"வாடிய பயிரை கண்டபோதெல்லாம், வாடினேன்"

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:54 | Best Blogger Tips

அக்.: 5 "வாடிய பயிரை கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலாரின் பிறந்த தின சிறப்பு பகிர்வு
இராமலிங்க வள்ளலார்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் ராமையா - சின்னம்மை தம்பதியருக்கு 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் ஐந்தாவது மகனாக பிறந்தவர் தான் இராமலிங்கர். சபாபதி என்பவரிடம் ஐந்து வயதில் கல்வி கற்று, ஒன்பது வயதில் பாடும் திறமையையும், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் திறமையையும் பெற்று இருந்தார். சைவராக பிறந்து திருமாலை போற்றியவர். இவர் குழந்தையாக இருந்த போது கண்களில் அசைவுகள் இல்லாமல் இறைவனை பார்த்து சிரிப்பதை கண்ட ஆலய அந்தணர் "இறையருள் பெற்ற திருக்குழந்தை" என்று பாராட்டப்பட்டவர். சாதி மற்றும் மதங்களால் வேறுபட்டு இருந்த மக்களை அவற்றில் இருந்து விடுபட்டு வர வடலூரில் சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.
சத்திய தரும சாலை:
சத்திய தரும சாலை எனும் பெயரில் பசியால் வாடும் அனைவருக்கும் சாதி மதம் ஆண் பெண் என வேறுபாடு பார்க்காமல் பார்க்காமல் உணவு வழங்கி வந்தார். இதற்காக அன்று அவர் மூட்டீய தீ இன்று வரை அணையாமல் பசித்தோர்க்கு உணவு வழங்கி வருகிறது. பசிப்பிணியால் வாடியவர்களை கண்டு வாடியவர் தான் வள்ளலார்.
வள்ளலார் வாழ்வில்:
திகம்பர சாமியார் என்பவர் சாலையில் செல்லும் மனிதர்களை பார்த்து அவர்களின் குணங்களை கொண்டு ஆடு செல்கிறது, மாடு செல்கிறது, நரி செல்கிறது என கூறுவார். வள்ளலார் ஒரு முறை சாலையில் செல்வதை கண்ட திகம்பர சாமியார் உத்தம மனிதர் செல்கிறார் என்றார். மக்கள் மூடநம்பிக்கை, சாதி மற்றும் மதங்கள் போன்றவற்றில் இருந்து வெளிவர பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். இராமலிங்க அடிகளார் பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளால் போற்றப்பட்டவர்.
வள்ளலாரின் புகழ்பெற்ற வரிகள்:
"அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆரூயிர்கட்கு எல்லாம்நான் அன்பு செயல் வேண்டும்"
"தமிழ்மொழி இறவாத நிலை தரும்"
"அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருனை"
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்"
"கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக"
"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்"
"அனைத்து வியாதிகளுக்கும் உணவே மருந்து"
"பசித்திரு, தனித்திரு, விழித்திரு"
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்"
"சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்"
வளரும் குழந்தைகளுக்கு வள்ளலார் கூறிய பத்து பொன்மொழிகள்:
தாய் தந்தை மொழியைத் தள்ளி நடக்காதே
குருவை வணங்க கூசி நிற்காதே
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
மனமொத்த நடப்புக்கு வஞ்சகம் செய்யாதே
நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே

 நன்றி இணையம்