புத்திரதோஷம் நீங்கி மழலைச் செல்வம் உண்டாக பரிகார வழிபாடு

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:22 | Best Blogger Tips

செல்வத்திலே சிறந்த செல்வம் மழலைச் செல்வம் என்று குறிப்பிடுவார்கள். மழலைச் செல்வத்தின் அருமை குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கே புரியும். பல திருமணமான தம்பதிகளும் புத்திர பாக்கியம் வேண்டி கோவில் கோவிலாகச் செல்வதை காணமுடியும். புத்திர தோஷம் எதனால் ஏற்பட்டது என்பதனை முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். குருவிற்கு, புத்திரபாக்கியம் தருவதில் முக்கிய பங்குண்டு. குரு, புத்திரகாரகன். புத்திரயோகத்தைத் தரக்கூடிய அதிகாரம் பெற்றவன். எனவே குருவாலும், சந்திரனாலும் புத்திரதோஷம் உண்டானால், குருவிற்கு உரிய தலத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். சந்தான கோபாலரும் சந்தான பாக்கியம் தரவல்லவர். ராகு, கேதுவால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய நாகம் செய்து, மாரியம்மன் மற்றும் அம்மன் கோவில்களில் உள்ள உண்டியல்களில் போட்டால், தோஷம் நீங்கும். புதன், சுக்கிரனால் புத்திர தோஷம் ஏற்பட்டிருந்தால் சிவனை வழிபடலாம்.
செவ்வாய், சனியால் ஏற்படும் புத்திரதோஷத்திற்கு முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்யலாம். குரு பகவானுக்கு வியாழன்று அர்ச்சனை செய்வது சிறப்பு. பொதுவாக எந்தக் கிரகத்தினால் தோஷம் ஏற்பட்டதோ, அந்தக் கிரகத்தின் தசை அல்லது புத்திக்கு உரிய காலத்தில் அந்தக் கிரகத்திற்கு உரிய அதிதேவதைக்கு அர்ச்சனை செய்ய தோஷம் நிவர்த்தி ஆகும். குலதெய்வம் கோயிலில் அவரவரின் ஜன்ம நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் புத்திரத்தடை நீங்கும். முக்கியமான சிறப்பு நாட்களில், பௌர்ணமி, தமிழ் மாதம் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு அன்று அன்னதானம் செய்வதின் மூலமாகவும் வம்சவிருத்தி கிடைக்கும்.