சனி வளையத்தில் தண்ணீர்ப் பூவாளி!...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:31 | Best Blogger Tips
அரசியல்வாதிகள் பலரும் தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டிருக்கிறார்கள். அத்தனைக்கு வடக்கே தில்லியிலும் கத்திரி வெயில் ஆரம்பம் ஆயிற்றே. தெற்கேயும் "சூரிய' குடும்பம் இன்று சுறுசுறுப்பாகத்தான் இயங்கி வருகிறது.

நாம் சொல்ல வந்தது அரசியல் அல்ல, வானவியல்; பாருங்களேன், சனிக்கிரகத்தின் இடுப்பு வளையத்தில் இருந்து தண்ணீர் மழை பொழிகிறதாம். ஆச்சரியம் அல்லவா? இந்த மழையினால் சனியைப் போர்த்தி உள்ள அயன மண்டலத்தில் எலக்ட்ரான்களின் செறிவு மட்டுப்படும் என்கிறார் ஜேம்ஸ் ஓ"தொனோக்யு. இங்கிலாந்து, லெய்செஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானி.

ஏற்கெனவே 1980-81-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் இரண்டு வாயேஜர் விண்கலங்களும் சனியை நெருங்கிப் படம்பிடித்து அனுப்பின. வாயேஜர் பார்வையில் சனி வளையத்தில் தென்பட்ட இரண்டு, மூன்று இருள் பட்டைகள் இத்தகைய மழைப் பகுதிகள்தானாம்.

ஆனால் இந்த இருள் படலங்கள் பின்னர் பல ஆண்டுகாலம் தட்டுப்படவே இல்லை. மீண்டும் ஹவாய்த் தீவில் மௌனா கீ வானாய்வக விஞ்ஞானிகளுக்கு 2011 ஏப்ரலில் இவைசிறப்புத் தரிசனம் காட்டின.

தன்னைச் சுற்றி இடுப்பு வளையம் கொண்ட ஒரு பிரதான கிரகம் சனி. சில திரைப்படங்களில் காட்டுவதுபோல இந்தச் சனி வளையங்களில் யாரும் ஓடி ஆடி டூயட் எல்லாம் பாட முடியாது. அது வெறும் பனித்துகள்களால் ஆனது. நின்றால் "பொதுக்' என்று அந்தரத்தில் விழுந்து விடுவோம். இன்னும் பத்துக் கோடி ஆண்டுகளில் இந்தத் துகள் வளையங்கள் அண்டவெளியில் கரைந்து மறைந்து போகுமாம். அதன்பின் சனிக் கிரகத்திற்கு இன்றைக்குள்ள "மவுசு' இராதாம்.

கியான் டொமினிகோ காசினி (1625 - 1712) எனும் இத்தாலிய வானவியல் அறிஞர்தான் சனியின் அயாபீற்றஸ் (1671), ரியா (1672), டையோனி (1684), தீத்தைஸ் (1684) ஆகிய நான்கு சந்திரன்களையும், சனி வளையங்களின் இடைவெளிகளையும் கண்டுபிடித்தார்.

1979-ஆம் ஆண்டு அமெரிக்கா அண்டவெளிக்கு அனுப்பிய "பயனீர்-11' விண்கலம்தான் சனிக்கு அருகில் சென்று உற்றுக் கவனித்தது.

ஏறத்தாழ 20,000 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்தபடியே சனியின் வளிமண்டல அடுக்குகளை ஆராய்ந்தது. அதுமட்டுமன்றி, சனியின் வளையங்களில் "எஃப் வளையம்' மெலிந்து காணப்பட்டாலும், சூரிய ஒளி பட்டால் அது பிரகாசமுடன் திகழ்வதைக் கண்டு அறிவித்தது.

அதாவது அந்த வளையத்தின் இடைவெளி என்பது வெற்றிடம் அல்ல என்றும், அந்த இடைவெளிகளில் பனித்தூள், கல், மண் துகளோ படிந்து உள்ளதை உணர்த்தியது.

தொலைவில் இருந்து பார்த்தால் இந்த வளையங்களும் மத்தியில் சுழலும் சனியும் ஏதோ பறவை போலவும் ஆவகிக்கலாம். "காகம் ஏறும் தம்பிரான்' என்ற அர்த்தத்தில் இந்தக் கோளினைக் "காரி' என்று வழங்குகிறோம். ஆங்கிலத்தில் "சாத்த(ர்)ன்' ஒரு துர்தேவன்.

இன்னொரு விசேஷம். 2006 மார்ச் 10 அன்று "காசினி' விண்கலம் சனியின் "என்கிலாதஸ்' என்ற சந்திரனை ஆராய்ந்தது. சனிச் சந்திரன்களின் பருமன் வரிசையில் ஆறாவது பெரிய துணைக்கோள் இது.

1789-ஆம் ஆண்டு வில்லியம் ஹெர்ஷல்தான் இதைக் கண்டுபிடித்தார். இது டைட்டன் அளவில் பத்தில் ஒரு பங்குதானாம். வெறும் 500 கிலோ மீட்டர் குறுக்களவு. இந்தச் சந்திரன் வயது 10 கோடி ஆண்டுகள் என்று "வாயேஜர்' அறிவித்தது.

சூரிய மண்டலத்திலேயே வக்கிர எரிமலைகள் கொண்ட மூன்று சந்திரன்களில் ஒன்று இந்த என்கிலாதஸ். வியாழனின் "இயோ' மற்றும் நெப்டியூனின் "ட்ரிட்டான்' ஆகியவை பிற சந்திரன்கள்.

என்கிலாதஸ் என்ற பெயர் கிரேக்கத் தொன்மங்களில் இடம்பெறுகிறது. "கெயா' (பூமி) கருப்பையில் யுரானஸ் தெய்வத்தின் ரத்தம் விழுந்து கருப்பிடித்ததாம். அந்தக் கர்ப்பத்தில் பிறந்த என்கிலாதஸின் கால்கள் இராட்சதப்பல்லி மாதிரியும், உடலின் அடிப்பாகம் பாம்பு போலவும் தோற்றம் கொண்டு இருக்குமாம்.

இந்தச் சந்திரப் பரப்பில் பனிக்கட்டிகள் இருப்பதாக "வாயேஜர்' விண்கலம் கண்டுபிடித்தது. அது தன்மீது விழும் சூரிய ஒளியை அப்படியே பிரதிபலித்து விடுகிறதாம். அன்றியும், இந்தச் சந்திரன் உமிழும் வெப்பக் கனலில் நீராவி அதிகமாகவே அடங்கி இருப்பதுதான் ஆச்சரியம்.

காசினி விண்கலமும் 2007-ஆம் ஆண்டுவாக்கில் என்கிலாதஸ் சந்திரன், நீராவியும் உயிரித்துகள்களும் உமிழ்ந்துகொண்டு இருப்பதைக் கண்டு துலக்கிற்று.

எதிர்காலத்தில் அமெரிக்காவின் "நாசா' நிறுவனமும், ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் இணைந்து "டைட்டன் - சனி அமைப்பு ஆய்வுத் திட்டம்' சனி, டைட்டன், என்கிலாதஸ் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளன.

சனியை "நைனிப்' எனும் பாபிலோனியக் கடவுளின் தோற்றமாகக் கருதி - "செக் - உஷ்' என்றும் குறிப்பிடுவார்கள். ரோமானியத் தொன்மங்களில் சனி பண்டைய பொற்காலத் தேவனாம்.

கிரேக்க வழக்கப்படி, "குரோனஸ்' என்கிற "கால'க் கடவுளோடு சனியை ஒப்பிட்டு வழங்குவர். "வாரிசு அரசியல்' மாதிரி சூரிய மண்டலத்திலும் கோள்களின் வரிசை!

உண்மையில், "யுரானஸ்' என்கிற கிரேக்கத் தெய்வத்தின் திருப்புதல்வன் சனி. அவரே "சீயஸ்' என்னும் "வியாழ'க் கடவுளின் தந்தையும் ஆவார். ஆயின் "சீயஸ் பிதர்' என்றபடி "சீயஸ் கடவுளின் தந்தை' என்கிற மரபில் "ஜுபிடர்' என்ற சொல் தமிழில் வியாழனைச் சுட்டுகிறது.

எப்படியோ, கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த "ஹெசியாட்' எனும் கிரேக்கப் புலவன் கூற்றுப்படி - யுரானஸ் என்கிற விண்மீன்கள் நிறைந்த சொர்க்க தேவனுக்கும், "கெயா' என்கிற பூமா தேவிக்கும் "டைட்டன்கள்' என்ற இராட்சதர் பலர் பிறந்தார்களாம்.

குடும்பக் கட்டுப்பாடு இல்லாத அநாகரிகக் காலகட்டம். இத்தனைப் பிள்ளைகள் வேண்டாம் என்று கருதிய யுரானஸ், அனைவரையும் மீண்டும் கெயாவின் கர்ப்பப் பைக்குள் திணித்தாராம். கர்ப்பப் பை என்ன கூரியர் சர்வீஸ் சாக்குப் பையா என்னவோ?

ஏதாயினும், பண்டைய பாலியல் வன்கொடுமையை எங்கு போய் முறையிட முடியும்? இதனால் ஆத்திரமும் வெறுப்பும் அடைந்த கெயா, தனது கடைக்குட்டி மகனான சனியை அழைத்து - தந்தையைக் கொல்லுமாறு தூண்டிவிட்டாள். பாரதத்தில் பரசுராமனை நினைக்கத் தோன்றுவது இருக்கட்டும். இந்திய அரசியலில் நிகழாமல் இருந்தால் சரி.

தாய் சொல் கேட்டு தகப்பனைக் கல் அரிவாளால் வெட்டிக் கொன்றான் உத்தமப் புத்திரன். யுரானஸ் தொலைதூரச் சக்கரவாளத்தினுள் தள்ளப்படுகிறார். அதனாலேயே சனிக்கு அடுத்தபடி தொலைவிலுள்ள "மிலேச்ச' கோளிற்கு "யுரானஸ்' என்று பெயர்.

இருப்பினும் தந்தையைக் கொன்ற பாவம், சனி தனது புத்திரர்களாலேயே கொலை செய்யப்படுவான் என்று பெற்றோரே சபிக்கின்றனர். தன் பிள்ளைகளால் தனக்கு மரணம் என்று அறிந்த சனி, தன் மனைவி "ரியா' ஈன்றெடுத்த குழந்தைகளை அவசர உணவு மாதிரி ஒவ்வொன்றாகத் தின்று தீர்க்கிறான். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டு பெற்ற மனம் சும்மா இருக்குமா? "திருமதி சனி'யாகிய "ரியா', கணவனுக்குத் தெரியாமல் தன் மகனாகிய "ஜூபிடர்' என்கிற "சீயஸ்' பகவானை மட்டும் "கிரேத்தி' என்னும் இடத்தில் "திக்தே' மலைக்குகைக்குள் ஒளித்து வைக்கிறாள்.

கில்லாடி மனைவி ரியா, ஒரு குழவிக் கல்லைக் கொண்டு வந்து குழந்தை எனக் கணவனிடம் நீட்டினாள். பழம் தின்று கொட்டையைத் துப்பிய கிழம் ஆயிற்றே. சனியை அப்படி யாராலும் சாமானியத்தில் ஏமாற்ற முடியாதே. மனைவி எத்தனை முறை கர்ப்பம் தரித்தாள் என்று இல்லத் தலைவனுக்குத் தெரியாதா என்ன? ரியா தந்த கல்லையும் வாய்க்குள் போட்டானே அன்றி விழுங்கவில்லை. அதற்குள் ஏற்கெனவே வயிற்றுக்கு உள்ளிருக்கும் குழந்தைகளும் மீண்டும் வாந்தியாக வெளியே வந்தன. வாய் வழிப்பிரசவம் உலக மகா அதிசயம்.

இறுதியில், சனிப் புத்திரர்களாகிய டைட்டன்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு தந்தையுடன் போர் புரிந்தனர்.

ஜூபிடர் (குரு அல்லது வியாழன்) சனியை வென்று ஆட்சியைக் கைப்பற்றினார். இது ஏதோ அரசியல் கட்சி வரலாறு மாதிரி தொனிக்கிறதா? சனி பகவான் மீது சத்தியம், முழுநீளக் கிரேக்கக் கதை!

போகட்டும், உண்மையான "சூரிய'க் குடும்பத்திற்கு வருவோம். இந்தக் கோள் தண்ணீரில் போட்டால் மிதக்கும். அத்தனைக்கு லேசான கிரகம். அதன் அடர்த்தி தண்ணீரில் பத்தில் ஏழு பங்கு. அதன் வளிமண்டலத்தில் ஏறத்தாழ 94 விழுக்காடு ஹைடிரஜனும், 4 விழுக்காடு ஹீலியமும் தவிர மீத்தேன், அம்மோனியா, ஈத்தேன், பாஸ்ஃபீன், அசிட்டைலின் எனப் பல வாயுக்கள் சனி வளிமண்டலத்தில் அடங்கி உள்ளன.

பெரும்பாலும் எரிவாயுக்கள் செறிந்த சனி, தொலைவிலிருந்து பார்த்தால் கரியாகத்தான் தெரியும். அதனால் தானோ "கரி முடிவான்', "சனியன்' என்று எரிச்சலில் திட்டுவதற்கு இந்தக் கோளின் பெயரையே உச்சரிக்கிறோம்.

சனி என்ற வடசொல் ஒரு காரணப் பெயர். மந்த கதியில் இயங்கும் இந்தக் கிரகத்தினை வட நூலார் "சனைச் சரன்' (மெதுவாக சஞ்சரிப்பவன்) என்றே குறிக்கிறார்கள். சூரியனைச் சுற்றி வர சனி எடுத்துக் கொள்ளும் கால அளவு 29.5 ஆண்டுகள்.

அதனால் 12 ராசி மண்டலங்கள் வழி சஞ்சரிக்கும் சனிக்கோள், ஒவ்வொரு ராசிக் கூட்டத்திலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் இயங்குவது போல் தோன்றும். அதன் முன்பும், பின்னரும் ஆகிய ராசி மண்டலங்களின் ஊடான இயக்கத்தையும் சேர்த்து விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்று எல்லாம் பெயரிட்டு வழங்குகிறோம். மொத்தம் ஏழரை ஆண்டுகள். அதனையே "ஏழரை நாட்டுச் சனி' என்று பீடையாகவும், இலாப சாதகமாகவும் சோதிடவியலார் கணிக்கின்றனர்.

எப்படியோ, இருக்கவே இருக்கிறது. ""ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு. அகப்பட்டுக் கொண்டவனுக்கு அட்டமத்தில் சனி'' என்று ஒரு பழமொழி வேறு. அன்றைக்கு நைடத நாட்டு நள மகாராஜாவைச் சனி ஆட்டிப் படைத்தானாம். இன்றைக்கு எந்த "ராஜா'வுக்குச் சனி?

 
 


Thanks to FB  Thannambikkai