அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருப்பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:45 | | Best Blogger Tips
அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 325 425 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.



மூலவர் - அபிமுக்தீஸ்வரர் (பிரிய நாதர்)
அம்மன் - அபினாம்பிகை (ஏழவார் குழலி)
தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - சரவணப்பொய்கை
ஆகமம் - காரண ஆகமம்
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் - பெருவேளூர், காட்டூர் ஐயன்பேட்டை
ஊர் - மணக்கால் ஐயம்பேட்டை
மாவட்டம் - திருவாரூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர், சம்பந்தர்



ஒரு முறை கங்காதேவி சிவபெருமானிடம், “இறைவா! இவ்வுலக உயிர்கள் எல்லாம் தங்களது பாவங்களை போக்கி கொள்வதற்காக என்னிடம் வருகின்றன. இதனால் அனைத்து பாவங்களும் என்னிடம் சேர்ந்து விட்டன. இதை தாங்கள் தான் போக்கி அருளவேண்டும்என வேண்டினாள். கங்கையின் வேண்டுதலை ஏற்ற இறைவன்,”கங்கா! முருகன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட காவிரித் தென்கரைத்திருத்தலத்தில் நீராடி உனது பாவங்களை போக்கி கொள்என்றார். அதன்படி கங்கை இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபட்டு, தன் பாவங்களை போக்கி கொண்டதாக வரலாறு கூறுகிறது. எனவே தான் அம்மன் இங்கு ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் தான் லலிதா திரிசதைபாடப்பட்டது.

சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள், முருகன் பூஜை செய்த தலங்கள் வைத்தீஸ்வரன் கோவில், கீவளூர், பெருவேளூர், திருவிடைக்கழி ஆகியன. அதேபோல், முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து, தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் பெருவேளூர்எனப்பட்டது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.

தேவ அசுரர்கள் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது, அது அசுரர்களின் கையில் கிடைக்காமல் செய்ய பெருமாள் மோகினி அவதாரம் எடுத்தார். இவர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், மீண்டும் தனது ஆண் உருவத்தை பெறுவதற்காக இத்தலத்து இறைவனை வேண்டினார் என தல வரலாறு கூறுகிறது. பெருமாள் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயிலின் கீழ் பிரகாரத்தில் ஆறு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு இலிங்கம் சரஸ்வதீஸ்வரர்என்ற திருநாமத்துடன் விளங்குகிறது.

முன்பு ஒரு முறை ஊமைச்சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் இந்த சரஸ்வதீஸ்வரர் சன்னதிக்கு அழைத்து வந்து வழிபாடு செய்தனர். இவர்களது வழிபாட்டில் மனமிறங்கிய சிவன் சிறுவனுக்குப் பேசும் சக்தியை தந்தார் என கோயில் வரலாறு கூறுகிறது. இத்தல விநாயகர் கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கங்கை, முருகன், பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

சுமார் 70 சென்ட் பரப்பளவில் 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன நம் கண்ணில் படுவது கிழக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள கொடிமரவிநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். உள்ளே இடதுபக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியுமாக கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்துள்ளது. இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மூலவருக்கு நேர் எதிரில் சாளரம் வைக்கப்பட்டுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மிருகண்டு மகரிஷி, துர்க்கை முதலியோர் உள்ளனர். துர்க்கைச் சந்நிதி தனிச் சந்நிதியாகவுள்ளது. சண்டேசுவரர் உருவம் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், பக்கத்தில் வைகுந்த நாராயணப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. இச்சந்நிதியில் மூல, உற்சவத் திருமேனிகள் உள்ளன. வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் தனி சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். கால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் அருள்பாலிக்கிறார்கள். வாயுவுக்கும் ஆதிசேடனுக்குமிடையே நடந்த போட்டியில் வந்து விழுந்த கயிலைச் சிகரங்களுள் இதுவும் ஒன்று.

தேவாரப்பதிகம்:

குணக்கும் தென்திசைக் கண்ணும் குடபாலும் வடபாலும் கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் மொழிந்தோர்க்கும் வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும் பிணக்கம் செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம்.

திருவிழா:

கந்த சஷ்டியும், வைகாசி விசாகமும் இத்தலத்தின் முக்கிய திருவிழா ஆகும். இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை:

திக்குவாய் உள்ளவர்கள், பேசும் ஆற்றல் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். சுக்கிரனுக்குரிய பரிகார ஸ்தலம். கடன் பிரச்னை உள்ளவர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள்நிறைவேறியவர்கள்றைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்னதானம் செய்கின்றனர்.

வழிகாட்டி:

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் மணக்கால் என்ற இடத்தில் இறங்கி 1/2 கி.மி சென்றால் இத்தலம் அடையலாம். தலையாலங்காடு என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 6 கி.மி. தொலைவிலும், கொரடாச்சேரி என்ற ஊரில் இருந்து 14 கி.மி. தூரத்திலும் இத்தலம் இருக்கிறது.


நன்றி  உயா்திரு.
A.N.Jayan
DINDIGUL
South India

http://koyil.siththan.com அவா்கள் Blog யிலிருந்து இந்த தகவல் கிடைத்தது. அவருக்கு மிக்க நன்றி !