உடற்பயிற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:34 | Best Blogger Tips

இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று.

ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும்.

தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. மன நோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.

உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும்.

சீராக உடற்பயிற்சி செய்தால், பல விதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். பரம்பரையாக இதய நோய் இருந்தால், உடற்பயிற்சி செய்வதால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். அதனால் உடற்பயிற்சி செய்து, இதய நோய்களை விட்டு விலகி இருக்கவும்.

ஆரோக்கியமான உடல் எடையை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்கும்.

உடற்பயிற்சி உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, அதிக எடை உள்ளவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கும். அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் இரத்தக் குழாய்கள் ஓய்வெடுக்க உதவுவதால் இரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும்.

தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் உள்ள தமனிகளில் இரத்தம் உறைதல் உருவாகுவதை தடுக்கும்.


Via நிலைவைத்தேடி