
கர்ம யோகி (55)::
தெய்வப்பிறவி!
இத்தொடரை இன்னும் கூட விரிவாக எழுதியிருக்கலாம்! முகநூலுக்கு அது சரி வராது! ஆனால் அந்த கர்ம யோகியின் முதல் ஐம்பதாண்டு வாழ்க்கை வரலாறை நிறைவாக எழுதியுள்ளேனா என்பதில் எனக்கு ஐயமிருக்கிறது!
அவரது 19வது வயதிலிருந்து 35வயது வரையிலான வாழ்க்கை, இந்திய அரசியல்வாதிகளில் யாருமே வாழ்ந்திராத வாழ்க்கை!
பற்றற்ற துறவியாக, வாழ்க்கையின் ரகசியத்தை அறிய மழையிலும், குளிரிலும்,வெய்யிலிலும், கடும் வெம்மையிலும், ஒரு வேளை உணவு உண்டு பல வேளை பட்டினி கிடந்து, கட்டாந்தரையிலும் பிளாட்பாரங்களிலும் படுத்துகிடந்து,
இமய மலை உறை பனியிலும், ராஜஸ்தான் பாலைவன புயல் அனலிலும், ரயில் பயணங்களுக்கு கூலி வேலை செய்து, அதுவும் கிட்டாத போது நூற்றுக்கணக்கான மைல்கள் பாத யாத்திரை செய்து, தாய் உறவும் துறந்து, தேசத்திற்காக ஒரு இளைஞன் தன்னையேதந்தவர் மோடி ஒருவராகத்தான் இருக்க முடியும்!
குஜராத் முதல் அமைச்சர் ஆவதற்காகவோ, இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காகவா அந்த வயதில், அந்த தவ வாழ்க்கையை மேற்கொண்டார்?
தெய்வத்தை அறிவதை விட பிறந்த தேசத்தை அறிய வேண்டும் என்பதற்காக அவர் பட்ட பாட்டை, வேறு எந்த இளைஞனாவது கற்பனை கூட செய்து பார்ப்பார்களா?
இந்த நாட்டில் மோடியைத்தவிர இவ்வளவு மோசமாக, தரக்குறைவாக, மரியாதை இல்லாமல் அன்றாடம் தாக்கப்படும் மனிதர் வேறொருவர் உண்டா?
காந்தியையோ நேருவையையோ, ஏன் எமர்ஜென்சி கொண்டு வந்த இந்திராவையோ அவன் இவன் என்று மேடைகளிலேயே அன்றாடம் பேசி விட்டு எவனாவது உயிரோடு நடமாடி இருக்க முடியுமா? (நேற்றைக்கு கூட ஒரு நடிகன் பிரதமரை அவன் இவன் என்று பேசுகிறான்)
2001 அக்டோபரில் குஜராத் முதல்வரான அன்று துவங்கிய கீழ்த்தர தாக்குதல் யுத்தம், 25ஆண்டுகளுக்கு மேலாகியும் வேறெந்த தலைவருக்கு உண்டா?
"இங்கு ஏற்கனவே வேரூன்றி இருக்கும் அமைப்புமுறை மோடியை, நாகரீகமற்ற, கீழ்த்தட்டைச்சேர்ந்த ஒரு டீக்கடைக்காரனாகவே பார்க்கிறது, 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கும் வீட்டு வாசலை நெருங்கக்கூட அவருக்கு எந்த வித உரிமையும் கிடையாது என்றும் அது கருதுகிறது"
என்று மோடியை பிரதமர் வேட்பாளர் என்று பிஜேபி அறிவித்ததும் பத்திரிகையாளர் கவுன்சில், மேல் மட்ட மக்கள் என்று கருதக்கூடிய அறிவுஜீவிகள் மத்தியில் கருதுவதாக ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டதே, அப்படி வேறெந்த தலைவருக்காவது சொல்லி இருக்க முடியுமா?
மோடி எந்த விமர்சனங்களுக்கும் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை!
தேர்தல் பிரச்சாரம் முடித்து வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மோடியிடம் கேட்டார்கள்
"நீங்கள் வெற்றி பெறுவீர்களா?"

மோடி சிம்பிளாக சொன்னார் "நான் மக்கள் நலனுக்காக உழைக்கிறேன், அவர்கள் எங்களை ஜெயிக்க வைப்பார்கள்"
தேர்தல் முடிவுகளை உலகமே ஆர்வமாக உற்று நோக்கி கொண்டிருந்தது!
ஏப்ரலில் வந்த கருத்து கணிப்புகளிலும் NDTVஐத் தவிர எல்லா டிவிகளும், பிஜேபி கூட்டணி 230தொகுதிகளையே பெறும் என்றே சொல்லின!
NDTV மாத்திரம் பிஜேபி கூட்டணி 275இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும், பிஜேபி மாத்திரம் 235இடங்களை பெறும் என்றது!
தேர்தல் முடிவுகளின் ஆரம்பமே சொல்லி விட்டது! மோடி அமோக வெற்றி பெறப்போகிறார் என்று!
மதியத்துக்கு மேல் பிஜேபி, 25ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272க்கும் மேலாக 282 தொகுதிகளையும், கூட்டணி 336இடங்களையும் பெற்ற போது உலகமே வியந்து போனது! மோடி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தார்!
அதிக இடங்களில் போட்டியிட்டிருந்த காங்கிரஸ் வெறும் 44இடங்களில் மாத்திரமே வெற்றி அடைந்திருந்தது! சுதந்திரம் அடைந்ததிலிருந்து இவ்வளவு மோசமான தோல்வி இந்த தேர்தலில் தான்! தமிழ் நாட்டில் அதிமுக 37 இடங்களிலும், பிஜேபி கூட்டணி 2இடங்களிலும் வென்றது!
மே மாதம் 20ந்தேதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளக்கூடிய நாள்!
ஐந்து லட்சம் ஓட்டுக்கும் மேலான வித்தியாசத்தில் ஜெயித்திருந்த குஜராத்தின் வதோதரா தொகுதியை ராஜினாமா செய்து விட்டு, நாலே கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்த வாரணாசி (காசி) தொகுதி எம்பியாக பதவியேற்க பாராளுமன்றம் வந்தார் மோடி!
முகப்பு படியில் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தவர், அதுவரை எந்த பிரதமரும் செய்யாத நிகழ்வாக பாராளுமன்ற படிகளில் தலை சாய்த்து, படிகளில் முத்தமிட்டு கண்ணீர் மல்க அமர்ந்து விட்டார்!
தொலைக்காட்சி நேரலையில் பார்த்து கொண்டிருந்த கோடானுகோடி மக்களும் உணர்ச்சி வயப்பட்ட தருணம் அது!

2014 மே 26ந்தேதி இந்திய குடியரசுத் தலைவர் மேதகு பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவிக்க "கர்ம யோகி" மோடி, பாரதத்திரு நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்!

