*எது சந்தோஷம்*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:31 | Best Blogger Tips

 


ஒர் ஊரில் மாபெரும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனிடம் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் சந்தோஷம் மட்டும் இல்லை. அதற்காக அவன் அந்த சந்தோஷத்தைத் தேடிக் கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பார்த்தான். ஆனால் அங்கும் அவனுக்கு கிடைக்கவில்லை.

மேலும் அவன் சந்தோஷத்திற்காக மது, மங்கையர், போதைப் பொருள் என்று எல்லாவற்றின் பின்னும் சென்றான். ஆனால் அதனாலும் அவன் மனமானது மகிழ்ச்சி அடையவில்லை. இறுதியாக அவன் "துறவறத்தில் இறங்கினால் மகிழ்ச்சி கிடைக்கும்" என்று யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டு, அதற்கும் முயற்சிக்க முடிவெடுத்தான்.

அதற்காக அவன் தன் வீட்டில் இருக்கும் தங்கம், வைரம், வைடூரியம் என்று அனைத்தையும் ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு ஒரு துறவியைப் பார்க்கச் சென்றான். அப்போது துறவி ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த அந்த செல்வந்தன், அந்த மூட்டையை துறவியின் காலடியில் வைத்துவிட்டு, "குருவே! இதோ என் அனைத்து சொத்துக்களையும் ஒரு மூட்டையாக கட்டி வைத்திருக்கிறேன். இனி இவை எதுவும் எனக்கு தேவையில்லை. எனக்கு அமைதியும், சந்தோஷமும் மட்டுமே வேண்டும்." என்று கூறி துறவியிடம் சரணடைந்தான்.

அந்த துறவியோ செல்வந்தன் கூறிய அனைத்தையும் கேட்டுவிட்டு, அந்த மூட்டையை அவசரமாக பிரித்து பார்த்தார். அதில் கண்ணை பறிக்கும் வகையில் இருக்கும் தங்கம் மற்றும் வைரத்தை பார்த்ததும், அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.

அதைப் பார்த்த செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சியாகி விட்டது. நாம் ஒரு போலி சாமியாரிடம் நம் செல்வத்தை கோட்டை விட்டு விட்டோமே! என்று கவலை அடைந்து. கோபத்தில் அந்த துறவியை துரத்த ஆரம்பித்தான்.

துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியவில்லை. துறவி சந்து பொந்துகளில் எல்லாம் ஓடி கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்றார்.

பின் அந்த செல்வந்தனைப் பார்த்து "என்ன பயந்துவிட்டாயா? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக் கொள்" என்று மூட்டைக் கொடுத்தார்.



இதுவரை சந்தோஷம் இல்லை என்று நினைத்து கவலையில் இருந்த அந்த செல்வந்தன், கைவிட்டுப் போன தங்கமும், வைரமும் திரும்பி கிடைத்துவிட்டது என்பதில் பெரும் சந்தோஷத்துடன் இருந்தான்.

அப்போது அந்த துறவி செல்வந்தனைப் பார்த்து, "இதற்கு முன் இந்த செல்வம் உன்னிடம் தான் இருந்தது. ஆனால் அப்போது உன்னிடம் சந்தோஷம் இல்லை! இப்போது உன்னிடம் இருப்பதும் அதே செல்வம் தான், ஆனால் இப்போது உன் மனதில் சந்தோஷம் இருக்கிறது!" என்று கூறி சென்றுவிட்டார்.

இதிலிருந்து என்ன புரிகிறது, "சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை. மனதில் தான் இருக்கிறது. ஆனால் அது பலருக்கும் தெரியவில்லை. ஆகவே அதற்காக மற்றவர்களை சார்ந்து இருக்கிறோம்" என்னும் உண்மை நன்கு தெரிகிறது.

 

நன்றி இணையம்