பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:39 | Best Blogger Tips


பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.

புரட்டாசி மாதம் முழுக்க பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தை பெருமாள் மாதம் என்றே அழைப்பார்கள். 108 திவ்ய தேசங்கள் உள்பட எல்லா பெருமாள் கோயில் களிலும் புரட்டாசி மாத வழிபாடுகள், உற்சவங்கள் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற பெருமாள் ஸ்தலங்களில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை, நேர்த்திக் கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் மிகவும் சிறந்தது.

சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர்.

பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள். சனிக்கிழமை விரத மகிமையை விளக்க ஒரு புராண கதை உண்டு.திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகில் பீமன் என்ற குயவர் வாழ்ந்து வந்தார். தீவிர பெருமாள் பக்தர். வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்து கொண்டார்.

இவருக்கு சாஸ்திர, சம்பிரதாய, பூஜை வழிமுறைகள் எதுவும் தெரியாது. தொழில் மற்றும் ஏழ்மை நிலை காரணமாக கோயிலுக்கு போகவும் நேரம் இருக்காது. அப்படியே சென்றாலும்பெருமாளே நீயே எல்லாம் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவார்.ஒருநாள் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. கோயிலுக்கு போக நேரமில்லை. ஆகையால் பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று நினைத்து களிமண்ணால் பெருமாள் சிலை ஒன்றை செய்தார்.

பூ வாங்க பணம் இல்லாததால் மண்ணை சிறு பூக்களாக உருட்டி மாலையாக தொடுத்து அணிவித்து வணங்கினார்.அவ்வூர் அரசர் தொண்டைமானும் திருப்பதி பெருமாளின் பக்தர். அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு தங்க பூமாலை அணிவித்து வழிபடுவார். ஒரு தடவை மாலை அணிவித்துவிட்டு, மறுவாரம் வந்து பார்த்தபோது பெருமாள் கழுத்தில் மண்ணால் செய்த பூமாலை தொங்கியது. அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ச்சகர்கள் ஏதாவது தவறு செய்கிறார்களோ என்று குழப்பத்திலேயே அரண்மனைக்கு சென்று படுத்தார்.

அன்று அரசன் கனவில் தோன்றிய பெருமாள், பீமனின் பக்தியையும் தாம் அதனால் மகிழ்வுற்றதையும் விளக்கினார். உடனே மன்னர் அந்த குயவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளையும், பொன்னையும், பொருளையும் அள்ளி கொடுத்தார். ஆனால் அதைக் கண்டு சிறிதும் மயங்காத குயவர் இறுதிவரை தன் விருப்பப்படி பெருமாள் விரதம் இருந்து வைகுண்ட பதவி அடைந்தார். அந்த பக்தரின் நினைவாக இன்றளவும் ஏழுமலையானுக்கு மண் சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.


இம்மாதத்து சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. செப்டம்பர் 24, ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.