கைகேயியின் பெரிய தியாகம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:41 | Best Blogger Tips

இராமயணத்தில் கைகேயியின் பெரிய தியாகம்
தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.
இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தான் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ஸ்ரீஇராமரால் அனுப்பப்பட்டார்.
அவரும் நந்திகிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு, பரதனிடம், “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். பரதனும், “ஸ்ரீஇராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ.” எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடிஅம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். “ஸ்ரீஇராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லக்ஷ்மணனையும், என் தம்பி சத்ருக்னனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர்.” எனக் காட்டினான் பரதன். அவளையும் வணங்கிய பின்னரும், வெளிப்படையாக, “உன்னைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார் அனுமன்.
துணுக்குற்ற பரதன், “அவள் மஹாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே! என நான் வருந்தாத நாளில்லை. அவளுக்கு நீங்கள் ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?” எனக் கேட்டான். அப்போது அனுமன் பின்வருமாறு பிறர் அறியாத கைகேயியின் பெருமைகளைக் கூறினார்.
பரதா! நீயோ இந்த உலகமோ அவளை அறிந்து கொண்ட லக்ஷணம் இவ்வளவுதான். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா?
தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகளிலும் உயிரோட்டத்தை உணர்ச்சிகளைக் கண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவன் தசரதன் உத்யானவனத்தில் திந்தபோது, தளதளவெனப் பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான். ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி, “தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய்.” எனச் சாபமிட்டாள்.

ஒருசமயம் தசரதன் சம்பாசுரன் என்ற அசுரனை எதிர்த்துப் போருக்குச் சென்றபோது, கைகேயி தேர்ச் சாரதியாக தசரதனுடன் சென்றாள். போரின்போது தேர்ச் சக்கரத்தின் கடையாணி கழன்று விட்டது. அதை தசரதன் கவனிக்கவில்லை. ஆனால் சாரதியாக இருந்த கைகேயி அதையறிந்து, தன் விரலையே அச்சாணியாகக் கொடுத்து தேர் கவிழாமல் நிலைநிறுத்தி தசரசன் உயிரைக் காத்தாள். சம்பாசுரனை வென்ற தசரதன் தன் உயிரைக் காத்த கைகேயிக்கு அன்புப் பரிசாக இரண்டு வரங்கள் அளிப்பதாகக் கூறினான்.
"
இப்போது வேண்டாம்; தேவையானபோது கேட்டுப் பெற்றுக் கொள் கிறேன்' என்று கைகேயி கூறிவிட்டாள்.
அதன்பின்னர் ஒருசமயம் தசரதன் வேட்டையாட காட்டுக்குச் சென்றான். அங்கே தடாகம் ஒன்றில், சிரவணகுமாரன் என்ற சிறுவன் கண் தெரியாத தன் பெற்றோரின் தாகம் தணிக்க தண்ணீர் முகந்துகொண்டிருந்தான். அந்த சப்தத்தைக் கேட்டு ஏதோ மிருகம் தண்ணீர் குடிக்கிறது என்றெண்ணிய தசரதன் தொலைவிலிருந்து அந்த திசைநோக்கி அம்பெய்தான். அந்த அம்பு சிறுவன்மீது பாய்ந்து அவன் உயிரிழந்தான். அவனது அலறல் சப்தம் கேட்டு தசரதன் அங்கு சென்றபோது, சிறுவனின் கண் தெரியாத பெற்றோர் தன் மகன் உயிரிழந்ததற்கு தசரதனே காரணம் என்றறிந்து, ""நாங்கள் புத்திரனைப் பிரிந்ததைப்போல் நீயும் புத்திரனைப் பிரிந்து அந்த சோகத்தில் உயிரிழப்பாய்'' என்று சாபமிட்டு உயிர்துறந்தனர்.
அந்த சாபத்தைக் கேட்டு தசரதன் மனம் கலங்கினான். கானகத்திலிருந்து அரண்மனை திரும்பியபின் தசரதன் அதே நினைவாக சஞ்சலத்துடன் இருந்தான். தசரதன் சோகமே உருவாக குழப்பத்துடன் இருப்பதைக் கண்ட கைகேயி, தசரதனுடன் வேட்டைக்குச் சென்ற காவலர்களை அழைத்துவரச் செய்து, அவர்களிடமிருந்து காட்டில் நடந்தவற்றைக் கேட்டறிந்தாள்.
தசரதன் பெற்ற சாபத்தைக் கேட்டு கைகேயியும் கலக்க மடைந்தாள். சாபத் தின் விளைவுகளின் உண்மை நிலையைத் தெளிவாக அறிந்து கொள் ளவேண்டும் என்பதற்காக, அரண்மனை ஆஸ்தான ஜோதிடர்களிடம் தசரதன் மற்றும் புத்திரர் களின் ஜாதகத்தைக் கொடுத்து கிரகங்களின் அமைப்பில் நாட்டின் நிலைமை, தசரதன் மற்றும் தசரத புத்திரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களைக் கண்டறிந்து கூறும்படி கேட்டாள். ஜோதிடர்கள் ஜாதகங்களை ஆராய்ந்து, "அப்போதைய கிரக அமைப்பின் படி அயோத்தி சிம்மாசனத்தில் அமர்பவர் சில நாட்களில் மரணமடைவார்' என்று கூறினார்கள்.
புத்திரனைப் பிரிந்து தசரதன் உயிர் துறப் பான் என்பதற்கு, "தந்தையைவிட்டு புத்திரன் வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டால் எங்காவது ஓரிடத்தில் அவன் உயிரோடு இருப்பான். மகனைப் பிரிந்த சோகத்தில் தசரதன் மட்டும் உயிர்துறப்பான்' என்றும் ஒரு விளக்கம் கூறினர்.
சாபத்தின்படி தசரதன் உயிர்துறக்க வேண்டும் என்பது தவிர்க்கமுடியாதது என்ற நிலையில், இராமன் அவதார புருஷன் என்றறிந்திருந்த கைகேயி அவனது அவதாரப் பணி நிறைவேற இராமனையாவது காப்பாற்ற வேண்டுமென்று முடிவுசெய்தாள். தசரதனிடமிருந்து இராமனை எப்படிப் பிரிப்பது என்று யோசித்தாள். அதன்விளைவாக அவள் மனதில் தோன்றியதே "இராமனின் வனவாசம்'.
தசரதர் இராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து, தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி, குறித்த முகூர்த்தத்தின் பின்விளைவுகளை, பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.
அந்த முகூர்த்தப்படி இராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால், ராஜ்யபாரத்தில் இராமன் அன்று அமர்ந்திருந்தால் அதுவே அவனது ஆயுளை முடிந்திருக்கும். புத்ரசோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ரசோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும்போது, அது இராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு வைதவ்யம் வந்துவிடும் என்று தெரிந்திருந்தும் ஸ்ரீஇராமனின் உயிரைக் காப்பாற்ற நிச்சயித்தாள் உன் அன்னை.
அந்தக் கணத்தில் அரணாக இருப்பவன் உயிர் நீப்பது இராஜ்யத்தின் ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள். அப்போது கூட அவள் கேட்க விரும்பியது பதினான்கு நாள்கள் வனவாசம். வாய்தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம்கூட இராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகிவிட்டது.
எந்தப் பெண் தன் சௌமங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து மாற்றான் மகனைக் காப்பாள்? இராமனிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான் அத்தகைய வரத்தைக் கேட்டாள். ஒருகால் நீ ஏற்றால் ஸ்ரீஇராமனின் உயிர் காக்க உன்னையும் இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் மஹா தியாகி. அவளால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ஸ்ரீஇராமனின் தரிசனம் கிட்டியது. கர-தூஷணர் முதலாக இராவணன் வரை பல ராக்ஷஸர்களின் வதமும் நிகழ்ந்தது. அந்த புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்கவேண்டும்என்றார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவம் புரிந்தது.
தர்மத்தை நிலைநாட்ட அவதரித்திருக்கும் இராமனைக் காப்பதை தன் கடமையாகக் கருதிய கைகேயி, ஊரார் பழிச் சொல்லைப் பரிசாகப் பெற்றாள்.
இராமன் கானகம் புறப்பட்டபோது நாடே அழுதது; கைகேயியும் அழுதாள். கைகேயி அழுதது இராமன் பிரிந்து செல்வதற்காக மட்டுமல்ல; இராமனைப் பிரிந்த சோகத்தால் தன்னைவிட்டு நிரந்தரமாகப் பிரியப்போகும் கணவன் தசரதனுக் காகவும்தான்.
இராமனைக் கானகத்திற்கு அனுப்பியதற் காக கைகேயியை வாழ்த்தியவர்களும் உண்டு. இராமன் தன் அவதாரப் பணியைத் தொடங்க வழிசெய்த கைகேயியை மானசீகமாக வாழ்த்தியவர்கள் பகவானின் அவதார ரகசியம் அறிந்த தேவர்கள், முனிவர்கள், ஸ்ரீராமர் ஆகியோர். அவர்கள் கைகேயியின் பெருந்தன்மையையும் தியாகத்தையும் போற்றினர்.
(
மந்தரையின் துர்போதனையைக் கேட்டு, தன் சுயநலத்துக்காக கைகேயி அடாத செயல் செய்தாள் என்பது புறக் காரணம்.)