மெனோபாஸ் சிக்கல்கள் தீர்க்கும் அப்ரமாஞ்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:09 | Best Blogger Tips
நோய் தாக்கினாலே இந்த காலத்தில் மருத்துவமனையை நோக்கி ஓடவேண்டியுள்ளது. பல மருத்துவமனைகள் சிகிக்சை என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் காசை கல்லா கட்டுவதில்தான் குறியாக உள்ளன. நூற்றாண்டுகளுக்கு முன்னர் வீட்டருகில் வளரும் தாவரங்களே மருந்துப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அப்ரமாஞ்சி என்னும் தாவரம் மிகச்சிறந்த மருத்துவ பயன் கொண்டதாக இருந்துள்ளதாக பல்வேறு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அப்ரமாஞ்சி தாவரத்தின் பேரினப்பெயர் லத்தின் மொழியில் ' நலம் தருவது' என்னும் பொருள் கொண்டதாகும். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த டயஸ் கொரிடிஸ் இத்தாவரத்தினைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், இத்தாவரத்தின் மருத்துவ குணங்களை உறுதிப்படுத்தியுள்ளன. 1952 -ம் ஆண்டில் தாவர மருந்துகள் பற்றிய நூலினை வெளியிட்டவர் ஃபெரியஸ் காலுமினா. இவர் தனக்கிருந்த வலிப்பு நோயினை இத்தாவரத்தின் மூலம் குணப்படுத்திக் கொண்டதாக இந்நூலில் தெரிவித்துள்ளார்.
அப்ரமாஞ்சி தாவரம் ஈரமான இடங்களில் இயற்கையாக வளரும். வடக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த தாவரம் மருந்திற்காக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பயிரிடப்படுகிறது. மேற்கு இமாலயத்திலும், காஷ்மீரிலும் 2400 - 2700 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. விதைகள் மூலம் வசந்த காலத்தில் பயிரிடப்படும் இத்தாவரத்தின் தரையடித்தண்டு 2 ஆண்டுகளுக்குப்பிறகு இலையுதிர் காலத்தில் சேகரிக்கப்படுகிறது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. போர்னைல் அசிடேட், பீட்டர் கேரிபில்லின், இரிடாய்டுகள், வெலிபோட்டிரியேட்கள், வால்டிரேட், ஐசோவால்டிரேட் மற்றும் ஆல்கலாய்டுகள், ஆகியவை உள்ளன. இவை மருத்துவ குணங்களின் அடிப்படையாகும்.
மனநோய் போக்கும்
தரையடித்தண்டு மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் உடையவை. தரையடித்தண்டும் வேரும் இணைந்து வெலிரியன் என்னும் மருந்தாகப் பயன்படுகிறது. இவை தூக்கத்தை தூண்டும். தசையிறுக்கத்தை தளர்த்தி சுகமளிக்கும். படபடப்பு மற்றும் வலியுடைய உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மைய நரம்பு மண்டலத்தின் மீது செயல்புரிகிறது. அஜீரணம் போக்கும். வலுவேற்றியாகவும் செயல்படுகிறது. செயல்தூண்டுவி, காய்ச்சல், மனஇறுக்கம், மனநோய், நரம்பு தளர்ச்சி, பயஉணர்வு முதலியவற்றில் மருந்தாகப் பயன்படுகிறது.
மெனோபாஸ் சிக்கல்கள் தீரும்
இமாலயப்பகுதிகளில் வளரும் V.Walichi என்னும் சிற்றினம் வெலிரியன் போன்றே பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவில் V.Capensis என்னும் சிற்றினம் வலிப்புநோய் மற்றும் மனநோய் தீர்க்கப் பயன்படுகிறது.
சீனா மற்றும் இந்தோனேசியாவில் காணப்படும் V.hardwickil தசைப்பிடிப்பு நோய்களுக்கு மருந்தாகிறது. வட அமெரிக்காவில் உள்ள மினோமினி பழங்குடியினர் V.Ulginosa என்னும் சிற்றினத்தின் மருத்துவப் பயன் அறிந்துள்ளனர். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கால சிக்கல்களை குணப்படுத்த இத்தாவரத்தினை பயன்படுத்துகின்றனர்.