ப்ரேத ஸம்ஸ்காரம்
இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்..?
...
ப்ரேத ஸம்ஸ்காரம் ..! சரீரத்தின் சிறப்பு .....!!
ஸ்ரீ மஹா பெரியவா சொன்னது !
..
இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்..?
இப்படி ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம்.
உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ண முடியா
மலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது..?
ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்துவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேதஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது.
இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘ஸம்ஸ்காரம்’ பண்ணுகிறேன் என்று இழுத்துவிட்டுக் கொள்ள வேண்டும்..?
பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது? என்று கேட்கலாம்.
சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம் மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்
துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது.
பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும்.
ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.
சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை ‘அந்த்யேஷ்டி’- அந்திய இஷ்டி – அதாவது ‘இறுதியான வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ணவேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.
‘ஸம்ஸ்காரம்’என்றால் ‘நன்றாக ஆக்குவது’ என்று அர்த்தம். (‘நன்றாக ஆக்கப்பட்ட’பாஷைதான் ‘ஸம்ஸ்க்ருதம்’.) உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹூதி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் – அதாவது அந்திய இஷ்டியே - ப்ரேத ஸம்ஸ்கார
மாகும்.
எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது.
ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.
ஆனாதால், பகவான் கொடுத்த உடம்பை உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று ‘டிஸ்போஸ்’ பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசான வாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக்கொடுத்
தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காக இருக்கிறது.
செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது?
அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?
ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான்வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே!
ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும்.
”அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்."
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷