*பர்வதமலை*

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:36 | Best Blogger Tips

 


திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் பர்வத மலை. இம்மலை மிகவும் தொன்மையானது. கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. இங்கு அருள்மிகு மல்லிகார் ஜுனரும் அன்னை பிரம்மராம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.

சிவபெருமான் கைலாயத்திலிருந்து அண்ணாமலைக்கு வந்தபோது அவர் தம் முதல் காலடியை பர்வதமலையில் வைத்தாராம். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்ததாகச் செவிவழிச் செய்திகள் உள்ளன.

மலை அடிவாரத்தில் மிகவும் பழமையான பச்சையம்மன் கோவில்... இந்தக் கோவிலின் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளியிருக்கிறார்கள். இத்திருக்கோவிலில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் அன்னை பார்வதி பக்தர்களுக்கு அருளாசி வழங்கு கிறாள். இவளை வணங்கி மலையேறினால் வீரபத்திரர், துர்க்கையம்மன், ரேணுகாதேவி, சப்தகன்னியர் போன்றோரை தரிசிக்கலாம்.

விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தால், மலை உச்சியில் உள்ள கோவில் நன்கு தெரியும். மலையில் உள்ள சுனையிலிருந்து பெருகி வரும் நீர்வீழ்ச்சியின் அழகையும் காணலாம்.

மலை ஏறும் பாதையும் திகில் ஊட்டு வதாகவே இருக்கும். சிறிது தூரம் மலை யேறி களைத்து- மலைத்து பின் திரும்பிச் சென்றவர்களும் உண்டு. மலை உச்சியில் உள்ள கோபுர தரிசனத்தைக் கண்டு, சூடம் ஏற்றி வழிபட்டுத் திரும்பியவர்கள் ஏராளம்.

மலை ஏறும் வழியில் உரல் வடிவில் ஒரு கற்பாறை. அதில் ஒரு குழி. அதனால் அந்த இடத்திற்கு உரல் பாறை என்று பெயர். உரல் பாறையைக் கடந்து சிறிது தூரம் மேல்நோக்கிச் சென்றால் பாழடைந்த மண்டபம் உள்ளது. இதனை "பாதி மண்ட பம்' என்பர். அதாவது மலை உச்சியை அடைவதற்கு பாதி தூரம் வந்துவிட்டதை இந்தப் பெயர் அறிவிக்கிறது.

மலைக்குத் தென்திசையில் உள்ள கடலாடி என்னும் ஊரிலிருந்து ஒற்றை யடிப் பாதை வழியில் வந்தாலும் இந்தப் பாதி மண்டபத்தை அடையலாம். இங்கிருந்து மேல்நோக்கிச் செல்லும் வழி செங்குத் தானது. இப்பகுதியை குமரி நெட்டு என்பர்.

அதைக் கடந்து மேல்நோக்கிப் பயணித் தால் கடப்பாறை நெட்டு என்ற பகுதியை அடையலாம். இந்தப் பகுதி மிகவும் செங்குத்தானது மட்டுமல்ல; மிகவும் அச்சம் தரக்கூடியது கூட!

இந்த மலைப் பாதையின் இருபுறமும் இரும்பு கடப்பாறைகள் பாறைக்குள் ஊன்றப்பட்டுள்ளன. அவற்றைப் பிடித்துக் கொண்டுதான் மேலே செல்ல வேண்டும். திரும்பிப் பார்க்காமல் மேலே ஏறுதல் நல்லது.

மேலே சென்றால் சுழல்பாறை என்னும் பகுதியை அடையலாம். வட்ட வடிவமாக அமைந்துள்ள இரண்டு பெரும் பாறைகளுக்கு இடையில், வளைந்து ஒருவர் பின் ஒருவராக மனஉறுதியுடன் செல்ல வேண்டும். "ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே சென்றால் சிரமம் தெரியாது. இதனைக் கடந்தால் ஏணிப்படி வழி வரும்.

இரண்டு மலைகளுக்கு இடையில் கனமான தண்டவாளங்களை இணைத்திருக்கிறார்கள். இந்தப் பாதையைக் கடக்கும்பொழுது மனதில் அச்சம் எழுவது இயற்கை. இந்தப் பாதையைக் கவனமுடன் கடந்து சென்றால் ஒரு கல் மண்டபத்தினை அடையலாம்.

இதனைத் தீட்டுக்காரி மண்டபம் என்பர். கோவிலுக்குச் செல்ல பெண்களும் மலையேறி வருவதுண்டு. அப்போது அவர்களுக்கு மாதாந்திர தொந்தரவு கள் ஏற்பட்டால் இத்துடன் திரும்பிச் சென்று விடுவார்களாம். அதனால் இந்தப் பெயர் அமைந்திருக்கிறது.

இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால் சிங்கக் கிணறு என்னும் சுனையைக் காணலாம். இதில் ஒரு சுரங்கப் பாதை உள்ளதாகச் சொல்லப் படுகிறது. அதன் வழியே சென்றால் ஓர் அதிசய உலகத்தைக் காணலாமாம். அதை மானிடர் களாகிய நாம் காண வழியில்லை. சித்தர் பெரு மக்கள் இச்சுனையில் உள்ள சுரங்க வழியில் சென்று தவம் செய்வதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சுனை நீரில் கை, கால், முகம் கழுவிக் கொண்டு, தாகத்திற்குத் தண்ணீர் குடித்தால் மலை ஏறிவந்த களைப்பு நீங்கி தெம்பு பிறக்கும். இந்தச் சுனை நீர் மருத்துவ குணம் கொண்டது. இந்த நீரை ஒரு சிறிய கேனில் எடுத்துச் செல்வது நல்லது. மலை உச்சியில் தண்ணீர் கிடைப்பது அரிது.

பாதாளச் சுனை என்றும் சிங்கக் கிணறு என்றும் சொல்லப்படும் இந்த இடத்தில் சற்று ஓய்வு எடுத்தபின் மெதுவாக நடந்தால் கணக்கச்சி விழுந்த பள்ளம்- அதாவது பாதாளப் பகுதி வரும். இந்தப் பகுதியை கணக்கச்சி ஓடை மலை என்றும் சொல்வர். இங்கே கவிழ்ந்து நிற்கும் பாறை ஒரு புறமும் பாதாளமாகக் காட்சி தரும் பயங்கரமான பள்ளம் மறுபுறமும் உள்ளன. இங்கு ஒருவர் மட்டுமே குனிந்து பாறையை ஒட்டிச் செல்ல முடியும்.

இந்த பயங்கரமான பாதாளத்தைக் கடந்து சென்றால் வருவது பிள்ளையார் நெட்டு. ஆபத்தான இடங்களில் கம்பி வலையினால் பாதுகாப்பு செய்யப்பட்டிருப்பதாலும், வலுவான கடப்பாறைகளைப் பிடித்துக் கொண்டு செல்ல வசதி இருப்பதாலும் பக்தர் கள் அஞ்சாமல் மேல்நோக்கிச் செல்கிறார்கள்.

அதைக் கடந்து சென்றால் ஓரளவு சம வெளிப் பிரதேசத்தை அடையலாம். பக்தர் களெல்லாம் நிம்மதிப் பெருமூச்சு விடும் இடம்! மிகவும் சிரமப்பட்டு ஆபத்தான பாதையில் நடந்து வந்த களைப்பெல்லாம் நீங்கிட மலைமேல் கோவில் கொண்டுள்ள இறைவனும் இறைவியும் அருள்புரிகிறார்கள்.

மலைமேல் உள்ள கோவிலில் தனிச் சந்நிதியில் சிவலிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மல்லிகார்ஜுனரை காரியாண்டிக் கடவுள் என்றும் அழைப்பர். இவரை பக்தர்களே அபிஷேகித்து, மலர்கள் சூட்டிப் பூஜை செய்யலாம்.

பக்தர்களுக்கு இடையில் எந்தப் பூசகர்களும் இல்லை. பூக்களைச் சூட்டி மகிழும் பக்தர்கள், சிவலிங் கத்தைத் தொட்டு வணங்கலாம். அதனால் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்குப் பூக்குவியலுக்குள் இறைவன் உறைந்துள்ளார். கருவறை மிகவும் சிறியதாக இருப்பதால் பக்தர்கள் நெருக்கியடித்துக் கொண்டு தரிசிக்கிறார்கள்.

மல்லிகார்ஜுனருக்கு இடப்புறம் அன்னை பிரம்மராம்பிகா தனிச் சந்நிதியில் எழுந் தருளியுள்ளாள். சிவன் சந்நிதிக்கு வலப்புறம் உள்ள சிறிய சந்நிதியில் விநாயகப் பெருமா னும் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய ரும் அருள்புரிவதைத் தரிசிக்கலாம்.

"திரிசூலகிரி', "நவிரமலை', "பர்வதமலை' என்று சொல்லப்படும் இந்த மலை, ஏழை களின் கைலாயம் என்று பெயர் பெற்றதற்கு ஏற்ப, மேகக் கூட்டங்கள் அவ்வப்போது கோவிலின்மீது நின்று மெதுவாக நகரும் காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கும். "மேலும் இந்த பர்வதமலைக்கு சஞ்சீவிகிரி, மல்லிகார்ஜுன மலை, கந்தமலை, தென் கயிலாயம் என்றும் பல பெயர்கள் உண்டு.

இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த குகைகளும் உள்ளன. அந்தக் குகை களில் தற்போதும் சித்தர் பெருமக்கள் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லப் படுகிறது.

இக்கோவிலுக்கு அருகில் ஒரு மடம் உள்ளது. அங்கு சாது ஒருவர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதுடன் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்கிறார்.

கோவிலில் மின்சார வசதி இல்லாததால் ஜெனரேட்டர் உதவியுடன் இரவு பன்னிரண்டு மணி வரை மின் விளக்குகள் ஒளிவிடுகின்றன. அதற்குப்பின் கோவில் உள்ள பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

கோவிலுக்கென்று தனியாக அர்ச்சகர்கள் கிடையாது. ஆனால் அம்பாள் சந்நிதியில் சாது ஒருவர் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்குப் பிரசாதம் மட்டும் தருகிறார். கதவுகள் இல்லாத கோவில் இது.

பர்வதமலை கடல் மட்டத் திலிருந்து சுமார் நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டது. திருவண்ணா மலையைவிட இந்த மலை உயரம். திருவண்ணாமலையை கிரிவலம் வரும் தூரம் 14 கிலோமீட்டர். ஆனால், பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர்.

திருவண்ணாமலை மாவட் டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்பாதி மங்கலம் என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து மலை ஏறத் துவங்கினால் பத்து கிலோமீட்டர் தூரம். தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம்.

இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனை தேவேந்திரன் பௌர்ணமி நாட்களில் வந்து வழிபடுவதாக நம்பிக்கை.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்புப் பூஜை நடைபெறும் இந்தக் கோவிலில் யாகங்களும் விடிய விடிய நடைபெறுவது தனிச்சிறப்பு ஆகும்.

சித்ரா பௌர்ணமி, ஆடிப் பதினெட்டு, ஆடிப் பூரம், புரட்டாசி மாதப் பிறப்பு, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி மாதப் பிறப்பு, சிவராத்திரி, பிரதோஷ நாட்கள், பங்குனி உத்திரம் முதலிய சிறப்பு நாட்களில் இக்கோவில் விழாக்கோலம் காணும்.

பாவங்கள் போக்கும் பர்வதமலை ஈசன் நினைத்ததை நிறைவேற்றித் தருவான் என்பது நம்பிக்கை.

இம்மலைக்கு வருபவர்கள் மிகவும் பக்தியுடன் விரதம் கடைப்பிடித்து வருவது நல்லது.

பர்வத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம், ஆராதனை செய்தால், கீழே தரைமட்டத்தில் வருடம் முழுவதும் பூஜை செய்த பலன் கிட்டும்.

*அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை* என்று சொல்வதுபோல், *பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை* என்பர்.

இந்த மலையில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம், ஞானம் கைகூடும்; திரிகால ஞானயோகம் கிட்டும் வாய்ப்பு உண்டு என்பது நம்பிக்கை.

வெயிலின் கடுமை குறை யட்டும் என்று காத்திருந்து, மாலை வேளையில் மலை ஏறும் பக்தர்கள் வழி தடுமாறும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு உறுதுணையாக பைரவர் (நாய்) முன்னால் நடந்து சென்று வழிகாட்டும் அதிசயத்தை இங்கு காணலாம் என்கிறார்கள் கோவிலுக்கு வந்த பக்தர்கள்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பர்வத மலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வலம்வர சுமார் ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் ஆகலாம்.

மலைக்கு வரும் பக்தர்கள் மலைமேல் தங்குவதற்கு இப்போது வசதி உள்ளதால், பௌர்ணமி இரவில் இம்மலை விழாக் கோலம் காணும்.

இம்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தனிச் சிறப்பினைப் பெறுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் நெய், நல்லெண் ணெயை பெரிய கொப்பறையில் இட்டு காடா துணியில் பெரிய திரி தயார் செய்து பக்தர் களே சூடம் ஏற்றி, தீபம் ஏற்றுகிறார்கள். மேலும் கோவிலைச் சுற்றி பெரிய அகல் விளக்குகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதால் தீப ஒளியில் சுவர்க்க லோகம்போல் காட்சி தரும்.

மலையடிவாரத்தில் மௌனகுரு ஆசிரமம் உள்ளது. இங்கு மலையேறும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். இரவில் இங்கு தங்கிச் செல்லவும் வசதி உண்டு. அன்னதானமும் செய்யப்படுகிறது.

ஒருமுறை மலை ஏறி இறைவனையும் அம்பாளையும் தரிசித்து வந்தால், மறுபடியும் பக்தர்கள் மனம் இறைவனை நாடிச் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மை.

 

நன்றி இணையம்