குருபெயர்ச்சி பலன்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:18 | Best Blogger Tips




 


பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன் அவா்கள் எழுதி  குருபெயர்ச்சி பலன்கள்

---------------------------------
குருபெயர்ச்சி பலன்கள் எழுதி 10 நாட்கள்தான் ஆகிறது ஏகப்பட்ட நண்பர்கள் மீண்டும்,மீண்டும் தங்களுடைய ராசிகளுக்கு குரு பெயர்ச்சி பலன்கள் கேட்டுகொண்டே இருக்கிறார்கள் அவர்களுக்குகாக இந்த மீள்பதிவு ஏற்கனவே படித்தவர்கள் பொறுத்தருளவேண்டும்..,

குருபகவான் அவர்கள் ரிசப ராசியிலிருந்து,மிதுன ராசிக்கு இந்த வருடம் வைகாசிமாதம் 14-ந் தேதி(28-05-2013) செவ்வாய்கிழமை இடம்பெயர்கிறார்.அதனால் உண்டாகும் பலன்களை சுருக்கமாக பார்ப்போமா..,

மேஷம்;
-----------
அசுவினி,பரணி,கார்த்திகை 1-ம்பாதம் அடங்கிய மேஷ ராசிக்கு 2-ல் இருந்த குரு இப்போது 3-ஆம் இடத்துக்கு மாறுகிறார். குரு 5-ஆம் பார்வையாக மேஷ ராசிக்கு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத் தடை விலகி, திருமணம் கூடிவிடும். குரு 7-ஆம் பார்வையாக மேஷ ராசிக்கு 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 9-ஆம் இடம் தகப்பனார், அதனால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாகத் திகழும். தகப்பனார் வகை பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். 9-ஆம் இடத்து குரு, 9, 12-க்குடையவர் என்பதால் சில சொத்துகளை விரயம் செய்து வேறு புதிய இடம் வாங்கலாம். யோகா, தியானப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட கால தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். புண்ணிய தலங்களுக்குப் போய்வர சுபச்செலவு உண்டாகும். வீட்டிலும் குடும்பத்திலும் சுபமங்களச் செலவுகள் உண்டாகும். சொந்தக்காரர்கள்- சுற்றத்தார்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். மதிப்பெண் 60/100.

ரிசபம்;
------------
கார்த்திகை2,3,4-ம்பாதம்,ரோகிணி,மிருகசீரிடம்1,2,பாதங்கள் அடங்கிய ரிசப ராசிக்கு, குரு இப்போது 2-ஆம் இடமான மிதுன ராசிக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும் அடையப்போகிறீர்கள். அவர் 2-ஆம் இடமான தன ஸ்தானத்தில் அமர்ந்து பலன் தரவிருப்பதால், வாக்கு, நாணயம் காப்பாற்றப்படும். தாராளமான பணப்புழக்கம் இருக்கும். அதனால் பணக் கஷ்டமும் பணநெருக்கடியும் விலகும். எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். திடீர் தனப்ராப்தி அல்லது புதையல் யோகம் உண்டாகும். லாட்டரி பரிசு யோகம் உண்டாகும். போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும், ஏற்றத்துக் காகவும் அஸ்திவாரமாகிவிடும். கடன்கள், சுபக்கடன்களாகிவிடும். விரயமும் செலவும் மங்களச் செலவுகளாக மாறும். திருமணம், கிரகப்பிரவேசம், மகப்பேறு, புத்திர பாக்கியம், பூமி, வீடு, வாகன சுகபோகத்துக்காக கடன் வாங்கும் சூழ்நிலையாகும். ஆபத்துகளும் விபத்துகளும் வைத்திய சிகிச்சை போன்றவையும் வந்தாலும் உயிர்ச்சேதம் வராது. உங்களுடைய முயற்சியில் வெற்றியும் செய்தொழில் வகையில் லாபமும் உண்டாகும். சேமிப்பும் உண்டாகும். மதிப்பெண் 85/100.

மிதுனம்;
-------------
மிருக சீரிடம் 2,3 பாதங்கள்,திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 பங்கள் அடங்கிய மிதுன ராசிக்கு 12-ல் இருந்த குரு இப்போது ஜென்ம ராசிக்கு மாறு்கிறார். குரு கேந்திராதிபத்தியம் பெற்று- கேந்திராதிபத்திய தோஷம் அடைந்து ஜென்ம ராசியில் நிற்பது சுமாரண பலன்தான். ஒவ்வொரு காரியத்தையும் செயல்படுத்தும்போது குறுக்கீடுகளும் இடையூறுகளும் தடைகளும் அதிகமாக இருக்கும். போட்டியும் பொறாமைகளும் கண்திருஷ்டிகளும் அதிகமாகவே காணப்படும். இருந்தாலும் உங்களின் சுய அறிவாலும்,புத்திசாலித்தனத்தாலும் வெற்றி பெறுவீர்கள்.புத்திர பாக்கியம் வேண்டி தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம், அவர்களின் எதிர்கால இன்ப வாழ்வுக்குத் தேவையான வசதிகளைச் செய்துக் கொடுப்பீர்கள். திருமணத் தடைகள் விலகி, திருமணம் கைகூடும். கணவருக்கு மனைவியாலும் மனைவிக்கு கணவராலும் யோகம் உண்டாகும். மனைவிபெயரில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். உங்களுக்கு குருவின் திருவருள்பரிபூரணமாக அமையும். இழந்து விட்ட பூர்வீகச்சொத்துகள் கிடைக்கும்.மதிப்பெண் 50/100.

கடகம்;
------------
புனர்பூசம் 3-பாதம்,பூசம்,ஆயில்யம் அடங்கிய கடக ராசிக்கு 11-ல் இருந்த குரு இப்போது 12-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 9-க்குடையவர் 12-ல் மறைவதால் பிதுரார்ஜித சொத்துகள் விரயமாகலாம். தகப்பனார் வகையில்- உடன்பிறந்தோர் வகையில் செலவுகள் ஏற்படலாம். எதிரி, போட்டி, கடன், விவகாரம் எல்லாம் வந்தாலும், முடிவில் ஜாதகருக்கு அனுகூலமாகிவிடும். 6-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் ஏற்படும்; வைத்தியச் செலவு வரும்; போட்டி,பொறாமை இருக்கும் அதிலிருந்து வெற்ரிகரமாக மீண்டு விடுவீர்கள்.

விரய ஸ்தானத்தில் நின்று 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதற்காக வெளியில் அல்லது வங்கியில் கடன் வாங்கலாம். சிலர் மேற்படிப்பு படிக்கலாம். சுகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியம் தெளிவடையும். தாய்க்கு பிணி, பீடை நிவர்த்தியாகும். தாயாதி வகையில் நிலவிய பகை வருத்தம் விலகி, உடன்பாடும் ஒற்றுமையும் உண்டாகும். புதிய வாகனம் வாங்கலாம். 7-க்குடையவர் கடக ராசிக்கு 4-ல் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தையும் ஜென்ம ராசியையும் பார்ப்பதால், தொழில், வேலை, உத்தியோகம் சம்பந்தமான முன் னேற்றங்களும் நன்மைகளும் உண்டாகும். 10-க்கு 12-க்குடைய குரு ராசிக்கு 12-ல் நின்று 10-க்கு 10-க்குடைய சனியைப் பார்ப்பதால், வெளிநாட்டு வேலை, உத்தியோகம் உண்டாகும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம் உண்டாகும். தாயார், பூமி, வீடு, மனை, சுகம், கல்வி, வாகனம் சம்பந்தமான நன்மைகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகள் வகையிலும் மனைவி வகையிலும் எதிர்பாராத செலவுகள் வந்துசேரும்.மதிப்பெண் 55/100.

சிம்மம்;
------------
மகம்,பூரம்.உத்திரம் 1-ம் பாதம் அடங்கிய சிம்ம ராசிக்கு 10-ல் இருந்த குரு இப்போது 11-ஆம் இடமான மிதுனத்திற்கு வருகிறார். குருப்பெயர்ச்சியினால் ராஜயோகத்தையும் செல்வாக்கையும் அடையப் போகிறீர்கள். எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான். சகோதர வகையில் நன்மையும் அனுகூலமும் அடையலாம். நீண்டகாலமாக தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு யோகம் போன்ற காரியங்கள் யாவும் இனிமேல் கைகூடும். மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை எல்லாம் திருப்தியாக நிறைவேற்ற முடியும். மனைவியால் யோகமும் வருமானமும் வரும். மனைவிக்கு முழு ஆரோக்கியம் உண்டாகும். 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், பூர்வ புண்ணிய பாக்கியம் நன்மையளிக்கும், எதிர்பாராத லாபங்களும் நன்மைகளும் அதிர்ஷ்டங்களும் வந்துசேரும். குருவருளும் திருவருளும் பரிபூரண மாகக் கிடைக்கும். மதிப்பெண் 90/100.

கன்னி;
--------------
உத்திரம் 2,3,4 பாதங்கள்,அஸ்தம்,சித்திரை 1,2, பாதங்கள் அடங்கிய கன்னி ராசிக்கு 9-ல் இருந்த குரு இப்போது 10-ல் மிதுனத்துக்கு மாறியிருக்கிறார். குரு பார்வையால் உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் மேன்மையடையும். தனவரவுக்கும் பஞ்சம் இருக்காது. சரளமான பணப்புழக்கம் காணப்படும். பிரிவைச் சந்தித்த கணவன்- மனைவி இனி ஒன்றுசேரும் யோகம் உண்டாகும். வேலை காரணமாக வெளிநாடு போனவர்கள், இனி சிறுமாற்றத்தைச் சந்திக்கக் கூடும். மாணவர்கள் இனி மேல்படிப்பைத் தொடரலாம். சொந்த வீடு அல்லது பிளாட் அமையும் யோகமுண்டு. சிலருக்கு வாகன யோகம் அமையும். குரு 10-ல் நிற்பதால் தொழில் வகைக்காக கடன் வாங்க நேரும். குரு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூமி, வீடு, வாகன வகைக்காகவும் கடன் வாங்கலாம். மதிப்பெண் 70/100.

துலாம்;
------------
சித்திரை 2,3 பாதங்கள்,சுவாதி,விசாகம் 1,2,3 பாதங்கள் அடங்கிய துலாம் ராசிக்கு 8-ஆம் இடத்தில் இருந்த குரு இப்போது 9-ஆம் இடத்துக்கு மாறுகிறார். குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும் ராஜ யோகத்தையும் அடையப்போகிறீர்கள். 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால், அங்கு நிற்கும் குரு உங்களுக்கு மனோபலத்தையும்- ஆன்ம பலத்தையும் தருவார். தெய்வ நம்பிக்கையால் தெம்பு, திடம், வலிமை உண்டாகும். 9-ஆம் இடத்து குரு பலனாக குருவருளும் திருவருளும் பெருகும் என்பதால் எந்தப் பிரச்சினைகளானாலும் அவற்றை எளிதாகச் சமாளித்துவிடலாம். ஜென்ம ராசியை பாக்கிய ஸ்தானத்தில் நின்று பார்ப்பதால், இழந்த செல்வாக்கும் பதவியும் கௌரவமும் அந்தஸ்தும் மீண்டும் தேடிவரும். மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள்மீது சுமத்தப்பட்ட வீண் பழியும் களங்கமும் மாறும். நண்பர்களின் சகாயமும் உடன்பிறந்தவர்களின் உதவியும் கிடைக்கும்.. மதிப்பெண் 85/100.

விருச்சிகம்;
-------------------
விசாகம் 4-ம்பாதம்,அனுசம்,கேட்டை அடங்கிய விருச்சிக ராசிக்கு 7-ல் இருந்த குரு இப்போது 8-ஆம் இடத்துக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலம் இல்லாத இடத்தில் வந்திருக்கிறது. குடும்பக் குழப்பம், பொருளாதாரச் சிக்கல், வரவுக்குமேல் செலவு, தேவையற்ற கடன் தொல்லைஆகிய பலன்களைத் தரும். குரு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செலவு செய்ய வைப்பார். அதே சமயம், 2-ஆம் இடத்தைப் பார்த்த பலன் அதற்குண்டான வரவுக்கும் வழி செய்வார். குரு 4-ஆம் இடத்தைப் பார்த்த பலன் பூமி, வீடு, வாகன வகையிலும் சுபமுதலீடு செலவு உண்டாகும். அதற்காக கடன் வரவும் கிடைக்கும். சிலருக்கு தாய்வழிச் சொத்துகள் கிடைக்கும். அதை அப்படியே அனுபவிக்கலாம் அல்லது அதை விற்று பரிவர்த்தனை செய்து வேறு சொத்து வாங்கலாம். சிலர் தனக்கு ஏற்கெனவே இருக்கும் பழைய சொத்து அல்லது வாகனத்தை விற்று புதிய சொத்து அல்லது புதிய வாகனம் வாங்கலாம். மதிப்பெண் 40/100.

தனுசு;
---------
மூலம்,பூராடம்,உத்திராடம் 1-ம் பாதம் அடங்கிய தனு ராசிக்கு6-ல் இருந்த குரு இப்போது 7-ஆம் இடத்துக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் ராஜயோகத்தையும் நன்மைகளையும் அடையப் போகிறீர்கள். திருமணமாகாதவர்களுக்கு இனி உடனடியாக கல்யாணம் கைகூடி வரும். நிலையான தொழிலோ நிரந்தர வருமானமோ இல்லாமல் அல்லல்பட்டவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நிலையான தொழிலுக்கு வழிவகுக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தையே இல்லாதவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி வாரிசைக் கொடுக்கும். தொழிலதிபர்களுக்கு எதிர் பாராத லாபம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சகோதர வகையிலும் நண்பர்கள் வகையிலும் இருந்த சச்சரவுகளும் பிரச்சினை களும் விலகும். பங்காளிப் பகை விவகாரம் தீரும். அந்நியர்களின் விரோதமும் மாறும். எதிர்காலத்தின்மேல் பிடிப்பும் நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்பட்டு உற்சாகமாகச் செயல்படுவீர்கள். மதிப்பெண் 90/100.

மகரம்
-----------
உத்திராடம் 2,3, 4- பாதங்கள்,திருவோணம்,அவிட்டம் 1,2 பாதங்கள் அடங்கிய 5-ல் இருந்த குரு இப்போது 6-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 6-ஆம் இடம் என்பது கடன், வியாதி, வைத்தியச் செலவு, எதிரி, போட்டி, பொறாமை ஆகியவற்றைக் குறிக்கும். இதில் குரு நிற்பதால் இவற்றை அதிகமாக்குவார். கடந்த காலத்தில் வேலை தேடி செய்த தீவிர முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைக்கும். அப்போது ஆரம்பித்த வியாபாரம் இப்போது லாபகரமாக சூடு பிடிக்கலாம். அன்று தச்சு செய்த கட்டடம் இன்று பூர்த்தியடையலாம்; தொழில் முயற்சி, வேலை வாய்ப்பு, கட்டட காரியங்களுக்காக குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம். குரு 2-ஆம் இடமான தன ஸ்தானத்தைப் பார்ப்பதால், தனவிருத்தியும் சம்பாத்தியமும் குறையாமல் இருக்கும். இந்த 6-ஆமிடத்து குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் தன் சொந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவது உறுதி.

12-ஆம் இடத்தை 12-க்குடைய குருவே பார்ப்பதால் விரயங்கள், செலவுகள் வந்தாலும் அவை பயனுள்ள செலவாகவும் நன்மையான விரயங்களாகவும் இருக்கும். வியாபாரிகள் தொழில் துறையில் புதிய முதலீடுகளைச் செய்து தொழிலைப் பெருக்கலாம்.மதிப்பெண் 45/100.

கும்பம்;
-----------
அவிட்டம் 3,4 பாதங்கள்,சதயம்,பூராட்டாதி 1,2,3 பாதங்கள் அடங்கிய 4-ல் இருந்த குரு இப்போது 5-ஆம் இடத்துக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அடையப் போகிறீர்கள். மக்கள் பேறு, மகிழ்ச்சி, உண்மையான வேலையாட்கள் அமைதல், சகலவித சம்பத்து, செல்வம், பாக்கியம் உண்டாகுதல், குலதெய்வ வழிபாடு, தாய்மாமன் உதவி, பாட்டனார் பிதுரார்ஜித சொத்துகள் கிடைத்தல், நீண்டகால திட்டங்களும் ஆசைகளும் நிறைவேறுதல் ஆகிய நற்பலன்கள் உண்டாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம், சடங்கு, மக்கட்பேறு போன்ற பாக்கியம் உண்டாகும். படித்த பிள்ளைகளுக்கு தகுதிக் கேற்றபடி தரமான வேலைவாய்ப்பு, முன்னேற்றம், வாழ்க்கைத் தர மேன்மை உண்டாகும்.

எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபமங்கள நிகழ்ச்சியும் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, மகிழ்ச்சி நிலவும். படிப்பில் இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறி அக்கறையாகப் படித்து, பாஸ் செய்துவிடுவீர்கள். தந்தைவழி ஆஸ்திகள் கிடைக்கும். 11-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் லாபம், வெற்றி, அனுகூலம் உண்டாகும். மூத்த சகோதரவழி சகாயமும் நன்மையும் ஏற்படும். ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் இழந்த பதவி, வேலை மீண்டும் கிடைக்கும். செல்வாக்கு பெருகும். 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஒரு சிலருக்கு ஆன்மிகப் பணியில் ஈடுபாடு உண்டாகும்.
மதிப்பெண் 80/100.

மீனம்;
-----------
பூராட்டாதி 4-ம்பாதம்,உத்திராட்டாதி,ரேவதி அடங்கிய மீன ராசிக்கு 3-ல் இருந்த குரு இப்போது 4-ஆம் இடத்துக்கு மாறுகிறார். குரு உங்கள் ராசிநாதன் என்ற பெருமையால் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களைக் கெடுக்கமாட்டார். மேற் படிப்பு யோகம், பாடத்தில் அரியர்ஸ் இருந்தால் அவற்றை எழுதி பாஸ் செய்வது, வெளிநாடு போய் படிக்கும் யோகம், பிளாட் வாங்குவது, கட்டடம் கட்டுவது, புதுவீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வது போன்ற பலன்கள் உண்டாகும்.

முழு அளவில் ஆரோக்கியம் ஏற்படும். உங்களுக்கோ குடும்பத்தினருக்கோ இனி சுகம் உண்டாகும். அதேபோல தாயாருக்கு முழங்கால் வலி, மூட்டுவலி, கழுத்து வலி அல்லது நரம்புத் தளர்ச்சியால் அவதிப்பட்ட நிலை மாறிவிடும். சிலருக்கு டூவீலர் அல்லது கார் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் துறையில் போட்டி, பொறாமைகள் குறுக்கிட்டாலும், கூட இருந்தே குழிபறிக்கும் நம்பிக்கை துரோகிகள் இருந்தாலும் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது; 8, 12-ஆம் இடங்களை குரு பார்ப்பதால், குடும்பத்தில் அர்த்த மில்லாத பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். மற்றவர்கள் உங்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்யலாம். சிலருக்கு ஊர்மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். மதிப்பெண் 70/100.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.