உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு !!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:31 | Best Blogger Tips
உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு !!!

சாதனையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையேயான மிக முக்கியமான வித்தியாசம் என்ன தெரியுமா?

சாதனையாளர்கள் தங்கள் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். அது வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும் சரி, இரண்டையுமே தங்களுடைய தோளில் ஏந்திக் கொள்கிறார்கள்.

சாமானியர்கள் வெற்றிகள் வந்தால் ஏந்திக் கொள்ள தங்கள் தோள்களைத் தயாராக்குகிறார்கள். தோல்வி நெருங்கும் போதோ சுண்டுவிரலைத் தயாராக்குகிறார்கள், அடுத்தவர் மீது பழியைப் போட!

நமது செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் நாமே எடுத்துக் கொள்வது என்பது கடினமான வேலை. அதற்கு தளராத மன உறுதியும், தைரியமும், தன் மீது வைக்கும் அழுத்தமான நம்பிக்கையும் வேண்டும்.

நமது செயல்களுக்கான விளைவுகளின் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ளும்போது தான் வாழ்க்கை சுவாரசியமாகிறது. ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் எனும் வேட்கையும், தவறி விழுந்தால் உடனே எழவேண்டும் எனும் உந்துதலும் அப்போதுதான் உருவாகும்.

இதுதான் வெற்றியாளர்களை உருவாக்குகிறது!
இதுதான் சாதனையாளர்களைச் சம்பாதிக்கிறது!

கொஞ்ச நேரம் உங்கள் அலுவல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு உறவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்குமிடையே இணக்கம் இல்லாததற்கு யார் காரணம்? உங்கள் பெற்றோருடன் பிணைப்பு இல்லாததற்கு யார் காரணம்? நண்பர்களுடன் நட்பு இல்லாததற்கு யார் காரணம்?

அடுத்தவர்களை குறை கூறும் முன், 'நானும் இதற்கு ஒரு காரணமா?' என ஒரு நிமிடம் நிதானித்துப் பாருங்கள்.

இதுவரை உங்கள் மனதிற்குத் தெரியாத ஏகப்பட்ட விஷயங்கள் தெரியவரும்! உங்கள் மனதின் கண் சட்டென இமை விரிக்கும்.

பொதுவாக நாம் நமது தோல்விகளுக்கான காரணங்களை வெளியேதான் தேடுவோம். நமது சோகத்துக்குக் காரணம் நண்பன் என்போம், கோபத்துக்குக் காரணம் தோழி என்போம், ஏமாற்றத்துக்குக் காரணம் மேலாளர் என்போம்.

நமக்கு வெளியே இருப்பவைதான் நம்மை இயக்குகின்றன, நமது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன என்று நாம் கருதிக் கொள்வதே இதன் காரணம்.

நமக்குள்ளே நாம் மூழ்கி நமது தோல்விகளுக்கான காரணங்களை ஆராயத் துவங்கினால் விடைகள் வித்தியாசமாக வரும். நமது ஈகோவோ, பொறுமையின்மையோ, திறமையின்மையோ ஏதோ ஒன்று இதன் காரணமாக இருக்கும்.

காரணங்கள் நமக்குள்ளேயே இருப்பது நல்லது. நமக்குள் இருக்கும் பிழைகளைத் தானே நாம் சரி செய்ய முடியும்! பிறரிடமோ, சூழ்நிலையிடமோ நமது வெற்றி தோல்விக்கான சுக்கான் இருக்கிறது என நாம் கருதிக் கொள்ளும் காலம் வரை நமது வெற்றியை நாம் உருவாக்க முடியாது.

'டைமே இல்லை... இருந்திருந்தா நல்லா எக்ஸர்சைஸ் பண்ணி உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பேன்' என பலரும் சொல்வதுண்டு. உடற்பயிற்சி செய்யாத சோம்பேறித் தனத்தையும், ஆரோக்கியமான உணவைச் சாப்பிடாத கட்டுப்பாடற்ற மனதையும் தப்ப வைப்பதற்காகச் சொல்லப்படும் பொய்- `டைம் இல்லை'.

அந்த சிந்தனையை மாற்றி, 'நாம்தான் அதன் காரணம்' என யோசித்துப் பாருங்களேன்! அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது, வேலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, நடப்பது, ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவது... என செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள் தோன்றும்.

'நானே பிரச்சினை' என புரிந்து கொள்பவர்கள் 'என்னால்தான் தீர்வு' என்பதையும் அறிந்து கொள்வார்கள்.

தோல்விகளில் மட்டுமல்ல, வெற்றிகளிலும் இப்படியே நடந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஒரு வெற்றி வந்தால் அதற்குக் காரணமும் நீங்களே என உங்கள் மனதைப் பாராட்டுங்கள். உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் வரும். வெற்றிகளில் கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டியது முக்கியம். அதே நேரம் வெற்றிக்குக் காரணமான உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டியதும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

உங்கள் செயல்களுக்கும், முடிவுகளுக்கும் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்வதென்பது நீங்கள் உங்களுக்கு எஜமானன் என்பதைப் போல. 'என்னால் முடியும்' எனும் தன்னம்பிக்கையின் வேர் அது. அது உங்களுக்கு நீங்களே தரும் சுதந்திரம். உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்ளும் கிரீடம்.

'என் செயல்களுக்கு நான் காரணம் அல்ல' என்பவர்கள் அடிமை மனநிலையினர். எப்போதுமே ஏதோ ஒன்றின் அடிமையாய் இருப்பதிலேயே பழகிப் போகின்ற மனநிலைமை. இவர்கள் எக்காலத்திலும் உயரிய இருக்கைகளுக்கு வந்தமர முடியாது.

சிலர் என்ன சொல்வார்கள் தெரியுமா? 'நானும் காரணம்தான், ஆனா நானே முழுக் காரணமல்ல'. இது நம்முடைய வெற்றி தோல்விக்கு இன்னொருவனையும் கூட இழுத்துக் கொள்வது.

'இருட்டில் நடக்கப் பயமாய் இருந்தால் கூடவே ஒரு நண்பனையும் இழுத்துக் கொண்டு போவது போல'. இது தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடு, அச்சத்தின் வெளிப்பாடு, தோற்றுப் போய்விடுவோமோ எனும் தடுமாற்றத்தின் விளைவு.

நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இதுவரை நீங்கள் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்காவிட்டால், இதுவே தருணம். இப்போது அந்த சிந்தனைக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நுழையுங்கள்.

'உங்கள் தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவற்றை அரவணையுங்கள். உங்கள் தோல்விகளுக்கான பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வெற்றி சர்வ நிச்சயம்' என்கிறார் ரால்ப் மார்ஸ்டன்.

தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் உங்களுடைய மன அழுத்தமும் குறையும். வெற்றியை நோக்கிப் பயணிக்க உங்களுக்கு ஊக்கமும் கிடைக்கும். இல்லையேல் `யாரைக் குறை சொல்லலாம்' என தேடுவதிலேயே ஒட்டு மொத்த சக்தியும் வீணாகிவிடும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், வெற்றிகளில் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள், தோல்விகளில்தான் கற்றுக் கொள்வீர்கள்.

கூடைப்பந்து விளையாட்டுப் பிரியர்களுக்கெல்லாம் பிரமிப்பைத் தரும் பெயர் மைக்கேல் ஜோர்டன். அவர் தனது வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'இருபத்து ஆறு விளையாட்டுகளில் என்னிடம் தரப்பட்ட கடைசி வாய்ப்பில் தோல்வியடைந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருந்ததால் தான் என்னால் வெற்றியாளனாய் மாற முடிந்தது. காரணம் எனது தோல்விக்கான காரணம் நான் என்பதை அறிந்திருக்கிறேன்' என்கிறார்.

தங்கள் செயலுக்குத் தாங்களே பொறுப்பேற்பவர்கள் பாசிடிவ் மனநிலையினர். வாழ்க்கையை எதிர்மறையாய் அணுகுபவர்களே அடுத்தவர்களை நோக்கிக் குறை சொல்கிறார்கள் என்கிறது தெற்கு கலிபோர்னியாவில் நடந்த ஆராய்ச்சி ஒன்று.

அடுத்தவர்கள் மேல் பழி போட்டு ஹாயாக பொய்களின் மேல் படுத்துறங்குபவர்களின் பட்டியலில் மேலதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு. தங்களுடைய 'இமேஜ்' போய் விடக் கூடாது என்பதற்காக பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் தைரியமான தலைவர்களோ தங்களுடைய தவறுக்கு தாங்களே பொறுப்பேற்று அதை நிவர்த்தி செய்யும் வழியை யோசிப்பார்கள். பிறர் மேல் பழி போடாத தலைவர்களைக் கொண்ட நிறுவனம் உயரங்களைச் சந்திக்கும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், 'இப்படித் தான் நீ சிந்திக்க வேண்டும்', 'உன்னுடைய உணர்வுகள் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம் யாராச்சும் உங்களைக் கட்டாயப்படுத்த முடியுமா?

உங்களுடைய சிந்தனைகளும், உணர்வுகளும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் போது, செயல்கள் மட்டும் உங்களிடம் இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எந்த ஒரு செயலையும் நமது மனம்தான் தீர்மானிக்கிறது. சிரிக்க வேண்டுமா, அழ வேண்டுமா என்பதைக் கூட நாமேதான் தீர்மானிக்கிறோம். ஒருவரை திட்ட வேண்டுமா, பாராட்ட வேண்டுமா என்பதையும் நாமேதான் தீர்மானிக்கிறோம்.

காலையில் அவசரமாக காரோட்டிக் கொண்டிருக்கும் போது எதிரே ஒருவன் வந்தால் திட்டுகிறோம். `டிராபிக்கில் சட்டென குறுக்கே வந்ததால் திட்டிட்டேன்' என பழியைத் தூக்கி வெளியே போடுகிறோம்.

எப்போதாவது 'என்னோட கோபத்தால் திட்டிட்டேன்' என்று சொன்னதுண்டா?

சின்னச் சின்ன செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதுதானே பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதன் முதல் படி?

உங்களுடைய திறமைகளின் மீது நீங்கள் நம்பிக்கை வைக்காதபோது தான் அடுத்தவர் களையோ, விதியையோ, சூழலையோ குற்றம் சுமத்த முயல்கிறீர்கள். 'தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்காதவர்கள் மரியாதை குறைவானவர்களாகவும், அதிகம் கற்க முடியாதவர்களாகவும், பிறரை போல திறமையாக செயல்படாதவர்களாகவும் மாறிவிடுவார்கள்' என்கிறது ஆராய்ச்சி ஒன்று.

பயத்தைப் புறந்தள்ளி, தன்னம்பிக்கையைக் கையில் எடுத்து, தன்னையே நேசித்து, தாழ்மையைக் கைக்கொண்டு, தனது செயல்களுக்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது வெற்றிக்கான ரகசியம்.

உனது செயல்களுக்கு நீயே பொறுப்பு
உணரும் பொழுதில் வெற்றிகள் உனக்கு!

தகவலுக்கு நன்றி
ரமேஷ்