மனம் - ( எண்ணம், சொல், செயல் )

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:43 | Best Blogger Tips
எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் இயக்கக் களம் மனம். இன்ப துன்பங்களில் மனம் தான் ஈடுபடுகிறது. மனதைப் பொறுத்ததே மனிதனின் செயல். மனத் தூய்மைக்கு ஏற்பவே வாழ்வில் இன்பம் வளரும். மனதில் தூய்மையை ஊட்டி, அதன் ஆற்றலைப் பெருக்க நாம் அனைவரும் முயல வேண்டும்’ என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

மனமென்னும் நிலத்தை, சிறந்த எண்ணங்களால் தொடர்ந்து உழ வேண்டும். அப்போதுதான் களைகள் வளராமல் அதைக் காக்க முடியும். மரத்தின் நோயைத் தீர்க்க... இலைகளிலும், கிளைகளிலும் மருந்தடித்தால் போதாது. முதலில் அதன் வேர்களை விசாரிக்க வேண்டும்Ð அதேபோல், நம் வெளி மனதின் அழுக்குகளை அகற்றுவதுடன் நிற்காமல், ஆழ்மனதில் படர்ந்திருக்கும் பாசிகளைப் போக்கப் பாடுபட வேண்டும்.

பரீக்ஷித்து மன்னனிடம் சுகப்பிரும்மம் சொன்ன உருவகக் கதை ஒன்றை, இந்த இடத்தில் புரிந்து கொள்வது நல்லது.

மூங்கில் காட்டின் வழியே முனிவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று வேகமாக உராய்ந்ததில், திடீரென்று தீப்பிடித்தது. காற்று வலுவாக வீசியதால் காடு முழுவதும் பற்றியெரிந்தது. பச்சைப் பசேலென்று காட்சி தந்த கானகம் கரிந்து தணிந்தது.

இதைக் கண்ட முனிவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மாதங்கள் சில மறைந்தன. முனிவர் அதே வழியில் திரும்பி வந்தபோது, கரிந்து கிடந்த காடு மீண்டும் துளிர்த்துத் தழைத்துப் பச்சைப் பசேலென்று அடர்ந்து கிடந்தது. அந்த முனிவருக்கு ஒரு விஷயம் விளங்கியது. மண்ணுக்கு மேலே, கண்ணுக்குத் தெரியும் காட்டுப் பகுதியைத் தான் கனல் விழுங்கியது. நிலத்தின் அடியில் மறைந்து கிடந்த மரங்களின் வேர்களை நெருப்புக் கரங்கள் தீண்டவே இல்லை.

எனவே, மழை பொழிந்ததும் மரங்கள் தழைத்தன. காடு மறுவுயிர்ப்பு அடைந்தது. நம் மனமும் அப்படியேÐ எதிர்மறை எண்ணங்களை, இதயத்தின் அடிஆழம் வரை இறங்கி நாம் அகற்றாவிடில், அவை மீண்டும் துளிர்க்கும். நமது வாழ்வை அலைக்கழிக்கும்.

‘எதிர்மறையாக எண்ணுவதிலேயே பெரும்பாலான மனிதர்களின் நேரம் நடக்கிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்து முடிந்த செயல்களின் விளைவுகளைப் பற்றியும், எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் துயரங்களைப் பற்றியும் அவர்கள் எல்லா நேரமும் யோசிக்கின்றனர். அவர்களது எல்லையற்ற கற்பனையாற்றலால், பலவிதமான பேரழிவுகளை மானசீகமாக உருவாக்குகின்றனர்.

ஊன்றிக் கவனித்தால், பத்துக்கு ஒன்பது முறை... துன்பம் தரும் செய்திகளையே அவர்கள் சிந்திப்பது புரியும். அழகான, மகிழ்ச்சியான, இணக்கமான, இதமான, நம்பிக்கை தரும் நல்ல விஷயங்களை அவர்கள் அரிதாகவே நினைவில் நிறுத்துகின்றனர்’ என்கிறார் அரவிந்த அன்னை.

எதிர்மறை எண்ணம் பற்றி நமது புராணங்களில் ஒரு செய்தி உண்டு.

ஒருமுறை, இந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் இடையில் கடும்போர் நடந்தது. அசுரனை அழிக்க தனது வலிமை மிக்க வஜ்ராயுதத்தை வீசினான் இந்திரன். ஆனால், அது விருத்திராசுரன் உடலில் பட்டு வைக்கோலைப் போல் சிதறி விழுந்தது. இதைக் கண்ட நான்முகன் தன் கமண்டலத்துத் தண்ணீரில் வஜ்ராயுதத்தை நனைத்தெடுத்து இந்திரனிடம் கொடுத்தான்.

“தேவேந்திராÐ இப்போது உனது ஆயுதத்தை அசுரன் மீது பிரயோகம் செய்” என்றான். பிரம்மன் சொன்னபடி இந்திரன் வீசிய வஜ்ராயுதத்தால் கையும், காலும் வெட்டுப்பட்டு விருத்திராசுரன் வீழ்ந்தான்.

‘உண்மையான ஆற்றல் இந்திரனிடமோ, நான்முகனிடமோ, வஜ்ராயுதத்திடமோ இல்லை. கமண்டலத்துத் தண்ணீரில்தான் என்னை வீழ்த்தும் சக்தி இருந்திருக்கிறது. இன்று முதல் உலகத்தில் நல்ல நீரே இல்லாமல் செய்து விடுகிறேன்’ என்று உயிர்போகும் இறுதித் தருணத்திலும் எதிர்மறையாகவே சிந்தித்த விருத்திராசுரன், ஒவ்வொரு நீர் நிலையிலும் ரத்தம் வழியும் தன் உடலை நனைத்தான். இன்றும் எதிர்மறை எண்ணங்களால் உந்தப்பட்ட நவீன விருத்திராசுரர்கள் நம்மிடையே உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மகாத்மா காந்தியின் மூன்று குரங்கு பொம்மைகள் விளக்காத வாழ்வியல் உண்மைகளை, வேறெந்த வாசகம் விளக்கிவிடும்? ‘வாய்திறந்து எதிர்மறைச் சொற்களைப் பேசாதே; செவிகளால் எதிர்மறை வார்த்தைகளைக் கேட்காதே; எதிர்மறையான எதையும் எவரையும் பார்க்காதே’ என்று தானே அந்த குரங்கு பொம்மைகள் நமக்கு நாளும் பாடம் நடத்துகின்றனÐ

ஒரு குழந்தை வளர்ந்து பெரியவனாகும் வரை ஒரு லட்சத்து அறுபதாயிரம் முறை எதிர்மறை வாசகங்களையே கேட்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ‘நீ உருப்படப் போவதில்லை; உனக்குப் படிப்பு வராது; நீ மாடுதான் மேய்ப்பாய்; நீ ஒரு தண்டச்சோறு’ என்று வாய் திறப்பவர்கள் யோசிக்க வேண்டும்.

‘நான் வாழ்வதைவிட சாவதே மேல்; எனக்கு வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. எல்லோரும் எனக்கெதிராகச் சதி செய்கிறார்கள்; கடவுளுக்குக் கண்ணில்லை’ என்று புலம்பும் மனிதர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். ‘அமங்கலமான வார்த்தைகளை ஒருநாளும் பேசாதேÐ’ என்கிறது வேதம்.

‘நான் நலமாக இருக்கிறேன். என் உடல், மனம், ஆன்மா அனைத்தும் நலமாக உள்ளன. எனது ஒவ்வொரு செயலும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உலகத்துக்கு என் இருத்தல் பயனுள்ளதாக இருக்கிறது. பார்க்கும் இடமெங்கும் பரிபூரண ஆனந்தத்தை என்னால் உணர முடிகிறது’ என்று நம் உள் மனம் ஒவ்வொரு நாளும் ஓயாமல் உச்சரிக்க வேண்டும்.

அதனால் நமக்குள் உருவாகும் மாற்றம் நம்ப முடியாத அற்புதமாக இருக்கும். இதுதான், பிரெஞ்சு உளவியலாளர் எமில்கூவே, ‘எல்லா நோய்களுக்கும் தரும் மாமருந்து. எதையும் உடன்பாட்டு முறையிலேயே சிந்திக்கப் பழக வேண்டும்.

இரவில் தெரியும் மின்மினிப் பூச்சி, கர்வப்படுகின்ற நட்சத்திரங்கள்... காலைச் சூரியன் வந்ததும் காணாமற் போய்விடும். உடன்பாட்டு எண்ணங்கள் செழுமையுறும்போது உள்ளத்தில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்துவிடும். ஒளிவந்தால் இருள் மறைவது இயற்கைதானே’ என்றார்.

 
Thanks to Manimaran & FB Thannambikkai