எதை கொடுத்தால்......! சொர்க்கத்தை வாங்க முடியும்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:24 | Best Blogger Tips


சமூகத்தில் பெரிய மனுஷன் என்று சொல்லிக்கொண்டவன் பூவுலகில் மிகவும் வசதியாக வாழ்ந்து வாழ்ந்தான்.
ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு பரலோகத்திற்கு போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.
இங்கே யாருமே இல்லையா? என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. சிறிது நேரம் சென்ற பின் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனுஷன், தனது சட்டைப்பையிலிருந்து 1000 ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்! என சொல்ல,
சித்ரகுப்தன் சிரித்தான்.
இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள். லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது! என்றான்.
அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது? என அந்த பெரிய மனிதன் கேட்க,
சொர்க்கத்துலே நுழையறதுக்கான
அனுமதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா? என சித்திரகுப்தன் கேட்க,
அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.
'அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’
வேறே எப்படி வாங்கறது?’
அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி
செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’
‘‘என்ன சொல்றே நீ?’
‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’
‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’
‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது...
ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’
பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.
பிறகு சொன்னான்:
ஒரு முறை ஒரு கிழவிக்கு 10ரூபாய் தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்திருக்கேன்.’
‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.
கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.
‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’
‘‘என்ன உத்தரவு?’’
‘‘அந்தப் பதினஞ்சு ரூபாயை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’
‘‘அப்புறம்?’’
‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.
ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்.
காசு கொடுத்து சொர்க்கத்தை
வாங்க முடியாது. ஆனால், இயலாதவர்ளுக்கு கருணையைக் காட்டி தானம், தர்மம் செய்தால் அதைச் சுலபமாக வாங்க முடியும்.
கடவுளுக்கு உருவமில்லை என்று உலகில் உள்ள அனைத்து மதங்களும் சொல்கின்றன.
ஆனால் கடவுள் தன்மைக்கு உருவமுண்டு என மனிதன் நம்புகிறான். பசித்திருக்கும் ஒருவனுக்கு அன்னமிடுபவன் எவரோ அவன் பசித்தவனுக்குக் கடவுளாகிறான்.
சாலையின் நடுவில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவனை மருத்துவமனை சேர்த்துக் காப்பாற்றியவன் அடிபட்டவனுக்குக் கடவுளாகத் தெரிகிறான்.
இதுபோல துன்பத்திலும், துயரத்திலும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரை அந்நிலைமையிலிருந்து யார் மீட்கிறார்களோ அவர்கள் கடவுளாகத் தெரிகிறார்கள்.
சிஷ்யனுக்கு குருவே கடவுள். ஞானக் கண்ணைத் திறந்துவிடுகிறார் அல்லவா? அதனால்தான் மாதா,பிதா,குரு என்று சொல்லிய நாம் தெய்வத்தைக்கூட இறுதியில்தான் வைத்துள்ளோம்.
கடவுளுக்கு இணை வைக்கககூடாது என்று எந்தக் கடவுளும் சொல்லியதில்லை. அப்படி இணைவைத்தவர்களுக்கு கடவுள் கருணை காட்டாமல் போனதுமில்லை.