ஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:49 | Best Blogger Tips


ஜூன் 17: ஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு
''போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல்'' என்று ஆங்கிலேயரை எதிர்த்து உயிர் விட்ட ஜான்சி ராணி லட்சுமி பாய் நினைவு தினம் இன்று..
பித்தூர் மாவட்ட பெஷ்வாவிடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார் இவரின் தந்தை. அங்கே சுட்டிப்பெண்ணாக அவரை ஈர்க்கவே இவரை தன் சொந்த மகள் போல பெஷ்வா வளர்த்தார். மணிகர்ணிகா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட அவர் ஜான்சியின் அரசர் கங்காதர் ராவுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். பிறந்த ஆண் குழந்தை நான்கே மாதங்களில் இறந்து போனது. அதற்கு பின் வாரிசு இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக உறவுக்கார பையனை தத்தெடுத்து தாமோதர் ராவ் என்று பட்டம் சூட்டினார்கள்.
டல்ஹவுசி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆகியிருந்தார். ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியா முழுக்க பரப்ப வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த அவர். ஏற்கனவே கப்பம் கட்டிக்கொண்டும்,அடிபணிந்தும் கொண்டிருந்த அரசுகளை கைப்பற்ற கிளம்பினார். வாரிசுகளை தத்தெடுக்க கூடாது ; அப்படியே எடுத்தாலும் அதற்கு ஆங்கிலேய ஆட்சி அனுமதி தரவேண்டும். அப்படி தரப்படவில்லை என்றால் அந்த அரசு ஆங்கிலேயர் வசம் போய்விடும் என்பது அவரின் புதுக்கொள்கையாக இருந்தது. இதை அவகாசியிலிக் கொள்கை என்று அழைத்தார் அவர்.
சத்தாரா, செய்ப்பூர், சம்பல்பூர் , நாக்பூர் என்று அரசுகளை அள்ளிப்போட்டுக்கொண்டார் டல்ஹவுசி. ஜான்சியும் மன்னரைஇழந்து ஜான்சி ராணி வசம் வந்திருந்தது. அதே காரணத்தை சொல்லி வாரிசை ஏற்காமல் அரியணையை விட்டு நீக்கி அறுபாதாயிரம் ஓய்வுத்தொகை என்றும் அறிவித்தார்கள். அமைதியாக அப்பொழுது இருந்தாலும் காத்திருந்தார் லட்சுமி பாய்
எண்பத்தி ஏழு காலத்துக்குள் பசி என்றால் என்னவென்றே அறியாத இந்தியாவின் பல பகுதிகளில் பெரிதாக பன்னிரெண்டு பஞ்சங்கள் ஏற்பட்டு இருந்தன . முக்கியமான காரணம் இந்தியாவின் விவசாயம் மற்றும் கைவினைத்தொழில்களை ஆங்கிலேய அரசு ஒட்டுமொத்தமாக காலி செய்து இருந்தது . நிலவரியை ஏகத்துக்கும் ஏற்றியது . ஜமிந்தார்களிடம் சிக்கிக்கொண்டு இருந்த மக்கள் இப்பொழுது லேவா தேவி காரர்களிடம் சிக்கி நிலங்களை இழந்தார்கள் . அரசர்களின் இடங்கள் பறிக்கப்பட்ட பொழுது அங்கே வேலை செய்தவர்கள் நடுத்தெருவில் நின்றார்கள். அரசின் சதி ஒழிப்பு முதலிய நடவடிக்கைகள் மற்றும் கிறிஸ்துவ மிஷினரிகளின் மத பிரச்சாரம் நாட்டில் அச்சத்தை உண்டு செய்தது.
சிப்பாய்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தது ; கடல் கடந்து போகவும் சொல்லி மதநம்பிக்கைக்கு எதிராக கட்டாயப்படுத்தினார்கள். பன்றி மற்றும் மாட்டு கொழுப்பால் ஆகியிருந்த கேட்ரிட்ஜை லோட் செய்ய மறுத்து மீரத்தில் புரட்சி வெடித்தது. மத்திய மற்றும் வட இந்தியாவில் புரட்சி பரவியது
ஜான்சியில் இருந்த ஆங்கிலேயே அதிகாரி எர்கினிடம் தன்னுடைய பாதுகாப்புக்கு படைகள் உருவாக்கிக்கொள்ள ஜான்சி ராணி அனுமதி கேட்டார். கிடைத்தது. ஒரு விழா நடத்தி ஆங்கிலேய அரசை பார்த்து பயப்பட வேண்டாம் என்று மறைமுகமாக மக்களுக்கு கோடிட்டு காட்டினார்.
ஆங்கிலேய படைகள் மற்ற இடங்களில் புரட்சியை அடக்கிவிட்டு ஜான்சி நோக்கி வருவதற்குள் ஜான்சியில் ஆயுதங்கள் பெருக்கப்பட்டு கோட்டை ராணியின் வசம் வந்திருந்தது. ஹூக் ரோஸ் சரணடைய சொல்லி கேட்ட பொழுது ,"போராடி வென்றால் வெற்றி இல்லையேல் மோட்சம் !" என்று கம்பீரமாக விடை அனுப்பினார் ஜான்சி ராணி.
கோட்டையை சுற்றி போர் நடந்து சுவர் தகர்க்கப்பட்டு ஆங்கிலேய அரசு உள்ளே நுழைந்தது. பெண்கள்,குழந்தைகள் என்று பலரும் ஆயுதம் ஏந்தி போர் புரிந்தார்கள். பெண்கள் ஆயுதங்களை தீட்டுவதும்,குதிரைகளை இயக்குவதும் ஆச்சரியம் தருகிறது என்று பதிவு செய்கிறார்கள் ஆங்கிலேயர்கள். சுவரேறி தன் வளர்ப்பு மகனோடு தப்பினார் ஜான்சி ராணி
குவாலியரை தாந்தியா தோப் உதவியோடு கைப்பற்றினார் லட்சுமி பாய். ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த மகாராஜா சிந்தியா இவரை எதிர்த்த பொழுது சிந்தியாவின் படைகள் அவரை கைவிட்டு இவரோடு இணைந்து வீர முழக்கம் கொட்டின. மீண்டும் ஆங்கிலேயருடன் போர் வந்தது. பிள்ளையை பின்பக்கம் குதிரையில் வைத்துக்கொண்டு போர் செய்தார் ஜான்சி ராணி. பின்புறம் இருந்து ஒருவன் தாக்கி அவரை கொன்றான். அவருடன் அவரின் அந்தரங்க காவலாளியாக இருந்த முஸ்லீம் பெண்ணும் இறந்து போனாள்
இன்னமும் ஜான்சி ராணியைப்பற்றிய வீரக்கதைகள்,நாட்டுப்பாடல்கள் அப்பகுதிகளில் பாடப்பட்டும் சொல்லப்பட்டும் வருகின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து மகாஸ்வேதா தேவி ஒரு நூலாக்கினார். போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல் என்று எண்ணிய அவரின் நினைவு தினம் இன்று..
- பூ.கொ.சரவணன்