மனிதனை குடிக்கும் மது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:23 | Best Blogger Tips

மது உணர்வூட்டும் பொருள் அல்ல. உணர்வை, உடலை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மது அருந்துவதால் சுதந்திர உணர்வு தோன்றுவதாகவும், அதிக சக்தி கிடைப்பதாகவும், களைப்பு நீங்குவதாகவும் பலர் நினைக்கின்றார்கள். இளமைப் பருவத்தில் மதுவால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை என்றாலும் பிற்காலத்தில் மதுவினால் பாதிப்புகள் ஏராளம். மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்திற்கு உற்சாம் பிறக்கிறது. மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது.

மதுவின் தீமைகளை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் "மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும், தீய செயல்" என்றும் கூறுகிறது. மது உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.

மதுவிற்கு அடிமையாகின்றவர்கள்

ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், கடின உழைப்பாளிகள், கவலைப்படுகின்றவர்கள், மன நிம்மதி இழந்தவர்கள் போன்றவர்களே, அதிகம் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. சந்தோசத்திற்காக குடிக்க ஆரம்பித்தவர்கள் பிறகு மதுவிற்கு அடிமையாகி விடுவதோடு குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள். குடிப் பழக்கம் உள்ள வீட்டுக் குழந்தைகளும் நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி கெட்டுப் போகும் நிலை ஏற்படுகிறது.

மதுவால் ஏற்படும் பிரச்சனைகள்

மது மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதித்து உடல் நலத்தை சீர்குலைக்கிறது.

மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் (Cirrhosis) ஏற்படுகிறது. பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.

மது வயிற்றுக்குள் செல்லும் போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி (Gastritis) ஏற்பட்டு குடலில் புண் ஏற்படுகிறது.

வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது.

தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது.

உடலில் சர்க்கரை சத்தைச் சீர்படுத்தும் கணையம் பாதிக்கப்படுகிறது.

அடிக்கடி மறதி ஏற்பட்டு சோர்வு ஏற்படும்.

கோர்ஸா காஃப்ஸ் சின்ட்ரோம் (Korsakoff's Syndrome) என்ற மூளை பாதிப்பு நோய் ஏற்பட வழி வகுக்கிறது.

உயிர்சத்து `பி' குறைவால் வெர்னிக் சின்ட்ரோம் (Wernike's Syndrome) என்ற நோய் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

மது அருந்துபவர்களுக்கு மன நோய்கள் பல ஏற்பட்டு மன நோயாளிகளாகி விடும் வாய்ப்பு அதிகமுண்டு.

மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது.

இன்னும் எத்தனையோ பிரச்சனைகள். அத்தனையும் மதுவினால் ஏற்படுவதே. மதுப்பிரியர்களே! முதலில் மதுவை குடிப்பீர்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மது மனிதனைக் குடிக்கும் என்பது மட்டுமே உங்க ள்நினைவில் நிற்கப்படும்.

மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஹோமியோபதி மருத்துவம்

மதுவுக்கு அடிமை என்பது உடல் ரீதியான பிரச்சனை மட்டுமல்ல. மனரீதியான, சமூக ரீதியான பிரச்சனையாகும். ஆகவே இவர்களை குணமாக்க உளவியல் ரீதியாகவும் அணுக வேண்டியது அவசியம். அந்த வகையில் ஹோமியோபதி மருந்துகள் உடலில் மதுவினால் உண்டான நலக்கேடுகளை சீர்படுத்துவதோடு மனரீதியான தூண்டுதல்களையும் சரி செய்து நல்வாழ்வுப்படுத்த உதவுகிறது.

ஹோமியோபதியில் மது பழக்கத்தை ஒழிக்க பல மருந்துகள் இருந்த போதிலும் "கொர்கஸ் கிளாண்டஸ் ஸ்பிரிடஸ்" (Quercus Glandus spritus Q) எனும் மருந்து மதுவினால் உண்டான கோளாறுகள், தலைச்சுற்றல், நடுக்கம் போன்றவைகளை குணமாக்க உதவுவதோடு மதுவை மறக்கவும் துணை புரிகிறது.

மதுப்பழக்கம் ஏற்படுத்தும் நரம்புத் தளர்ச்சி, மன ரீதியான பிரச்சனைகள், குழப்பம், தூக்கமின்மை போன்றவைகளைக் குணப்படுத்த "அவினா சடைவா" என்ற மருந்தும், எப்போதும் எரிச்சலுடன் கூடிய மனநிலையுடனும் தலைவலி, காலையில் எழுந்த உடன் தலைச்சுற்றல், கண்களில் கூச்சம் போன்ற தொல்லைகளுக்கு "நக்ஸ்வாமிகா" போன்ற மருந்துகள் சிறந்தவை. இம்மருந்துகளை தொடர்ந்து டாக்டரின் ஆலோசனையின்படி உட்கொண்டால் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதோடு மறுவாழ்வு பெறுவது நிச்சயம்.



ஆதாரம் - -டாக்டர் அக்னஸ் ஜாய்