திருவெள்ளரை வடஜம்பு நாதர் தல மஹிமை

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:16 | Best Blogger Tips
No automatic alt text available.
நிழல் விழாத கோபுரத்தின் நிழலில் நிலவ விரும்பிய வம்சோதர நந்தி மூர்த்தியைப் போல அடியார் நிழலில் நிலவ அன்புள்ளங் கொண்ட ஸ்ரீவடஜம்பு நாத பெருமானின் விருப்பத்தை நிறைவேற்ற எத்தனையோ அடியார்கள் முன் வந்தாலும் செவ்வரி ஓடிய திருக் கண்களுக்காக மண் மறைத்த இரகசியங்களை உள்ளடக்கி காத்திருந்தார் ஸ்ரீவடஜம்பு நாத பெருமான்
கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்ற இலக்கணத்தின்படி இறைவனின் பெருவிருப்பத்தை உணர்ந்த ஸ்ரீஜம்பு மகரிஷியும் அந்தப் பொன்னான தருணத்திற்காக காத்திருந்து கோச்செங்கட் சோழன் மூலம் திருவெள்ளறையில் குடவரைக் கோயிலை அமைத்தார். ஸ்ரீஜம்பு ரிஷியின் மேற்பார்வையில் அவர் அருளுரையின் பேரில் கோச்செங்கட் சோழனால் அமைக்கப்பட்டதே திருவெள்ளறை சிவத்தலமாகும்.
பக்தி மிகுந்த சிவனடியாரான ஸ்ரீஜம்பு மகரிஷி தவம் இயற்றிய நிழலில் தான் நிலவ வேண்டும் என்ற இறைவனின் பணிவுக்கு இதை விடச் சிறந்த ஒரு தெய்வ சின்னத்தை இந்தப் பிரபஞ்சத்தில் எங்காவது காண முடியுமா ?
பணிவிற்கும், பக்திக்கும் எடுத்துக் காட்டாக, ஊழிக் காலத்தும் மறையாத இறைப் பெருந் தலமாக விளங்குவதே திருவெள்ளரை சிவத்தலமாகும். தன் அடியாரின் பெயரிலேயே ஸ்ரீவடஜம்புநாதர் என்ற நாமத்தையும் இறைவன் ஏற்று அருள்பாலிக்கிறார் என்றால் இறைவனின் பெருங் கருணையை என்னென்று புகழ்வது ?
எதற்காக இறைவன் கோச்செங்கட் சோழனுக்காகக் காத்திருந்தார் ? திருவெள்ளறை என்பது நந்தி மூர்த்தியின் தர்ம கிரணங்களும் எம்பெருமானின் செந்தழல் வண்ணமும் இணைந்ததே என்று கூறினோம் அல்லவா ? இவ்விடத்தில்தானே பெருமாளும் செவ்வரி ஓடிய செந்தாரைக் கண்களைப் பெற்றார். அது போல செவ்வரி ஓடிய அடியார் ஒருவரைக் கொண்டே ஆலயம் அமைக்க வேண்டும் என்று எம்பெருமானின் திருவுள்ளம் அமைந்தது மிகவும் பொருத்தம்தானே.
Image may contain: 1 person
கோச்செங்கட் சோழன் பிறப்பதற்கு சில நாழிகைக்கு முன்னர் அரண்மனை ஜோதிடர்கள் இன்னும் சற்றும் நேரத்தில்அற்புதமான தெய்வீக முகூர்த்த நேரம் ஒன்றும் அமையும் என்றும் அந்நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் சிறந்த தெய்வ பக்தியுடன் திகழும் என்று கூறவே கோச்செங்கட் சோழனின் தாய் தன்னை தலை கீழாக கட்டித் தொங்க விட வேண்டிக் கொண்டாள். அதன்படி உத்தம முகூர்த்த நேரத்தில் சிவ குழந்தையாய்த் தோன்றினான்.
மறையும் உடலைத் துறந்து மாளாப் புகழ் பெற்ற தன் தாயின் நல்லாசிகளை பிறக்கும்போதே பெற்றமையால் கோச்செங்கட் சோழன் அற்புதமாய் எத்தனையோ சிவத்தலங்களை இறை அருளால் நிர்மாணித்தான்.
முற்பிறவியில் திருஆனைக் காவில் சிலந்தியாய்ப் பிறந்து ஈசனை வழிபட்டதால் சிவ பூஜைக்கு ஊறு விளைவித்த யானையுடன் பகை கொண்டு தான் கட்டிய சிவத் தலங்களில் யானை புக முடியாதபடி அமைத்தான் என்று பலர் கூறுவதுண்டு.
இது ஒரு உத்தம சிவனடியாருக்குச் செய்யும் அபசாரமாகும். தன்னுடைய உயிரே போனாலும் கவலை இல்லை, இந்த உலகிற்கு ஒரு சிவ பக்தன் கிடைக்க வேண்டும் என்று தன்னுடைய இன்னுயிரைத் தியாகம் செய்த உத்தமியின் மைந்தன் கேவலம் ஒரு யானை சிவனைத் தரிசிக்கக் கூடாது என்று நினைப்பானா ? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
அப்படியானால் யானை புகாத் தலங்கள் என்பதற்கு என்ன அர்த்தம் ?
சிவ பெருமான் முப்புரம் எரித்தான் என்று புகழ்கிறோம். இதன் தத்துவார்த்தம் ரஜோ, தமோ, சத்துவ குணங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதாகும். ராமாயணத்தில் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற அசுரர்கள் ரஜோ, தமோ, சத்துவ குண அதிபதிகளாய் விளங்கி விபீஷணன் சத்துவ குணத்தால் ராமனை நெருங்கினாலும் விபீஷணன் தன்னுடைய சத்துவ குணமும் அழிந்த பக்தி நிலையை அடைந்தபோதுதான் ராமபிரானின் பிரம்ம தரிசனத்தைப் பெற்றான். மாயை முற்றிலும் விலகிய நிலையே முக்குணாதீத நிலை.
யானை என்பது சத்துவ குணத்தைக் குறிப்பது. அதனால்தான் யானைக்கு அருகம்புல், கரும்பு போன்ற உணவுப் பொருட்களை அளித்து வணங்கி வந்தால் இறைவனை நெருங்கும் பக்தி நிலையைப் பெறலாம் என்று பெரியோர்கள் அருளியுள்ளார்கள். ஆனால், இந்த சத்துவ குணத்தையும் கடந்து தூய பக்தி நிலையைப் பெற்றால்தான் இறைப் பரம்பொருளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதே யானைப் புகாத கோயில் அதாவது சத்துவ குணத்திற்கு அப்பாற்பட்டது சிவப் பரம்பொருள் என்பதாகும்.
செவ்வேள் அபிஷேகம்
பல்வேறு குடும்பப் பிரச்னைகளால் அவதியுறுவோர் திருவெள்ளரை சிவத்தலத்தில் முருகப் பெருமானுக்கும் வள்ளி தேவிக்கும் பசும்பாலில் தேன் கலந்து அபிஷேகம் இயற்றி வருதல் சிறப்பாகும்.
காய்ச்சல், உடல் இளைப்பு, பெண்களுக்கு வெள்ளை படுதல் போன்ற உஷ்ண சம்பந்தமான நோய்கள் விலகும். தாமே அரைத்த சந்தனத்தை இளநீரில் கலந்து அபிஷேகம் நிறைவேற்றுவதாலும் அற்புதமான முறையில் உஷ்ண நோய்கள் நிவாரணம் பெறும். சஷ்டி திதிகளில் இயற்றப்படும் இத்தகைய அபிஷேகம் செவ்வெள் அபிஷேகம் என்றழைக்கப்படும்.
வாகன ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள், போக்குவரத்துத் துறையில் உள்ளவர்கள் மேற்கூறிய வழிபாட்டு முறைகளால் நற்பலன் பெறுவார்கள்.
மணவாள மாமுனிகள்
இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வழிபட்டு உன்னத நிலைகள் அடைந்தோர் பலர். திருவெள்ளரை சிவத் தலம் தோன்றும் முன் ஸ்ரீவடஜம்பு நாதர் திருத்தலமே பிரதான மங்கள சாசனக் கோயிலாக அமைந்தது. ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்ற உத்தம விஷ்ணு பக்தர்களால் வழிபடப் பெற்ற மூர்த்தியே திருவெள்ளரை சிவபெருமான் ஆவார்.
இத்தலத்தில் தெய்வயானை முருகப் பெருமானின் இதயத்தில் குடியேறும் பெரும் பேறு பெற்றதை மக்களுக்கு உணர்த்திய மாமுனியே மணவாள மாமுனிகள் ஆவார். தொடர்ந்த விஷ்ணு வழிபாட்டில் பேருவகை கொண்டிருந்த மணவாள மாமுனிகளின் கனவில் தோன்றிய ஜம்பு மகரிஷி தெய்வானை முருக ஹிருதய ஐக்கிய சரிதத்தைப் பற்றிக் கூறினார். அதனால் பெரிதும் அகம் மகிழ்ந்த மணவாள மாமுனிகள் அதன் அருளால் ஆசார்ய ஹ்ருதய வியாக்யானம் என்ற கிரந்தத்தை உருவாக்கினார்.
புதன் கிழமைகளில் இத்தல பெருமாள் மூர்த்திக்கு சாம்பிராணி தைலம் சார்த்தி விஷ்ணு சகஸ்ரநாமம் ஓதி சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டு வர குழந்தைகளின் கல்வி, உயர் கல்வி, அயல்நாட்டுக் கல்வி, வேலை வாய்ப்பு முறையாகக் கிட்டும்.
அயல் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரும் தற்காலத்தில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இத்தல விஷ்ணு மூர்த்தியை மேற் கூறிய முறையில் முறையாக வழிபட்டு வந்தால் முறையான அயல்நாட்டுக் கல்வியும் வேலை வாய்ப்பும் அமையும் என்றும் சித்தர்கள் அருள்கின்றனர்.


நன்றி இணையம்