புற்று நோயை கட்டுப்படுத்தும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:12 | Best Blogger Tips

 


புற்று நோயை கட்டுப்படுத்தும் திருப்பாராய்த்துறை திருத்தலம்.

புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வருவதற்காக, இந்த ஆலயத்திற்கு நேரில் வந்து வழிபட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் கரூர் குளித்தலை சாலையின் இடது ஓரத்திலேயே இருக்கிறது திருப்பாராய்த்துறை. முக்கொம்பு என்னும் சுற்றுலாப் பகுதியின் நுழைவு இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்தத் திருத்தலம்.

பராய் மரம் :

திருக்கோவிலின் வெளிச்சுற்று, உயர்ந்த மதிற் சுவர்களுக்கு இடையே இருக்கிறது. இருபுறமும் மலர்ச் செடிகளின் ஊடே நடுவில் கருங்கல் தள வரிசையில் நடந்து வந்தால், தென் மேற்கில் தனி சன்னிதியில் வீற்றிருக்கும் கன்னிமூலை கணபதியை தரிசிக்கலாம். வடமேற்கில் வள்ளிதெய்வானை சமேத முருகப்பெருமான் தனிச்சன்னிதியில் கோவில் கொண்டுள்ளார்.



நடுவில் மிகப் பழங்காலத்து பராய் மரம், சுற்றிலும் கம்பி வேலி இடப்பட்டு காணப்படுகிறது. அடியில் சிவலிங்கம் வீற்றிருக்க சிறிது இலைகளுடன் உயர்ந்து நிற்கிறது பராய் மரம். இந்த மரத்தின் இலைகளும், பட்டையும், வேரும் முழுவதும் மருத்துவ குணமுடைய பராய்மரம் தான் தலவிருட்சமாக உள்ளது. மற்ற எந்த ஆலயத்திலும் இல்லாது இங்கே மட்டும் தான் இந்த மரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த இடம் பராய் மரங்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. எனவே தான்தாடுகாவனம்என்று வடமொழியில் அழைக்கிறார்கள். இறைவன் பராய்த்துறை நாதர் என்றும், தாருகாவன ஈசர் என்றும் மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனை :

கேன்சர் எனப்படும் புற்றுநோய் என்பது இன்றும் கடின நோயாகவே பார்க்கப்பட்டு வருகிறது. உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமான பெருக்கம் அடையும் தன்மை கொண்டது. இந்த நோய் உடலின் உள்ளுறுப்புகளிலும், வெளிப்புறத்திலும் தாக்கலாம். இடம், வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல, இந்த நோய்க்கு கதிரியக்கச் சிகிச்சை நவீன மருத்துவத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.



இருப்பினும்இறைவன் சர்வ வல்லமை பெற்றவன்; நம்மைக் காப்பான்என்ற நம்பிக்கையில், அவனையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறோம். புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வருவதற்காக, இந்த ஆலயத்திற்கு நேரில் வந்து வழிபட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

கோவிலின் அக்னி மூலையில் உள்ள கிணற்றில் இருந்து நீர் இறைத்து, ஒற்றைப்படை வரிசையில் தல விருட்சத்துக்கு நீர் ஊற்றிவிட்டு அதனை பன்னிரண்டு முறை சுற்றி வரவேண்டும். பதினோரு முறை சிவ நாமம் சொல்லியும், பன்னிரண்டாவது சுற்றில் பிரார்த்தனையையும் சொல்லி இறைவனை வழிபட வேண்டும்.

மூலிகை மரக்காற்றே மனதுக்கும், உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தரும். பிறகு பராய்த்துறைப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். கோவிலில் அர்ச்சகர் கொடுக்கும் மூலிகை பிரசாதத்தைத் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் அருந்திவிட்டு, சிவபெருமானின் அருள்பெற்ற விபூதியை உடலில் தரித்துக் கொள்வது நன்மை அளிக்கும்.

வாரம் தோறும் திங்கட்கிழமைகளிலோ அல்லது மாத சிவராத்திரி காலங்களிலோ, இத்தல இறைவனை தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தால், கை மேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.



திருக்கோவில் அமைப்பு :

காவிரி தென்கரையோரம் 7 நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளது. நந்தியம்பெருமானை வழிபட்டு, அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றால், அங்கே மற்றொரு கோபுரம் ஐந்து நிலைகளுடன் நம்மை வரவேற்கிறது.

அதையும் கடந்து சென்றால், கலை அழகுமிக்க மண்டபங்களுக்கு அடுத்தபடியாக இறைவனின் கருவறை காணப்படுகிறது. கிழக்கு நோக்கிய வண்ணம் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார் திருப்பராய்த்துறை நாதர். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி நடராஜர் சபை உள்ளது. அங்கிருந்து வெளியே வந்தால் அருகிலேயே தெற்கு நோக்கிய படி அன்னைபசும்பொன் மயிலாம்பாள்என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

உள் பிரகாரம் முழுவதும் கருங்கற்களால் மூடப்பட்டு குளிர்ச்சியாக இருக்கிறது. அந்த உட்பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், சமயக் குரவர்கள் நால்வர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கிய வண்ணம் சோமாஸ்கந்தர், விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்ரமணியர், பஞ்சலிங்கங்கள், மகாலட்சுமி, விஷ்ணு, அவருக்கு அருகே துர்க்கை மற்றும் லட்சுமி சேர்ந்த துர்க்கா லட்சுமி ஆகியோர் வீற்றிருக்கிறார்கள்.

இந்த மூர்த்தங்களை அடுத்தாற்போல, அழகிய கோலங்கொண்ட ஆறுமுகப்பெருமான் பன்னிரு கைகளுடன் ஆயுதங்களைத் தாங்கி, மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளிதெய்வானை வீற்றிருக்கிறார்கள். ஆறுமுகப்பெருமானின் முன்பாக திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் இருப்பது தனிச்சிறப்பாகும்.

தேவ கோஷ்டத்தில் தெற்கு நோக்கிய நிலையில் மேதா தட்சிணாமூர்த்தி, பின்புறம் லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன. ஈசானிய மூலையில் நவக்கிரகங்களுக்கான மேடை உள்ளது. இதில் சனீஸ்வரருக்கு மட்டும் காக்கை வாகனம் உள்ளது. அருகே மேற்கு நோக்கிய திசையில் கால பைரவர் காட்சி தருகிறார்.

சுவாமி அம்பாள் வீற்றிருக்கும் வெளி மண்டபத்தில் நுழைவு வாசலின் ஒரு தூணில், காலை முழுவதும் உயர்த்தி ஊர்த்துவத் தாண்டவமாடும் கோலத்தில் நடராஜர் வீற்றிருக்கிறார். அதற்கு எதிர் தூணில் அவருடன் போட்டி போட்டு நடனமாடும் கோலத்தில் காளியின் திருக்கோலம் அமைக்கப்பட்டிருப்பது அற்புதக் காட்சியாக உள்ளது.

அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்

பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை

இரக்கை மேவிய ஈசனை பேத்துமின்

பொருக்க நம்வினை போயறுங் காண்மீனே’ –என்ற அப்பர் 11 பதிகங்களை இந்தத் திருத்தலத்தில் பாடியுள்ளார். மேலும் திருஞான சம்பந்தர் 11 பதிகங்கள் பாடியிருக்கிறார். இது தவிர இத்தல இறைவனைப் பற்றி திருவாசகத்தில் மாணிக்கவாசகரும், பட்டினத்தாரும் பாடி சிறப்பித்துள்ளனர்.

தினமும் காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

முதல் முழுக்கு :

காவிரியின் தென்கரை சாலையை ஒட்டி இந்த ஆலயம் அமைந்திருப்பதால், காவிரி நதியே இந்த ஆலயத்தின் தல தீர்த்தமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் துலா மாதத்தின் (ஐப்பசி), முதல் நாள் அன்று இங்குமுதல் முழுக்குஎன்ற நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகுதான் மயிலாடுதுறை திருத்தலத்தில்கடை முழுக்குஎன்ற நீராடல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முழுக்கு அன்று காவிரிக்கரையில் சுவாமியும், அம்பாளும் உற்சவர்களுக்கும் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் அம்பாளும், இறைவனும் கோவிலுக்கு வருவார்கள். அப்போது அவர்களை வணங்கி வழிபட்டால், சகல தோஷங்களும், பாவங்களும் பறந்தோடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. புரட்டாசி மாதம் இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் அர்ச்சித்து வழிபடுவதும் தனிச் சிறப்பாக கூறப்படுகிறது.

 

நன்றி இணையம்