நொறுங்கியது அறிவாளி எனும் நடிகர் கமல்ஹாசன் பிம்பம் ...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:05 | Best Blogger Tips
Image may contain: 2 people, people smiling


தமிழகத்தின் அறிவுஜீவிகளில் ஒருவராக, தமிழ்த் திரையுலகினை உலக சினிமா அளவிற்கு மேம்படுத்த வல்லவராக தமிழக மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் கமலஹாசன் ஒரு டிவி விவாதத்தில் விவாதித்து தோல்வியடைந்து வந்திருந்தால் விவாதத்தின் சாராம்சத்தை வைத்து நாமும் விவாதித்திருக்கலாம். ஆனால், நடந்தது என்ன?

பாரதத்தின் மிகப் புகழ்பெற்ற டிவி சானல் நடத்திய ஒரு நேரடி விவாதத்தில் பல அறிவு ஜீவிகள் முன்னிலையில் மேடையில் அமர்ந்த கமலஹாசன்,

ஏதோஆங்கிலம் தெரியாத கிராமத்து இளைஞன் ஐடி கம்பெனி இண்டெர்வியூ வகையறா குரூப் டிஸ்கஸனில் கலந்து கொண்டது போலதாழ்வு மனப்பான்மையில் சிக்கி, என்ன பேசுவது என்ன கேட்பது, எதற்கு எந்த புள்ளிவிபரம் பேசுகிறார்கள் என்று கூட தெரியாமல் திணறிப் போய் வெளியேறி இருக்கிறார். நிஜமாகவே, தமிழக மக்கள் போலவே கமலும் மனதளவில் மிகவும் உடைந்து தான் போயிருப்பார்.

இத்தனை பெரிய அறிவாளிக்கு ஏன் அத்தனை பெரிய தடுமாற்றம்? பிரச்னையே அவரை அறிவாளி என்று சொன்னது தான். ஏனெனில், அவர் ஒரு பொதுவான அறிவாளி அல்ல! அவர் தொழிலில் அவர் சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர். அவர் தொழிலில் அவர் திறமையானவர் தான். ஆனால், நிஜத்தில் அவருக்கு அவர் துறையைத் தாண்டி வேறெதுவும் தெரியாது. எப்பொழுதாவது, சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வென்று ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அறிவியல் வரலாறு போன்றவற்றைப் பற்றிய மேடைப் பேச்சோ,

கட்டுரையோ கமலிடமிருந்து வந்திருக்கிறதா? நிச்சியமாக சொல்ல முடியும்... இல்லை. இல்லவே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் கமலஹாசனுக்கு மத்திய மாநில அரசு நிர்வாகத்தின் படிநிலைகள் கூடத் தெரியாது. அந்த விவாதத்தில் ஸ்மிரிதி இரானியும் அர்நாப் கோஸ்வாமியும், என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.

அப்ப இத்தனை நாள் கமலை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருந்தேனே என்று கேட்டீர்களென்றால், நம்ப வைக்கப்பட்டீர்கள் என்பது தான் கசப்பான உண்மை. தமிழகத்தைப் பொருத்தவரை அறிவாளி என்று பிம்பப்படுத்தப்பட்டவர்கள் யார் என்று கவனியுங்கள்.

இடதுசாரிய சிந்தனை(!??!)யாளர் என்ற வளையத்திற்குள் இருந்து கொண்டு, இந்த மண்ணின் கலாச்சாரம், இறை நம்பிக்கை, சடங்குகள் போன்றவற்றிற்கு எதிராகப் பேசியும் செயல்பட்டும் வருபவர்களே! அதை விட முக்கியமாக திரைத்துறையில் வெற்றிபெற்ற பிரபலங்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர் என்ற பிம்பத்தை மக்களிடையே திட்டமிட்டுப் புகுத்தப் பட்டது. தீவிரமாக, மறைமுகமாகப் பிரசாரம் செய்யப்பட்டது. சிறந்த எடுத்துக்காட்டாக,

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, மு.கருணாநிதி, எஸ்.எஸ்.ஆர், சத்யராஜ், கமலஹாசன் மட்டுமல்லாது காமெடியன் விவேக்கைக் கூட அறிவாளி என்று மீடியாக்கள் மூலமாக மக்களிடையே அடையாளப்படுத்தப்பட்டது.

கூத்தர், விரலி, பாணர் என்று பண்டைய காலத்திலிருந்தே கூத்தாடிகளைக் கொண்டாடும் குணத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட திராவிட இயக்கம் அதே வழியில் தமிழக மக்களை நம்பச் செய்தது தான் இந்த அறிவாளி பிம்பங்கள். மக்கள் மட்டுமல்லாது ஒரு கட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டவரே தன்னை அறிவாளியாக நம்பத் தொடங்கிவிடுவது கொடுமையிலும் கொடுமை.

கிணற்றுத் தவளை வெளியே போனதும் தன் கிணற்றின் அளவினை ஓரளவு புரிந்து கொள்ளும். தன் சத்தம் என்பது, வெளியே கேட்கும் சத்தத்தில் எடுபடாது என்றும் புரிந்து விடும். அப்படி தன்னை அறிவாளி என்று நம்பியவர்களில் ஒருவரான கமலஹாசன் தன் அறிவின் விசாலம் என்னவென்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மற்றும் பத்திரிக்கையாளர் அர்நாப்கோஸ்வாமியிடம் கற்றுக் கொண்டிருப்பார். தன் பிம்பம் தன் முன்னாலேயே நொறுங்கிக் கிடப்பதைக் கண்டு வெம்பிப் போயிருப்பார்.

கமலும் ஸ்மிரிதியும் திரையுலகத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். விவாதத்தில் கமல் மற்றும் ஸ்மிரிதி ஆகியோரைச் சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.

எடுத்தவுடன் வார்த்தை, தமிழகத்திற்கேயுரிய வார்த்தை விளையாட்டில் தொடங்கினார் அதை தனக்கேயுரிய நாடகப் பாணியுடன் வேறு. அந்தம்மா அதே விளையாட்டைச் சிரித்துக் கொண்டே திருப்பிப் போட்டுத் தாக்கிவிட்டார்.

ஸ்மிரிதி அவர்களின் பேச்சுகள் முழுக்க முழுக்க நிர்வாகத்தன்மையுடன், நடைமுறைச் சாத்தியங்களும், நிர்வாகப் புள்ளிவிபரங்களுடனும் இருந்தன.

கமலின் பேச்சுகளில், ஹிந்துத்துவா, பூணூல், நக்சலைட்டுக்கு பரிந்து பேசுதல், தேசிய கீதம் பாடுவதில் முரண் என வழக்கமான தமிழக ஜல்லியடிப்பாக மட்டுமே இருந்தன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைச் சுட்டிக் காட்டி ஸ்கோர் பண்ணலாம் என்று முயன்றார். ஆனால், அதை எப்படி ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை.
சம்பவத்தின் பின்னணியும் புள்ளிவிபரங்களும் சுத்தமாகத் தெரியாமல் பேந்தப் பேந்த முழித்து தமிழகத்தின் மானத்தை வாங்கி விட்டார்.

தமிழக பத்திரிக்கையாளர்கள் இந்த So called அறிவாளிகளை எதிர்கேள்வி கேட்காமலேயே பேட்டியை மட்டும் வாங்கி அதை தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியதன் விளைவு,
எதார்த்தமான ஒரு கேள்வியைக் கூட எதிர்கொள்ள முடியாமல் அசிங்கப்பட வேண்டியதாயிற்று.

இந்த விவாதம் தமிழக மக்களுக்கு ஒரு முக்கியமான விழிப்புணர்வாக இருக்க வேண்டும். நமக்கு அறிவாளியாக அடையாளம் காட்டப்பட்டவர்களின் நிஜ அறிவு இவ்வளவு தான்.

 இது ஏதோ கமலஹாசன் அவர்களைப் பற்றி மட்டும் குறையாகச் சொன்னதாக நினைக்க வேண்டாம்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் அறிவாளிகள் என்று அடையாளம் காட்டப்பட்ட எவரும் தமிழகம் தாண்டி ஒரு சாதனையும் செய்யத் தகுதியற்றவர்களே!

-ஆனந்தன் அமிர்தன்

From