நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:55 | Best Blogger Tips
Image result for நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும்
அது ஒரு வானம் வஞ்சம் தீர்த்த வறண்ட கிராமம்!
பல குடும்பங்கள் ஊரை காலிசெய்துவிட்டு நகரத்தார் வாகனங்களுக்கு ரோடு போட சாலையோரமாய் குடிபெயர்ந்துவிட்டார்கள்! 
ஊரை விட்டு பிரிய மனமில்லாமல் ஊரோடு ஒட்டிக்கொண்ட ஒரு சில குடும்பங்களில் ராமசாமியின் குடும்பமும் ஒன்று!
ராமசாமிக்கு மூன்று பிள்ளைகள்! இது தவிர ஒரு ஒரு தாய் ஆடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளும் இருக்கின்றன, அதோடு நான்கு முருங்கை மரங்களும் இருக்கின்றன! ஆடும் குட்டிகளும் வருடாந்திர செலவுகளுக்கும், முருங்கை மரங்கள் வாராந்திர செலவுகளுக்கும் உதவுகின்றன! சீசன் வரும்போது ஐந்து கிலோ பத்து கிலோ என்று காய்க்கின்ற முருங்கைகள் மற்ற நாட்களில் ஒரு கிலோ இரண்டு கிலோவோடு நிறுத்திக்கொள்ளும்!
எவ்வளவு வந்தாலும் பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டால் ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது ராமசாமியின் வழக்கம்! முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!
ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்!
பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை, ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்! காரணம் ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!
ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்செல்ல, சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க, அவருக்காக மளிகைக்காரர் எடைபோட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது!
அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே,
இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே, அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்! நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்! நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்! கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார்! அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது, வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்! இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா, கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போன ராமசாமி, அய்யா மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்ல, ஒவ்வொரு முறையும் 
-------------------------------------------------------
நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி 
-------------------------------------------------------
தான் எடைபோட்டு கொண்டுவருவேன் இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ,
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது! 
தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!
இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!
இது தான் உலகநியதி!
நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும் நல்லதை தந்தால் நல்லது வரும், தீமையை தந்தால் தீமை வரும்! வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம், ஆனால் நிச்சயம் வரும்! ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!!..

 நன்றி இணையம்