*வாழ்க்கை குறுகியது ஆனால் அழகியது !*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:31 | Best Blogger Tips


ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கப்பல் கவிழும் ஓர் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் மட்டுமே தப்பிக்கவுள்ள படகில் , மனைவியைப் பின்னே தள்ளி விட்டுக் , கணவன் மட்டும் தப்பிச் செல்கிறார்.

கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு , தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக ஏதோ கூறுகிறார் ....

இந்த இடத்தில் கதையை நிறுத்திய ஆசிரியை: "அந்த மனைவி என்ன சொல்லியிருப்பார் ?"

என்று மாணவர்களை நோக்கிக் கேட்டார்.

எல்லா மாணவர்களும் ஆளுக்கொரு பதிலைக் கூற, ஒரு மாணவன் மட்டும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"ஏம்பா பேசாம இருக்க ? உனக்கு எதுவும் தோணலியா ?" என்று ஆசிரியை கேட்டார்.

அவன் தந்த பதில் : "நம்ம கொழந்தையப் பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பாங்க , டீச்சர்"

"மாணவனின் பதிவைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த டீச்சர் , எப்படிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்தக் கதை தெரியுமா?"

"இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி எங்க அப்பா கிட்ட இதையே தான் சொன்னாங்க..."

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையைத் தொடர்ந்தார் :



தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து அந்தப் பெண் தன் தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.

தாய்க்கு உயிர்க்கொல்லி நோய் ஒன்று இருந்திருப்பது அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது.

கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார் :

உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும் ... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது ? நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமாவது உயிர் தப்பியாக வேண்டுமே ?

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார் :

வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனா சில நேரங்களில் அதை நம்மால் புரிஞ்சிக்க முடியாமப் போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ, யாரைப் பத்தியும் எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துடக் கூடாது.

நாம சாப்பிட ரெஸ்டாரெண்ட் போகும் போது, நம்மில் ஒருத்தர் முந்திக் கொண்டு காசு கொடுக்க முன் வந்தா, காரணம் அவருக்குப் பணக்காரர் என்ற திமிர் என்று அர்த்தமில்லை, பணத்தை விட நம்ம நட்பை அவர் அதிகமா மதிக்கிறார்னு அர்த்தம்.

ஒரு தவறுக்கு, ஒருவர் முந்திக் கொண்டு மன்னிப்புக் கேக்கிறார்னா அவர் தான் தப்பு பண்ணிருக்கார்ன்னு அர்த்தமில்லை, ஈகோ(Ego) பெரிசில்ல; உறவு தான் பெரிசுன்னு அவர் மதிக்கிறார்னு அர்த்தம்.

நம்ம கண்டுக்காம விட்டாலும் நமக்கு ஒருவர் ஃபோன் / மெஸேஜ் பண்றார்னா அவர் வேலை வெட்டி இல்லாதவர்னு அர்த்தமில்லை, நாம் அவர் மனசில எப்பவும் இருக்கோம்னு அர்த்தம்.

பின்னொரு காலத்தில் நம்ம புள்ளைங்க நம்ம கிட்ட கேட்கும் : யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கள்லாம்னு.



ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்ல நேரலாம் : அவங்க கூடத் தான் சில நல்ல தருணங்களை நாம செலவிட்டோம்னு.

மறக்காதீர்கள் :



*வாழ்க்கை குறுகியது ஆனால் அழகியது !*




நன்றி இணையம்