நால்வகை மக்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:51 | Best Blogger Tips

 
”பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்” என்ற மந்திரம் பல்வேறு வகையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. இந்து எதிர்ப்பாளர்கள் வேத காலத்திலேயே சாதி வேறுபாடுகளும், அடக்குமுறைகளும் இருந்தன என்பதற்கு சான்றாக இந்த மந்திரம் உள்ளது என்று கூறி இதனைக் கட்டுடைக்கின்றனர்.

ஆனால் முழுமையாக இந்த சூக்தத்தையும், ஒட்டுமொத்தமாக ரிக்வேதத்தையும் கற்பவர்கள் அத்தகைய கருத்துக்கள் ஆதாரமற்றவை என்பவை உணர்வார்கள். நான்கு வர்ணத்தினரும் பரம புருஷனின் அங்கங்கள் என்றால் அதன் பொருள் என்ன? நான்கு வர்ணங்களும் தெய்வத் தன்மை கொண்டவை. இதில் ஒரு வர்ணம் இல்லாமல் போனாலும், விராட் புருஷன் குறைபட்டவனாக, ஊனமுற்றவனாக ஆகி விடுகிறான் என்பதே பொருள்.

விராட் புருஷனின் கால்களில் தோன்றியவர்கள் என்பதால் சூத்திரர்கள் தொடர்ந்து இழிவுற்றனர், அடிமைப் படுத்தப் பட்டனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. அதுவும் தர்க்க பூர்வமாக இல்லை. ஏனென்றால் இதே சூக்தத்தில் இன்னொரு மந்திரத்தில் “பாதங்களினின்று பூமி தோன்றியது” என்று வருகிறது. அந்த பூமியை வேதம் வழிபாட்டுக்குரியதாக, தெய்வீக அன்னையாகத் தான் கூறுகிறதே அன்றி இழிவான ஒன்றாக அல்ல.

நான்கு வர்ணங்கள் இருந்ததற்கான சான்று இந்த மந்திரத்தில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பிற்காலத்தில் வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது.

ரிக்வேதத்தில் வைகறையின் தேவியான உஷையைக் குறித்த சூக்தம் (1.113) கூறுகிறது –
வீரச்செயலுக்கென ஒருவனை
புகழுக்கென ஒருவனை
மகத்தான வேள்விக்கென ஒருவனை
பலனுக்கென ஒருவனை
உழைப்பிற்கென ஒருவனை
தொழிலுக்கென அனைவரையும் என
உஷை புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.

யஜுர்வேதம் (தைத்திரிய சம்ஹிதை 5.7.6.6) கூறுகிறது –
பிராமணர்களுக்கு நல்லொளி தருக
அரசர்க்கு நல்லொளி தருக
வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும்
நல்லொளி அளித்திடுக.
சுக்ல யஜுர்வேதம் கூறுகிறது -
நலம் தரும் இம்மந்திரங்களை
நான் உங்களுக்குக் கூறுகிறேன்
பிராமணர் அரசர் சூத்திரர்
இன்னும் மற்றுமுள்ளோர்
நம் மக்கள் அன்னியர்
அனைவர்க்கும் இவற்றைக் கூறுக.

வேதகால வர்ண அமைப்பு மூன்று காலகட்டங்களைக் கடந்து, அதற்குப் பின்னர் புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் குறிப்பிடப் படும் வர்ண அமைப்பாக மாறியுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் கருதுகிறார்.

முதல் காலகட்டத்தில் வர்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரால் செய்யப்படும் தொழிலாக அமைந்திருந்தது. வாழ்க்கையின் நடுவில் ஒருவர் வர்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாம் கால கட்டத்தில் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவரது வர்ணம் நிர்ணயிக்கப்படும். ஆனால் அதனை அதன் பின்னர் மாற்றிக்கொள்ள முடியாது. மூன்றாவது காலகட்டத்திலேயே அது குல அடிப்படையில் மாறியது. இதற்கான சான்றுகளையும் தனது நூல்களில் அம்பேத்கர் எடுத்துரைக்கிறார். இதன் அடிப்படையில் புருஷ சூக்தத்தில் உள்ள இந்த சித்திரம் வேதகால வர்ண அமைப்பின் முதலிரண்டு காலகட்டங்களையே சார்ந்தது என்று கருத வேண்டும்.

ஸ்ரீ அரவிந்தர் இந்த மந்திரம் நமது பொதுப் புத்திக்குப் புலப்படுவதைக் காட்டிலும் மகத்தான பொருள் கொண்ட ஒன்று என்று கூறுகிறார் –
“இங்கு சமூகத்தின் நான்கு பிரிவுகள் சிருஷ்டிக் கடவுளின் உடலில் இருந்து, அவரது சிரம், புஜங்கள், தொடைகள் மற்றும் பாதங்களில் இருந்து உதித்ததாக சித்தரிக்கப் படுகிறது. நமக்கு இது ஒரு கவித்துவமான உருவகமாகத் தோற்றமளிக்கிறது – பிராமணர்கள் அறிவின் மக்கள், க்ஷத்திரியர்கள் ஆற்றலின் வடிவம், வைசியர்கள் உற்பத்தி செய்பவர்கள், சூத்திரர்கள் பணி செய்பவர்கள்.
ஆனால், ரிஷிகளுக்கு சிருஷ்டிக் கடவுளின் உடல் என்ற இந்தக் குறியீடு, ஒரு உருவகம் மட்டுமல்ல, அதை விட மேலானது. தெய்வீக சத்தியத்தை வெளிப்படுத்தி நிற்பது. அவர்களைப் பொறுத்த வரையில் மனித சமுதாயம் என்பது பிரபஞ்ச வடிவான புருஷனைத் தன் வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் வெளிப்படுத்தும் முயற்சியே ஆகும். ஏனெனில் புருஷனே தன்னை பௌதீக உலகமாகவும், பருவெளிக்கு அப்பாலான பிரபஞ்சமாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இங்கு நாம் காணும் கருத்து என்ன?
=========================

நான்கு பிரிவுகளும் எதை வெளிப்படுத்துகின்றன? தெய்வீகத்தை அறிவாகவும், தெய்வீகத்தை ஆற்றலாகவும், தெய்வீகத்தை உற்பத்தி – துய்த்தல் – ஒத்துழைப்பு என்பதாகவும், தெய்வீகத்தை தொண்டு – பணிதல் – வேலை என்பதாகவும் அவை வெளிப்படுத்துகின்றன. இந்த நான்கு பிரிவுகளும் நான்கு பிரபஞ்ச விதிகளுக்கு பொறுப்பாகின்றன. எல்லாவற்றின் ஒழுங்கையும், இயல்புகளையும் சிந்தித்து கட்டமைக்கிறது அறிவு என்ற விதி. அவற்றை நடைமுறைப் படுத்தி, நிலைநிறுத்தி, அதிகாரபூர்வமாக்குகிறது ஆற்றல் என்ற விதி. அதன் உறுப்புகளை சீராக அமைக்கிறது ஒத்துழைப்பு என்ற விதி. இவற்றின் ஏவல்களைச் செய்கிறது பணி என்ற விதி”.


நன்றி வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை