குழந்தை பிறந்த பின் மனரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:54 | Best Blogger Tips
குழந்தை பிறந்த பின் மனரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!! 
குழந்தை செல்வத்திற்காக ஏங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனக்கென்று ஒரு குழந்தை பிறந்து, அது தன்னை அப்பா அல்லது அம்மா என்று அழைக்கும் போது தான், வாழ்க்கைக்கே முழு அர்த்தம் கிடைக்கிறது. குழந்தை பிறந்து அதனுடன் செலவழிக்கும் நேரம் என்பது கடவுளுடன் நாம் இருப்பதை போல் உணரலாம், அது தந்தையானாலும் சரி, தாயானாலும் சரி. ஆனால் இந்த சந்தோஷத்தை அடைய ஒரு பெண் படும் கஷ்டங்கள் ஒன்றா இரண்டா? எல்லாம் குழந்தை பிறக்கும் வரை தானே என்று எண்ணுபவர்கள், முதலில் இதை படியுங்கள்.

பொதுவாக குழந்தை பிறந்து 2-3 மாதம் வரை மற்றும் பிரசவ வலி குறையும் வரை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒரு பெண் படும் அவஸ்தைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏனெனில் குழந்தை பெற்றப் பின், ஒரு பெண் பல உணர்ச்சிப்பூர்வமான மாறுதல்களுக்கு ஆளாகிறாள். அந்நேரத்தில் உண்டாகும் மன அழுத்தத்தை போக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிலும் குழந்தைப் பிறந்த பின் ஏற்படும் மன அழுத்தம் மிகவும் ஆபத்தானவை. அதனால் அதற்கான உதவியை மற்றவர்களிடம் கேட்க தயங்கக்கூடாது. அதுமட்டுமல்லாமல், குழந்தையும் உங்களுடன் இருப்பதால், பல உணர்ச்சிப்பூர்வ மாறுதல்களை உணரக்கூடும். இப்போது எவ்வகை மாறுதல்களை சந்திக்கக்கூடும் மற்றும் எப்போது குணமாகும் என்று பார்ப்போம்.


பேபி ப்ளூ (Baby Blue)

பொதுவாக பிரசவமான காலத்தில் பெண்களுக்கு எரிச்சல், வருத்தம், அழுகை மற்றும் அதீத பதற்றம் போன்றவைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இவ்வகை உணர்ச்சிகள் சந்திக்கக்கூடியவையே. இதற்கு உடல் ரீதியான மாற்றங்களும் (ஹார்மோன் மாறுதல்கள், சோர்வு மற்றும் எதிர்பார்க்காத குழந்தை பிறப்பின் அனுபவங்கள்) ஒரு காரணமே. மேலும் புதிதாக பிறந்த குழந்தையாலும், அதில் உங்கள் பங்களிப்பினால் ஏற்படும் உணர்ச்சி பூர்வ மாறுதல்களாலும், இவ்வகை உணர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடும். இவ்வகை உணர்ச்சிகள் ஒரு வாரத்தில் நீங்கும்.

மன அழுத்தம்

பேபி ப்ளூஸ் எனப்படும் உணர்ச்சிகளை விட, இக்காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அதிக நாட்கள் நீடித்து நிற்பதுடன், ஆபத்தானதாகவும் விளங்குகிறது. இவ்வகை அழுத்தம் 10-25% தாய்மார்களுக்கு ஏற்படுவதுண்டு. இந்த அழுத்தம் இருந்தால், மனநிலை மாறுதல், அதீத பதற்றம், குற்ற உணர்வு மற்றும் நீங்காத சோகம் போன்றவைகளுக்கு உள்ளாக நேரிடும். அதிகபட்சமாக குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்கு, இவ்வகை அழுத்தம் நீடிக்கலாம். ஏற்கனவே மன அழுத்தம் உள்ளவர்களானால் அல்லது பரம்பரையாக அழுத்தம் இருந்து வந்தால், இந்த பாதிப்பு எளிதில் ஏற்படலாம்.

உடலுறவு

இது போக, உடலுறவு என்று வரும் போது உங்களுக்கும், உங்கள் கணவனுக்கும் வேறு வேறு கருத்து இருக்கலாம். குழந்தை பிறந்த உடனேயே, அதற்கு உங்கள் கணவன் தயாராகி விடலாம். உங்களையும் அதற்கு எதிர்பார்க்கலாம். ஆனால் நீங்களோ உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி, இன்னும் தயார் நிலையில் இல்லாமல் போகலாம். மேலும் இன்னும் சில நாட்களுக்கு நிம்மதியான தூக்கத்தையே எதிர்பார்ப்பீர்கள். மருத்துவர்கள் கூட பெண்களை சில நாட்களுக்கு உடலுறவு கொள்வதை தவிர்க்கவே அறிவுறுத்துவார்கள். பெண்களுக்கு ஏற்பட்ட வலியும், புண்ணும் ஆறுவதற்கு சில நாட்கள் வேண்டும் தானே.

குணமாகும் கட்டம்:

* அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களுக்கு, வலி அதிகமாக இருக்கும். இந்த வலி மெதுவாகவே குறையும். அறுவை சிகிச்சை முடிந்த பின் நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, உங்கள் மருத்துவர் உங்களிடம் அறிவுறுத்துவார். மேலும் குளிப்பதற்கான வழிமுறைகள், வேகமாக குணமடைவதற்கான மிதமான உடற்பயிற்சிகள் மற்றும் மலச்சிக்கல்களை தவிர்க்க மருத்துவர் பல அறிவுரைகளை வழங்குவார்.

* பிரசவத்தை எதிர்கொள்ள உடல் பல மாதங்களாக தயார்படுத்தப்பட்டதை போல, குணமடைவதற்கும் சில நாட்கள் ஆகும். அதிலும் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்திருந்தால், குணமடைய இன்னும் அதிக காலம் எடுக்கும். ஒருவேளை எதிர்பாராமல் அறுவை சிகிச்சையை கையாளும் நிலை ஏற்பட்டால், அந்த அதிர்ச்சியால் மன உளைச்சலும் ஏற்படும்.

 * பிரசவத்திற்கு பின் உடல் குணமாக சில காலம் ஆகும். பொதுவாக குழந்தை பிறந்த 4-6 வாரங்கள் வரை உடல் உறவில் ஈடுபட மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை. ஏனென்றால் இது தொற்று அல்லது இரத்தக் கசிவை ஏற்படுத்தும். மேலும் உங்கள் திசுக்களை மீண்டும் புண்ணாக்கும். ஆகவே முத்தமிடுதல், அரவணைப்பில் இருத்தல் மற்றும் இதர நெருக்கமான செயல்களில் மெதுவாக ஈடுபடுங்கள். உடலுறவின் போது வலி ஏற்பட்டாலோ அல்லது வலி ஏற்படும் என்று பயம் இருந்தாலோ உடனே உங்கள் கணவனிடம் கூறுங்கள். அதனால் உங்கள் இருவருக்கும் பதற்றம் குறைந்து ஒரு தைரியமும் பிறக்கும்.
 
Via Thatstamil.com