
''இந்திய நாட்டின் பிற பகுதிகளில் தோன்றிய பெரியோர்களைப் பற்றி வடநாட்டினர் அறியாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. முகமதியர் ஆட்சி காலத்தில் சைதன்யர் நீங்கலாக ஏனைய ஞானிகள் அனைவரும் தென்னிந்தியாவில் தோன்றியவர்களே. தென்னாட்டு அறிவுதான் தற்போது உண்மையில் இந்தியாவில் அரசு செலுத்துகிறது. இந்த சைதன்யரும் கூட தென்னிந்தியாவில் உள்ள ஒரு பிரிவான மத்வ வகுப்பைச் சார்ந்தவரே.'' என்கிறார். மேலும் ஆரியரும் தமிழரும் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறுவது......
''வேதங்களில் காணும் தஸ்யுக்களது அழகற்ற உடல் உறுப்பு அமைப்புகளை , பழிப்பதற்காகப் பயிலப்பட்டிருக்கும் அடைமொழிகளில் ஒன்று கூட, பெருமை வாய்ந்த தமிழ் இனத்துக்குப் பொருந்தவே பொருந்தாது.'' - ஞான தீபம் 8. 400.
''ஆரியர்களைப்பற்றி கூறப்படுகின்ற கொள்கையிலே இருக்கின்ற குற்றங்களையும், அந்தக் கொள்கையால் விளைந்துள்ள தீமைகளையும் அமைதியோடு அறவே நீக்க வேண்டியது தென் இந்தியாவின் நலத்துக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. அவ்வாறு நீக்கி ஆரிய இனமே தோன்றுவதற்குக் காரணமான மிகச் சிறந்த தாய் இனமான புகழ் படைத்த தமிழர்களின் பழம் பெருமையை அறிவதால் விளையும் நியாயமான நன்மதிப்பை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.'' - ஞானதீபம் 8. 403.
'' எல்லா நாகரிகங்களுக்கும் முன்னோடியாய் விளங்கிய பெரிய நாகரிகத்தின் இரத்தம் நம் உடம்பில் ஓடிக் கொண்டிருப்பதைக் குறித்து நாம் பெருமைப்படுகிறோம். அந்த தமிழ் நாகரிகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆரியர்களும், செமிட்டியர்களும் வெறும் குழந்தைகளே.'' - ஞானதீபம் 8. 405.
வங்க தேசத்தில் பிறந்த ஒரு ஞானி தமிழ் இனத்தின் பெருமையையும், தொன்மையையும் மேற்கண்டவாறு போற்றிப் பேசியிருக்கிறார். தமிழ் இனம் ஆரியர்களுக்கு மட்டுமல்ல உலக நாகரிகங்களுக்கெல்லாம் தாய் இனம் என்கிறார்.
தாய் இனம் இன்று முதியோர் இல்லத்தில் கிடந்து வாடுவது நாம் காண்பதுதானே. நம் பெருமையை நாமே உணர்ந்து எழும் நாள் என்று வருமோ ? இந்த அவல நிலை அகல வேண்டுமாயின் தமிழ் மக்கள் தம்மிடையே தோன்றிய பெரியோர்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். போற்ற வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சாதிப் பித்து, சமய இறுமாப்பு, மொழிப் பித்து முதலியன சமய நிறுவனங்களிலும், இலக்கியத் துறைகளிலும் ஊடாடி அரசியல் வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும், சமுதாய வாழ்விலும் தீய விளைவுகளை விளைவித்து வருகின்றன. சமய நிறுவனங்களிலே, துறவற நிறுவனங்களிலே சாதியத் தலைமை; இலக்கிய மேடைகளிலே சாதிய உணர்வு ஆகியன இலைமறை காய் போல், தமிழ் நாட்டில் சமயங்களின் பெயராலும், மொழியின் பெயராலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவை அகலாத வரை தமிழனுக்கு விமோசனமே இல்லை. தகுதி இருந்தும், ஆற்றல் இருந்தும் இவைகளால் தலமைப் பதவி அவனை விட்டு நழுவி விடுகிறது.
Via FB மௌனத்தின்
குரல்