கண்டிப்பாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள் - பிரதோஷ தினத்தன்று

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:56 | Best Blogger Tips

பிரதோஷ தினத்தன்று சிவாலயங்களில் அபிஷேக, ஆராதனைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். நிறைய செலவு செய்து, அபிஷேகப் பொருட்கள் வாங்க முடியவில்லையே என்று சிலர் நினைப்பதுண்டு. அந்த மனக்குறையே வேண்டாம். ஏனெனில் சிவனுக்கு மிக, மிக பிடித்தமானது மிக குறைந்த விலையில் கிடைக்கும் வில்வ இலையே. 
-
"
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம்சிவார்பணம்."
-
இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்கு உண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது. இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. வில்வ மரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று, மூன்றாக இருப்பதை அறியலாம்.
-
இந்த மூன்று இலைகள், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை குறிப்பதாக ஐதீகம். வில்வத்தின் இடது பக்க இலை பிரம்மா. வலது பக்க இலை - விஷ்ணு. நடுவில் இருக்கும் இலை சிவன். வில்வ இலைகளை நாம் பயன்படுத்தும் தினத்துக்கு ஏற்பவும் பலன்கள் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் வில்வ இலை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
-
அரச மரம் போல வில்வமும் நிறைந்த மகிமை கொண்டது. வில்வ மரத்தின் எல்லா பாகங்களும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம். வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும்.
-
பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள். சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும். 
-
வில்வ மரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். ஒரு வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது லட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை. 
-
வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.. கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். 
-
வில்வ இலையை சால கிராம் உருவம் என்பார்கள். இதன் அடிப்படையில் பார்த்தால் சிவனுக்கு நாம் செய்யும் வில்வ இலை அர்ச்சனையால், நமது ஆத்மாவை, நாம் பரமாத்மா எனப்படும் சிவனிடம் அர்ப்பணிக்கிறோம் என்று அர்த்தமாகும். இதனால் நாம் சுத்தியைப் பெறுகிறோம். திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. 
-
சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு கற்ப மூலிகையாகும்; இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மையுடையது. வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டு இலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. 
-
அதாவது 5, 7, 9 என்று இலைகளின் எண்ணிக்கை அந்த மரத்தின் உச்சியில் அதிகரித்துக் கொண்டே போகும். இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும், பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்படுகின்றன. வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும் போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.
-
சிவனின் அருளைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வில்வ இலையை தமிழ் மாத பிறப்பு, திங்கட் கிழமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. 
-
வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக் கூடாது என்பது ஐதீகம்.வில்வத்திற்கு கூவிளம், கூவிளை என்ற மற்ற பெயர்களும் உண்டு. இதனைசிவமூலிகைகளின் சிகரம்எனவும் அழைப்பர். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வ இலை கொண்டு இன்று அர்ச்சனை செய்து நன்மைகள் பெறலாம். 
-
|||| --------- திருச்சிற்றம்பலம் --------- ||||