
திருச்செங்கோட்டு
திருச்செங்கோடு மலை மேல இருக்கிற ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில்
மலை ஏறுவதற்கு முன்பு அடிவாரத்தில் காருக்கு 20 ரூபாயும், பைக்குக்கு 10 ரூபாயும், டோக்கன் வாங்கிக் கொண்டனர்.

2.5 கி.மீ தூரமுள்ள மலைச்சாலையில் காரில் ஏறிக்கொண்டே ஒரு புறம் திருச்செங்கோடு நகரத்தின் அழகை ரசித்தபடியே, மறுபுறம் குரங்குகள் கூட்டத்தோடு அமர்ந்து செய்யும் சேட்டைகளை ரசித்தபடியேயும், எங்கள் பயணம் தொடர்ந்தது.
திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து மலை மீதுள்ள கோவிலுக்கு செல்ல தேவஸ்தான பேருந்துகளும் நிறைய உள்ளது.
மலைக்கு மேலே செல்ல படிப்பாதை வசதியும் உள்ளது.
படிப்பாதை வழியாக 1200 படிகளை கடந்து கோயிலுக்கு மேலே செல்லலாம்.
படிப்பாதை வழியாக செல்லும் வழியில் 60 அடி நீளம் கொண்ட ஆதிசேஷனின் திரு உருவத்தை காணலாம்.

நாகதோஷம் உள்பட பல்வேறு தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து நாகர் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

காலை நேரமாதலால், கோவில் இயற்கை அழகோடு, நல்ல அருமையான தென்றல் காற்றோடு, பனி படர்ந்து, சூப்பராக இருந்தது.
குரங்குகள் அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்தன.

முகூர்த்த நாள் என்பதால் எங்கே பார்த்தாலும் புதியதாய் திருமணமான மணமக்கள், தங்கள் சொந்தங்களோடு, போட்டோ எடுத்தபடி, இங்குமங்குமாக உலாவிக் கொண்டிருந்தனர்.
திருச்செங்கோட்டின் தொன்மையான பெயர் திருக்கொடிமாடச்செங்குன்றூர்.

திருக்கொடிமாடச்செங்குன்றூர் என்றால் கொடிகள் அசைந்தாடுகின்ற மாடமாளிகைகள் நிறைந்த செந்நிற மலையை உடைய ஊர் என்பது பொருள்.

திருச்செங்கோடு ஈரோட்டில் இருந்து கிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், சேலத்தில் இருந்து தென்மேற்கு 45 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் அருள்மிகு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ செங்கோட்டு வேலவர், அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஆகிய மூன்று தெய்வங்களும் கருநிலை கொண்ட மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.

இங்கு எவ்வாறு சிவபெருமான் தன்னுடைய பாதியையும், பார்வதி தேவி தன்னுடைய பாதியையும் இணைத்து அர்த்தநாரீஸ்வரராக இங்கே காட்சி தருகிறார்களோ அதே போல தம்பதியர் இங்கு சென்று வழிபட்டால்,
தம்பதிகளுக்குள் உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கி, இருவரும் ஒன்றிணைந்து சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையை வாழ்வர்.
அடிக்கடி சண்டை சச்சரவுகள் வரும் கணவன் மனைவி இங்கே சென்று வழிபட்டு வர, குடும்பத்தில் அமைதியும், தம்பதிக்குள் ஒற்றுமையும் நிலவும்.

சாமி தரிசனம் முடிந்து கோவிலை வலம் வரும்போது சிற்ப மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் நம் கண்களை கவருகின்றன.
அதிலும் ஒரு இடத்தில் அண்ணாந்து பார்த்தால் மேலே உள்ள சிற்பங்களில் கல்லினால் செதுக்கப்பட்ட கற்சங்கிலிகள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
சிற்பங்களைக் கண்டு ரசித்து மெய்மறந்து போவீர்கள்.
திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் தினசரி திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை.
தினசரி காலை 6:15 மணிக்கு கோ பூஜையும், காலை 8 மணிக்கு கால சந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சி கால அபிஷேக பூஜையும், மாலை 5 மணிக்கு சாய ரட்சை பூஜையும், மாலை 6 மணிக்கு தங்க ரத புறப்பாடும் நடைபெறுகிறது.

மதியம் 2 மணியிலிருந்து 3 மணி வரை உணவு இடைவேளைக்காக கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும்.

பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் திருச்செங்கோடு மலையை கிரிவலம் வருவது விசேஷமாகும்.

இந்த திருச்செங்கோடு நாகமலையை ( சேஷகிரியை ) ஒருமுறை வலம் வந்தால் 3 உலகங்களுக்கும் சென்று வந்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் கிடைக்கும்.
பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
நோய் மற்றும் பிணிகளின்றும் மீட்கப்பட்டு உடல் நலமுடன் வாழ்வர்.

நேரம் கிடைக்கும் போது நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இங்கு சென்று ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மென்மேலும் மகிழ்ச்சியாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.








