தற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் சிந்தனையினை கிளறும், இப்படியும் இருக்குமோ என யோசிக்க தோன்றும்
அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் ஏராளம் உண்டு, தலைகீழாக நின்றாலும் அதை உணரமுடியுமே தவிர காரணம் கண்டுபிடிக்க முடியாது என்பதை சில இடங்களில் உணர முடிந்தாலும் தற்போது நடக்கும் தஞ்சை சம்பவம் அதை உறுதிபடுத்துகின்றது
என்ன சம்பவம்?
ராஜராஜ சோழன், உலமகாதேவி சிலைகள் மறுபடி தஞ்சைக்கு கொண்டுவரபட்டு கோவிலில் வைக்கபட்ட செய்தி எல்லோரும் அறிந்தது
ஆச்சரியமாக அது அந்த கோவிலுக்குள் கொண்டுவரபட்ட மறுநொடியில் காவேரி கண்காணிப்பு குழுவிற்கான உத்தரவு அரசிதழில் வெளிவருகின்றது
அச்சிலைகள் கோவிலுக்குள் அமர்ந்தபின் காவேரி பற்றிய நல்ல தகவல்கள் வருகின்றன, குழு அமைப்பது வேகமாகின்றது, நீர் பகிர பேச்சுவார்த்தை தொடங்க இருக்கின்றது
ஆச்சரியமாக கன்னடர் பக்கமும் அமைதி, அவர்கள் அரசியல் குழப்பத்தில் அமைதி காத்தே தீரவேண்டும்
சிலை மீட்பும், காவேரி வருகையும் தனி தனி செய்திகளாக இருந்தாலும் இரண்டிற்கும் இடையில் ரகசிய இழை இருப்பது சில கண்களுக்கு தெரிகின்றது, இரண்டுமே தஞ்சை நோக்கி ஒரே நேரம் வருவது தற்செயலாக இருக்க முடியாது
உண்மையில் ராஜ ராஜ சோழனின் சிலை களவாடபட்ட பின்பே காவேரியில் மாபெரும் சிக்கல் வெடித்தது, அது கண்டுபிடிக்கபட்டபின் மீட்பு போராட்டம் வலுத்தது
இப்பொழுது சிலையோடு காவேரியும் திரும்பி இருக்கின்றது
தஞ்சை ஆலயம் மகா மர்மமானது, ஆளும் திமிரிலோ இல்லை அதிகார தோரணையிலோ யார் வந்தாலும் அவர்கள் பதவி இழப்பர் இல்லை உயிரையும் இழப்பர்
எகிப்து பிரமீடுகளின் தீரா மர்மம் போலவே தஞ்சை கோவிலின் சூட்சுமமும் மகா மர்மமானது, அதை முழுக்க விளங்கியவன் யாருமில்லை.
விளங்கிகொண்டவன் வெளி சொல்வதுமில்லை
இதனால்தான் நாயக்க, மராட்டிய மன்னர் காலங்களிலே அது புறந்தள்ளபட்டு மர்ம கோவிலாக பார்க்கபட்டது
இவ்வளவிற்கும் நாயக்கர்களும், மராட்டியர்களும் தீவிர இந்துமத பக்தர்கள், மதத்தை காக்கவே அரசு அமைத்து போராடியவர்கள், அவர்களே அஞ்சி ஒதுங்கியிருக்கின்றார்கள் என்றால் அதில் உள்ள சில சூட்சும விவகாரம் அப்படி இருந்திருக்கின்றது
காரணம் அக்கோவிலை நிர்மானித்த கரூர் சித்தர் அதனை காக்க சில வரம் கொடுத்தார் என்பார்கள் , அதாவது அக்காலத்தில் ஒரு மன்னன் வென்றால் முதலில் கொள்ளையிடுவது ஆலயமே
இதனால் அங்கு அரச தோரணையோடு வரும் யாரும் அழியட்டும் என்றொரு சாபத்தை அவர் நிறுத்தி இருப்பதாக சொல்வார்கள்
மற்றபடி நான் சாதாரண மனிதன், நீயே நிரந்தர கடவுள் என மனதார எண்ணிகொண்டு உள்செல்லும் தலைவர்களுக்கோ எந்த ஆபத்தும் நேர்ந்ததில்லை
அங்கு உட்செல்லும்பொழுது மன்னனே ஆயினும் மகுடம் கழற்றி வைத்து பதவியின்றின்றி உட் செல்லவேண்டும் என்பது அக்கால விதி, ஆண்டவன் முன் அனைவரும் ஒன்றே என்பதுதான் அந்த பிரக்தீஸ்வரனின் விருப்பம்
அதை மீறி நான் அதிகாரம் மிக்கவன் என தனித்து செல்லும் யாரும் அந்த அதிகாரத்தை இழப்பர், நாயக்கர் காலம் முதல் இக்காலம் வரை அதுதான் நடக்கின்றது
இவை எல்லாம் நினைவுக்கு வருகின்றன
எப்படியோ சோழனின் சிலை தஞ்சை அலயம் அடைந்தவுடன், தஞ்சையின் ஒரே சொத்தான காவேரியும் அதை நோக்கி வர இருப்பது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது
நிச்சயம் இவை சாதாரண சிலைகளாக இருக்க முடியாது, இது இருக்குமிடம் செழிக்கட்டும் என்ற ஒரு வித சக்திகொண்ட சிலைகளாக இருக்கலாம்.......
