தானத்தில் சிறந்தவர் கர்ணன்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:29 | Best Blogger Tips

பாண்டவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். ஆனால் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்ற சந்தேகம் இருந்தது. இவர்களின் சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கி பாண்டவர்களை அழைத்து இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் என்றார்.
பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தர்மர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். தானம் செய்ய செய்ய அவ்விரு மலைகளும் வளர்ந்து கொண்டே இருந்தன. தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. மாலைப் பொழுது வந்ததும் எங்களால் முடியாது கண்ணா! என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார் தருமர்.
உடனே கிருஷ்ணன் கர்ணனை வரவழைத்து கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? என்று கேட்டார். உடனே கர்ணன், இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன் என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.
பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப்பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக்காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதால் தானத்தில் சிறந்தவர் கர்ணனே என்று பாண்டவர்களுக்கு உணர்த்தினார் கிருஷ்ணன்.

 நன்றி இணையம்