விவேகானந்தரின் மானாமதுரை சொற்பொழிவு !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:57 | Best Blogger Tips



1 பிப்ரவரி 1897 அன்று மாலை அளிக்கப்பட்ட வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.

நீங்கள் எனக்களித்த இதமான வரவேற்புக்கான எனது ஆழ்ந்த நன்றியை வார்த்தைகளால் விளக்க முடியாது. நான் எவ்வளவு தான் விரும்பினாலும் துரதிர்ஷ்டவசமாக, மிகப் பெரிய சொற்பொழிவை நிகழ்த்தும் நிலையில் நான் இப்போது இல்லை. நமது சமஸ்கிருத நண்பர் மிகமிக அழகிய சொற்களால் என்னைப் பெருமைப்படுத்தி கூறினார். என்னதான் முட்டாள் தனமாகத் தோன்றினாலும் எனக்கும் உடம் பொன்று உள்ளது.அது சில விதிகளையும் முறைகளையும் ஜடப் பொருட்களுக்குரிய சில நியதிகளையும் பின்பற்றவே செய்யும். எனவே களைப் பென்றும் சோர்வென்றும் சில விஷயங்கள் இந்த உடம்பையும் பாதிக்கவே செய்கிறது.

மேலை நாட்டில் என்னால் செய்யப்பட்ட சிறிய வேலை குறித்து நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மக்கள் தெரிவித்து வருகின்ற மகிழ்ச்சியும் பாராட்டும் காண்பதற்க்குப் பெருமை மிக்கக் காட்சியாக உள்ளது. எதிர்காலத்தில் வரப்போகின்ற மகான்களுக்கான வரவேற்பாகவே இதனைக் நான் காண்கிறேன். நான் செய்த்திருக்கும் இந்த மிகச்சிறிய வேலைக்கே இத்தகைய சிறப்பான வரவேற்பு கிடைக்கிறதென்றால், எனக்குப் பின்னால் வரப் போகின்ற, உலகத்தையே அசைக்கவல்ல ஆன்மீக வீரர்களுக்கு இந்த நாடு அளிக்க போகும் வரவேற்ப்பு எவ்வளவு மகத்தானதாக இருக்கும்!

இந்தியா ஆன்மீக பூமி. ஆன்மீகத்தை, ஆன்மீகத்தை மட்டுமே இந்து புரிந்து கொள்கிறான். நூற்றாண்டுக்கான ஆண்டுகளாக நமது கல்வி இந்த வழியில்தான் அமைந்துள்ளது. அதன் விளைவாக ஆன்மீகம் வாழ்வின் முக்கிய நோக்கமாக உள்ளது. இது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொருவரும் பெரிய வியாபாரியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை; ஒவ்வொருவரும் பெரிய வியாபாரியாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் ஆசிரியர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியமும் இல்லை. ஒவ்வொருவரும் போர்வீரராக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை . ஆனால் வெவ்வேறு நாடுகள் சேர்ந்து ஒருங்கிணைந்து இந்த உலகில் ஒருமித்ததொரு விளைவை ஏற்படுத்த முடியும்.

உலக ஒற்றுமையில் ஆன்மீகமாகிய இசையை எழுப்ப வேண்டுமென்று இறைவன் நம்மை விதித்துள்ளார் போலும். எந்த நாடும் பெருமைப்படத் தக்கவர்களான மேன்மைமிக்க நமது முன்னோர்கள் நமக்கு அளித்துள்ள பாரம்பரியச் சிறப்பினை இன்னும் நாம் இழந்து விடாதிருப்பது கண்ட நான் குதூகலம் அடைகிறேன். இது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது; நமது இனத்தினுடைய விதியின் மீது உறுதியான நம்பிக்கையை அளிக்கிறது. எனது உற்சாகம் எல்லாம், எனக்குத் தனிப்பட்ட முறையில் நீங்கள் அளித்த பெருமைக்காக அல்ல, ஆனால் இந்த நாட்டின் இதயம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அதன் வலிமை குன்றவில்லை என்பதை அறிந்தற்காகத்தான்.

இந்தியா இன்னும் வாழ்கிறது, அது இறந்துவிட்டதாக யார்சொன்னது ? நாம் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்று மேலை நாடுகள் விரும்புகின்றன. ஆனால் அவர்கள் நம்மைப் போர்களத்தில் சுறுசுறுப்பாகக் காண விரும்பினால் ஏமாற்றமே அடைவார்கள். அது நமது களம் அல்ல, ஒரு ராணுவ நாடு ஆன்மீக மயமாக வேண்டும் என்று நினைத்தால் எப்படி நாம் ஏமாற்றம் அடைவோமோ அப்படித்தான் இதுவும் . அவர்கள் இங்கு வரட்டும் நாமும் அவர்களுக்கு இணையாக எப்படி உயிர்த் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அன்று போலவே இன்றும் எப்படி உயிர்த் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் காணட்டும். நாமெல்லாம் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டோம் என்ற கருத்தை மாற்றி அமைக்க வேண்டும். எவ்வளவு விரைவாக இதைச் செய்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது.

இப்பொழுது நான் சில கடினமான வார்த்தைக்களைச் சொல்லியாக வேண்டியுள்ளது. நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.ஐரோப்பியர்களின் உலகியல் நம்மை ஏறக்குறைய முழ்கடித்துவிட்டது என்று சற்றுமுன் குற்றம் சாட்டினார்கள்.தவறு ஐரோப்பியர்களுடையது மட்டுமல்ல பெரும் பங்கு நம்முடையதே. வேதாந்திகள் என்ற நிலையில் நாம் எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், அதன் உள்நோக்கத்தை, அடிப்படைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். வேதாந்திகள் என்ற நிலையில் நம்மை நாமே காயப்படுத்திக் கொண்டாலன்றி, பிரபஞ்சத்தில் உள்ள எந்தச் சக்தியும் நம்மைக் காயப்படுத்த முடியாது என்பது உறுதியாக நமக்குத் தெரியும். இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினார் முகமதியர்களாகி விட்டனர். அது போலவே அதற்க்கு முன்னால் மூன்றில் இரண்டு பங்கினர் பௌத்தர்களாகியுள்ளனர். இப்பொழுது ஐந்தில் ஒரு பங்கினர் முகமதியர்கள், ஒரு லட்சத்திற்கு மேல் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

இது யாருடைய தவறால் விளைந்தது? நம்முடைய வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர் மறக்க முடியாத மொழியில் கேட்கிறார்; நிரந்தர வாழ்க்கையாகிய நீரூற்று, அருகிலேயே பொங்கிப் பெருகிச் செல்லும்போது, இந்த ஏழை அப்பாவி பசியாலும் தாகத்தாலும் ஏன் செத்து மடிய வேண்டும் ? சொந்த மதத்தையே உதறிச் செல்பவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என்பதுதான் கேள்வி. அவர்கள் ஏன் முகமதியர்கள் ஆனார்கள்? நான் இங்கிலாந்தில் இருந்த போது இந்தச் செய்தியைக் கேள்விபட்டேன் - ஒரு நல்ல குடும்பத்துப் பெண், விலைமகளாக விரும்பினாள். மற்றொரு பெண் அவளைத்தடுத்த போது அவள் அது ஒன்றுதான் நான் மற்றவர்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கு வழி. இப்போது எனக்கு உதவி செய்வார் யாருமே இல்லை. நான் வாழ்வு தவறி இழிவான பெண்ணானபின் , கருணையுள்ளம் கொண்ட பெண்கள் என்னைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, எனக்கு வேண்டியதைச் செய்ய ஒருவேளை முன்வரலாம் என்று சொன்னாளள்.

பிற மதங்களுக்குப் போய்விட்ட நம் மக்களைக் குறித்து நாம் இப்போது அழுகிறோம். ஆனால் அவர்கள் மதம் மாறுவதற்கு முன் அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்? நாம் ஒவ்வொருவரும் நம்மையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். நாம் என்ன கற்றுக்கொண்டோம்? சத்திய ஜோதியை நாம் ஏந்தியுள்ளோமா? ஏந்தியுள்ளோம் என்றால், எவ்வளவு தொலைவு அதை எடுத்துச் சென்றோம்? இந்தக் கேள்வியை நாம் நம்மிடம் கேட்டே தீர வேண்டும். நாம் அப்போது அவர்களுக்கு உதவவில்லை. இது நாம் செய்த தவறு நாம் செய்த வினை. எனவே இதற்காக யார்மீதும் பழி போட வேண்டாம். நம் சொந்த வினையையே குறை கூறிக் கொள்வோம் ! நீங்கள் அனுமதிக்காமல் உலகாயதமோ, முகமதியமோ, கிறிஸ்தவமோ அல்லது வேறு எதுவுமோ உங்களை வெல்ல முடியாது. மோசமான உணவாலும் பட்டினியாலும் வெயிலாலும் மழையாலும் உடம்பு சிதைந்தும் சீர்குலைந்தும் போகாத வரை எந்தக் கிருமியும் அதனைக் தாக்க முடியாது. ஆரோக்கியமானவன் விஷக்கிருமிக் கூட்டத்தின் நடுவேகூட ஆபத்தின்றிச் சென்று வர முடியும்.

நமது வழிமுறைகளை மாற்றிக்கொள்வதற்க்கு இன்னும் அவகாசம் உள்ளது. முட்டாள்தனமான அந்தப் பழைய விவாதங்களையும், பொருளற்றவற்றைப் பற்றிய பழைய சண்டைகளையும் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். கடந்த அறுநூறு எழுநூறு ஆண்டுகளாக நாம் எவ்வளவு இழிநிலையை அடைந்துள்ளளோம் என்பதை எண்ணிப் பாருங்கள். தண்ணீரை வலது கையால் குடிக்க வேண்டுமா, இடது கையால் குடிக்க வேண்டுமா? கைகளை மூன்றுமுறை கழுவுவதாக நான்குமுறையா, ஆறு முறையா? இதைத்தான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது அறிவுஜீவிகளின் வாதப் பிரதிவாதமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய ஈடிணையற்ற வாதங்களில் ஈடுபடுவதிலும் இவற்றிக்கு அற்புதமான தத்துவ விளக்கங்களை எழுதுவதிலும் காலத்தைக் கழிக்கின்ற மனிதர்களிடமிருந்து நீங்கள் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்!

நமது மதம் சமயலறைக்குள் அடங்கிவிடுகின்ற ஆபத்து வந்துள்ளது. நாம் வேதாந்திகள் அல்ல, நம்மில் பெரும்பாலோர் பௌராணிகர்களும் அல்ல தாந்திரிகர்களும் அல்ல; நாம் எல்லாம் வெறும் தீண்டாதே, தீண்டாதே என்ற மதத்தைச் சார்ந்தவர்கள். நமது மதம் சமையலறையில் இருக்கிறது. பானைதான் நமது கடவுள். என்னைத் தொடாதே, நான் புனிதமானவன் என்பதே நமது மதம். இது இன்னும் ஒரு நூறாண்டு காலம் இப்படியே சென்றால் நம்மில் பெரும்பாலோர் பைத்தியக்கார விடுதியில்தான் இருப்போம். நமது மூளை பலவீனமாகிவிட்டது என்பதற்க்கு அடையாளம் இது. நமது மனத்தால் வாழ்வின் உயர் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை; மனம் எல்லா வலிமையையும் செயல் திறனையும் இழந்து, எதிரில்பட்ட சின்னஞ் சிறு பிரச்சினையைத் திரும்பத்திரும்பச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதே இதன் பொருள்.

இத்தகைய நிலைமையைத் தலைகீழாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் உறுதியோடு எழுந்து நிற்க வேண்டும்; செயல்திறனும் வலிமையும் மிக்கவர்களாக வேண்டும். அதன்பிறகுதான் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றாதும், இன்று உலகம் முழுவதற்குமே தேவைப்படுவதுமான கருவூலத்தை அளவற்ற புதையலாகிய நம் பாரம்பரியத்தை நாம் அறிந்து கொள்வோம். இந்தச் செல்வம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றால் உலகமே அழிந்து போகும். அதனை வெளியே கொண்டு வாருங்கள். எல்லோருக்கும் கொடுங்கள். உலகம் முழுவதற்கும் அதைப்பற்றிக் கூறுங்கள்.

தானம் ஒன்றுதான் கலியுகத்தில் செய்யக்கூடியது என்று வியாசர் கூறுகிறார். நம்மால் கொடுக்க முடிந்தவற்றுள் ஆன்மீக தானம்தான் மிக உயர்ந்தது. அதற்கு அடுத்ததாக லௌகீக அறிவு. அதற்கு, ஒருவரது உயிரைக் காப்பாற்றுதல். அதற்கு அடுத்து கடைசியாக, பசித்தவர்களுக்கு உணவைத் தரும் அன்னதானம.நாம் தேவையான அளவு அன்னதானம் செய்துவிட்டோம். வேறு எந்த நாடும் நம்மைப்போல் கொடையாளியாக இருந்ததில்லை ஒரு பிச்சைகாரன்கூட, தன் வீட்டில் ஒருபிடிச்சோறு இருக்கும்வரை, அதில் பாதியைத் தானமாகக் கொடுக்கவே செய்வான் இத்தகைய விசித்திரத்தை இந்தியாவில் மட்டும் தான் காண முடியும். இது போதும் . இப்போது மற்ற இரண்டு தானங்களான ஆன்மீகம் மற்றும் லௌகீக அறிவை அளிப்போம். நாம் எல்லோரும் வீரர்களாக, உறுதி வாய்ந்த உள்ளம் படைத்தவர்களாக முழுக்கமுழுக்க உண்மை யானவர்களாக இருந்து, சக்கரம் சுழலத் தோள் கொடுப் போமானால் இருபத்தைந்து ஆண்டுகளில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகும். அதன்பிறகு நாம் எதிர்த்துப் போரிட எதுவுமே இருக்காது. இந்தியா மீண்டும் ஆரிய நாடாகிவிடும்.

இப்போதைக்கு நான் உங்களிடம் சொல்ல வேண்டுவதெல்லாம் இவைதாம் எனது திட்டங்களைப் பற்றியெல்லாம் நான் அவ்வளவாக எதுவும் சொல்லவில்லை. சொல்வதைவிடச் செயலில் காட்டவே நான் விரும்புகிறேன். அதன் பின்னர் திட்டங்களைப்பற்றிப் பேசுகிறேன். எனக்கென்று திட்டங்கள் உள்ளன. இறைவன் திருவுளம் கொள்ளவும் எனக்கு நீண்ட ஆயுளை அளிக்கவும் செய்வாரானால் அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் கிடைக்கவே செய்யும். இதில் நான் வெற்றி பெறுவேனா, மாட்டேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஓர் உயரிய லட்சியத்தை மேற்கொள்வதும், அதற்காகத்தன் வாழ்நாளை அர்ப்பணிப்பதும் ஒரு மகத்தான காரியமாகும் அப்படி இல்லாமல் உணர்வற்ற கீழான ஜட வாழ்க்கை வாழ்வதில் என்ன பெருமை இருக்கிறது ? ஓர் உயரிய லட்சியத்திற்கு அர்ப்பணிப்பதில் மட்டுமே வாழ்க்கை மதிப்புப் பெறுகிறது. இதுதான் இப்போது இந்தியாவில் செய்யப்பட வேண்டிய மகத்தான காரியம். தற்போதைய மத மறுமலர்ச்சியை நான் வரவேற்கிறேன். இரும்பு பழுத்திருக்கும்போதே அதை அடித்து நீட்டுவதற்கான வாய்ப்பை நழுவவிடுவது முட்டாள்தனம் அல்லவா?

-----
சுவாமி விவேகானந்தர்.....


Via மக்கள் சேவையே மகேசன் சேவை