மஹா சிவராத்திரி (Maha Shivaratri) உலகம் எங்கும் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
சைவ சித்தாந்தப்படி, அஷ்ட விரதங்களுள் பிரதானமான இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி கூடும் இரவில் கொண்டாடப்படும்.
மனிதன் அதர்ம செயல்கள் புரிவதற்கு மூல காரணமாக இருப்பவை மும்மலம் எனப்படும், ஆணவம், கன்மம் அல்லது கருமம், மற்றும் மாயை அல்லது அறியாமையால் ஏற்படும் மடமை என்ற மூன்று காரணங்கள் ஆகும். ஆணவம் என்பது மனிதனுக்கு மட்டும் அல்ல. தேவர்களுக்கும் இருந்து உள்ளது.
தங்களில் யார் பெரியவர் என்ற ஆணவத்துடன் போரிட்ட பிரம்மா மற்றும் விஷ்ணுவுக்கு, அடி முடி காண முடியாத அக்னி ஸ்தம்பமாக (நெருப்புப் பிழம்பு) சிவ பெருமான் காட்சி அளித்து பிரம்மா மற்றும் விஷ்ணுவின் அகந்தையை அடக்கிய நிகழ்வு, சிவ வழிபாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பிரம்மா மற்றும் சிவன் இவர்கள் இருவரில், தங்களில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்த போது, சிவா பெருமான் ஒரு நெடிய தீப் பிழம்பாக உருவெடுத்தார். அதன் அடி மற்றும் முடியை முதலில் கண்டு பிடிப்பவர்கள்தான் பெரியவர் என்று சிவபெருமான் கூற, திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைத் தேட, பிரம்மா அன்னப் பறவையாகி முடியைத் தேடினர். இருவராலும் சிவனின் தொடக்கத்தையும், முடிவையும் காண இயலவில்லை.
இறுதியில், இருவரின் ஆணவத்தை அடக்க, அக்னிப் பிழம்பின் நடுவே சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளித்தார். இந்த உருவே லிங்கோத்பவர் என்று சிவலிங்க வடிவில் வணங்கப்படுகிறது. அதனால், பஞ்ச பூதங் களில் ஒன்றான அக்னியின் வடிவே சிவலிங்கம். இறைவன் சிவன் பஞ்ச பூத நாயகன் என்றும் அறியப் படுவான்.
இந்த அக்னி ஸ்தம்ப வழிபாடு, சிவராத்திரி அன்று இரவு முழுவதும் தூங்காமல், சிவனைப் போற்றி, அஞ்ஞான இருளை நீக்கி ஞான ஒளி பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்த புராண நிகழ்வு திரு அண்ணாமலையார் திருத்தலமான திருவண்ணாமலையில் நடந்ததாக ஐதீகம். ஈசன் அடி முடி காணாத ஜோதியாகத் தோன்றிய இந்த மஹா சிவராத்திரி இரவில், சிவனை வழிபடுவது ஆணவம், கர்ம வினைகள் மற்றும் அறியாமையை அகற்றும் என்று நம்பப்படுகிறது.
வழிபாட்டு முறை.
சைவர்கள் முதல் நாள் காலை வீடு முதலாய் சகலத்தையும் சுத்தம் செய்து கொண்டு ஸ்நானம் செய்து ஸங்கல்ப்பம் செய்து விரதத்தை ஆரம்பிப்பார். அன்று மதியம் ஒரு பொழுதாக உணவருந்தி இரவு உணவை எளிய உணவுகளாக உட்கொள்வர். மறுநாள் சிவராத்திரி அன்று காலை முதல் உபவாசமாக இருந்து சிவ சிந்தனையில் ஆழ்ந்து திருமுறைகளை பாராயணம் செய்து சிவ வழிபாடுகளை மேற்கொள்வார். அன்று மாலை முதல் மறுநாள் காலை வரை சிவாலயங்களிலும் இல்லங்களிலும் நான்கு யாம வழிபாடுகள் நடைபெறும். அடியவர்கள் விரதமிருந்து கண் விழித்திருப்பர். சிலர் எளிய உணவுகளை அருந்தி கண்விழிப்பதும் வழக்கம். மறுநாள் காலை ஸ்நானம் செய்து சிவபூஜை செய்து பாரணை செய்து விரதத்தை பூர்த்தி செய்வர்.

சிவராத்திரியிற்கு மறுநாள் மாலை ஆறு மணியின் பின்னரே உறங்க வேண்டும் என்பது நியதி.உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று ஒருநாள் இரவு சிவ பக்தர்கள் கண் விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வார்கள். சிவாலயங்களிலும் தனியார் மற்றும் அரசு சார்பில் மைதானங்களிலும் கலை நிகழ்வுகள் நடைபெறும். இலங்கையின் கிழக்கே உள்ள திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள தென் கயிலை என்று போற்றப்படும் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணமாமலை ஆலயத்தில் இவ்விழா ஆறு நாட்கள் இரவு கொண்டாடப்படுகின்றது. சிவராத்திரி இரவிற்கு மறுநாள் இரவு தொடங்கி ஐந்து நாட்கள் இரவு முழுவதும் கோணேஸ்வரர் (கோணநாதர்) அன்னை மாதுமையாளுடன் திருக்கோணமலை நகரை வலம் (நகர்வலம்/ஊர்வலம்) வந்து அருள் புரிவார். எங்கும் சிவபெருமானின் பக்தி பாடல்கள் ஒலிக்கும். பட்டாசுகள் வானவேடிக்கைகள் நிகழ்த்தி இறைவனை வழிபடுவர். நடன, இசை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெறும்.
தென் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி மாவவட்டத்தில் சிவராத்திரி தினமன்று சிவனடியார்களால் சிவாலய ஓட்டம் நிகழ்த்தப்படும். அன்றைய தினம் அடியவர்கள் பன்னிரு சிவாலயங்களை கால்நடையாக ஓடி தரிசிக்கின்றனர். ஏறத்தாழ ஓரே நாளில் நூறு கிலோமீட்டரிற்கு மேலாக ஓடி இறைவனை வழிபடுகின்றனர். இது உலகில் வேறு எங்கும் இல்லாதா ஒரு வழிபாட்டு நிகழ்வாக கருதப் படுகிறது.
கோவை ஈஷா யோக மையத்தில் 2026 மகா சிவராத்திரி விழா, நவீன தொழில்நுட்பம், லேசர் ஷோ, மற்றும் பிரபல இசை நிகழ்ச்சிகளுடன், சத்குரு தலைமையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பக்தி பாடல்கள் மற்றும் நடன இசை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. உலகம் எங்கும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரில் பங்கேற்ற இந்த விழாவில், ஆதியோகி முன்னிலையில் விடிய விடிய தியானம், யோகேஸ்வர லிங்க மகா அபிஷேகம் மற்றும் 23 மொழிகளில் நேரலை ஒளிபரப்புடன் நவீன முறையில் கொண்டாடப்பட்டது.

மெய் வருத்தி இறைவனை வழிடுத்தல் ஒரு வகை தவம் மற்றும் தியாகம் ஆகும். அது பக்தர்களின் உடல் மற்றும் மனக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி, தெய்வீக சக்தியை அடைய உதவுகிறது. நவீன உலகில் மன அழுத்தத்தை குறைக்க அது பெரிதும் உதவுகிறது.


