நெருக்கடிகள்......!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:59 | Best Blogger Tips
நெருக்கடிகள் பெரும்பாலான நேரத்தில் நம்முடைய தினசரி வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடக் கூடிய ஒரு புயலாகத் தான் வருகின்றன.

ஆனால் அதேசமயம், ‘அவை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று நினைப்பதைவிட, அவற்றின் மூலம் என்ன நன்மை என்பதை யோசித்தால், நம்முடைய பார்வை மாறும்.

அது எப்படி?

தாமஸ் ஆல்வா எடிசன் பற்றிய ஒரு கதை.

அவர் நூறு வழிகளில் முயற்சி செய்து மின் விளக்கைக் கண்டுபிடித்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் கேட்டார், “நீங்கள் 99 முறை தோல்வியடைந்து, ஒருமுறை தானே ஜெயித்தீர்கள்? இதில் என்ன பெரிய விஷேசம்?”

“நீங்கள் சொல்வது தவறு” என்றார் எடிசன். “நான் 99 முறை தோற்கவில்லை. மின் விளக்கைக் கண்டுபிடிக்கத் தவறான வழிமுறைகள் என்னென்ன என்று விதவிதமாகப் பரிசோதனை செய்து புரிந்து கொண்டேன். அதன்மூலம் இப்போது சரியான முறையை என்னால் கண்டறிய முடிந்திருக்கிறது”.

இந்த மனப்பான்மை தான் முக்கியம். நெருக்கடியை ஒரு விரோதியாகப் பார்க்காமல், வெறுக்காமல், நல்லது செய்யக்கூடிய ஒரு வாய்ப்பாக பார்க்கும் மனோநிலை மிகவும் அவசியம்.

பசிபிக் பெருங்கடலில் புதிதாக ஒரு தீவு கண்டறியப்பட்டது. அங்கே உள்ள மக்களுக்கு செருப்பு விற்பதற்காக ஒரு விற்பனை பிரதிநிதியை அனுப்பி வைத்தார்கள்.

அவரும் கையில் பை, கழுத்தில் டை, வாய் நிறைய பொய் சகிதம் அந்தத் தீவில் சென்று இறங்கினார்.

அங்குள்ள மக்களைக் கூர்ந்து கவனித்தார். அதிர்ச்சியில் அலறிவிட்டார்.

உடனடியாக தன்னுடைய முதலாளியைத் தொலைபேசியில் அழைத்தார். “சார் எனக்கு இங்கே பெரிய நெருக்கடி. என்னால் இங்கே செருப்புகளை விற்க முடியாது” என்றார். “ஏன், என்னாச்சு?” என்று விசாரித்தார் முதலாளி.

“இந்தத் தீவில் ஒரு பயல் கூட செருப்பு அணிவதே கிடையாது. இவர்களிடம் போய் நான் எப்படிச் செருப்பு விற்க முடியும்?” என்று பதறினார் அந்த விற்பனை பிரதிநிதி.

“அட முட்டாளே” என்று தலையில் அடித்துக் கொண்டார் முதலாளி. “அங்கே ஒருவர் கூட செருப்பு அணுவதில்லை என்றால், அது நெருக்கடி கிடையாது. அத்தனை பேருக்கும் நம்முடைய கம்பெனி செருப்பை விற்பனை செய்வதற்கான அற்புத வாய்ப்பு, இது ஏன் உனக்குப் புரியவில்லை” என்று கேட்டார்.

இந்த விசயத்தில் அந்த விற்பனைப் பிரதிநிதியைக் குற்றம் சொல்வதற்கில்லை. நம்மில் பலரும் இந்தத் தவறைச் செய்கிறோம். நெருக்கடியின் பலாத்தோல் போன்ற மேல் தோற்றத்தைப் பார்த்து பயந்து, அதனுள் ஒளிந்திருக்கும் சுவையான சுளைகளை, வாய்ப்புகளைப் பார்க்க மறந்து விடுகிறோம்.

எனவே ‘நெருக்கடி’ என்கிற நெகட்டிவ் வார்த்தையைப் பார்க்கும் போதெல்லாம், நமக்கு ‘வாய்ப்பு’ என்கிற பாசிட்டிவ் வார்த்தை நினைவிற்கு வரவேண்டும்.

 


Thanks to FB  Thannambikkai