நிலத்தடி நீரை பாதுகாக்கிறது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:44 | Best Blogger Tips

 


குஜராத்தில் சுமார் 200 ஆறுகள் உள்ளன. இதில் 17 ஆறுகள் வருடம் பூராவும் தண்ணீர் ஓடக் கூடிய ஆறுகள். 27 நதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஆற்று நீர் கொஞ்சம் கூட கடலுக்குப் போகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது


நர்மதா ஆறு குஜராத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரம். ஆனால், அந்த ஆறு குஜராத்தின் தென்கிழக்கு எல்லையில் ஒரு ஓரமாய் ஒதுங்கி விட மிகப் பெரிய கால்வாய்களை வெட்டி, 8 அடி விட்டம் கொண்ட பிரமாண்ட பைப்புகள் மூலம் அந்தத் தண்ணீரை குஜராத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று, பஞ்சத்தையும் வறட்சியையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. 156 சுத்திகரிப்பு நிலையங்கள், 11 ஆயிரம் பம்ப்பிங் ஸ்டேஷன்கள், 1 லட்சத்து 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு விநியோக குழாய்கள் மூலம், 75 சதவிகித மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு உத்திரவாதம் தந்துள்ளது . அதே நேரம் குடிநீருக்காக 2000-ல் பயன்படுத்தப்பட்ட 1,146 ஆழ்துளை கிணறுகள், 2011-ல் 207 ஆக குறைக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு சமவெளி நீரை அதிகரித்து, நிலத்தடி நீரை பாதுகாக்கிறது குஜராத்.



அரசு குடிநீர் கொடுக்கிறது என்பது மட்டுமில்லை; அதை முழுமையான தரத்துடன் கொடுக்கிறது என்பதுதான் குஜராத்தின் கூடுதல் சிறப்பு. தொடர்ந்து ஒவ்வொரு கட்டங்களிலும் இடைவிடாது தர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய அரசு சொல்லும் குடிநீர் தரத்தை விட, சிறந்த தரத்தில் குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கிறது குஜராத் அரசு.


எந்த முயற்சியையும் அரசாங்கம் தனியே செய்வதில்லை என்பதுதான் குஜராத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன். எந்தத் திட்டம் போட்டாலும் அந்தத் திட்டம் குறித்து கிராம மக்களுக்கு விளக்கி, அவர்களுக்குக் கிடைக்கப் போகும் அனுகூலங்களை விவரித்து, அதை அவர்கள் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி விடுகிறது குஜராத் அரசு. 'இது ஏதோ அரசு பணத்தில், அரசு நிறைவேற்றும் திட்டம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படாமல், இது நமது பணத்தில், நமக்காக நடக்கும் திட்டம்; இதை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குத்தான் உள்ளது' என்ற எண்ணம் அங்குள்ள மக்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் குஜராத் வெற்றியின் ரகசியம் என்று தோன்றுகிறது. "Users are the best managers" என்பதுதான் குடிநீர் விஷயத்தில் குஜராத்தின் தாரக மந்திரம்.



கோடிக்கணக்கில் அரசு செலவு செய்து தரமான குடிநீரை ஒதுங்கிப் போன கிராமங்களில் கூட, வீட்டுக்கு வீடு வழங்கும் குஜராத் அரசு, அதில் ஒரு சொட்டு நீரைக் கூட இலவசமாகக் கொடுப்பது கிடையாது. பயன்படுத்தும் அளவைப் பொறுத்து மாதம் 10 ரூபாய் முதல் 70 ரூபாய் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 'தினசரி ஒரு ரூபாய்' என்ற திட்டம்தான் குஜராத் முழுக்க பாப்புலர்.


இதைவிட அற்புதமான விஷயம் இந்த நீர் விநியோகத்தை நவீன மயமாக்கி வைத்திருப்பதுதான். எலெக்ட்ரானிக் சிஸ்டத்தில் தண்ணீர் சப்ளை நடக்கிறது. தனி நபருக்கு குளிக்க, சமைக்க என தினசரி 70 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் 100 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அந்த கிராமத்தை குறிப்பிட்டு, 7,000 லிட்டர் தண்ணீர் என்று பட்டனை அமுக்கினால், அந்த கிராமத்தில் உள்ள டேங்கில் 7,000 லிட்டர் தண்ணீர் மட்டும் உடனே நிரப்பப்பட்டு, வால்வு தானாக மூடிக் கொள்கிறது. அந்த 7,000 லிட்டர் தண்ணீரை கிராம சபை ஒவ்வொரு வீட்டுக்கும் இத்தனை லிட்டர் என்று பட்டன் மூலமே சப்ளை செய்து விடுகிறது.


'வீட்டில் விசேஷம், உறவினர் வருகிறார்கள்; இன்றைக்கு 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் வேண்டும்' என்று கோரி, நாம் கிராம சபையில் உரிய பணத்தைக் கட்டினால், அன்றைக்கு மட்டும் நம் வீட்டு குழாயில் 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் கொட்டும். கேட்கவும், பார்க்கவும் ஆச்சரியமாய் இருந்தது. ஓவர் டேங்க் நிரம்பின பிறகு வால்வு தானாய் மூடிக் கொண்டாலும், கிராம அலுவலர்களுக்கு 'டேங்க் நிரம்பி விட்டது' என தானாகவே எஸ்.எம்.எஸ். வேறு வருகிறது.


"நீர் மேலாண்மையில் குஜராத் நம்பர்-ஒன் மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலமாவது குடிநீருக்கென்று 2,745 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கிப் பார்த்திருக்கிறீர்களா? இங்கு ஒதுக்கியுள்ளோம். இந்தியாவின் மழை நீர் சேகரிப்பு 17 சதவிகிதம். ஆனால், குஜராத்தில் மழைநீர் சேகரிப்பை 72 சதவிகிதத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இன்றைக்கு போதுமான தண்ணீர் இருந்தாலும், எங்கள் அரசு இதோடு திருப்தியடைந்து விடவில்லை. அடுத்த 20 வருடங்களை மனதில் வைத்து இப்போதும் கூட 3,200 கோடி ரூபாய் செலவில் மேலும், மேலும் பைப் லைன்கள் பதித்து வருகிறோம்" என்று குடிநீர் விநியோகத் துறையின் முதன்மைச் செயலாளர் ஹெச்.கே.தாஸ் ..எஸ்., விவரித்தார்.


"பெரிதாக சிந்தி; காலத்தை நிர்ணயம் செய்; நிதி ஒதுக்கு; ஈடுபாட்டோடு உழை; வெற்றியை உனதாக்கு" – இதுதான் குஜராத் திட்டங்களுக்கான ஆதார மந்திரம்.


இந்த திட்டம் போல தமிழகத்திற்கும் கிடைக்க ஆசைபடுவோம்...... தமிழகத்தில் நடைமுறை படுத்தினால்???? ...கார்ப்பரேட் கைக்கூலியே? குடிக்கும் தண்ணிரை நான் எடுக்க எவனிடம் கேட்க வேண்டும்? குடிநீர் எனது உரிமை...எனது நிலம்,எனது பூமி என்னை கேள்வி கேட்க உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என அடுக்கடுக்காய் கேள்வி வரும்.காதில் வாங்கவே தேவை இல்லை.நம் சந்ததியினர் நலமுடன் வாழ இதை செய்தே ஆகவேண்டும்.



நன்றி: Smrgunasekar