திப்பு சுல்தான் அவர்களின் வாழ்க்கை வரலாறு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:50 | Best Blogger Tips

“பல நாள் பதுங்கி வாழும் நாயைவிட, சில நிமிடங்கள் போர் புரிந்து உயிர் துறக்கும் சிங்கம் மேலானது” என்ற பூகம்பமொழியை வரலாற்றுக்கு வழங்கிய போராளிதான் மாவீரன் திப்பு சுல்தான்.
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒருவிடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.


சிலருக்கு அரசியல் தெரிந்தளவுக்கு வீரமிருக்காது. வீரமிருக்கும் அளவுக்கு ஆட்சி திறன் இருக்காது. ஆட்சித் திறன் இருக்கும் அளவுக்கு நிலப்பரப்பு இருக்காது. ஆனால், ஒரு மன்னனுக்கு & ஒரு தலைவனுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும், அந்த ஆற்றல்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் பெற்ற பிறவி தலைவன் திப்பு சுல்தான். பன்முக ஆற்றல் கொண்ட அறிஞன்.

“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப் போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்” என தனது இளைய இந்தியா பத்திரிகையில் காந்தியடிகள் சிலாகித்தார்கள்.

விடுதலை உணர்வு திப்புவுக்கு தாய்ப்பாலோடு சேர்த்தே புகட்டப்பட்டது. அவரது தந்தை ஹைதர் அலியும் ஒரு விடுதலை வீரரே! அவர்தான் மகனுக்கு வழிகாட்டி!

இவரது முன்னோர் அஜ்மீர் & குல்பர்கா பகுதிகளிலிருந்து குடியேறிவர்கள். இவர் மைசூர் அரசின் ராணுவ தளபதி. பின்னாளில் மைசூர் அரசுக்கு அரசராக பொறுப்பேற்றார்.

ஹைதர் அலி & ஃபக்ர் நிஸா ஆகியோருக்கு 20-11-1750 அன்று திப்பு சுல்தான் பிறந்தார். அவருக்கு கருவறையே பாசறையாக இருந்தது. பாசறையே கருவறையாக திகழ்ந்தது!

பெத்தனூர் மன்னருடன் பாலம் என்ற இடத்தில் ஹைதர் அலி போர் புரிய நேர்ந்தது. மகன் திப்புவையும் அழைத்துச் சென்று போர்க்களத்தை காட்டினார் தந்தை ஹைதர் அலி. போர்க்களம் அவர்களுக்கு பூங்காவாகவே தெரிந்தது. இப்படித்தான் திப்பு போராடி வளர்ந்தார். தந்தையும், மகனும் ஒரே களத்தில் எதிரிகளைச் சந்தித்தனர்.

ஆந்திரா, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என இன்றைய இந்திய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து ஹைதர் அலி தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

1782ல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இரண் டாவது மைசூர் போரில் ஹைதர் அலி வீரமரண மடைந்தார். தன் தந்தை வழியேற்று விடுதலைப் போரை தொடர்ந்தார் திப்பு. இவர் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அதிர்ந்த னர். ஆம்! திப்பு ஒரு விடுதலை புலி! அவரது கொடியில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

திப்பு ஒரு சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர், தொழுகையாளர். தனது அரசை இறைவழியில் செயல்படும் அரசு என்றார். தனது வீரர்களை முஜாஹிதீன்கள் என்றார். ஆங்கிலேயருக்கு எதிரான தனது விடுதலைப் போரை ‘ஜிஹாத்’ என வர்ணித்தார்.

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றார். தவறு செய்த முஸ்லிம்கள் மீது ஷரீஅத் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கினார். மற்றவர்களுக்கு பொதுச் சட்டங்களின் கீழ் தீர்ப்பு வழங்கினார். தனது அதிகாரிகளுக்கு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடும்போது நபி (ஸல்) அவர்கள் எமது தலைவர் என குறிப்பிடுவார்.

சீர்திருத்தவாதி
===========

ஆடம்பரங்களை எதிர்த்த திப்பு ஒருவர் தனது வருமானத்தில் 1 சதவீதத்தை மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்ய வேண்டும் என அறிவித்த சீர்திருத்தவாதி.

சட்டப்படியான விசாரணையும், தண்டனையும் நமது நல்ல மரபை பாதுகாக்க உதவ வேண்டும். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்க வேண்டும் என ஆணையிட்ட மனித உரிமைப் போராளி.

கலைஞன் & கல்விச் செம்மல்
======================

உருவமற்ற ஓவியங்களையும், தோட்டங்களையும், நீரூற்றுகளையும் தனது அரண்மையில் உருவாக்கிய திப்பு மிகச் சிறந்த கலை ரசிகர். நல்ல கலைஞர்.

நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை அமல்படுத்திய திப்பு, காமராஜரின் முன்னோடி எனலாம். அவரது ஆட்சியில் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் மதரஸா கல்வி கூடுதலாகப் போதிக்கப்பட்டது.

இஸ்லாம் மனித குலத்துக்கான அருட்கொடை என்பதை ஆழமாக நம்பிய திப்பு, ஹதீஸ்களை ஆழ்ந்து பார்த்தார். குர்ஆனை தானும் ஓதி, தனது ஆட்சியில் வாழும் முஸ்லிம்களையும் ஓத வலியுறுத்தினார்.

தன் பிள்ளையை படிக்க வைக்காத தந்தை தன் கடமையை மறந்தவன் ஆகிறான் என்பது அவரது அறிவிப்பாக இருந்தது.

நூலகமும் & அறிவாற்றலும்
====================

ஏழைகள் இரவும், பகலும் உழைத்துத் தந்து அப்படியே மரணிக்கின்றனர். ஓடும் ஆறுகளின் அழகை ரசிக்கவோ, மேகத்திரள்களை கண்டு மகிழவோ, வானங்களை, சோலைகளை ரசிக்கவோ, சிலாகிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை. யார் ஆண்டாலும் அவர்களதுநிலை அப்படியேதான் உள்ளது என்று இலக்கியப் பார்வையுடன் கூடிய இரக்கமுள்ள ஆட்சியாளனாகவும் திகழ்ந்தார்.

இந்தியாவிலேயே நூலகங்களை தனது அரண்மனையில் ஏற்படுத்திய முதல் மன்னன் திப்பு சுல்தான். அவரது நூலகத்திற்கு ஓரியண்டன் எனப் பெயரிட்டார். அந்த காலத்திலேயே 2000க்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கிறது. திப்பு ஒரு பன்மொழிப் புலவர். உர்து, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகள் அவரது நாவில் சுரக்கும்.

வெளியுறவுக் கொள்கை
==================

திப்பு பல பரிமாணங்களைக் கொண்டவர். மிகச் சிறந்த அரசியல் விஞ்ஞானி. இந்தியாவின் முதல் வெளியுறவு துறையின் கொள்கை வகுப்பாளர் எனலாம். ஆங்கிலேய ஆட்சியை இந்தமண்ணில் வேரூன்ற விட மாட்டேன் என முழங்கியதோடு நில்லாமல், அதற்கான மாற்று செயல் திட்டங்களையும் வகுத்தார். அன்றைய முஸ்லிம் உலகின் தலைமையகமாகத் திகழ்ந்த துருக்கிய பேரரசின் உதவியை நாடினார்.

1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் எகிப்தின் புகழ் பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டி நோபிலுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அச்சமயம் துருக்கியர்கள், மிகப் பெரிய ரஷ்யாவை எதிர்த்து போர் நடத்திக் கொண்டிருந்ததால் அவர்களால் திப்புவுக்கு உதவ முடியவில்லை. மனம் தளராத திப்பு அன்றைய ஐரோப்பாவை மிரட்டிய நெப்போலியனுடன் ராணுவ ஒப்பந்தம் போட ஒரு தூதுக் குழுவை அனுப்பினார். ஆங்கிலேயர்களை ஐரோப்பாவில் மிரட்டிய நெப்போலியனும், இந்தியாவில் அதிர வைத்த திப்புவும் ஓரணி திளர வேண்டிய தருணம் வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி & பரிசுகளை அனுப்பி மகிழ்ந்தனர். ஆனாலும் உறவுகளும், ஒப்பந்தங்களும் வந்தபோதும், அது நிறைவேறாமல் போனது வரலாற்று விபத்தாகும்.

திப்புவுக்கு நெப்போலியன் கடிதம் எழுதினார். அது பின்வருமாறு…
தேசிய அமைப்பின் தலைமை தளபதி நெப்போலியன் போனபர்ட் தமது உன்னத நண்பரும், மகத்தான சுல்தானுமாகிய திப்புவுக்கு எழுதுவது.

வெல்ல முடியாத படையுடன், தங்களை பிரிட்டனின் இரும்புச் சங்கிலியிலிருந்து விடுவிக்க ஆவலுடன் வரவிருக்கிறோம்-. மஸ்கட் வழியாக தாங்கள் அனுப்பிய தகவல்கள்படி தங்களின் விருப்பத்தையும், அரசியல் சூழ்நிலைகளையும் அறிந்தோம். சூயிஸ் (கால்வாய்) அல்லது கெய்ரோவுக்கு தங்களது கருத்தை அதிகாரப்பூர்வமான & திறமைமிக்க ஒருவர் மூலம் அனுப்பவும். அவருடன் நான் விவாதிக்க விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வலிமை சேர்க்கட்டும். தங்கள் எதிரிகளை அழிக்கட்டும்.

புகழ்பெற்ற இக்கடிதம் 1798ல் கெய்ரோவில் இருந்தபடி நெப்போலியன் எழுதியது.

இக்கடிதம் திப்புவின் கைகளுக்கு கிடைக்கும் முன்னரே திப்பு கொல்லப்பட்டு விட்டார். புகழ்பெற்ற முதல் ஆசிய & ஐரோப்பிய ராணுவ உடன்படிக்கையாக மலர வேண்டிய அந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது, இந்திய விடுதலையை இருநூறு ஆண்டுகள் ஒத்தி வைத்தது.