நவகிரகங்கள் - 7. சனிபகவான் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:31 | Best Blogger Tips
Picture


  7. சனி    
சனி கிரகம் சூரியனுக்கு சுமார் 88,66,000 மைல்கள் அப்பால் இருந்து சூரியனை சுற்றி வருகிறது. ஒரு தடவை சுரியனை சுற்றி வர 29 வருடகாலம் ஆகிறது. சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். அளவற்ற துன்பங்களுக்கு இவரை காரணம் ஆகிறார். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார். சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது அந்த அளவுக்கு நன்மையை தருவார். சனிபகவானுக்கு 3,7,10 என்ற பார்வை உண்டு. இரவில் வலிமை,எருமை,யானை,அடிமை வாழ்வு,எண்ணெய்,வீண்கலகம்,கள்ளத்தனம்,கருநிறமுள்ள தானியம்,இரும்பு,கல்,மண்,சுடுகாடு, மதுகுடித்தல்,கஷ்டகாலம்,சிறைவாழ்வு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். சனிபகவான் மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி  நட்சந்திரங்களுக்கு நாயாகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம்  பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி  வழங்குவார். சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும்  இடமான 3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். வாகனம் காகம்.  கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு. ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில்  இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும்  பெறவாய்ப்பு உண்டு. ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும்  வாய்ப்பு உண்டு. வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம்,  பெரிய இயந்திர தொழிற்சாலை, தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். சனிபகவான் பலம்  பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும்  வாரி வழங்குவார்.
                                                    சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம். எண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. கருமை இவனுக்கு உகந்த நிறம். இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான். மேற்குத்திசை சனிக்கு உரியது. திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். சனிக்கு அதி தேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். காகமே சனியின் வாகனம். சனி பகவான் படைக்கலன்கள் ஏதுமின்றி பரமானந்த சொரூபமாக விளங்குகிறார். சனித்தொல்லையால் வாடும் எவரும் திருநள்ளாறை அடைந்து நளதீர்த்தத்தில் மூழ்கி சனி பகவானின், பாதம் பணியலாம். சனீஸ்வர பகவானுக்கு கருங்குவளை மாலை அணிவித்து நல்லெண்ணை தீபம் ஏற்றி வந்தால் வறுமைகள், துன்பங்கள் நீங்கி தொழில் சிறப்புரும்
திருநள்ளாறு
இறைவர் திருப்பெயர்      : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்
இறைவியார் திருப்பெயர்   : போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை
தல மரம்         : தர்ப்பை

தீர்த்தம்                       : நளதீர்த்தம், சிவகங்கை
வழிபட்டோர்              : திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர்,  அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள்,  வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி
தேவாரப் பாடல்கள் :
1. சம்பந்தர் -
1. பாடக மெல்லடிப் பாவை, 

2. போகமார்த்த பூண்முலையாள், 

3. ஏடுமலி கொன்றையர,
 
4. தளிரிள வளரொளி.
2. அப்பர்   -
1. உள்ளாறாததோர் புண்டரிகத் திரள், 

2. ஆதிகண்ணான் முகத்திலொன்று.

3. சுந்தரர்  -          செம்பொன் மேனிவெண் ணீறணி.
தல வரலாறு இது, நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான். திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது.
சிறப்புக்கள் இது, முசுகுந்தச் சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகராஜர்-நகவிடங்கர்;நடனம்-உன்மத்த நடனம்). இது, சனி தோஷம் நீங்கும் சிறப்புடைய தலம். இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிபகவான் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற மேலே குறிக்கப்பட்டுள்ள பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்.. இது,தருமை ஆதீனக் கோவிலாகும். சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.
அமைவிடம்: மாநிலம் : தமிழ் நாடு
இது, பேரளம் - காரைக்கால் இரயில் பாதையில் உள்ள நிலையமாகும். இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது. காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
உற்சவர்
அம்மன்/தாயார்:பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
தல விருட்சம்:தர்ப்பை
தீர்த்தம்:நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன.
ஆகமம்/பூஜை
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருநள்ளாறு
ஊர்:திருநள்ளாறு
மாவட்டம்:காரைக்கால்
மாநிலம்:புதுசேரி
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தேவாரபதிகம்
போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே. -திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 52வது தலம். 
திருவிழா: மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
தல சிறப்பு:இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
(மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி) சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது.இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.
காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம். புதுச்சேரி-609 606.
இது சிவத்தலமாயினும் சனிபகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தல விநாயகர் சொர்ணவிநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். திருமால், பிரமன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்,நளன் முதலியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம். கோயிலின் தென்புறம் இடையனார் கோயில் உள்ளது. இங்கு இடையன், அவன் மனைவி, கணக்கன் ஆகியோர் உருவங்கள் உள்ளன. சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தையில்லாமல் இருந்த வேளையில் அவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார். இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான். ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது, முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் அவனை வென்றான் இந்திரன். இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியைப் பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான். அதே போல மேலும் ஆறு மூர்த்திகளைப் படைத்தான். அதில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது "தியாகவிடங்கர்' என வழங்கப்படுகிறது. தியாகவிடங்கருக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது. தியாகவிடங்கரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
வாசல்படிக்கு மரியாதை கொடுங்கள் : திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும், முதல் படியை தொட்டு வணங்க வேண்டும். ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை. நளன் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததுமே, நியாயத்துக்கு புறம்பாக செயல்பட்டதற்காக இறைவனிடம் தண்டனை அடைய வேண்டி வருமோ என்று பயந்த சனீஸ்வரன் வாசல்படியோடு நின்று, அவனை விட்டு நீங்கி விட்டதாக சொல்வர். ஆனால், இறைவன் சனீஸ்வரனின் நிலையைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார்.
தீர்த்தங்கள் : திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்பதே நிஜம். தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன. ஒரு காலத்தில் உலகிற்கு ஏதேனும் கேடு நேர இருக்குமானால் கங்கா, பிரம்ம மற்றும் நள தீர்த்தங்களின் நீர் சிவப்பாக மாறிவிடுமாம். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தகுந்த பரிகார பூஜைகள் செய்து மக்கள் தப்பித்திருக்கிறார்கள் என்கின்றனர்.
சனீஸ்வரனை வணங்கும் முறை : காலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பூர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும். பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும். அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.
தங்கக்கவசம் :சனிப்பெயர்ச்சி மற்றும் முக்கிய காலங்களில் சனீஸ்வரன் தங்க காக வாகனத்தில் தங்கக்கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். சனீஸ்வரனைக் கண்டால் எல்லாருமே ஓட்டம் பிடிக்கும் நிலைமையில், இங்கே தங்கக்கவச சனீஸ்வரனைத் தரிசிக்க கூட்டம் அலை மோதும். தமிழகத்தை தவிர கன்னட மக்களுக்கு சனீஸ்வரன் மீது நம்பிக்கை அதிகம். எனவே, தமிழ் மக்களுக்கு ஈடாக கர்நாடக மாநில மக்களும் இங்கு அதிக அளவில் வருகிறார்கள்.
சனீஸ்வரன் வரலாறு : சூரியனுக்குரிய மனைவியரில் ஒருத்தி உஷா. இவள் சூரியனின் வெப்பம் தாளாததால் தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில் தங்கியிருந்தாள். சாயாதேவிக்கு சனீஸ்வரன் பிறந்தார். பின்னர் உண்மை தெரிந்தது. சூரியன் தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார். அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை வெறுத்து ஒதுக்கி விட்டார். சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார்.
சனி-அறிவியல் தகவல் : இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.
சனீஸ்வரனுக்கு உரியவை
ராசி-மகரம், கும்பம்
திசை-மேற்கு அ
திதேவதை-எமன்
நிறம்-கருப்பு
வாகனம்-காகம்
தானியம்-எள்
பால்-அலி
நட்பு-புதன்,சுக்கிரன்,இராகு.கேது.
பகை- சூரியன்,சந்திரன்.செவ்வாய்
சமம்-குரு
திசைகாலம்-19 வருடங்கள்
மலர்-கருங்குவளை
நட்சத்திரங்கள்- பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி.
மலர்-கருங்குவளை
வஸ்திரம்-கருப்பு ஆடை
ரத்தினம்-நீலமணி
நிவேதனம்-எள்ளுப்பொடி சாதம்
சமித்து-வன்னி
உலோகம்-இரும்பு.
தல வரலாறு:நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை. ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.
ஒதுங்கிய நந்தி : இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான். கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார்.
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி. சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது) 
சனி பகவான்  -  ஒரு சிறந்த பரிகாரம்:
ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம். எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார்.  ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.  உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.
ஒவ்வொரு வீட்டிலும் சனி இருந்தால் என்ன பலன் 
சனி 1 ஆம் வீட்டில்  இருந்தால் மந்த புத்தி இருக்கும். வறுமை இருக்கும். துணைவர் மூலம் பிரச்சினை உருவாகும். நண்பர்களிடத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளைய சகோதர சகோதரிகளிடத்தில் சுமுக உறவு இருக்காது. வாழ்வின் பின்பகுதி நன்றாக இருக்கும். இளம் வயதில் மூத்த வயதுபோல் தோற்றம் இருக்கும். சில நபருக்கு திருமண வாழ்வில் பிரச்சினைகள் 1 ஆம் வீட்டில் சனியால் வருகிறது.
சனி 2 ஆம் வீட்டில்  இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்கும் தாயாரின் உடல் நலம் கெடும். குழந்தை பாக்கியம் இருக்காது. ஆயுள் நன்றாக இருக்கும். தார தோஷத்தை ஏற்படுத்துவார்.வீட்டில் எப்போதும் ஒரு வெறுப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். திருமணம் ஆனாலும் தொழில் விசயமாக துணையை விட்டு பிரிந்து சென்று வெளியில் தங்கிவிடுவார். வீட்டின் தொடர்பு மிக குறைவாகதான் இருக்கும்.
சனி 3 ஆம் வீட்டில்  இருந்தால நல்ல தைரியம் இருக்கும். சகோதர்கள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் பகையாக இருப்பார். இந்த வீட்டில் சனி இருப்பது நல்லது தான் ஆனால் குழந்தை பாக்கியம் தள்ளி போகும். அண்டை அயலார் வீட்டுடன் சண்டை சச்சரவு இருக்கும். இசையின் மேல் அவ்வளவு ஆர்வம் இருக்காது. கடித போக்குவரத்தால் வில்லங்கம் தான் வரும். பயணம் செல்லும்போது அடிபடும்.
சனி 4 ஆம் வீட்டில்  இருந்தால் தாயாரின் உடல்நிலை கெடும். சொத்துக்கள் நாசம் ஆகும். வயிற்று வலி ஏற்படும். உடலில் முதுமை தெரியும். பழைய வாகனங்கள் வாங்கினால் யோகம் உண்டு. சிலபேர் பழைய வாகனங்கள் வாங்கி விற்க்கும் தொழில் செய்யலாம். சிலபேர் வீட்டை இடித்து தரும் தொழில்கள் செய்வார்கள். நான்காம் வீடு தங்கி இருக்கும் வீட்டை குறிப்பதால் பழைமையான வீட்டில் தங்கி இருப்பார்கள்.
சனி 5 ஆம் வீட்டில்  இருந்தால் கடுமையான புத்திர தோஷம் ஏற்படும்.வருமான குறைவு ஏற்படும். மனதில் நிம்மதி இருக்காது. ஐந்தில் சனி இருப்பவர்கள் வில்லங்க பார்ட்டியாக இருப்பார்கள. உணர்ச்சி வசப்படகூடியவர்கள். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தை குறிப்பதால் புத்திர தோஷம் ஏற்படும். திருமணத்திற்க்கு முன்பும் பின்பும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அப்பொழுது தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்தவுடன் வருடம் ஒருமுறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும். சில நபர்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். தங்கள் பிள்ளைகளுக்கு கொள்ளி போடுவார்கள் அவர்களின் ஜாதகங்களில் எல்லாம் ஐந்தாம் வீட்டுடன் சனி சம்பந்தப்பட்டு இருப்பார். இதற்கு தகுந்த பரிகாரம் ராமேஸ்வரம் தான். ஐந்தாம் வீடு குலதெய்வத்தை குறிப்பதால் கிராம தேவதையை வணங்கலாம்.
சனி 6 ஆம் வீட்டில்  இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். வேலை ஆட்களால் பிரச்சினை ஏற்படாது. மாமன் வீட்டுடன் சுமூகமான உறவு இருக்காது. கணவன் மனைவியுடன் சிறிய தகராறு வந்து செல்லும். பிறர் பாராட்டும் படியான காரியங்களில் இறங்கி வெற்றி அடைவார்கள். பணவரவு நன்றாக இருக்கும்.காலில் அடிபட வாய்ப்பு உள்ளது.
சனி 7 ஆம் வீட்டில்  இருந்தால் முதுமை தோற்றம் தெரியும். மர்ம பாகங்களில் முடி அதிகமாக தோன்றும்.திருமணம் தள்ளி போகும். துணைவருடன் எப்பொழும் சண்டை சச்சரவு இருக்கும். இளம்வயதில் திருமணம் நடந்தால் துணைவர் இரண்டு அமைவர்.உடம்பில் ஊனம் ஏற்படும். வறுமை இருக்கும். முகத்தில் கவலை தோன்றும். பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவார்கள். இவர்களுடன கூட்டு சேருபவர்கள் குள்ளமானவராக இருப்பார்கள். தாயாரின் உடல் நிலை கெடும்.
சனி 8 ஆம் வீட்டில்  இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டி இருக்கும். நிரம்தரமாக உடலில் நோய் இருக்கும். அதிக வாழ்நாள் இருப்பார். இறக்கும் போது மிகவும் கஷ்டபட்டு நோய்வாய் பட்டு இறப்பார். லக்கினாதிபதி ஆக இருந்து எட்டாம் வீட்டில் இருந்தால் உடல் அடிக்கடி முழு சக்தியையும் இழக்கும். அனைத்துக்கும் கஷ்டபட வேண்டி இருக்கும். சில பேர் இறப்பு சம்பந்தபட்ட தொழில்களில் இருப்பார்கள்.குழந்தை பாக்கியம் ஏற்படாது சில பேருக்கு குழந்தை பாக்கியம் தள்ளி போகும்.
சனி 9 ஆம் வீட்டில்  இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். தந்தையுடன் சண்டை சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சிலபேருக்கு காதல் திருமணம் நடைபெறும். மூத்த சகோர சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படும். நண்பர்களால் சண்டை வரும் வாய்ப்பு உள்ளது.
சனி 10 ஆம் வீட்டில்  இருந்தால் தொழில் கொடி கட்டி பறப்பார். பெரும் பணக்காரராக்குவார். சமூகத்தில் பிறர் போற்றும் படி வாழ்வார். மிக பெரும் நிறுவனத்தில் தலைமைபொறுப்பு தேடி வரும். வருமானம் போல செலவும் அதிகமாக இருக்கும். புண்ணிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சமயம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். பழைமையை விரும்புவார்கள். மனைவியிடம் சண்டை சச்சரவு இருந்து வரும்.
சனி 11 ஆம் வீட்டில்  இருந்தால் வருமானம் நிரந்தரமாக இருக்கும். தொழிலில் சிறந்து விளங்குவார். வியாபார சம்பந்தபட்ட விஷயங்களில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டவைப்பார். இளம்வயதில் நரை தோன்றும். நல்ல ஆயுள் இருக்கும். வருமானம் அதிகமாக வந்தாலும் மனதில் கவலை தோன்ற செய்யும். சிலபேருக்கு உயில் இன்ஸ்சுரன்ஸ் மூலம் வருமானம் வரும்.
சனி 12 ஆம் வீட்டில்  இருந்தால் வியாபாரத்தில் வீழ்ச்சி வரும். செலவு அதிகமாக இருக்கும். மருத்துவ செலவு அதிகம் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளிடம் சண்டை ஏற்படும். தந்தையாரின் உடல் நிலை கெடும். தந்தையின் உறவு நன்றாக இருக்காது. மூத்தவர்களின் சாபத்திற்க்கு ஆளாகலாம். சனி நல்ல நிலையில் இருந்தால் தீமை குறைந்து நல்லது நடக்கலாம். விரைய ஸ்தானமாக இருப்பதால் சுபசெலவுகளும் செய்ய வேண்டிவரும்.
சனி பகவான் (வீடு, மனை வாங்க)
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்குபாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

Via  (சித்தர்கள்) angelinmery.