்க்கைங்கறதே வரம்தான்; அதை எப்படிப் பயன்படுத்திக்கிறோம்கறதுதான் முக்கியம். என்ன சொல்றீங்க?'' என்று கேட்டுவிட்டு, மென்சிரிப்பை உதிர்க்கிறார் அனிதா குப்புசாமி. ''தோள்ல ஆட்டைப் போட்டுக்கிட்டு, ஊரெல்லாம் தேடினகதையா, எல்லாத்தையும் நம்மகிட்டயே வைச்சுக் கிட்டு, நம்ம செல்போன்ல பதிஞ்சிருக்கிற நம்பர் அத்தனைக்கும் போன் போட்டு, 'ஊர்ல நல்ல ஜிம் சென்டர் எங்கே இருக்கு?'னு கேட்டுக்கிட்டிருக்கோம்'' என்று சிரிப்பவரிடம் உடலைப் பேணுகிற ரகசியத்தைக் கேட்டோம்.
அந்த ஏரியாவே அதிரும்படி சிரித்த அனிதா, ''இதுல ரகசியம் என்ன வேண்டிக்கிடக்கு?! மிடில் ஏஜ் வந்துட்  டாலே, கூடவே பிரஷரும் சர்க்கரையும் வந்துடும்னு சொல்லுவாங்க. நானும் ஜிம்முக்குப் போனேன். அங்கே சொல்லிக் கொடுத்ததையெல்லாம் பார்த்தப்போ, 'அட... இதையெல்லாம் வீட்லயே செய்யலாமே'னு தோணுச்சு. ஒருவிதத்துல ஆண்களைவிட பெண்கள் பாக்கியசாலிகள். ஏன்னா, தினமும் வீட்டுல அவங்க செய்ற வேலைகளைப் போல மிகச் சிறந்த உடற்பயிற்சிகள் எதுவுமே இல்லை.
கச்சேரி, ரிக்கார்டிங்னு அடிக்கடி வெளியூர் போகவேண் டியிருக்கிறதால, குழந்தைங்களைப் பாத்துக்கறதுக்கும், அவங்களுக்குப் பேச்சுத் துணைக்காகவும் ரெண்டு மூணு பேரை வேலைக்கு வைச்சிருக்கோம். ஆனாலும், வீட்ல இருக்கிற நேரங்கள்ல, ஒரு நிமிஷம்கூடச் சும்மாவே இருக்க மாட்டேன்.
மனசு கடவுள் குடியிருக்கிற கோயில்; அது சுத்தமா இருக்கணும். அதேபோல, நாம குடியிருக்கிற வீடும் சுத்தமா இருக்கணும். வீட்டுச் சுத்தத்துக்கும் மனசு சுத்தத்துக்கும் நெருங்கின தொடர்பு உண்டு. இந்தச் சுத்தம் செய்ற வேலைங்கறது, கிட்டத்தட்ட எக்சர்ஸைஸ் மாதிரிதான்!
என்னிக்காவது காலைல, அரக்கப்பரக்க ஓடவேண்டிய தேவை இருக்கலேன்னா... பக்கெட்ல தண்ணி எடுத்துட்டு, வீடு முழுசையும் மெழுகித் துடைக்க ஆரம்பிச்சிடுவேன்.  குனியாம, முதுகு வளையாம சுலபமா சுத்தம் பண்றதுக்கு மாப் ஸ்டிக் இருக்கு. ஆனா, அதைப் பயன்படுத்தறது வேஸ்ட்! குத்துக்காலிட்டு, குனிஞ்சு, வளைஞ்சு, நிமிர்ந்து, உட்கார்ந்து ஒவ்வொரு இடமா துடைச்சுட்டு, தள்ளி நின்னு பாத்தா... தரையெல்லாம் சுத்தமாகியிருக்கும்; உடம்பெல்லாம் தக்கையாகியிருக்கும்!'' என எதுகை மோனையுடன் அழுத்தம் கொடுத்துப் பேசுகிறார் அனிதா.
''சைக்கிள், பைக், கார்னு எல்லா வண்டிகளின் உதிரி பாகங்களுக்கும் 'கிரீஸ்' தடவுவாங்க, தெரியுமா? அதுமாதிரி நம்ம உடம்புல உள்ள ஒவ்வொரு இணைப்புப் பகுதிகளுக்கும் கிரீஸ் தேவை. எங்க அகர்வால் குடும்பத்துல, முதல் நாள் சப்பாத்தியைப் போட்டு, மறுநாள் சாப்பிடுறது வழக்கம். அந்தச் சப்பாத்தியில மூணு ஸ்பூன் வெண்ணெயைத் தடவிச் சாப்பிட்டா, கை- கால் மூட்டுப் பகுதிகளுக்கு அவ்வளவு நல்லது. வெண்ணெய் கொலஸ்ட்ரால் ஆச்சேனு என் கணவர்கூட ஆரம்பத்துல பதறினார். ஆனா, அளவா சாப்பிடுற வரைக்கும் எதுவுமே பிரச்னை தராது.
அப்புறம், சின்ன ஏணியில் ஏறி ஃபேன், ஷோ கேஸ்னு உசரத்துல இருக்கிற பொருள்களையெல்லாம் துடைக்கும் போது, அது கைகளுக்கும் தோள்களுக்கும் நல்ல பயிற்சியா ஆயிடுது. உடம்பு அதிகம் பெருத்திருச்சு, வயசு அதிகம் ஆயிடுச்சுங்கறதை, கைகள்ல மணிக்கட்டுப் பகுதிகளும், கழுத்துச் சதையும், வயிறும் காட்டிக் கொடுத்துடும். இப்படி உடம்பை எக்கி, கைகளைத் தூக்கி, அண்ணாந்து பார்த்து வேலை செய்யும்போது, உடம்புல சதை போடுறதுக்குச் சான்ஸே இல்லை.
துணி துவைக்கறது மட்டும் என்னவாம்? நிக்கிறோம்; கால்களுக்குப் பயிற்சி. குனியறோம்; முதுகுக்கு வலு.  துணியை அலசிப் பிழியறோம்; விரல்களுக்கு பலம்!
எல்லாத்தையும் முடிச்சுட்டு, அக்கடான்னு வந்து நின்னா, வியர்வை மழையில தெப்பமா நனைஞ்சு போயிருப்பேன். அடுத்து, மொட்டை மாடிக்குப் போவேன். பீர்க்கங்காய், வெற்றிலை, பூக்கள்னு பெரிய ஏரியா அது. 'என்ன, நல்லாருக்கீங்களா?'னு நலம் விசாரிச்சபடியே, செடி-   கொடிகளுக்குத் தண்ணி ஊத்துவேன். மனசு லேசாயிடும். அசதி, கவலை எல்லாமே காணாமப் போயிடும். அப்புறம், ஜில்லுனு ஒரு குளியல்; ஜம்முனு ஒரு தியானம்!
நம்மளை இயக்கற மனசுதானே எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம்! அதைக் கட்டிப் போடுற வித்தைதான் தியானம். தவிர, அனிதாவை அனிதாவே தெரிஞ்சுக்கிற இடமும் அதுதான்! அலை அலையா வர்ற எண்ணங்களைக் கொஞ்சம் கொஞ்சமா தடுத்து நிறுத்திட்டா, மனசுல 'ஹோ'ங்கற இரைச்சல் இருக்காது. அதுக்கு முன்னாடி, பிராணாயாமம்.
நமக்கே தெரியாம நாம இயங்கிட்டிருக்கிற, நம்மை இயக்கிட்டிருக்கிற விஷயம்- மூச்சு விடுறது! அது நமக்குத் தெரியாமலே இருக்கிற வரைக்கும் உடம்புல ஒரு குறையும் இல்லைன்னு உறுதியா நம்பலாம். அப்படி மூச்சு விடுறது, கீழ் மூச்சு, மேல் மூச்சு, பெருமூச்சுனு விதம்விதமா விடுறது, நமக்கும் நம்மளச் சுத்தி இருக்கிறவங்களுக்கும் தெரிஞ்சா... நம்ம வண்டில ஏதோ கோளாறுன்னு அலர்ட் ஆகிக்கணும்.
மூச்சு சீரா இருக்கிறதுக்கு, பிராணாயாமம் பண்றது நல்லது. இதெல்லாம் தொடர்ந்து பண்ணினா... மூச்சிருக்கும் வரைக்கும் உடம்புல ஒரு தொந்தரவும் இல்லாம, நிம்மதியா வாழலாம்.
மனித வாழ்க்கை நிச்சயம் நமக்குக் கடவுள் கொடுத்த வரம்தான்! அதைச் சாபமா மாத்திக்கிட்டு அல்லாடுறது நாமதான். இனிமேலாவது, அபூர்வமா கிடைச்சிருக்கும் இந்த வாழ்க்கை வரத்தைப் பேணிப் பாதுகாப்போம்!'' என அனிதா சொல்லும்போதே அவரது குரலில் தொனிக்கிறது, வாழ்வை வரமாக்கிக்கொண்டிருக்கும் குதூகலம்!