வேதங்களின் மூலக்கூறுகளாக சித்தர்களின் மகத்துவத்தை உணர்வது (Vethankal was Individual Satisfaction True Statement or Not ?) !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:03 | Best Blogger Tips

Picture
                              உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது."புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்"அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.உபநிஷதங்கள், பிரம்மா சூத்திரம், ஸ்ரீமத் பகவத் கீதை முஉன்றும் 'பிரஸ்தான த்ரயம்'என்று வழங்கப் படுகின்றன.அறுதி உண்மைகளில் உபநிஷதங்களே சிகரத்தைத தொட்டதாக கருதுகின்றனர்.உபநிஷங்கள் பலவானாலும்,108 பொதுவாக கொள்ளப் படுகின்றன. அவற்றில் ஈஸ,கேன,கட,பிரச்சன,முண்டக,மாண்டூக்ய, ஐதரேய,தைத்திரீய,சாந்தோக்ய ,பிருகதரன்யா , சுவேதஸ்வதார , கௌசீதகி , மகாநாராயண, மைத்ராயணி இவை பதினான்கும் முக்கியமானைவை.
உபநிஷதம் ஐதரேய, கௌசீதகி , வேதம் ரிக் உபநிஷதம் ஈஸ,கட,தைத்திரீய,பிருகதரான்யா, சுவேதஸ்வதார , வேதம் யஜுர் மைத்ராயணி, மகாநாராயண.
உபநிஷதம் கேன,சாந்தோக்ய வேதம் சாம
உபநிஷதம் பிரச்சன,முண்டக,மாண்டூக்ய வேதம் அதர்வண யஜூர் வேதத்தில் சுக்ல,கிருஷ்ணா என இரு பிரிவுகள் உண்டு.கிருஷ்ணா யஜுர் வேதத்தில் தைத்த்ரிய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் பற்றி கூறப் பட்டுள்ளது.சுடர் என்ற முனிவரால் அருளப் பட்டது.வாழ்க்கை தத்துவங்களையும் , புரிதல்களையும் பிற மதங்களிலும் ,சமய புத்தகங்களையும் மேற்கோள்களையும் பார்க்கும் நாம் , நம் மதத்தின் பெருமைகளை தேடி நாடினால் , அதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.இறப்புக்கு பின் என்ன நடக்கும்.....ஒரு
ஆராய்ச்சி பூர்வமான அலசல் எமனுடன் இருந்தால்....இருந்தால் என்ன? இருக்கிறதே? அதுதான் கட உபநிஷதம்.வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின் முலம் உண்மை புகட்டப் படுகின்றது.நசிகேதன் என்கிற சிறுவன், வாஜசிரவசின் மகன்.தந்தையின் யாக நியதிகளை சரியாக கடை பிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை அவன் தந்தை விரும்பாததால் அவன் எம தர்மனிடம் செல்ல நேர்ந்தது. அவன் மூன்று வரங்களை கால தேவனிடம் பெற்றான்.அதைப் பற்றி கூறுவதுதான் இந்தக் கட உபநிஷதம்.

                                 
வேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன:ரிக் வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்
என்பனவாகும்.இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது.இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
 வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:

1. மந்திரங்கள்  (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) 


               கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காட்டு முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யஜுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சடபாத பிராமணா என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சடபாத பிராமணா சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது. முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் துணையான வேதாங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தங்கள் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது. வேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன: ரிக் வேதம்யசுர் வேதம்சாம வேதம்அதர்வண வேதம் என்பனவாகும். இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது. இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.ஒவ்வொரு வேதமும் உபவேதங்களைக் குறிப்பிடுகின்றன. அவை நான்கு. ஆயுர் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், சில்ப வேதம் என்பனவாகும்.
அ) ஆயுர்வேதம்:- ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து, மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.
ஆ) தனுர் வேதம்:- யஜøர் வேதத்தின் உபவேதம். இது போர்க்கலையை விவரமாகக் கூறுகின்றது.
இ) காந்தர்வ வேதம்:- சாம வேதத்தின் உபவேதம். இது இசை, நடனம், ஆகிய நுண்கலைகளை விளக்குகின்றது.
ஈ) சில்ப வேதம்:- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

                  பஞ்சபூதங்களில் ஒன்றானதும் வேதங்களால் வணங்கப்பட்டதுமான அக்னி இறையாற்றலின் தனித்துவமான வடிவம். நவநாகரீக கலாச்சாரத்தால் அக்னியின் மகத்துவத்தை உணராமல் ஒரு ஜடமான நிலையில் நம் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இறைவன் ஒருவனே என்றும் பல்வேறு வடிவில் இருப்பவனும், பல்வேறு பெயரில் அழைக்கப்படுபவனும் இறைவன் தான் என கூறுவது போல தீ,வெம்மை, வெப்பம், நெருப்பு, கனல் மற்றும் அக்னி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பல்வேறு நிலையில் இருப்பது இறைவனின் ஆற்றலான அக்னியே என்பதை உணரவேண்டும். சிந்தித்து பார்த்தோமானால் தினமும் நம் வாழ்க்கையில் அக்னியின் செயல் மிகவும் இன்றியமயாதது. காலையில் நீங்கள் எழும் நேரம் கிழக்கில் சூரியன் என்னும் அக்னி ரூபம் செயல்பட வேண்டும். உங்கள் உடலை சுத்தமாக்கும் நீர் மழை வடிவிலும் நதி வடிவிலும் கிடைப்பதற்கு அந்த சூரியனே அக்னியாக இருந்து செயல்படுகிறார். தாவரங்களின் செயலுக்கும் நம் உணவின் உற்பத்திற்கும் அக்னியின் பயன் மிகவும் அவசியமாகிறது. நம் உடலின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் வெப்பமே உணவை ஜீரணம் செய்ய உதவுகிறது. இதற்கு ஜட அக்னி என்று பெயர். ஒரு மனித உடலின் வெப்ப நிலை இழந்து மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது என்றால் அதற்கு பெயர் பிணம் என்கிறார்கள். ஆக ஒரு மனிதன் உயிருடன் இருப்பதை நிர்ணயிப்பதே அக்னியின் செயலாகிறது. எந்த ஒரு பொருளும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அக்னியே காரணம் என்பது ஆழ்ந்து உணர்ந்தால் புரியும். பிரபஞ்சத்தின் அனைத்து பொருளும் பஞ்சபூதத்தால் ஆனது. அவற்றில் அக்னியின் அளவு கூடுதலாக இருப்பது இயங்கும் உயிராகவும், அக்னி குறைவாக இருப்பது இயக்கமற்ற பொருளாகவும் மாறுகிறது.பூமியின் மையத்தில் அக்னி குழம்பு இருக்கிறது அவை நில அடுக்குகளில் புகுந்து வெளிவரும் பொழுது எரிமலை அக்னி குழம்பை கக்குகிறது. நாம் வசிக்கும் சூரிய மண்டலத்தின் மையத்தில் அக்னி ரூபமாக இருக்கிறது சூரியன். சூரிய மண்டலத்தில் மட்டுமல்ல அனைத்திலும் விதையாகவும், கருவாகவும் இருப்பது அக்னியே ஆகும். தீ நெருப்பு என குறிப்பிடாமல் அக்னி என குறிப்பிட காரணம் என்ன? அக்னி என்பது நெருப்பின் ஆழ்ந்த சொரூபம். ஜிவாலையாக எரியும் பொழுது நெருப்பு என்றும் கட்டுப்பாட்டுடன் திகழும் பொழுது அக்னி என்றும் கூறலாம். அக்னி என்பது வடமொழிச்சொல் என்றாலும் அக்னி என பல்வேறு சங்ககால தமிழ் படலிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. யஜூர் வேதத்தின் அக்னி என்பது முழுமுதற்கடவுளாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் உபநிஷத்தில் அக்னி ஜாதவேதன் என கூறிப்பிடுகிறார்கள். ஜாதவேதன் என்றால் அனைத்திலும் இருப்பவன் - அனைத்தையும் உணர்ந்தவன் என கூறலாம். எனக்கு பிடித்த பெயர்களின் ஒன்று ஜாதவேத் எனும் பெயர்.

                                  வேதாந்தம் வேதம் + அந்தம் என்ற சமஸ்கிருத சொற் பிணைப்பினால் வருவது. வேதம் அல்லது வேதங்கள் நான்கு ஆரிய சமய தத்துவ நூல்களைக் குறிக்கும். அவை இருக்கு, யசூர், சாமம், அதர்வம் எனபனவாகும். அந்தம் என்றால் கடைசியில் வருவது அல்லது முடிவில் வருவது என்று பொருள் தரும். ஒவ்வொரு வேதத்துக்கும் நான்கு பாகங்கள் உண்டு. அவை மந்திரங்கள், பிராமணங்கள், அரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகும். வேதம் + அந்தம் வேதங்களின் கடைசி இரு பாகங்களான அரண்யகம் மற்றும் உபநிடதங்களை சிறப்பாக சுட்டும். வேதங்களின் கடைசி இரு பாகங்களும் பெரும்பாலும் தத்துவரீதியில் அமைந்தவை, அவற்றில் கூறப்பட்ட பல கருத்துக்கள் முதல் இரு பாகங்களில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பாகவும், முரணாகவும் இருப்பதைக் காணமுடியும். ஆகையால் வேதாந்தத்தை வேதம் என்று நேரடியாக ஒப்பிடுவது பொருந்துமா என்பது கேள்விக்குரியதே.

வேதங்கள் 4  வகைகள்

Picture
                       இருக்கு வேதம் (சமசுகிருதம்:  - ரிக்வேத) இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமசுகிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இருக்கு வேதம், வேதகால சமசுகிருதத்தில் ஆக்கப்பட்ட 1,017 சுலோகங்களால் ஆனது. இச் சுலோகங்களுட் பல வேள்விக் கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் (பகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
இருக்கு வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான அக்கினி, தேவர்கள் தலைவனும், வீரனுமான இந்திரன், சோமன் என்போராவர். இவர்களைவிட மித்திரன், வருணன், உஷாக்கள், அஸ்வின்கள் என்போரும், சவிதர், விஷ்ணு, உருத்திரன், பூஷண், பிருஹஸ்பதி, பிரமனஸ்பதி, தியாயுஸ் பிதா, பிரிதிவி, சூரியன், வாயு, பர்ஜான்யன், வசுக்கள், மாருத்கள், ஆதித்தர்கள், விஸ்வதேவர்கள் போன்ற கடவுளர்களும், இந் நூலில் போற்றப்படுகிறார்கள்.இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.

              யசுர் வேதம்(Sanskritयजुर्वेदःyajurveda, yajus "வேள்வி" + veda "அறிவு" என்பவற்றின் சேர்க்கையில் உருவானது.) இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சுக்கில யசுர்வேதம், கிருஷ்ண யசுர்வேதம் எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.கிருஷ்ண யசுர்வேதம் கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை: தைத்திரீய சம்ஹிதைமைத்திராயனீ சம்ஹிதைசரக-கதா சம்ஹிதைகபிஸ்தல-கதா சம்ஹிதைஎன்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது. மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த சிரௌதசூத்திரங்கள், கிருஹ்யசூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன. சுக்கில யசுர்வேதம் சுக்கில யசுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை: வஜசனேயி மாத்தியந்தினியம்வஜசனேயி கான்வம்என்பனவாகும். முன்னையது வட இந்தியாவிலும் குசராத்திலும் நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.பிராமணம்மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே சதபத பிராமணம் என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது.

                           சாம வேதம் (சமஸ்கிருதம்: सामवेद, sāmaveda, sāman "கிரியைகளுக்கான மந்திரங்கள்" + veda "அறிவு" ), என்பது இந்துசமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்.

                           அதர்வண வேதம் இது பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

ஆகமங்கள்

Picture
                      ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களின் கொள்கை விளக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும் கூறும் நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன. ஆகமம் (ஆ=அண்மை சுட்டும் உபசர்க்கம் + கம்=போதலை உணர்த்தும் வினையடி) என்னும் வடசொல் 'போய்ச் சேர்தல்', 'வந்தடைதல்' என்னும் பொருளைத் தருவது. இதற்குத் "தொன்று தொட்டு வரும் அறிவு" என்றும் "இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்" என்றும் அறிஞர் பொருள் கூறுவர். 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான்' என வரும் மாணிக்கவாசகர் கூற்றிலே 'ஆகம வழி நிற்பார்க்கு இறைவன் அணுகி வந்து அருள்புரிவான்' என்னும் பொருள் பெறப்படுகின்றது. ஆகமங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை,

1. சைவ ஆகமங்கள்
2. வைஷ்ணவ ஆகமங்கள்
3. சாக்த ஆகமங்கள் என்பனவாகும்.

சைவ ஆகமங்கள் சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன,

1. காமிகம் - திருவடிகள்

2. யோகஜம் - கணைக்கால்கள்
3. சிந்தியம் - கால்விரல்கள்
4. காரணம் - கெண்டைக்கால்கள்
5. அஜிதம் அல்லது அசிதம் - முழந்தாள்
6. தீப்தம் - தொடைகள்
7. சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்)
8. சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு
9. அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு
10. சுப்ரபேதம் - தொப்புள்
11. விஜயம் - வயிறு
12. நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் - நாசி
13. ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் - முலை மார்பு
14. அனலம் அல்லது ஆக்னேயம் - கண்கள்
15. வீரபத்ரம் அல்லது வீரம் - கழுத்து
16. ரௌரவம் - செவிகள்
17. மகுடம் - திருமுடி
18. விமலம் - கைகள்
19. சந்திரஞானம் - மார்பு
20. பிம்பம் - முகம்
21. புரோத்கீதம் - நாக்கு
22. லளிதம் - கன்னங்கள்
23. சித்தம் - நெற்றி
24. சந்தானம் - குண்டலம்
25. சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் - உபவீதம்
26. பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் - மாலை
27. கிரணம் - இரத்தினா பரணம்
28. வாதுளம் - ஆடை
வைஷ்ணவ ஆகமங்கள்
1. பாஞ்சராத்திரம்
2. வைகானசம் என்பனவாகும்.

                காமிகாகமம் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வழக்கிலுள்ள சைவ சமயத் தத்துவம், சைவ சித்தாந்தம் ஆகும். சைவ சித்தாந்தத்திற்குச் சிறப்பாக அமைந்த நூல்கள் சைவ ஆகமங்கள் எனப்படுகின்றன. சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது காமிகாகமம் ஆகும். இது மிகப் பெரிய ஆகமங்களுள் ஒன்று. ஏனைய ஆகமங்களைப் போலவே இதுவும் சமஸ்கிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், தமிழ் நாட்டில் மட்டும் வழங்கிவந்த கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளதால், வட இந்தியப் பகுதிகளில் இது அதிகம் அறியப்படவில்லை.காமிகம் என்பது சமஸ்கிருதத்தில் விரும்பிய பொருள் எனப் பொருள்படும். காமிகாகமம், ஆன்மாக்கள் விரும்பிய பொருள்களை வழங்கி, அவை மலங்களில் இருந்து விடுதலை பெற உதவுவதால், இப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள். எல்லா ஆகமங்களும் நான்கு பகுதிகளாகப் (பாதங்கள்) பிரிக்கப்பட்டுள்ளன. இவை:

1. வித்யா பாதம் அல்லது ஞான பாதம்
2. கிரியா பாதம்
3. யோக பாதம்
4. சரியா பாதம்
எனப்படுகின்றன. இவற்றுள், ஞான பாதம் ஆகமங்களின் தத்துவப் பகுதியாகும். கிரியா பாதம், சமயக் கிரியைகள் பற்றிய பகுதி. ஆகமங்களின் உள்ளடக்கத்தின் பெரும் பகுதி இவ்விரண்டு பாதங்களுக்குள்ளேயே அடங்கி விடுகின்றது. ஏனைய இரண்டு பகுதிகளும் நீளம் குறைந்த பகுதிகளாகும். காமிகாகமத்தின் கிரியா பாதம், பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பிரிவுகளாக உள்ளன. கிரியா பாதம் 12,000 செய்யுள்களைக் கொண்டது. இதில் 5166 செய்யுள்கள் பூர்வ பாகத்திலும், 6477 செய்யுள்கள், உத்தர பாகத்திலும் உள்ளன. 357 செய்யுள்கள் கிடக்கவில்லை.பூர்வபாகத்தில், ஆகமங்களின் தோற்றம், அன்றாடம் கடைப் பிடிக்கவேண்டிய சமய நடைமுறைகள் மற்றும் வழிபாடுகள், கோயில்கள், வீடுகள் முதலியவற்றின் அமைப்பு விதிகள், விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கான விதிகளும் கிரியைகளும் என்னும் நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் கோயிற் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் தொடர்பான விடயங்கள் மிகவும் விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. நூலின் 75 பிரிவுகளில் 60 பிரிவுகள் கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் சிற்பம் தொடர்பான அம்சங்கள், பிற்காலத்தில் உருவான தனித்துவமான சிற்பநூல்களான மயமதம், மானசாரம் போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததாகச் சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மயமதம் எனும் சிற்பநூலை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புரூனோ டாகென்ஸ் (Bruno Dagens), அந் நூலுக்காக எழுதிய அறிமுகப் பகுதியில், காமிகாகமத்திலும் மயமதத்திலும், சொல்லுக்குச் சொல் சரியாக அமைந்த வசனங்களும், சில சமயங்களில் முழுமையான பத்திகளும் கூடப் பொதுவாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டில் ஏதாவதொன்று மற்ற நூலிலிருந்து விடயங்களைப் பிரதிபண்ணியிருக்கக்கூடும் எனக்கருதும் அவர், காமிகாகமத்தில் கட்டிடக்கலை தொடர்பான அம்சங்கள் ஒழுங்கின்றியும், ஒருங்கிணைவின்றியும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மயமதம் போன்ற ஒரு நூலிலிருந்து, காமிகாகமத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.

சம்ஹிதைகள் :அறிவுக் கருவூலமாகத் திகழ்வன. இவற்றின் துணையால் அக்கால மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, சமய வாழ்க்கை முறைகளை அறிய முடிகிறது. ஒவ்வொரு வேதத்திற்கும் தனித்தனியே சம்ஹிதைகள் உள்ளன. இவற்றுள் ரிக் வேத சம்ஹிதைகள் மிகப் பழமையானவை. ரிக் வேத சம்ஹிதையைக் கொண்டு முற்கால வேத கால பண்பாட்டை விரிவாக அறியலாம். பிற வேதங்களின் சம்ஹிதைகள் வாயிலாக பிற்கால வேதகால மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் பண்பாட்டுச் சிறப்பினை அறியலாம்.சம்ஹிதைகள் என்பன துதிப்பாடல்கள், வழிபாட்டு முறைகள், வேள்விகளுக்கான சூத்திரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பாகும். வேள்விக் காலங்களில் இவை முழுமையாக பயன்பட்டன. அதர்வண வேத சம்ஹிதை மட்டும் பில்லி, சூனியம், பிசாசு, மந்திரக் கட்டு என்பனவற்றைக் கூறுகிறது.
ஆரண்யகம் :அமைதியாகக் காட்டிற்குச் சென்று அங்கு கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளைக் கொண்டமையால் ஆரண்யகங்கள் என்ற பெயர் பெற்றன. வேள்விகளைச் செய்ய இயலாத முதியவர்கள், துறவிகள் ஓய்வு பெற்று காட்டிற்குச் சென்று பின்னர் கற்பதற்காக உருவானவை. இவற்றில் வேள்வியை விட அமைதியான தியானமே மிகவும் மேலானது என்று வலியுறுத்தப்படுகிறது. அநுபூதி நெறிகள் மற்றும் தத்துவக் கருத்துகள் அடங்கிய கருத்துப் பெட்டகம் எனலாம். ஆரியர்கள் ஆன்மிகத் துறையில் அடைந்த பண்பாட்டின் உன்னத நிலையை எடுத்துக்காட்டுவனவாகும்.
சாயனர் : (सायण; இறப்பு: 1387) என்பவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சமஸ்கிருத ஆசிரியராவார். தென்னிந்தியாவின் விஜயநகரப் பேரரசன் முதலாவது புக்கா ராயன், மற்றும் அவனது வழித்தோன்றாலான இரண்டாம் ஹரிஹர ராயன் ஆகியோர் சாயனரின் வழிகாட்டலில் ஆட்சி புரிந்தனர்.சாயனர் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதினார். இவற்றில் முக்கியமானவை இவர் வேதங்களுக்கு எழுதிய உரைகளாகும். வேதங்களுக்கு பண்டைய காலங்களில் பலர் உரை இயற்றினர் என்று சொல்லப்பட்டாலும் இவர் எழுதிய உரை மட்டும் தான் இன்று நம்மிடம் உள்ளது. இருக்கு வேதம் பற்றிய இவரது உரை மாக்ஸ் முல்லர் என்பவரால் 1849-1875 இல் வெளியிடப்பட்டது.

 உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்கள்

Picture
                          உபநிடதங்கள்அல்லது உபநிஷத்துக்கள்(Upanaishads) பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை. நான்கு வேதங்களுக்கும் சாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன. எல்லா சாகைகளும் தற்காலத்தில் காணப்படவில்லை. ஒவ்வொரு வேதசாகை முடிவிலும் ஒரு உபநிஷத்து இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. பற்பல சாகைகள் இன்று இல்லாமல் போனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷத்துக்கள் கிடைத்துள்ளன. வேதங்களிலுள்ள சடங்குகளைப்பற்றிய விபரங்களும், அவற்றில் எங்கும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் தெய்வ அசுர இனத்தாருடைய பரிமாறல்களும் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா இல்லையா என்ற ஐயங்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு வேதப்பொருளின் ஆழத்தை அறிய முயலும் யாரும், உபநிஷத்துக்களிலுள்ள தத்துவங்களினால் கவரப்படாமல் இருக்கமுடியாது. அதனாலேயே இந்துசமயத்தின் தத்துவச்செறிவுகள் உபநிஷத்துக்களில்தான் இருப்பதாக மெய்யியலார்கள் எண்ணுகிறார்கள். உபநிஷத்துக்களில் சில மிகச் சிறியவை, சில கிறிஸ்தவ மதத்தின் பைபிள் அளவுக்குப்பெரியவை. சில உரைநடையிலும் சில செய்யுள்நடையிலும் உள்ளன. ஆனால் எல்லாமே ஆன்மிக அனுபவங்களையும், வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளையும் அலசுபவை. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? பிறப்பும் இறப்பும் ஏன், எப்படி நிகழ்கின்றன? அடிப்படை உண்மை யாது? அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டானால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? மறுபிறப்பின் தத்துவம் என்ன? நன்மையும் தீமையும் மனிதனைப் பொருத்ததா, அல்லது அவைகளுக்கென்று தனித்துவம் உண்டா? அறிவு என்பதும் மனதின் பல ஓட்டங்களைப்போல் ஒன்றுதானா அல்லது அறிவு நன்மை தீமைகளைத் தாண்டிய ஒரு அடிப்படை உண்மையா? இவைகளையும் இன்னும் இவற்றைப் போலுள்ள பல ஆழமான தலையாய பிரச்சினைகளையும் சலிக்காமல் பட்சபாதமில்லாமல் அலசிப் பார்க்கும் இலக்கியம் தான் உபநிஷத்துக்கள். மேலும் எதையும் ஒரே முடிந்த முடிவாகச் சொல்லிவிடாமல், கேள்விகளை எழுப்புவதும், கேள்விகளிலுள்ள விந்தை பொதியும் மாற்றுத் தத்துவங்களை வெளிக் கொணறுவதும், பிரச்சினையைப் பற்றிப் பல ஆன்மிகவாதிப் பெரியார்கள் சொந்த அனுபவத்தைக்கொண்டு என்ன சொல்கிறார்கள் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைப்பதும், உபநிஷத்துகளின் முத்திரை நடை. இதனால் உலகின் எண்ணச்செறிவுகளிலேயே உபநிஷத்துக்கள் ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கப்படவேண்டியவை என்பது கற்றோர் யாவரின் முடிவு.

                                உபநிஷத் என்ற வடமொழிச்சொல்லின் பொருள் இதில் மூன்று வேர்ச்சொற்கள் உள்ளன. 'உப', 'நி' மற்றும் 'ஸத்3'. சொற்கள் புணரும்போது ஸத்3 என்பது ஷத்3 ஆகிறது. 'உப' என்ற சொல்லினால் குருவை பயபக்தியுடன் அண்டி அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்பதைக் குறிக்கிறது. 'நி' என்ற சொல்லினால், புத்தியின் மூலம் ஏற்படும் ஐயங்கள் அகலும்படியும், மனதில் காலம் காலமாக ஊறியிருக்கும் பற்பல எண்ண ஓட்டங்களின் பாதிப்பு இல்லாமலும், அவ்வுபதேசத்தை வாங்கிக் கொள்வதைக் குறிக்கிறது. ஸத்3' என்ற சொல்லினால் அவ்வுபதேசத்தின் பயனான அஞ்ஞான-அழிவும், பிரம்மத்தின் ஞாபகமும் ஏற்படுவதைக் குறிக்கிறது. வேதப்பொருள் மூன்று வகைப்படும் அவை கர்ம காண்டம்,உபாசன காண்டம்,மற்றும் ஞான காண்டம். இவற்றுள் ஞான காண்டம் தான் 'உபநிஷத்' எனப்படுவது. ஆன்மாவைப் பரம் பொருள் அருகே உய்ப்பது ஆகும். அதாவது வேதத்தின் உட் பொருள் எனக் கொள்ளலாம். இவ்விதம் 108 உபநிஷத்துக்கள் இருப்பதாக முக்திகோபநிஷத்தில்ராமபிரான்ஆஞ்சனேயருக்குச் சொல்கிறார்.அவற்றில் பத்து மிக முக்கியமானவை என்பது வழக்கு. மிகப் பழமையானவையும் கூட. காலடி தந்த ஆதிசங்கரர், ஸ்ரீபெரும்புத்தூர் வள்ளல் இராமானுஜர், உடுப்பி மத்வர், நீலகண்ட சிவாசாரியார் ஆகிய நான்கு சமயசாரியர்களும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சித்தாந்தம் என்னும் கொள்கைகளையொட்டி மேற்கூறிய பத்து முக்கிய உபநிஷத்துக்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளனர். உபநிஷத்பிரம்மேந்திரர் (18வது நூற்றாண்டு) என்று பெயருள்ள துறவி 108 உபநிஷத்துக்களுக்கும் உரை எழுதியுள்ளார். பாரதத்தில் தோன்றிய மெய்யியல் பெரியோர் ஒவ்வொருவரும் உபநிஷத்துக்களில் உள்ள கருத்துக்களைப்பற்றி விரிவாக்கம் தரவோ, ஒரு சில உபநிஷத்துக்களுக்காவது உரையோ விளக்கமோ எழுதவோ தவறியதில்லை.108 உபநிஷத்துக்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:

முக்கிய உபநிஷத்துக்கள். அவையாவன:ஈசம் (சுக்ல யஜுர்வேதம் - வாஜஸனேய சாகை)
கேனம் (சாம வேதம் - தலவகார சாகை)
கடம் (கிருஷ்ணயஜுர்வேதம் - தைத்திரீய சாகை)
ப்ரச்னம் (அதர்வணவேதம்)
முண்டகம் (அதர்வணவேதம்)
மாண்டூக்யம் (அதர்வணவேதம்)
ஜதரேயம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)
தைத்திரீயம் (கிருஷ்ணயஜுர்வேதம் - தைத்திரீய சாகை)
பிரகதாரண்யம் (சுக்லயஜுர்வேதம் - கண்வ சாகை, மாத்யந்தின சாகை)
சாந்தோக்யம் (சாம வேதம் - கௌதம சாகை)

24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான் ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற 24 உபநிடதங்கள் உள்ளன.  ரிக் வேதத்தைச் சார்ந்தவை மூன்று:ஆத்மபோதம்கௌஷீதகீமுத்கலம்கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:அக்ஷிஏகாக்ஷரம்கர்ப்பம்பிராணாக்னிஹோத்ரம்சுவேதாசுவதரம்சாரீரகம்சுகரகசியம்ஸ்கந்தம்ஸர்வஸாரம்
சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:அத்யாத்மம்நிராலம்பம்பைங்களம்மந்த்ரிகாமுக்திகம்ஸுபாலம்
சாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:மஹத்மைத்ராயணீவஜ்ரஸூசிசாவித்ரீ
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:ஆத்மாசூர்யம்

20 யோக உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. யோக உபநிடதங்கள் என்ற  20 உபநிடதங்கள் உள்ளன. ரிக் வேதத்தைச் சார்ந்தவை ஒன்று: நாதபிந்து
கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை பத்து: அமிருதநாதம் அமிருத பிந்து க்ஷுரிகம் தேஜோபிந்து தியான பிந்து பிரம்ம வித்யா யோக குண்டலினீ யோகதத்வம் யோகசிகா வராஹம்
சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை நான்கு: அத்வயதாரகம் த்ரிசிகிப்பிராம்மணம் மண்டலப்பிராம்மணம் ஹம்ஸம்
சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு: ஜாபலதர்சனம் யோகசூடாமணி
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை மூன்று: பசுபதப்பிரம்மம் மஹாவாக்யம் சாண்டில்யம்

17 சன்னியாச உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சன்னியாச உபநிடதங்கள் என்ற 17 உபநிடதங்கள் உள்ளன.  ரிக் வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:நிர்வாணம்
கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை மூன்று:அவதூதம்கடருத்ரம்பிரம்மம்
சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:ஜாபாலம்துரீயாதீதம்பரமஹம்ஸம்பிக்ஷுகம்யாஞ்ஞவல்க்யம்சாட்யாயணி
சாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:ஆருணேயம்குண்டிகம்மைத்ரேயீஸன்னியாஸம்
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை மூன்று:நாரத பரிவ்ராஜகம்பரப்பிரம்மம்பரமஹம்ஸ பரிவ்ராஜகம்

14 வைணவ உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. வைணவ உபநிடதங்கள் என்ற 14 உபநிடதங்கள் உள்ளன.  கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:கலிஸந்தரணம்நாராயணம்சுக்ல
யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:
தாரஸாரம்
சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:அவியக்தம்வாஸுதேவம்
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:கிருஷ்ணம்,கருடம்,கோபாலதாபனீத்ரிபாத்விபூதி மஹாநாராயணம்தத்தாத்ரேயம்நரசிம்மதாபனீராமதாபனீராமரஹஸ்யம்ஹயக்ரீவம்

14 சைவ உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சைவ உபநிடதங்கள் என்ற 14 உபநிடதங்கள் உள்ளன.  ரிக்வேதத்தைச் சார்ந்தவை ஒன்றுஅட்சமாலாகிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:காலாக்னிருத்ரம்கைவல்யம்தட்சிணாமூர்த்திபஞ்சப்பிரம்மம்ருத்ரஹ்ருதயம்சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:ஜாபாலிருத்ராட்ச ஜாபாலம்அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஆறு:அதர்வசிகாஅதர்வசிரம்கணபதிபிருஹஜ்ஜாபாலம்பஸ்மஜாபாலம்சரபம்

9 சாக்த உபநிடதங்கள்உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சாக்த உபநிடதங்கள் என்ற 9 உபநிடதங்கள் உள்ளன.  ரிக்வேதத்தைச் சார்ந்தவை மூன்றுத்ரிபுராபஹ்வ்ருசாஸௌபாக்யலக்ஷ்மிகிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:ஸரஸ்வதிரஹஸ்யம்அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:அன்னபூர்ணாத்ரிபுராதாபனீதேவீபாவனாஸீதா
இவைகளில்,
10 ரிக்வேதத்தைச் சார்ந்தவை
32 கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை
19 சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை
16 சாம வேதத்தைச் சார்ந்தவை
31 அதர்வணவேதத்தைச்சார்ந்தவை. முக்கிய பத்து உபநிஷத்துக்களைத்தவிர, இதர 98 இல் சுவேதாச்வதரம் கௌஷீதகீயம் நரசிம்மபூர்வதாபனீயம் மகோபநிஷத் கலிஸந்தரணம் கைவல்யம் மைத்ராயணீயம் ஆகியவையும் முன்னிடத்தில் வைக்கப்பட்டுப் பேசப்படுகின்றன.

உபநிடதங்களின் வகைகள்

Picture

                        இந்த உபநிடதங்கள் 112 வரையும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் இவைகளில் அதிகமானவை பிற்காலங்களில் உபநிடதங்களாக உருவாக்கிக் கொள்ளப்பட்டவையாகவே இருக்கின்றன. இருப்பினும் இவற்றில் கீழ்காணும் பதின்மூன்று உபநிடதங்கள் உண்மையானவை என்று கொள்ளலாம். அவற்றின் காலங்களைக் கொண்டு அவைகளை வகைப்படுத்தலாம்.


பழங்கால உபநிடதங்கள் கி.மு. 700 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் பழங்கால உபநிடதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை 1. ஈசா 2. சாந்தோக்யம் 3. பிரகதாரண்யகம்

இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள்
கி.மு. 600 -500 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த இரண்டு உபநிடதங்கள் இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை 1. ஐதரேயம் 2. தைத்திரீயம்

மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள்
கி.மு. 500 -400 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த ஐந்து உபநிடதங்கள் மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை 1. பிரச்னம் 2. கேனம் 3. கடம் 4. முண்டகம் 5. மாண்டூக்யம்

நான்காம் காலகட்ட உபநிடதங்கள்
கி.மு. 200 -100 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் நான்காம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை 1. கவுஷீதகி 2. மைத்ரீ 3. சுவேதாசுவதரம்.

                        கைவல்ய உபநிடதம் என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 12வது உபநிஷத்து. இரண்டே அத்தியாயங்களில் மொத்தம் 27 சுலோகங்களைக் கொண்டது. சைவ உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. ஆச்வலாயனருக்கு நான்முக பிரம்மாவால் உபதேசிக்கப்பட்டது என்று தொடங்குகிறது. ஆதி சங்கரர் தன்னுடைய பாஷ்யங்களில் இதனிலிருந்து மேற்கோள்களை அடிக்கடி கையாள்கிறார். பரம்பொருளை முக்கண்ணனாக தியானிக்கவேண்டும். அப்பரம்பொருள் அழுக்கற்றது, இருதயத்தாமரையில் இருப்பது. துன்பமற்றது. சிந்தனைக்கெட்டாதது. வெளிப்படையாய்த் தோன்றாதது. ஆதியும் நடுவும் முடிவுமில்லாதது. ஒன்றேயானது. அறிவும் ஆனந்தமுமே வடிவாகியது. எல்லா உலகின் உற்பத்தி ஸ்தானம். உண்டானதும், உண்டாகப்போவதும் என்றுமுள்ளதும் எல்லாமும் அவனே. மாயையால் மதியிழந்தவன், பெண், உணவு, பானம் முதலியவற்றில் இன்பம் தேடித்தேடி, அதைப்பற்றியே கனவு கண்டுகொண்டு காலம் கழிக்கிறான். மீண்டும் முற்பிறவிகளில் செய்த வினைகளின் கூட்டுறவால் திரும்பத்திரும்ப அதே ஜீவன் தூங்கியும் விழித்தும் (தூலம், நுட்பம், காரணம் என்ற) மூன்று வித உடல்களால் விளையாடுகிறான். அவனிடமிருந்தே விந்தையான இவ்வனைத்தும் தோன்றியுள்ளன. எவனிடத்தில் முப்புரமும் ஒடுங்குகின்றனவோ அவன்தான் ஆதாரமாகவும் ஆனந்தக் கடலாகாவும் பிளவுபடாத அறிவின் விழிப்பாகவும் உள்ள ஆன்மா. எது பரப்பிரம்மமோ, அனைத்திற்கும் ஆன்மாவோ, உலகிற்குப் பெரிய இருப்பிடமோ, நுட்பத்திற்கும் அதிக நுட்பமானதோ, என்றுமுளதோ அந்தப்பிரம்மம் நானே என்று அறிந்து ஒருவன் எல்லாத்தளைகளினின்றும் விடுபடுகின்றான். தான் தானாய் நிற்கும் இன்பம் தான் கைவல்ய முக்தி. தன்னைக் கீழ் அரணிக் கட்டையாகவும் ஓங்காரத்தை மேல் அரணிக் கட்டையாகவும் செய்து ஞானத்தால் திரும்பத் திரும்பக் கடைந்து அறிவாளி பாவத்தைச் சுட்டெரிக்கிறான். (1.11)மூன்று நிலைகளிலும்எது அனுபவிக்கப்படுவதாகவும், எது அனுபவிப்பவனாகவும் அனுபவமாகவும் ஆகின்றதோ அவற்றினின்று வேறாகவும் சாட்சியாகவும் கேவல அறிவு வடிவினனாகவும் என்றும் மங்கள வடிவினன் (சதாசிவன் ) ஆகவும் உள்ளவன் நான்.(1.18) "எவன் சதருத்ரீயத்தை அத்தியயனம் செய்கிறானோ அவன் தீயினால், காற்றால், ஆன்மாவால் தூயப்படுத்தப்பட்டவன் போல் ஆகின்றான்... அதனால் 'அவிமுக்தம்' எனும் பதவியை அடைகின்றான். துறவி அதை ஒவ்வொரு நாளும் ஒருதடவையாவது ஜபிக்கவேண்டும்."(2.6) இது கைவல்ய உபநிஷத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. 'சதருத்ரீயம்' என்பது கிருஷ்ண யஜுர்வேதத்தில் நான்காவது காண்டத்தில் உள்ள ஒரு அத்தியாயம். 'ருத்ரம்' என்ற பெயரால் பிரசித்தி பெற்றது. 'ருத்ரன்' என்ற சிவனை 300 பெயர்களாலும் இன்னும் பல மந்திரங்களாலும் போற்றி போற்றி என்று போற்றுவது. நாராயண தீர்த்தர் என்பவர் இவ்வுபநிஷத்துக்கு உரை எழுதும்போது, இந்த ருத்ரத்தை ‘சகுணப்பிரம்ம உபாசனை’ என்றும், இவ்வுபநிஷத்தை ‘நிர்க்குணப்பிரம்ம உபாசனை’ என்றும் கூறுகிறார். 'அவிமுக்தம்' என்ற வடமொழிச்சொல்லுக்கு 'விடப்படாதது' என்று பொருள். பிரளயத்திலும் உமையோடுகூடிய மகேசன் காசியை விட்டு நீங்காததால் காசி க்ஷேத்திரத்திற்கு 'அவிமுக்த க்ஷேத்திரம்' என்றொரு பெயர் உண்டு. நம் உடலில் புருவமத்திக்கும் அவிமுக்தம் என்று பெயர். ஆறு ஆதார சக்ரங்களில் புருவமத்தியில் உள்ளது ஆஞ்ஞாசக்ரம். இங்கு மனது நிலைக்கும்போது ஞானம் பளிச்சிடுகிறது என்பது யோகநூல்களின் சித்தாந்தம்.
                                சுவேதாசுவதர உபநிடதம் என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 14வது உபநிஷத்து. தைத்திரீய சாகையின் 33 உபநிஷத்துக்களில் இது ஒன்று என்று தொன்றுதொட்டு கருதப்பட்டு வருகிறது. வித்யாரண்யர் தன்னுடைய "சர்வோபநிஷத் அர்த்தானுபூதிப் பிரகாசகத்தில்" இதை 12 வது உபநிஷத்தாக சேர்த்திருக்கிறார். பத்து முக்கிய உபநிஷத்துக்களைத் தாண்டி ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதியிருக்கும் நூல்களில் இதுவும் ஒன்று. இந்த பாஷ்யத்தை ஆதி சங்கரர் செய்ததல்ல என்ற கருத்தும் உள்ளது. (Narayana Sastry: p.81). சுவேதாசுவதரர் என்ற மஹரிஷி இதை உபதேசித்ததாய் இவ்வுபநிஷத்திலேயே கூறப்பட்டுள்ள்து. சுவேத என்றால் வெள்ளை; அசுவதர என்றால் புலன்களாகிய குதிரைக்கூட்டம். மஹரிஷியின் பெயர் தூய புலன்களைக்கொண்டவர் என்று பொருள்படும். ஆறு அத்தியாயங்களைக்கொண்ட இவ்வுபநிஷத்து ஸாங்க்யம், யோகம், மாயை முதலிய பொருள்களைப் பற்றிப் பேசுகிறது. பிரம்மத்தின் நிர்குணத் தன்மையையே அதிகமாகப்பேசிய பத்து முக்கிய உபநிஷத்துகளுக்குப்பிறகு இவ்வுபநிஷத்து தான் ஸகுணப் பிரம்மமெனப்படும் ஈசுவரன் என்ற கடவுள் தத்துவத்தை முன் நிறுத்திப் பேசுகிறது. வேறுவேறான பல தத்துவக் கோணங்களை ஒன்றுபடுத்த முயலுகிறது.(Radhakrishnan, p.707) அனைத்துலகமும் பிரம்மத்தை முழுமுதற்காரணமாகக் கொண்டது.

                              உலகம் ஒர் பிரம்ம சக்கரம். ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் குணங்களைக் குறிக்கும் மூன்று பட்டைகளாலானது. சக்கரத்தை சுழற்றுவதும் பிரம்மத்தின் சக்தியாகிய பிரகிருதி தான். (1.4)
அறிபவனும் அறியப்படுவதும், ஆள்பவனும் ஆளப்படுவதும் ஆகிய இரண்டும் பிறப்பற்றவை. அனுபவிப்பவனுக்கும் அனுபவிக்கப்படுவதற்கும் உறவைக் கற்பிக்கும் ஒருத்தியாகிய (மாயை எனும்) அவளும் பிறப்பற்றவளே. எப்பொழுது இம்மூன்றும் பிரம்மம் என்று ஒருவன் அறிகிறானோ அப்பொழுது அவன் அளவு கடந்து எங்கும் வியாபித்த ஆத்மாவாகவும் எல்லா வடிவங்களிலும் விளங்குபவனாகவும் செயலேது மற்றவனாகவும் ஆகிறான். (1.9) இது நிலையாகத் தன்னிடமே உளதென அறியப்படவேண்டும். அதற்கப்பால் அறியவேண்டியது சிறிதுமில்லை. ஆராய்ந்துணர்ந்து அனுபவிப்பவன், அனுபவிக்கப்படுவது, அனுபவிக்க ஏவுவது எல்லாம் இந்த பிரம்மத்தின் மூன்று வகைகளே.(1.12) எள்ளினுள் எண்ணெய் போலும், தயிரினுள் நெய் போலும், ஊற்றுக்களில் நீர் போலும், அரணிக் கட்டைகளில் தீ போலும் இப்பரமாத்மா ஜீவத்மாவிடம் காணப்படுகிறது. வாய்மையாலும் தவத்தாலும் எவன் இதைக் காண முயலுகின்றானோ அவனால் இதைக் காணமுடிகிறது.(1.15) இத்தேவனே எல்லாத் திசைகளையும் வியாபிக்கிறான். இவனே ஆதியில் தோன்றிய ஹிரண்யகர்ப்பன். இவனே கருவினுள்ளிருப்பவன். பிறந்தவைகளாகவும் இனி பிறக்கப் போகும் உயிர்களாகவும் எல்லாப் பிறவிகளுள்ளும் எங்கும் முகமுடையவனாகவும் நிற்பவன். (2.16)எவன் இவ்வுலகங்களைத் தனது ஆளும் சக்திகளால் ஆள்பவனோ அந்த உருத்ரன் (பிரம்மம்) ஒருவனே. இரண்டாவதாக நிற்க வேறொருவன் இல்லை. அவன் எல்லா மக்களுள் உள்ளுறைபவன். உலகங்களைப் படைத்து காப்பவனாயிருந்து முடிவு காலத்தில் அவைகளைத் தனக்குள் ஒடுக்கிக் கொள்கிறான்.(3.2) சம அந்தஸ்துள்ள இணைபிரியாப் பறவைகள் இரண்டு ஒரே மரத்தில் வசித்தாலும் ஒன்று (ஜீவாத்மா) பழத்தை ருசியுடன் உண்கிறது; மற்றொன்று (பரமாத்மா) உண்ணாமல் பார்த்துக்கொண்டு மாத்திரம் இருக்கிறது. (4.6) பிரகிருதியை மாயையாகவும் எல்லாம் வல்ல ஈசனை மாயையை ஆட்டி வைப்பவனாகவும் அறியவேண்டும்.(4.10) எதனால் இந்தப் பெரிய சக்கரம் சுழற்றப்படுகிறதோ அது இயற்கை என்று சில அறிஞர்களும், அவ்வாறே காலம் என்று பிறரும் மதிமயங்கியவர்களாய்க் கூறுகின்றனர்.

                                     உலகில் இதுவெல்லாம் தெய்வத்தின் மகிமையேயாம்.(6.1) நிலையுள்ள பொருள்களிடை நிலையுள்ளவனாயும் அறிவுள்ள உயிர்களின் அறிவாயும், ஒருவனாய் நின்று அனைவருடைய விருப்பங்களையும் அளிப்பவனாயும், அனைத்திற்குக் காரணமாயும், ஞானயோகத்தால் அடைதற்குரியவனாயும் உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுகிறான். (6.13) அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் பிரகாசிப்பதில்லை. மின்னல்கொடிகளும் பிரகாசிப்பதில்லை.இந்தத்தீ எவ்விதம் பிரகாசிக்கும். விளங்கிடும அவனைச்சார்ந்தே அனைத்தும் விளங்குகிறது. அவனொளியாலேயே இவையனைத்தும் விளங்குகின்றன.(6.14) ஆண்டவனுக்கு அர்ப்பணமாக எல்லாக் கருமங்களையும் செய்து அதனாலேயே கருமத்தினின்று ஒழிவடைந்து தத்துவத்தின் தத்துவத்தால் யோகத்தைக் கைக்கொண்டு ஒன்றாலோ, இரண்டாலோ, மூன்றாலோ, எட்டாலோ, நுட்பமான ஆத்மகுணங்களால் நாளடைவில் ஒருவன் வீடு பெறுகிறான்.(6.3)
அத்வைத வேதாந்த தத்துவப்படி இதன் விளக்கம்:ஆண்டவனுக்கு அர்ப்பணமாகச்செய்யப்படும் எந்த வினையும் செய்பவரை பந்தப்படுத்தமாட்டா.இவ்விதம் பந்தப்படாமல் செய்யப்படும் கருமம் செய்பவரின் வாசனை மூட்டையோ கரும மூட்டையோ அதிகப்படுத்தப்படாது. இவ்விதம் கருமம் செய்வதால்தான் வினைகளைக்குறைத்து கருமத்திலிருந்து ஒழிவுபெறமுடியும். 'தத்துவத்தின் தத்துவத்தால்' என்ற சொற்பிரயோகத்தில் தத்துவம் இருமுறை வருகிறது. முதல் தத்துவம் 24 தத்துவங்கள் கொண்ட படைப்பனைத்தையும் குறிக்கும். அதாவது, பஞ்ச பூதங்கள், மனது, புத்தி, அகங்காரம், அவியக்தம் முதலிய நான்கு, கருமப்புலன்கள் ஐந்து, ஞானப்புலன்கள் ஐந்து, புலன்களை இழுக்கும் ஓசை முதலிய ஐந்து ஆக 24. இரண்டாவது தத்துவம் ‘தத்வமஸி’ (அதுவே நீ) என்ற வேதாந்தக் கூற்றைக் குறிக்கிறது.

                                ஒன்றாலோ: மனத்தாலோ. இரண்டாலோ: மனது, புத்தி இவையாலோ, அ-து, புத்தியால் மனதையடக்கி. மூன்றாலோ: மனது, புத்தி, அகங்காரம் இவற்றாலோ. அ-து, புத்தியால் மனதை அடக்கி, அகங்காரத்தை வென்று.
எட்டாலோ: எட்டு பாகமாகச்சொல்லப்பட்ட ‘அபரா பிரகிருதி’யின் உதவி கொண்டு. பஞ்ச பூதங்களும், மனது, புத்தி, அகங்காரம் இவைகொண்டது அபரா பிரகிருதி. (பகவத் கீதை: 7வது அத்தியாயம்).
சிலந்திப்பூச்சி அல்லது பட்டுப்பூச்சி தனது நூல்களால் தன்னை மறைத்துக்கொள்வதுபோல் இயற்கையாகவே பிரகிருதியில் தோன்றும் பொருள்களால் எந்த தேவன் தானொருவனாகவே தன்னை மறைத்துக் கொள்கிறானோ அவன் நமக்கு பிரம்ம சாயுஜ்யத்தை அளிக்கட்டும்.(6.10) ஆதியில் பிரம்மாவைப்படைத்து அவனுக்கு வேதங்களைக்கொடுத்தருளியவன் எவனோ நமக்குள்ளிருந்து நமது புத்தியைப் பிரகாசிக்கச் செய்பவன் எவனோ அந்த தேவனை மோட்சத்தில் விருப்பமுடைய நான் சரணமடைகின்றேன்.(6.18) எவனுக்கு தெய்வத்தினிடம் சிறந்த பக்தியும் தெய்வத்தினிடம் போலவே குருவினிடமும் பக்தியும் உண்டோ அந்த மகாத்மாவிற்கு உபதேசிக்கப்பட்டால்தான் இப்பொருள்கள் விளங்கும். அவருக்கு, வாய்விட்டுச் சொல்லாமலிருக்கும் ரகசியப் பொருள்களும் தாமாகவே விளங்கிடும். (6.23)

                       ஜாபால உபநிடதம்என்பது சுக்லயசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். அதர்வண வேதத்தைச்சேர்ந்தது என்றும் ஒரு கூற்று உண்டு. முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 13வது உபநிஷத்து. இதை தொகுத்துக் கூறியவர் ஜாபால மகரிஷியாதலால் இது ஜாபால உபநிடதம் எனப் பெயர் பெற்றது. இது ஆறு அத்தியாயங்கள் கொண்டது. இவ்வத்தியாயங்களுக்கு கண்டங்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனில் 'அவிமுக்தம்' என்று கூறப்படும் பரம்பொருளின் இடம் உடலிலுள்ள புருவமத்தி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை அறிந்தவனுக்கு ஸ்ரீருத்ரர் தாரகமந்திரத்தை உபதேசித்து பிறவிப் பெருங்கடலைத் தாண்டச் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.'அவிமுக்தம்' நிலையாக உள்ள இடம் உடலிலேயே சேவிக்கத்தக்க புண்ணியமான இடமான புருவமத்தி. வரணா என்ற புருவங்களுக்கும் நாசி என்ற மூக்குக்கும் மத்தியில் உடலிலுள்ள இடமே வாராணசி. இந்திரியங்கள் செய்யும் பாவங்களை 'வாரயதி' தடுக்கிறது என்றதால் அது வரணா. பாவங்களைச் செய்தபின் அவற்றை நாசம் செய்கிறது என்பதால் நாசி. அது இம்மானுட உலகிற்கும் மேலுள்ள தெய்வ உலகத்திற்கும் உள்ள சந்தி (= பாலம், அல்லது கூடுமிடம்). இந்த சந்தியையே ஞானிகள் சந்தியாவந்தனம் என்ற அன்றாட பூசையில் உபாசிக்கின்றனர். ஒரு சீவனின் உயிர் உடலை விட்டுக் கிளம்புகையில் நெற்றிக் கண்ணனாகிய ருத்ரர் அங்கு தோன்றி அந்த சீவனுக்கு தாரகபிரம்மத்தை உபதேசித்து உய்விக்கிறார் என்ற புராணக் கூற்று வாராணசியைப் பற்றியது. இதன் உட்கருத்து அவிமுக்தம் என்னும் புருவமத்தியில் பரம்பொருளை தியானித்தால் பரமசிவனுடைய அருள் சித்திக்கும் என்பதும் அதனால் முக்தி கிடைக்கும் என்பதுமாகும். மூன்றாவது கண்டத்தில் ருத்ரஜபத்தின் பெருமை விவரிக்கப்படுகிறது.

                         ஸ்ரீருத்ரம் ருத்ரோபநிடதம் என்னும் சிறப்புப் பெயர் வாய்ந்தது. ஐந்தெழுத்து மந்திரமான சிவ பஞ்சாக்ஷரீ மந்திரம் இதனில் உள்ளது. 101 யஜுர்வேத சாகைகளிலும் இன்னும் பல வேத சாகைகளிலும் இது காணப்படுவதாலும், நூற்றுக் கணக்கான வடிவங்களில் ருத்ரன் இங்கு போற்றப்படுவதாலும் ஸ்ரீருத்ரத்திற்கு சதருத்ரீயம் என்னும் பெயரும் உண்டு. ('சத' என்னும் வடமொழிச் சொல்லுக்கு நூறு என்று பொருள்). சதருத்ரீயத்தை ஜபித்தால் ஒருவன் சாகாநிலை என்னும் வீடு பெறுவான் என்பதை இக்கண்டத்தில் யாக்ஞவல்கிய முனி அவருடைய சீடர்களுக்கு உபதேசிக்கிறார்.
நான்காவது, ஐந்தாவது, ஆறாவது கண்டத்தில், சன்னியாசம் என்ற துறவைப்பற்றிய நுணுக்கங்கள் விவரிக்கப்படுகின்றன. இத்துறவில் மேன்மையானவர்களில் சிலர்: ஆருணி, சுவேதகேது, துர்வாசர், ரிபு, நிதாகர், ஜடபரதர், தத்தாத்திரேயர், ரைவதர், ஆகியோர். இவர்கள் பித்தர்களல்ல ராயினும் பித்தர்களைப் போன்ற நடத்தை உடையவர்கள். பிறந்தமேனியாக முடிச்சேதுமில்லாமல், தங்களுக்கென்று தங்குமிடமே இல்லாமல், இவர்கள் பரமஹம்ஸர்கள் எனப்படுவர். உலகச் செயல்களை வேருடன் களைந்தவர்களாய் இருந்தவர்கள். அவர்களே வாழ்வாங்கு வாழ்ந்த மேன்மக்கள் என்று இவ்வுபநிடதம் கூறுகின்றது.
                         பைங்கள உபநிடதம் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 60வது உபநிஷத்து. நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. பன்னிரண்டாண்டுகள் பணிவிடை செய்த பைங்களருக்கு யாஜ்ஞவல்கியரால் உபதேசிக்கப்பட்டது என்று தொடங்குகிறது. பற்பல வேதாந்தக் கருத்துக்களை ஆணித்தரமாகவும் சுருக்கமாகவும் எளியநடையிலும் போதிக்கும் உபநிடதம் என்று சொல்லலாம். முன்னைப் பரம்பொருளாக, காரியமற்றதாக, இரண்டற்றதாக ஒன்றுதான் இருந்தது. அதுதான் பிரம்மம். அதன் உருவம் உண்மை, அறிவு, ஆனந்தம். அதில் இப்படி, அப்படி என்று எப்படியும் சொல்லமுடியாதபடி முக்குணமும் சமானமான மூலப்பிரகிருதி தோன்றிற்று. இதில் பிரதிபலித்த பிம்பம்தான் சாட்சி சைதன்யம். அம்மூலப்பிரகிருதி சத்வகுணம் மேலிட்டதாக மாறி அவியக்தம் அல்லது மாயை என்ற 'ஆவரண சக்தி' ஆயிற்று. 'ஆவரணம்' - எல்லாவற்றையும் மறைக்கக்கூடியது. அதில் பிரதிபலித்த பிம்பம்தான் கடவுட்சைதன்யம். அக்கடவுள் மாயையை தன்வசப்படுத்திக் கொண்டு அனைத்தையும் அறிபவராக பேருலகத்தையும் சுருட்டிய பாயைப்பிரித்துவிடுவது போல் தோற்றுவிக்கிறார். காத்தல், அழித்தல் தொழில்களும் அவருடையதே. பிராணிகளின் கருமங்களை அனுசரித்தே அவை தோன்றுவதும் அழிவதும் உண்டாகின்றது அம்மாயையிலிருந்து ரஜஸ் மேலிட்டதான மஹத் என்ற 'விட்சேப சக்தி' உண்டாயிற்று. 'விட்சேபம்' - ஒன்றை வேறொன்றாகக் காட்டுவது.

                                அதில் பிரதிபலித்த பிம்பம்தான் ஹிரண்யகர்ப்ப சைதன்யம்.
இதிலிருந்து தமஸ் மேலிட்டதான பேரகந்தை உண்டாயிற்று. இதில் பிரதிபலித்த பிம்பம் விராட்புருஷன்.அவனிடமிருந்து, வெளி, காற்று, தீ, நீர், நிலம் இவைகளுடைய மூலப்பொருட்கள் ('தன்மாத்திரைகள்') உண்டாயின. இந்த சூட்சுமப்பொருட்களைத் தூலப்பொருட்களாக மாற்றவேண்டி, அக்கடவுள் ஒவ்வொன்றையும் இரண்டு பாகமாக்கி, அவைகள் ஒவ்வொன்றையும் நான்காக்கி, ஐந்து அரைபாகங்களையும் மற்றநான்கின் அரைக்கால் பாகங்களுடன் சேர்த்து, இவ்விதம் 'பஞ்சீகரணம்' செய்து உண்டாக்கப்பட்ட தூலப்பொருட்களால் உலகிலுள்ள கோடிக்கணக்கான பொருட்களையும் பதினான்கு உலகங்களையும் படைத்தார். இவ்விதம் தொடங்கி, இவ்வுபநிடதம், ஜீவர்கள் படைக்கப்பட்டதையும், தூல சூட்சும உடல்களைப்பற்றியும், பந்தம், மோட்சம் இவைகளைப்பற்றியும் பேசுகிறது. 'அது நீ'; 'நான் பிரம்மம்' முதலிய மகாவாக்கியத்தின் தத்துவத்தை அறியும் நோக்கத்துடன் குருவிடம் கேட்டறிதல் 'சிரவணம்' எனப்படும்.(3 -2) கேட்டறிந்த பொருளைத் தனிமையில் ஆழ்ந்து சிந்தித்தல் மனனம் (3-2) சிரவணத்தாலும் மனனத்தாலும் தீர்மானமாகிய பொருளில் ஒன்றி மனதை நிறுத்துதல் 'நிதித்தியாசனம்' எனப்படும்.((3-2) அறிவையும் அறிபவனையும் கடந்து அறியப்படும் பொருளுடன் ஒன்றுபட்டுக் காற்றில்லாத இடத்தில் விளக்கைப்போல் சித்தம் அசையாதிருக்கும் நிலை சமாதி எனப்படும்.(3 -2) நீர் நீரிலும், பால் பாலிலும், நெய் நெய்யிலும் வேறுபாடில்லாமல் ஒன்றாவதுபோல் ஜீவனும் பரமாத்மனும் ஒன்றாகின்றனர். (4-10) ருத்ரஹ்ருதய உபநிடதம் என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும்.
 
                                 
முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 86வது உபநிஷத்து. 52 சுலோகங்கள் கொண்ட ஒரு சிறிய உபநிஷத்து. சுகருக்கு வியாசர் அருளிச்செய்தது.
எல்லா தேவர்களிடமும் எந்த தேவர் இருக்கிறார்? எவரிடம் எல்லா தேவர்களும் இருக்கிறார்கள்? மகன் சுகரின் இக்கேள்விகளுக்கு விடையாக தந்தை வியாசர் பகர்ந்தது தான் இவ்வுபநிஷத்து. எல்லா தேவர்களும் சிவ உருவத்தில் அடக்கம். உமாவும்ருத்ரரும் இணைந்த வடிவம் தான் எல்லா உலக மக்களும், அசைவனவும் அசையாததுமாகிய இவ்வுலகமும். அந்த சிவ உருவமே இரண்டற்ற பரப்பிரம்மம். அனைத்துலகிற்கும் ஆதாரம். அது அறியப்பட்டால் எல்லாம் அறியப்பட்டதாகும். எவன் அங்ஙனம் பரப்பிரம்மத்தை அறிந்தவனோ அவன் தன்னிடம் விளங்கும் சச்சிதானந்த வடிவான பிரம்மமாகவே விளங்குவான். எவர்கள் கோவிந்தரை வணங்குகிறார்களோ அவர்கள் சங்கரரை வணங்குபவராவர். எவர்கள் பக்தியுடன் ஹரியைப் பூஜிக்கிறார்களோ அவர்கள் காளைக்கொடியுடையனான ருத்ரரைப் பூஜிக்கிறார்கள். (6) ஆண் வடிவமெல்லாம் சிவன். பெண் வடிவலெல்லாம் பகவதி உமாதேவி. (9) வெளிப்படையான எல்லாம் உமாரூபம். வெளிப்படையாக இல்லாதது மகேசுவரர். உமாவும் சங்கரரும் இணைந்த வடிவம் மகாவிஷ்ணு.(10) ஓம்காரம் வில், ஆன்மா அம்பு, மற்றும் பிரம்மம் குறிக்கோள் எனப்படுகின்றன. (38). குடத்தின் வெளிக்கும் வெளியிலிருக்கும் வெளிக்கும் வேறுபாடு எங்ஙனம் கற்பனையோ அவ்விதமே ஈசனுக்கும் ஜீவனுக்கும் வேறுபாடு கற்பனையே.(43).

மகாவாக்கியங்கள்

Picture
                              மகாவாக்கியங்கள்என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மகாவாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மகாவாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. இந்து மதத்தின் அனைத்து தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:
1. பிரக்ஞானம் பிரம்ம - "பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்" (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்])
2. அயம் ஆத்மா பிரம்ம - "இந்த ஆத்மா பிரம்மன்"(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
3. தத் த்வம் அஸி - "அது(பிரம்மம்) நீ" (சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம்)
4. அஹம் பிரம்மாஸ்மி - "நான் பிரம்மன்" (யஜுர் வேதத்தின்பிருஹதாரண்யக உபநிடதம்) மேலே கூறப்பட்டுள்ள பிரம்மன்,பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்படும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் 'பிரம்மனை' குறிக்கிறது இந்த நான்கு மகாவாக்கியங்களும் ஆத்மனுக்கும் பிரம்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது. பிரம்மன் படைப்பின் அடிப்படை தத்துவம், பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியது. அதே சமயம் ஆத்மன் அனைத்து உயிர்களிடத்தும் அறியப்படும் தான் என்ற தத்துவத்தின் மூலாதார உருவகம். ஆத்மன் அழிவற்றது அதே போல் பிரம்மனும் அழிவற்றது. யோகத்தின் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் ஒருவர் ஆத்மனும் பிரம்மனும் ஒன்று என்பதை அறிய இயலும். காஞ்சி பராமாச்சாரியர் தன்னுடைய புத்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: சன்யாசத்துக்குள் ஒருவர் நுழையும் போது அவருக்கு இந்த நான்கு மகாவாக்கியங்களும் கற்றுத்தரப்படுகின்றன.
பிற வாக்கியங்கள் உபநிடதங்களில் குறிப்பிடப்படும் வேறு சில முக்கியமான வாக்கியங்கள்:
சர்வம் கல்விதம் பிரம்ம - அனைத்து அறிவும் பிரம்மன் (சந்தோக்ய உபநிடதம்)
நேஹ நானாஸ்தி கிஞ்சின - வேறெங்கும் எதுவும் இல்லை(சந்தோக்ய உபநிடதம்)

            தத்துவமசி என்ற மகாவாக்கியம்.இந்து சமய வேத நூல்களில் வேதாந்தப்பொருள்களை விளக்குவதற்காகவே தொகுக்கப்பட்டிருக்கும் பிரிவுகள் உபநிடதங்கள் எனப்படும். அவைகளில் வேதத்திற்கொன்றாக நான்கு மகாவாக்கியங்கள் போற்றப்படுகின்றன. சாமவேதத்திய மகாவாக்கியம் தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि) தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : உளாய், அல்லது 'நீ அதுவாக உளாய்' என்றும் சொல்லலாம். இம்மகாவாக்கியத்திலுள்ள சொற்களின் பொருள் இவ்வளவு எளிதாக இருப்பினும், வாக்கியத்தின் உட்கருத்தைப்பற்றி வெவ்வேறு வேதாந்தப்பிரிவினரின் கொள்கைகள் கணிசமாக மாறுபடுகின்றன. சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி என்ற மகரிஷி பன்னிரண்டு வயதுள்ள மகன் சுவேதகேதுவை குருகுலத்திற்கு அனுப்பி வேதசாத்திரங்களெல்லாம் கற்று வரும்படிச் சொல்கிறார். பன்னிரண்டாண்டுகள் குருகுலத்தில் படித்துவிட்டுத் திரும்பும் வாலிபனிடம் "எதனால் கேள்விக் கெட்டாதது கேட்கப் பட்டதாயும், நினைவுக் கெட்டாதது நினைக்கப் பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அவ்வுபதேசத்தை குருவிடம் தெரிந்துகொண்டாயா?"என்று கேட்கிறார். இதைத்தொடர்ந்து தானே அவனுக்கு அந்த பரம்பொருளை ஒன்பது எடுத்துக் காட்டுகளால் விளக்கி, முடிந்தமுடிவாக இதே மகாவாக்கியத்தை ஒன்பது முறையும் சொல்கிறார்.
"எப்படி எல்லா ஆறுகளும் எல்லாத் திசையிலிருந்தும் கடலையே அடைந்து, கடலாகவே ஆகிவிடுகின்றனவோ, மற்றும் அவை அந்நிலையில் 'நான் இது'என்று எங்ஙனம் அறியமாட்டாவோ அங்ஙனமே பிராணிகளெல்லாம் பரம்பொருளிலிருந்து தோன்றினோம் என உணரவில்லை. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்"
"ஆலம்பழம் ஒன்றைப்பிளந்தால் அணுவடிவான விதைகள் காணப்படுகின்றன. அவ்விதைகளில் ஒன்றைப் பிளந்தால் ஒன்றும் காணப்படுவதில்லை. ஆனால் காணப்படாத அந்த சூட்சுமப் பொருளிலிருந்தே பெரிய ஆலமரம் உண்டாகி நிற்கிறது. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்"
 "உப்பை நீரில் போட்டு வைத்து அது கரைந்தபின், நீரில் போட்ட உப்பைக்கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் நீரில் மேல்பாகத்தையோ நடுப்பாகத்தையோ அடிப்பாகத்தையோ உண்டுபார்த்தால் அது உப்பாகவேயிருப்பது தெரியும். அதேபோல் முக்காலமும் சத்தான பொருளை நீ காணவில்லை எனினும் அது எங்கும் இருக்கவே இருக்கிறது. அணுமாத்திரமான் அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்""ஒருவனை கண்ணைக்கட்டி காந்தாரதேசத்தில் ஒரு காட்டில் கொண்டுபோய்விட்டு பிறகு அவன் கண்ணைத் திறந்து நீ வீட்டுக்குப்போ என்று சொன்னால் அவனால் எப்படிப் போகமுடியும்? அச்சமயம் ஒரு அயல் மனிதன் வந்து அவனுக்கு பாதை காட்டி அவனுடைய வீட்டுக்குப்போக வழி சொல்லிக் கொடுத்தால் எப்படியோ அப்படித்தான் ஒரு குரு நமக்கெல்லாம் இச்சம்சாரக் காட்டிலிருந்து மீள வழி காட்டுகிறார். அந்தப்பாதையில் சென்று ஞானோதயம் பெற்று அப்பரம்பொருளுடன் ஒன்று படலாம். அணுமாத்திரமான் அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்"

                            ஆதி சங்கரரால் விரிவாக விளக்கப்பட்டு பற்பல நூற்றாண்டுகளாக பல்வேறு அறிவாளிகளால் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் அத்வைத வேதாந்தம் 'அதுவே நீயாக உளாய்' என்பதை 'அது'வும் 'நீ'யும் ஒன்றே என்று பொருள் கொள்கிறது. இங்கு 'அது' என்பது பரம்பொருள். 'நீ' என்பது ஒவ்வொரு பிராணிகளிலுமுள்ள ஆன்மா. நாம் ஓரிடத்தில் ஒருகாலத்தில் பார்த்த ஒரு நபரை, மற்றோரிடத்தில், மற்றொருகாலத்தில் வேறு பெயரிலும், வேறு வேடத்திலும் சந்தித்தாலும், 'அவர் தான் இவர்' என்று சொல்லும்போது எப்படி 'அவர்', 'இவர்' இருவருடைய நடை, உடை, பாவனைகளில் 'அன்று', 'இன்று' என்ற இருகாலகட்டங்களில் உள்ள வேற்றுமைகளைத் தள்ளுபடி செய்துவிட்டு, இருவருக்குள்ளும் உள்ள ஏதோ ஓர் ஒற்றுமையை 'இது தான் நிரந்தரம்; மற்றவையெல்லாம் கால தேசங்களால் ஏற்பட்ட வெளி வேற்றுமைகள்' என்று தீர்மானித்து, இருவரும் ஒருவரே என்று தீர்மானிக்கிறோமோ, அதே முறையில் 'அதுவே நீயாக உளாய்' என்ற வாக்கியத்தில், 'அது' என்ற பரம்பொருளினிடத்திலுள்ள படைப்பாற்றல், மாயா ஆற்றல் முதலிய மானிடமல்லாத குணங்களைத் தள்ளிவிட்டு, அவ்விதமே 'நீ' என்ற பிராணியினிடத்தில் குடிகொண்டிருக்கும் அஞ்ஞானத்தையும், உடல், மனது, புத்தி இவைகளையும் தள்ளிவிட்டால், 'அது'வும், 'நீ'யும் ஒன்றே என்பது விளங்கும் என்பது அத்வைத சித்தாந்தம்.

                         ஸ்ரீராமானுஜரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக வைணவம் என்ற பெயரில் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விசிட்டாத்துவைத வேதாந்தம் மேற்சொன்ன அத்வைத சித்தாந்தத்தை மறுக்கிறது. மகாவாக்கியத்திலுள்ள 'நீ' என்ற சொல், பிராணிகளிலுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது என்பது உண்மைதான்; ஆனால் இவ்வான்மாவையும் அப்பரம்பொருளையும் ஒன்றாக்கி ஒரு முற்றொருமையாகக் கூறமுடியாது. ஏனென்றால், இவ்வான்மா அப்பரம்பொருளின் ஒர் அம்சமே. 'இது' வும் 'அது' வும் ஒன்றாகாது. இரண்டன்மை என்னும் பொருள் படும் அத்வைதம் என்னும் கருத்தில் இருந்து நுட்பமாய் வேறுபாடு கொண்டது என்று குறிக்கவே விசிட்டா என்னும் முன்னொட்டு உள்ளது.
மத்வாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக பெரிதும் போற்றப்படும் துவைத வேதாந்தம் மேற்சொன்ன இரு சித்தாந்தங்களையும் மறுக்கிறது. 'தத்துவமஸி' என்றுள்ள உபநிடதவாக்கியத்திற்கு முன்னால் வரும் 'ஸ ஆத்மா' என்ற சொற்களைச் சேர்த்து இலக்கண வழிப்படி பார்க்கும்போது, 'ஸ ஆத்மாதத்துவமஸி' என்பதை 'ஸ ஆத்மா + அதத்துவமஸி' என்று பிரிக்கவேண்டும் என்றும், அதனால் அதன் பொருள் 'நீ 'அதத்', அதாவது, பரம்பொருள் அல்லாததாக, உளாய்' என்று ஏற்படுகிறது. ஆக, அத்வைதம் சொல்கிறபடி ஆன்மாவும் பரம்பொருளும் முற்றொருமையாகவோ, விசிஷ்டாத்வைதக் கூற்றின்படி ஆன்மா பரம்பொருளின் ஓர் அம்சமாகவோ இருக்கமுடியாது. ஆன்மாக்கள் வேறு. பரம்பொருள் வேறு, என்பது துவைத சித்தாந்தம். மேலும் இவ்விதம் 'அதத்துவமஸி' என்று சொல்வதுதான் சுவேதகேதுவின் கேள்விகள் ஏற்பட்ட சூழ்நிலைக்குப் பொருந்துகிறது. ஏனென்றால் அவன் வரும்போதே தான் 12 ஆண்டுகள் படித்துவிட்ட செறுக்குடன் வந்தான். அவன் உண்மையில் பரம்பொருள் என்று சொல்லப்பட்டுவிட்டால் அவனது கர்வம் இன்னும் அதிகமாகிவிடும். (அத்வைதப்பிரிவினர் இவ்வாதத்தை மறுக்கின்றனர்.)

 சுத்தாத்வைதம்
இது 15ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லபாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்ட வேதாந்தப்பிரிவு. இதன்படி ஆன்மாவும் பரம்பொருளும் சாராம்சத்தில் ஒன்றே; ஆனால் ஆன்மாவுக்கு பரம்பொருளின் ஆனந்தாம்சம் கிடையாது. அதனால் 'தத்துவமஸி' என்ற மகாவாக்கியத்திற்கு சங்கரரின் முற்றொருமையில் ஒரு சிறிய மாற்றத்துடன் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, 'தத்' என்பது பரம்பொருள். 'துவம்' என்ற சீவன் அதனுடைய ஒரு பாகம்.

துவைதாத்வைதம் இது நிம்பர்ககாச்சாரியாரால் 11ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சித்தாந்தம். இதன்படி, பரம்பொருளுக்கும் தனிப்பட்ட சீவன்களுக்கும் உள்ள 'பேதத்தில் அபேதம்', ஆதவனுக்கும் அதன் கிரணங்களுக்கும் உள்ள உறவு, அல்லது நெருப்புக்கும் நெருப்புத்துளிகளுக்கும் உள்ள உறவு, இவைகளைப் போன்றது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்.

அசிந்த்ய-பேதாபேதம் இது 16ம் நூற்றாண்டில் சைதன்யரால் விரிவாக விளக்கப்பட்டது. பரம்பொருளுக்கும் சீவனுக்கும் உள்ள பேதாபேதம் நம் அறிவுக்கெட்டாதது. ஒரே சமயத்தில் 'அது'வும் 'நீ'யும் ஒன்றாகவும் வேறாகவும் உள்ளது. குணங்களில் ஒன்றாகவும், அளவில் வேறாகவும் உள்ளது. ஒன்று முடிவுள்ளது, ம்ற்றொன்று முடிவில்லாதது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்.
 
Via (சித்தர்கள்) angelinmery